Wednesday, April 27, 2016

இல்லத்தை அலங்கரிக்கும் மாடிப்படிகள்.





           நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம் .. நாயகன் வில்லனிடம் சவால் விடும் காட்சி அல்லது நாயகன் நாயகியின் அழகில் மயங்கி காதலில் விழும் காட்சி..இது போன்ற காட்சிகள் மிகப் பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் அவர்கள் இறங்கி வரும் போது  நடைபெறும். வீட்டின் விஸ்தீரணத்தை இந்த மாடிப்படிகள் பறைசாற்றுவதைக் காணலாம். வீட்டின் அழகை அதிகமாக்குவதில் மாடிப்படிகள் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. இரு தளங்களை இணைக்கும் கட்டுமானமாகத் திகழும் மாடிப்படிகள் வீட்டின் தோற்றத்தை நிர்ணயிப்பது கண்கூடு. 
            மாடிப்படிகள் ஒன்று வீட்டின் வெளிப்புறம் அமைக்கப்படும் அல்லது வீட்டின் உள்புறம் அமைக்கப்படும். வெளிப்புற படிக்கட்டுகள் பெரும்பாலும் கான்கிரீட்டினால் அமைக்கப்படுகின்றன. உட்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகளில் கான்கிரீட், மரம், கண்ணாடி, கிரானைட் என்று பலவிதமாக நமது இரசனைக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன. இன்டீரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கபட்டாலும், வீட்டில் உள்ளோரின் உடல்நிலை, பழக்கவழக்கம் ஆகியனவும் கருத்தில் கொள்ளப் படுகின்றது. வயது முதிர்ந்தோர், குழந்தைகள் வாழும் வீடு எனில் அவர்களது பாதுகாப்பு மற்றும் சௌகர்யத்தைக் கணக்கில் கொண்டு மாடிப்படிகள் அமைக்கப்படுகின்றன். பொதுவாக படிக்கட்டுகளின் சாய்வுதளம் 25 டிகிரி முதல் 40 டிகிரி வரையும், படிக்கட்டுகளின் அகலம் குறைந்த பட்சம் மூன்று அடிகளாவது அமைவது நலம் என்று பொறியாளர்கள் கருதுகின்றனர். 
                படிக்கட்டுகள் வடிவமைப்பில் வளைவுப் படிக்கட்டுகள், நேரான படிக்கட்டுகள், மிதக்கும் படிக்கட்டுகள், சுழல் படிக்கட்டுகள் எனப் பல வகைகள் உள்ளன. நேரான படிக்கட்டுகள் சில சமயலங்களில் L வடிவத்திலும், இரட்டை L வடிவத்திலும், U வடிவத்திலும் அமைக்கப்படும். சுருக்கமான இடம் எனில் U வடிவப்படிக்கட்டுகளே நல்லது. நேரான படிக்கட்டுகளில் திருப்பங்கள் அமைத்தால் அது L வடிவப்படிக்கட்டு ஆகும். திருப்பங்கள் இல்லாமல் ஒரே வீச்சாக படிக்கட்டுகள் இருந்தால் ஏறுவது சிரம ம் தரும். அரைவட்ட திருப்பம், கால் திருப்பம், திறந்தவெளி திருப்பம் ..இவற்றில் நம் வீட்டிற்கு எது பொருத்தமானதோ அதை கட்டிட வல்லுனரின் ஆலோசனையின் படி அமைக்கலாம். சுழல் படிக்கட்டுகள் மற்றும் வளைவுப் படிக்கட்டுகளில் வரவேற்பறையில் பிரதானமாக அமைத்தால் வரவேற்பறையின் அழகு கூடும். மிதக்கும் படிக்கட்டுகள் என்பது அந்தரத்தில் மிதப்பவை அல்ல. ஒருப்பக்கம் சுவற்றில் இணைக்கப்பட்டிருக்கும். படிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் தனித்தனியே நிற்கும்.
              படிக்கட்டுகளை கிரானைட் எனும் பளிