Wednesday, November 4, 2015

டிப்ஸ்.....

உண்ணவும், உறங்கவும், கதை பேசுவதற்கான இடம் மட்டுமா வீடு??அன்னையின் மார்போடு அணையும் கதகதப்பைத் தர வல்லதல்லவா வீடு!!வெயில், மழை, பனி, குளிர் என அனைத்திலிருந்தும் நம்மைக் காக்கும் வீடு. நம் துக்கம், சந்தோசம், கோபம், விருப்பு, வெறுப்பு என்று அனைத்து உணர்ச்சிகளையும் மௌனமாய் உள்வாங்கிக் கொள்ளும் உயிரற்ற, ஆனால் உயிருக்குயிரான இடமல்லவா வீடு!
        ஆனால் அதைப் பராமரிப்பதில் நம் காட்டும் அக்கறையை பற்றி சொல்ல வாரத்தைகளில்லை. பல லட்சம் செலவு செலவு செய்து வீட்டைக் கட்டி வந்தவுடன் முடிந்து விடுவதில்லை. அதனை அழகு படுத்துவதிலும் பராமரிப்பதிலும் தான் உண்மையான திறமை உள்ளது. அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. மிக எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நம்முடைய வீட்டை அனைவரும் ரசித்து பாராட்டும் வண்ணம் அமைக்கலாம்.
             வீடு பொலிவுடன் திகழ அலங்காரமான, படோபமான பொருட்கள் தேவை என்றில்லை. எளிமை தான் என்றுமே அழகு. வீடெங்கும் நிறைந்திருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினாலேயே வீடு அழகு பெற்றுவிடும். வீடு சிறியதாக இருக்கிறது, ஆனால் பொருட்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது , எதை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை.. பழையன கழிந்த பிறகு மட்டுமே புதியன புக வேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களை சேர்க்காதீர்கள். என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்று பழைய பொருட்களை சேகரிக்காதீர்கள்.  ஒரு பொருளை ஒரு மாத த்திற்கு ஒரு முறையேனும் நாம் உபயோகிக்கவில்லையெனின் அதன் பயன்பாடு நமக்குத்தேவையில்லை என்றே அர்த்தம். அதை தூர வீசிவிடலாம். மனமில்லை எனின் அட்டைப்பெட்டியில் போட்டு லாஃப்ட் என்னும் பரணில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
         வீட்டின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதே. சிலர் விருந்தாளிகள் வரலாம் என்று வரவேற்பறையை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு பிற அறைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவர். இது தவறு. சமையலறை, படுக்கையறை, குளியலறை என்று வீடு முழுக்கவுமே கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டியது அவசியம். கூடுதலாக சில நிமிடங்கள் வீட்டைப் பேணுவதில் செலவழித்தால் இது சாத்தியமே.
           வீட்டின் தரையை தினமும் சுத்தம் செய்து போலவே சமையல் மேடையையும், சிங்க் ஐயும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். குளியலறையை தினமும் கழுவி நீரில்லாமல் துடைத்து விட்டால் அவை நீண்ட நாட்கள் பொலிவுற விளங்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜ் இல் உள்ள காய், பழவகைகளை கை பார்க்க வேண்டும். பழைய மீந்த குழம்பு வகைகளை தூர வீச வேண்டும். வாரம் ஒரு முறை மைக்ரோவேவ் மற்றும் ஃபிரிட்ஜை சுத்தமாக துடைக்க வேண்டும். மாதமொரு முறை அனைத்து கப்போர்ட்களையும் ஒதுக்கி பேப்பர் மாற்ற வேண்டும். சமையலறைப் பொருட்களை சரி பார்த்து வெயிலில் காய வைக்க வேண்டியவற்றை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.மின் சாதனங்களை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அடிக்கடி துடைத்து சரிபார்த்து உள்ளே வைக்க வேண்டும். அழையா விருந்தாளிகளாய் வரும் தூசியும், பூச்சிகளும், தன்னுடன் அழைத்து வருவது நோய்நொடிகளைத்தான் என்பதை உணர்ந்து சுத்தத்தை பேண வேண்டும்.
        வீட்டிற்கு விருந்தினர் வரும் வீடு அழகாய்த் திகழ வேண்டும் என்பது அனைவரின் அவாவும் கூட. அந்நேரம் அனைத்தையும் ஒதுக்கி அடுக்கி வைக்காமல் எப்போதுமே அது போல் வைத்திருப்பது தான் சாமர்த்தியம். எந்தப்பொருளையையுமே எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்தாலே பாதி வேலை முடிந்துவிடும்.எந்தப் பொருளையும் தேடாமல் எடுத்துக்கொடுக்கும் நம் வீட்டில் பொருட்கள் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து முயன்றால் மட்டுமே வீட்டை அழகாக பராமரிக்க முடியும். வீட்டை கலைநயத்துடன் கட்டமைத்து, உள் அலங்காரம் செய்திருந்தாலும் அதை பராமரிப்பதைப் பொறுத்தே வீட்டின் அழகு வெளிப்படும்.
 

Tuesday, October 13, 2015

மனம் கவர்ந்த வீடு




மாதம் ஐந்தாயிரம் சம்பளம் வாங்குபவரானாலும் சரி, ஐந்து லட்சம் சம்பளம் வாங்குபவரானாலும் சரி சொந்த வீடு ஆசை கட்டும் இல்லாதவர் இந்த உலகில் இல்லை. பெரிய மாடமாளிகையோ சிறிய ஓலைக்குடிசையோ .. வீடு கட்டும் பாக்கியமும் அதற்குரிய சூழ்நிலையும் நம்மில் எத்தனை பேருக்கு அமைகிறது?! பொதுவாக எல்லோருக்கும் தன்னுடைய நடு வயதில் தான் வீடு கட்டும் எண்ணமே முளை விடும். அதன் பிறகு அதனை செயல்படுத்த இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்வர். ஆனால் என்னுடைய முப்பத்திரண்டாவது வயதிலேயே எங்களுக்கு அந்த யோகம் கிட்டியது. எங்களுக்கு திருமணமாகி ஏழாவது ஆண்டிலேயே நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்தோம்.
      இளம் வயது என்றாலும் எனக்கும் என் மனைவிக்கும் அப்போதே அதன் மீது அதீத ஆர்வம். வீடு செங்கல் கட்டடமாக உயரும் போதே வீட்டை சுற்றி மரங்கள் நட்டேன். அவை வெகு சீக்கிரமே வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. மேஸ்திரி சுத்தி மரம் இருப்பதால் வெயில் தெரியாம வேலை பாக்க முடியுது என்பார். போரிங் போட்டு தண்ணீர் உள்ள இடத்திலேயே நாங்கள் வீடு கட்டியதால் கட்டிட வேலை, மரங்கள் இரண்டிற்குமே தண்ணீர் போதுமானதாக இருந்தது. வீடு மெது மெதுவாக வளர்ந்தது. அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். வானம் தோண்டியது,நிலை தூக்கியது, தட்டோடு போட்டது , பெயிண்ட் அடித்தது என்று அனைத்தையுமே புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். இன்றும் அவ்வப்போது எடுத்துப் பார்த்து மகிழ்வேன். 




      வீடு கட்டி முடித்தாயிற்று.. அதற்கு என்ன பெயர் பெயர் வைக்கலாம் என்று நானும் என் மனைவியும் நீண்டதொரு ஆராய்ச்சி செய்தோம் . Dream castle என்று வாயில் நுழையாத பெயர்களை எல்லாம் அவள் கூறினாள். எனக்கு என்னவோ என் இல்லாளின் பெயர் தான் பிடித்தது. அதனால் முருகேஸ்வரி இல்லம் என்று முடிவு செய்தேன். வீட்டில் வேலை செய்த மேஸ்திரி , சித்தாள், ஆசாரி, பெயிண்டர் என்று அனைவருக்கும்  துணிமணி எடுத்துக் கொடுத்து ஒரு நாள் விருந்து வைத்தோம். 
      பால் காய்ச்சுவதையும் மிக விமரிசையாக செய்தோம்.உறவினர்கள் அனைவரையும் அழைத்தோம். அனைவரும் வந்து வாழ்த்தி விட்டு சென்றனர். இப்போது தான் உன் திருமணத்திற்கு வந்தோம் அதற்குள் மறுபடியும் எல்லோரையும் அழைத்து விட்டாயே என்று மகிழ்ந்து கூறினர். பால் காய்ச்சும் ஃபங்ஷன் இனிதே  முடிந்தாலும் வீட்டில் வைத்திருந்த டேப் ரிக்கார்டர் அப்போது தொலைந்து விட்டது. முதலில் மனம் சஞ்சலம் அடைந்தாலும் ஏதோ திருஷ்டி ...இப்போது இந்த சம்பவத்தினால் கழிந்து விட்டது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
       இப்போது நாங்கள் வீடு கட்டி முடித்து சுமார் இருபது வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும் எங்கள் இல்லம் இன்றும் புத்தம் புதியது போல் காட்சி அளிக்கின்றது. ஹால் பெரியதாக அமைந்தபடியால் நான் என் குழந்தைகளின் பிறந்த நாள் பார்ட்டிகள், நண்பர்கள் கெட் டுகதர் அனைத்தையும் அங்கேயே வைத்துக் கொள்வேன்.
        இப்போதெல்லாம் வீடு கட்டி முடிந்தவுடன் landscaping artist இடம் சென்று விடுகிறார்கள். ஆனால் நான் அப்போதே என் தோட்டத்தை வடிவமைத்தேன். சிறு வயதிலேயே மரம்செடி வளர்ப்பதிலும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் நான் வீடு கட்ட ஆரம்பித்தவுடன் ஆல் போல் தழைத்தோங்கியது. வீட்டின் வலப்புறத்தில் புல்வெளியும் இடது புறத்தில் பூஞ்செடிகள் கொண்ட பூந்தொட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்தேன். மிகப் பெரிய சிமெண்ட் தொட்டிகள் வாங்கி அவற்றில் மீன்கள் வளர்க்கின்றேன். பூக்கள் போன்ற வடிவுடைய அந்த தொட்டிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.அதில் அல்லி மலர்கள் வளர்த்தேன். ஏனோ அவை நீண்ட நாள் நிலைக்கவில்லை. மீன்கள் இருப்பதால் அந்தத் தொட்டிகளை குழந்தைகள் விரும்பிப் பார்ப்பர்.
          மா, தென்னை, பலா, சாத்துக்குடி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா, ப ப்பாளி என்று அனைத்து வகை மரங்களையும் வீட்டைச் சுற்றி நட்டு வைத்துள்ளேன். என்னுடைய பேராசைக்கு என் வீட்டை சுற்றியுள்ள இடம் போதவில்லை. எங்காவது வெளியூர்களுக்குச் சென்றால் கட்டாயம் நர்சரிக்குச் செல்வேன் . இப்பொழுதெல்லாம் மரக்கன்றுகள் வாங்குவதில்லை. பூஞ்செடிகளோடு சரி. மரங்கள் அதிகம் இருப்பதால் வீட்டைச்சுற்றி அடர்த்தியாக நிழல் உள்ளது. வெயில் இல்லை. இதனால் துணிமணி காயப்போட மிகவும் கடினமாக உள்ளது என்று என் மனைவி புகார் வாசித்துக் கொண்டே இருந்தாள். பின்னர் மொட்டை மாடியில் காயப்போட தொடங்கி விட்டாள்.
            வீட்டிற்கு யார் வந்தாலும் எங்கள் தோட்டத்தின் அழகில் மயங்கி அதனை சுற்றிப் பார்த்த பின்னரே உள்ளே நுழைவார்கள். பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் என்று இப்போது வலியுறுத்தப் படுகின்றது. வாட்ஸ் அப் பில் கூட குறுஞ்செய்திகள் வருகின்றன. ஆனால் நான் அப்போதிருந்தே என் தோட்டத்தில் மூன்று இடங்களில் பறவைகளுக்காக தண்ணீர் ஊற்றி வருகிறேன். 

        சிவகாசியில் மயில்கள் அதிகம் இருக்கின்றன. எங்கள் வீடு சோலை வனம் போல இருப்பதால் அவை அடிக்கடி விஜயம் செய்யும்.
" கிளி கொஞ்சிப் பேச..
கருங்குயில் இசை விருந்து நல்க..
வண்டுகள் நீண்ட ரீங்காரம் செய்து பாடச..
சோலையில் அடியெடுத்து ஊன்றி உடல் புளகித்து ஆடும் மயில்நடனத்தால்...
தென்றல் உலவும் சோலையே  சிலிர்க்கிறது."  என்று நான்
 எங்கேயோ படித்த வரிகளுக்குச் சான்றாக  இப்போது என் வீடு திகழ்கின்றது.
     மழை பெய்தால் இடம் மிகவும் ரம்யமாய் இருக்கும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை ..பார்க்க இது ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்று பாடத்தோன்றும். முன்பெல்லாம் குழந்தைகளுடன் மழையில் குளித்து மகிழ்வேன். மறுநாள் குழந்தைகளுக்கு வரப்போகும் காய்ச்சலை எண்ணி என் மனைவி கவலைப்படுவாள். ஆனால் மழையில் நனையும் இன்பம் அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில் உறுதியாய் நிற்பேன்.
      வீட்டின் அருகிலேயே கிணறு ஒன்றும் உள்ளது. அதில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். மோட்டார் போட்டும் குளிக்கலாம். நீந்தியும் மகிழலாம். அதற்காகவே உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வருவார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் கிணற்றில் தான் நீந்தக் கற்றுக்கொண்டோம். இப்போது மூன்றாவது தலைமுறை அந்தக்கிணற்றில் விடுமுறை நாட்களில் நீந்தக் கற்றுக் கொள்கிறது. சைக்கிள் ஓட்டப் பழகுவதற்கும் வீட்டின் அருகில் உள்ள இடம் ஏதுவாயிருக்கும். என் மகள்கள் இருவரும் அப்படித்தான் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள்.
     இப்படியாக என் உள்ளம் கவர்ந்த என் வீட்டைப் பற்றி நான் கூறிக்கொண்டே போகலாம். எங்கள் சிந்தனையில் உதித்த எங்கள் சித்தமாக உள்ள எங்கள் வீடு என் மனைவி முன்பே கூறியது போல் ட்ரீம் காஸில்( dream castle) தான். மனைவி சொன்னால் மறுக்க முடியுமா?


                 
               


       

Monday, October 12, 2015

எனக்குப் பிடித்த வீடு




கதவு பற்றிய புகைப்படக்கட்டுரை ஒன்றை தி இந்து ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஜெய்ப்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க வீடுகளின் கதவுகளைப் பற்றி அதன் ஆசிரியர் சிலாகித்து எழுதியிருந்தார். உடனே எனக்கு என் அம்மா வீட்டின் கதவு நினைவுக்கு வந்தது.
        சிவகாசியில் நான் பிறந்தேன். எனக்கு சுமார் பன்னிரெண்டு வயது இருக்கும் போது என் தந்தை எங்கள்
 வீட்டைக் கட்டினார். வீட்டின் ஒவ்வொரு வளர்ச்சியையும் என் தந்தை ரசித்து ரசித்து கட்டுவதையும், அதைப்பற்றி அனைவரிடமும் பெருமை பொங்க பேசுவதையும்  நான் சிறு வயதில் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டில் மார்பிள் தரை போட்டிருந்தோம். அதை வாங்குவதற்கு அந்தக் காலத்திலேயே என் தந்தை, ஆசாரி, இன்ஜினியர் மூவரும் ராஜஸ்தான் வரை சென்றனர். ஆசாரி திரும்பி வந்தவுடன் என் தந்தைக்கு ஒரே புகழாரம் தான், தான் எத்தனையோ வீடுகளில் வேலை செய்திருந்தாலும் தன்னை யாரும் இந்த அளவுக்கு மதித்து ஊருக்கு அழைத்து போய் மரியாதை செய்ததில்லை என்று நெகிழ்ந்து கூறினார்.
         வீட்டின் எல்லாம் கதவுகளும் வேலைப்பாடு மிக்கதாய் தான் இருந்தன என்றாலும் நிலைக்கதவு மிகவும் அழகிய வேலைப்பாடு கொண்டதாய் இருக்கும். ஆசாரி அக்கதவுகளை செதுக்கி செதுக்கி செய்த நாட்கள் இன்றும் என் நினைவிலாடுகின்றன. பாலிஷ் போட்டு சும்மா பளபளவென்று மின்னும். அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் கதவு மிகவும் அழகாய் இருக்கின்றது என்று கண்டிப்பாய் பாராட்டி விட்டு செல்வார்கள். திருஷ்டி படுகின்றது என்று என் அன்னை கதவின் மேல் ஒரு சிறிய நிலைக்கண்ணாடி ஒன்றை மாட்டி வைத்தார்கள். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூட சமீபத்தில்," கதவும் ஜன்னலும்  வீட்டின் அடையாளங்கள் மட்டும் அல்ல.அவை பண்பாட்டின் சின்னங்கள்." என்று எழுதியிருந்தார்.




       நாங்கள் நால்வர். எங்கள் உலகமே அந்த வெராண்டாவில் தான் சுழலும். அனைவரும் ஒரே பள்ளியில் படித்ததால், மாலையில் பள்ளி விட்டு வந்தவுடன் அவரவர் வகுப்பில் என்னென்ன நடந்தது என்று வெராண்டாவில் உட்கார்ந்து விவாதிப்போம். வெராண்டாவின் கிரில்கள் மிகவும் வித்தியாசமானவை. என் தந்தை தெய்வ பக்தி மிக்கவர். கிருஷ்ணர் அபிமானி. எனக்கு கூட அதனாலேயே அந்த பெயரையே வைத்துள்ளார். அவருடைய அந்த அபிமானம் எங்கள் வீட்டு  கிரில்களில் பிரதிபலித்தது. வீடெங்கும் கிருஷ்ணர் நீக்கமற கிரில்கள் மூலம் நீக்கமற நிறைந்திருப்பார். வாசலில் மிகப்பெரிய குத்துவிளக்குகள் இரண்டு, பக்கத்து கிரில்களில் ராதையுடன் கிருஷ்ணரும், ஊஞ்சலாடும் குழந்தைக் கிருஷ்ணரும் இருக்கும். அந்த வெராண்டாவிற்கு ஜன்னல்கள் கிடையாது. கிரில்கள் மட்டுமே. அதனை ஒரு ஆர்டிஸ்ட்  மூலம் வரைந்து பின் கிரில் செய்பவரிடம் கொடுத்து ஸ்பெஷலாக டிசைன் செய்ததாக என் தந்தை கூறியுள்ளார். அதைப் பற்றி அவ்வளவு பெருமை அவருக்கு. புதிதாய் வீடு கட்டுபவர்கள் கிரில் டிசைன் மிகவும் அழகாய் இருக்கிறதென்று வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு போன சம்பவங்களும் உண்டு. 
      நிலா ஒளியுயோடு வரும் போது லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும் கொண்டு வருவதைப் போல அந்த கிரில்களுடன் கலந்த நினைவுகள் பல வந்து மோதுகின்றன.கிரில்கள் எத்தனைதான் அழகாய் இருந்தாலும் அவற்றால் என் அன்னைக்கு ஒரு கஷ்டம் ஏற்ப்பட்டது. அவற்றைத்துடைப்பது கடினமாயிருந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகளை அவை கொண்டிருந்தமையால் தூசியை அகற்றுவது கடினமாயிருந்தது. ஆனால் என் அன்னை ஓர் உபாயம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் கிரில்கள் , கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை நாங்கள் துடைத்து சுத்தம் செய்தால் மாலையில் அனைவரையும் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிப்பார்கள். தியேட்டர் வீட்டின் அருகிலேயே இருந்தது. நாங்கள் அனைவரும் அத்தனை சுட்டி..விரைவிலேயே முடித்து விட்டு மதியமே அழைத்து செல்லச்சொல்வோம்.

          பொதுவாகவே சிறிய ஊர்களில் கொல்லைப் புறங்களில் தான் அதிகம் பழங்குவார்கள். என் அம்மா வீட்டிலும் அப்படித்தான். என் அன்னை காய்கறி அரிவது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்று அனைத்தையும் அங்குதான் செய்வார். அந்த இடத்தில் ஒரு ஊஞ்சல் உண்டு. நாங்கள் அதில் ஆடிக்கொண்டே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம் அல்லது வேலை செய்து கொண்டிருப்போம். முருங்கை மரத்தின் காய்களைப் பறிப்பது, இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளைப் பகிர்ந்து செய்வோம்.
       வாழ்க்கை என்னும் நீரோடை எங்கள் நால்வரையும் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றாலும், பண்டிகை , விடுமுறை ஆகிய நாட்களில் நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் அம்மா வீட்டில் இணைந்து விடுவோம். நாங்கள் பேசிய பேச்சுக்கள்,விளையாடிய விளையாட்டுகள் என்று இரவு நெடுநேரம் வரை பேசி மகிழ்வோம். வீட்டின் ஒவ்வொரு பொருளும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதாய்த் தோன்றும். பழைய ஆல்பங்களை எடுத்துப் பார்ப்போம். ஆச்சர்யம் என்னவென்றால் எங்கள் குழந்தைகளுக்கும் எங்களுடைய அம்மா வீடு மிகவும் பிடித்துப்போனது தான். அவர்களுக்கும் சைக்கிள் பழக, வீதிகளில் விளையாட என்று மிகவும் வசதியாக இருப்பதால் அங்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். 
         நான் சின்ன வயதில் பார்த்த போது என்னுடன் பேசிப் பழகி விளையாடிய என் வயதை ஒத்தவர்கள் இப்போது யாரும் அங்கில்லை. காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் அருகாமையில் உள்ள வீடுகளில். என்றாலும் மிக நீண்ட பெரிய படிகளில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் நால்வரும் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருப்போம்.பக்கத்து வீட்டுப் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வாசலை அடைத்துகோலங்கள் போட்டது,  ஓவர் டாங்கு நிரம்பி வழியும் நீரில் குளித்தது, பால் ஐஸ் , கப் ஐஸ் என்று தெருவில் போகும் ஒன்றைக் கூட விடாமல் வாங்கி சாப்பிட்டது, பள்ளியிலிருந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டு வராமல் தோழிகளுடன் பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டே வீடு வரை வந்தது என்று நினைவலைகள் நீண்டு  கொண்டே போகும். 


       இப்படியாக என் அம்மா வீடு தான் என் மனம் கவர்ந்த வீடு என்று சொல்வேன். பூலோகத்தில் உள்ள சொர்க்கம் தான் அது. மீண்டும் நான் சிறுமியாய் உணரப்படும் தருணங்களைத் தர வல்லது.
                      - கிருஷ்ண குமாரி மதன்.
                           தூத்துக்குடி.

       

Tuesday, September 15, 2015

மனம் விரும்புதே...


வீடு என்பது கல்லும், மண்ணும், செங்கலும் அல்ல. அன்பு, அழகு, தூய்மை என்பன போன்ற இடுபொருட்களால் நிறைந்தது. சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகாசியில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம். என் கணவரின் தொழில் நிமித்தமாக சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, அபார்ட்மெண்டில் வாழ வேண்டிய கட்டாயமும், சூழலும் ஏற்பட்டது. 
     மிகப்பெரிய வீட்டில் காலாற நடந்து பழகிய எங்களுக்கு, திரும்பியவுடன் கிச்சன், திரும்பியவுடன் பெட்ரூம் என்று அனைத்தும்  அருகருகே இருந்தது ஆச்சர்யமான விஷயம். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் ஓடி ஓடி வீட்டை ஒதுக்கும் வழக்கம் உள்ள எனக்கு, அந்த வேலை மிகச்சுலபமாய் முடிவதை உணர முடிந்தது. 
    அபாண்டமெண்ட் வந்ததால், வீட்டிற்கு சாமான்களை வாங்கிவிட்டு பின் உபயோகமில்லாதவற்றை பரண் மீது தூக்கிவைக்கும் வழக்கம் நின்று போனது. எந்தப் பொருளை வாங்குவதானாலும் , 'இது தேவைதானா? இடத்தை அடைக்காதா?' என்று ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் தேவையற்ற பொருட்கள் குவிவது குறைந்தது. வேலையும் சுளுவாயிற்று. குறைந்தபட்ச தேவைகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று புரிந்தது.
     சில வீடுகள் இறுக்கமாயிருக்கும். போதிய வெளிச்சம் இருக்காது. பகல் நேரங்களிலும் லைட் போட்டே இருக்க வேண்டியதிருக்கும். போதுமான ஜன்னல்கள் இல்லாத தால் காற்று வராது. ஆனால் எங்கள் அபார்ட்மெண்டில் ஒவ்வொரு பெட்ரூமிற்கு அருகிலும் ஒரு பால்கனி உண்டு. அதனால் கதவைத்திறந்தால் பளீரென்ற வெளிச்சமும், திமுதிமுவென்று காற்றும் வரும்.
    வீடு கடற்கரைக்கு அருகே இருப்பதால் காற்று வாங்க என்று எங்கேயும் செல்ல வேண்டியதில்லை. பால்கனியில் நின்றால் போதும் தென்றல் வந்து வருடும். நகரங்கள் பொதுவாய் கான்கிரீட் காடுகளாய்த் திகழ்கின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எங்கள் பால்கனியில் அமர்ந்தால் சோலைவனம் போல நாலாபுறமும் மரங்கள் தெரிகின்றன. பக்கத்து வீட்டில் மிகப்பெரிய மாமரம் ஒன்று உள்ளது. அதனை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். பூத்து, பின் காய்த்து, பின் தளிர்பச்சையில் புது இலைகளுடன் என்று அதன் வளர்ச்சியை வருடந்தோறும் உணர்வு பூர்வமாய் கண்டு கழிப்பேன். வெள்ளிக்கிழமைதோறும் பக்கத்து வீட்டு பெரியம்மா மாலையில் கோலமிட்டு துளசிமாடத்தில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அதனையும் மேலேயிருந்தே கண்டு ரசிப்பேன் .
    மாலை மணி நான்கு ஆனவுடன் பள்ளி விட்டு வரும் குழந்தைகள் கீழே விளையாட ஆரம்பித்து விடுவார்கள். நான் பால்கனியில் ஒரு சேர் போட்டு அமர்ந்து கொண்டு அவர்களை வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் சைக்கிள் ஓட்டுவதும் ஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி, கிரிக்கெட் என வித விதமாய் விளையாடுவார்கள். சமயங்களில் பெரியவர்கள் இறகுப்பந்து விளையாடுவதும் உண்டு.
        பச்சைக்கிளிகள் அதிகம் இருக்கும். அதன் கீச் கீச் ஒலியைக்கேட்டவுடன் ஓடிச்சென்று பார்ப்பேன் . அவை பறந்த வண்ணம் இருக்கும் நம் வீட்டிற்கு அவை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவற்றிற்கு தினமும் அரிசியும் தண்ணீரும் பால்கனியில் வைக்கிறேன். என்றாலும்  கிளிகளின் கடைக்கண் பார்வை எங்கள் வீட்டின் மீது படவில்லை. செடி கொடி இருந்தால் அவை வரும் என்று ஒருவர் சொன்னார் . இப்போது சில பூந்தொட்டிகள் வைத்து செடிகள் வளர்க்கின்றேன். காகங்கள் தான் வருகின்றன. அவை உரிமையாய் வந்து கத்தி என்னைக்கூப்பிடும். என் கணவரோ என்னைக் கேலி செய்வார்,'உன் ஃபிரண்டஸ் உன்னைக் கூப்பிடுகிறார்கள் .. பார்' என்று. என்றேனும் ஒருநாள் கிளிகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். புறாக்களுக்கும் பஞ்சமில்லை. அருகிலுள்ள மருத்துவமனையில் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த கூரையில் அவை த த்தி த த்தி நடந்து பேரணி நடத்தும். பைனாக்குலர் வைத்துக்கொண்டு அவற்றைப்பார்த்து ரசிப்பேன்.என் இளைய மகள், " அம்மா உன் அலப்பறைக்கு்ஒரு அளவே இல்லையா?" என்று கிண்டல் அடிப்பாள்.
     அம்மா மடியில் சாய்ந்து கொண்டு கதைகள் கேட்பது போன்ற இன்பத்தை இந்த பால்கனி எனக்கு அளிக்கின்றது. மொட்டை மாடியில் வைத்து சாதம் ஊட்டும் அம்மாவிடம் கதைகள் கேட்ட காலம் ஒன்று உண்டு. இளமைக்கால நினைவுகளை திகட்ட திகட்ட நினைத்துப் பார்த்து மகிழும் வழக்கம் எனக்கு உண்டு. அம்மா நினைவு வந்து அவ்வப்போது தனிமை வாட்டும் போது பால்கனியில் அமர்ந்து நிலவையே பார்த்துக் கொண்டிருப்பேன். நிலவு 'வருத்தப்படாதே நான் அருகில் வருகிறேன்' என்று கூறியவாறு அருகில் வருவது போல் தோன்றும். 
இப்படி என் வீட்டின் பால்கனி என் உள்ளத்தைக்கவர்ந்து ராஜாங்கம் நடத்துகின்றது.வீட்டிற்கு விருந்தினர் யார் வந்தாலும் அவர்களிடம் பால்கனி புராணம் பாடாமல் விடுவதில்லை.இப்போது 
பால்கனி தான் என் கண்ணிற்கும், மனதிற்கும் இதமளிக்கும் சோலை.





Thursday, September 10, 2015

விசுவாசத்துக்கேத்த வீக்கம் .



ராமு ராகேஷ் சாரிடம் டிரைவராக இருபது வருடங்களாக இருக்கிறான். அவர் அவனுக்கு ஒரு குறையும் வைத்ததில்லை. உண்மையைச் சொல்வது என்றால் அவன் முகம் கொஞ்சம் சோர்வாக இருந்தால் கூட கவனித்து அவனுக்கு என்ன பிரச்னை என்று அறிந்து உதவுவார். ராமுவும் கால நேரம் பார்க்காமல் அவர் குடும்பத்துக்கு உழைத்துள்ளான். 
       டிரைவர்தான் என்றாலும் ராமு சிறுக சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு சொந்த வீடு ஒன்று கட்டி விட்டான். பிள்ளைகள் இருவருமே படிக்கிறார்கள். கடவுள் புண்ணியத்தில் இருவருமே நன்றாகப் படிப்பதால் அவனுக்கு எந்தக் கவலையுமில்லை. ஆனால் இப்போது கொஞ்ச நாட்களாக மனைவி லட்சுமி தான் மகனை எப்படியாவது இன்ஜினியரிங் படிக்க வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நம் வசதிக்கு அது தோதுப்படாது என்று சொன்னால் அவளுக்குப் புரியவில்லை. பையனுடைய எதிர்காலம் நல்லா இருக்கும்.. எப்படியாவது பணம் புரட்டிக் கொடுய்யா என்று நச்சரித்துக் கொண்டிருக்கிறாள்.
            அதெல்லாம் வேண்டாம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டான். விரலுக்கு தகுந்த வீக்கம் போதும். அவன் ஆர்ட்ஸ் காலேஜில் பி.எஸ்ஸி படிக்கட்டும். போதும் என்றான். மகனும் ஒத்துக் கொண்டான். மனைவியும் அமைதியாகி விட்டாள். இந்த மனுசனை ஒண்ணும் பண்ணமுடியாது, பிழைக்கத் தெரியாதவன் என்று முடிவு கட்டி விட்டாள் போலும் .
              ரிசல்ட் வந்தது. ராமுவின் மகன் 1110 மார்க் வாங்கியிருந்தான். சந்தோசத்தில் ராமுவிற்கு தலைகால் புரியவில்லை. முதலில் ராகேஷ் சாருக்கு தான் சொல்ல வேண்டும் என்று மகனை கூட்டிக்கொண்டு ஸ்வீட் வாங்கிக் கொண்டு அவரைப் பார்க்க ஓடினான்.
            " ஐயா.. என் பையன் நல்ல மார்க் வாங்கி பாசாயிட்டான். முதல்ல உங்ககிட்ட தான் சொல்லணும்னு கூட்டி வந்தேன். தம்பி ஆசிர்வாதம்  வாங்கிக்கோ. உங்ககிட்ட ஆசிர்வாதம் வாங்கின பிறகு தான் சார் நாங்க கோயிலுக்கே போகப்போறோம்," என்று சந்தோசமாக்க் கூறினான்.
            ராகேஷ் அவனை தூக்கி நிறுத்தியவாறே," நானும் உனக்கு ஒரு பரிசு வைத்திருக்கிறேன்" என்று ஒரு கவரை நீட்டினார். அது.. நகரில் உள்ள தலைசிறந்த இன்ஜினியரிங் காலேஜில் அவனை சேர்ப்பதற்கான அட்மிஷன் கடிதம். அதுவும் அவன் விரும்பும் பிரிவை எடுத்துக் கொள்ளலாம் என்ற சலுகை வேறு அளிக்கப்பட்டிருந்தது. 
           ராமு விக்கித்துப்போய் நின்று விட்டான் . அவன் கண்களில் நீர் திரண்டது. பேச நா எழவில்லை. ராகேஷ் " நீ சொல்லவில்லை என்றால் எனக்குத் தெரியாதா?!" என்று புன்னகைத்தார்.

Tuesday, September 8, 2015

ஒரு பக்க கதை

" உங்கம்மா சீரியல் பாக்கும் போது இடியே விழுந்தாலும் அவங்களுக்குத் தெரியாது..கோவுச்சுக்காதீங்க..உள்ளதைச்சொன்னேன்."
" உங்க தம்பி தேவைன்னா மட்டும் தான் இந்தப் பக்கம் தலை காட்டுவார். இல்லைன்னா நம்ம இருக்கிற திசை பக்கம் திரும்ப கூட மாட்டார்."
" நீங்க எப்பவுமே இப்படித்தான். அவசரப்படுவீங்க. அவசரப்பட்டா ஜோலி ஆகாதுன்னு உங்களுக்குப் புரியாது. தப்புன்னா மன்னிச்சுக்கோங்க."
"உங்க குடும்பத்துல எல்லோருக்கும் இதே பழக்கம் தான். பணத்தை வாரி இறைக்கிறது.. அப்புறம் உக்காந்து வருத்தப்படறது...ஆனா இதெல்லாம் சொல்றதுக்கு நான் யாரு? நானாட்டம் என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருக்கிறேன்."
இவையெல்லாம் ராஜேஷுடைய சகதர்மினி  
சுதாவின் வார்த்தைகள். சுதா சும்மா இருக்க மாட்டாள். வார்த்தை குத்தீட்டிகளால் காயப்படுத்துவாள். அப்புறம் எனக்கு எதுக்கு பொல்லாப்பு என ஒதுங்கிக் கொள்வாள். இதை சொல்லாமலேயே இருக்கலாம். ராஜேஷின் மனம் புண்படுவதாவது குறையும் என்று அவனுக்குத் தோன்றும்.
             இதைப்பற்றி ஜாடை மாடையாக  குறை சொல்லாதே என்று சொல்லிப்பார்ததான் ராஜேஷ். ஆனால் சுதாவிற்கு மண்டையில் ஏறுகிற மாதிரி தெரியவில்லை. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசிக்கலானான்.
             ஒரு ஞாயிற்றுக்கிழமையில் காலையிலேயே ஆரம்பித்தான்..." காபியில் சூடு கம்மி..ஆனால் நான் ஏன் சொல்லணும். சொன்னா உனக்கு கோபம் வரும்" என்றபடி அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். சுதாவிற்கு சுருக் என்றிருந்தது. காபி சூடாகத்தான் இருந்தது. அவன் வேண்டுமென்றே சொல்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
               காலை டிபனின் போது," இதே தானா தினமும்...போர்" என்றான்." இதை நான் சொன்னா தப்பாயிடும். எனவே நான் கப்சிப்..." என பொய்யாக வாயை மூடிக்கொண்டான். சுதா கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டாள். 
               மதியம் சாப்பிடும் போதும் ஏதாவது ஆரம்பிப்பான் என்று சுதா எதிர்பார்த்தாள் . ஆனால் அவன் அமைதியாய் சாப்பிட்டான். அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் வேறு வித்த்தில் ஆரம்பித்தான். " சிலர் வீட்டை எப்படி சுத்தமா வைச்சிருக்காங்க..ம்ம்ம்..அய்யோ எனக்கு ஏன் இந்த பொல்லாப்பு."
           அவ்வளவு தான் இதற்கு மேல் சுதாவிற்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? சொல்வதை நேரடியாக சொல்வது தானே???இதென்ன இரட்டை வேடம்? " என்று பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.
             ராஜேஷ் அவளையே பாரத்துக் கொண்டிருந்தான். பின் மெல்ல ஆரம்பித்தான்" நீ இப்படித்தான் செய்கிறாய். யாரையாவது குறை சொல்கிறாய். பின் உனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாத து போல பேசுகிறாயே. நீ நடந்து கொள்ளும் வித்த்தைக் உனக்கு உணர்த்தவே இப்படி நடந்து கொண்டேன். மற்றபடி உன் மீது எனக்கு வருத்தமே கிடையாது . இனி புரிந்து நடந்து கொள்வாய் என நம்புகிறேன்.." என்றவாறே அவளை அணைத்துக் கொண்டாள். தவறை உணர்ந்தவளாய் சுதா அவனது அணைப்பில் மகிழ்ந்தாள்.

Thursday, August 20, 2015

சென்னை 376


தமிழ்நாட்டின் மொத்த ஜனத்தொகைக்கும் மனதின் எங்கோ ஒரு ஓரத்தில் கண்டிப்பாக இந்த ஆசை இருக்கும். ஒரு முறையாவது சென்னையை சென்று பார்த்து விட்டு வர வேண்டும் என்று. திரைப்படங்களும் பத்திரிகைகளும் சென்னையைப் பற்றி அப்படி ஒரு பூதாகர பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளன. சென்னையின் பிரதான வீதிகள்,மயக்கும் மால்கள், சிறந்த திரையரங்குகள், கடற்கரை, உணவு விடுதிகள் என நம்மை தூண்டில் போட்டு இழுப்பவை ஏராளம். ஆனால் நுழைந்தவுடன் ஏற்படுவதென்னவோ ஏமாற்றம் தான். தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு வரும் எவரும் முதலில் மிரண்டு தான் போய்விடுவர்.
          சென்னையில் நுழைந்தவுடன் நம்மைத் திகைக்க வைப்பது அதன் ஜனநெரிசல் தான். எங்கு பார்த்தாலும் கொத்துக்கொத்தாய் மனிதர்கள். ஒலிப்பான்களை அழுத்திக் கொண்டே  மிக வேகமாக எதையோ சாதிக்கப் போகிறாற் போல பறக்கும் வாகனங்கள். அவை கக்கும் நச்சுப் புகை. இவற்றைத் தாண்டி சென்னை நகருக்குள் நுழைந்தால் நாம் சந்திக்கும் கேள்விகள் எத்தனை எத்தனை? புதிதாய் சென்னை வரும் அப்பாவிகளிடம் ஆட்டோக்கார ர்கள் வந்து மிரட்டலாய் கேள்வி கேட்கும் போது அவர்கள் சற்றே திகிலடைந்து விடுவர். ஊரிலிருந்து எச்சரித்து அனுப்பப்பட்ட அந்த நபர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு தான் போக வேண்டிய இடத்தைக் கூறினால், எட்டாத ஒரு கட்டணத்தைக் கூறி அடுத்த மிரட்டலைத் தொடுப்பார். ஒரு விஷயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சென்னைவாசிகளிடம் அவர்கள் எவ்வளவு தைரியமாகப் பேசுகிறார்களோ அதே தைரியத்துடன் நாமும் பேச வேண்டும் . இல்லையென்றால் கதை கந்தலாகிவிடும். இங்கு வாழ ஆரம்பித்தவுடன் இன்னொரு விஷயமும் நமக்குப் புலப்படும். சென்னை என்பது ஓரே மாதிரியான மக்களைக் கொண்டது அல்ல. மாம்பலம், மயிலாப்பூர் , தாம்பரம், சாந்தோம் என்று பல்வேறு விதமான பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித த்தில் தனித்தன்மை வாய்ந்தது.
           ஆட்டோவில் ஏறி அமர்ந்து பயணம் செய்து இடத்தை அடையும் போது ஏதோ சாதனை செய்து விட்டாற் போல கட்டாயம் எண்ணத்தோன்றும். ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்களில் பயணம் செய்த நபர்களுக்கு அரை மணி நேரம், ஒரு மணி நேர பயணம் இங்கு சர்வசாதாரணம் என்ற உண்மையை ஜீரணிக்க சில காலம் ஆகும். 
           சென்னை வாழ் மக்களுக்கென்றே சில பிரத்யேக குணங்கள் உண்டு. பொதுவாக இங்குள்ள மக்கள் உதவும் குணம் மிக்கவர்கள். ஒரு அட்ரஸ் கேட்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், இருக்கும் வேலையெல்லாம் விட்டு விட்டு கர்ம சிரத்தையாய் வந்து வழி சொல்வார்கள். சமயங்களில் அது தவறாக கூட இருக்கலாம். தமக்கு தெரியவில்லை என்றால் கூட வழி சொல்வதில் வல்லவர்கள். சுத்தம் சுகாதாரம் பேணுவதில் அவர்களுக்கு இணை வேறு எவரும் இல்லை. பேப்பர் கப்பில் காபி குடிப்பவர் என்றால் ஜாக்கிரதையாக கப்பை நசுக்கி விட்டு குப்பைத்தொட்டியின் அருகே கீழே வீசி எறிவார்கள். (கவனிக்க..குப்பைத்தொட்டியின் உள்ளே அல்ல). அதென்னவோ குப்பைக் கவர் எடுத்து வரும் அனைவருக்கும் தான் பெரிய கபில் தேவ் என்ற எண்ணம் ஏற்பட்டு விடுகிறது. பௌலிங் போடுவது போல் குப்பைத்தொட்டியை குறி வைத்து வீசுகிறார்கள். ஆனால் அது மிகச்சரியாக வெளியே விழுந்து பல்லைக் காட்டும். ஆனால் இதைப் பற்றியெல்லாம் சென்னை வாழ் மக்கள் கண்டு கொள்ளவே மாட்டர்கள். அவ்வப்போது அவர்களுக்கு குப்பையைப் பற்றி திடீர் ஞானோதயம் ஏற்படும் . ஷார்ட்ஸ், தொப்பி,கான்வாஸ் ஷூஸ் சகிதம் வாக்கிங் செல்லும் மகானுபாவர்கள் இதைப் பற்றி பேசிக்கொண்டே செல்வார்கள். எக்ஸ்நோரா போன்ற அமைப்புகளின் மூலம் குப்பைத்தொட்டிகள் வாங்கிக் கொடுத்து கடைக்கார ர்களை வாடிக்கையாளர்களிடம் அதில் போடச்சொல்லி வற்புறுத்துவார்கள். கடைக்கார ர்கள் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுவார்கள். ஆனால் எல்லாம் பத்து நாட்களுக்குத்தான். அதன் பின் பழையபடி குப்பைகள் வீதியை அலங்கரிக்கும். 
         மழை பெய்தால் சென்னை நகரம் அடையும் திண்டாட்டத்தை சொல்லி மாளாது. ஒரு சின்ன தூறலுக்கே டிராபிக்கால் சென்னை ஸ்தம்பித்து விடும். வீதிகளில் நீர் வழிந்தோடும். காய்ச்சல் , வாந்தி, பேதி என்று நோய்கள் சரமாரியாகத் தாக்கும். இத்தனையையும் தாண்டி தங்கள் சகஜ வாழ்க்கையைத் தொடர அனைவரும் பாடுபடுவர். இதனை கண்டிப்பாக பாராட்ட வேண்டும். ஆனால் இப்பொழுதெல்லாம் சென்னை வறண்ட பூமியாகி ஆகிவிட்டது. மழையைப் பார்ப்பதே அபூர்வமாகிவிட்டது.
      சென்னை மக்கள் சுறுசுறுப்பானவர்கள். அதிகாலை ஆறு மணிக்கே கையில் சப்பாட்டுடன் இரண்டு பஸ் மாறி பணியிடங்களுக்கு செல்பவர்களை கண்டிருக்கிறேன். சிறு நகரங்களில் ஒன்பது மணிக்கு பணிக்கு செல்ல வேண்டிய நபர் காலை எட்டரை மணிக்கு பாட்டு கேட்டுக்கொண்டே அடி பம்ப் இல் தண்ணி அடித்துக் கொண்டிருப்பார். அவரால் அரைமணி நேரத்தில் குளித்து சாப்பிட்டு அலுவலகத்தை அடைய முடியும். ஆனால் இங்கு அதுவல்ல கதை. நாள்தோறும் இரண்டு மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் அநேகம் பேருக்கு உள்ளது.
          ரசனையுடன் ஆடை அணிவதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. பஞ்சு மிட்டாய் கலர், ஆரஞ்சு மிட்டாய் கலர் என்று எள்ளி நகையாடப்படும் வண்ணங்களில் ஆடைகளை விரும்பி அணிவர். ஹேர் கலரிங் செய்து பெண்களுக்கு இணையாக ஆண்களும் நீண்ட கூந்தல் வளர்ப்பர். ஒரு மாலை வேளை மெரினாவிற்கு சென்றால் எத்தனை விதமானவர்களைப் பார்க்கலாம். தலையில் கலர்ப்பூ, காலில் கொலுசு, நெற்றியில்குங்குமத்துடன் சிலர். குதிகால் செருப்பு, அலைபாயும் கூந்தல், குட்டைப் பாவாடை, நுனிநாக்கு ஆங்கிலம் என்று சிலர். காதில் ஹெட்போன், நைந்த ஜீன்ஸ்,பந்தாவாக ஒரு பைக், மற்றும் நண்பர் கூட்டம் என்று சிலர். பஞ்சென நரைத்த தலை, பழைய கால அருமைபெருமைப் பேச்சு, இசையில் அதீத ஈடுபாடு என்று சிலர். இப்படி கலவையான மக்கள் கூட்டம் காண எங்கும் கிடைக்காது. 
          சென்னை மக்கள் உணவுப்பரியர்கள். பாரம்பரிய உணவு விடுதிகள், தெருவோரங்களில் இருக்கும் கையேந்தி பவன்கள், மேலை நாட்டு துரித உணவகங்கள், வடக்கத்திய சாட் உணவகங்கள் , சைனீஸ் உணவகங்கள் என்று உணவு வகைகளுக்கு பஞ்சமே கிடையாது. அனைத்திலும் ஜேஜே என்று கூட்டம் மொய்க்கும். சென்னையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பல உண்டு. வழிப்பாட்டுத்தலங்களும் அனைத்து மத த்தினருக்கும் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும். சென்னை மக்களின் பேச்சுத்திறமையை குறைத்து எடை போடக்கூடாது. தன்னம்பிக்கையை மிளிர பேசும் அவர்கள் சென்னையை ஒரு போதும் விட்டுத் தர மாட்டார்கள். இப்படி சென்னையைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம் . முழுமையாக ஒரு கட்டுரையில் கூறுவது என்பது மெரினாவை ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் அடைப்பது போல இயலாத காரியம்.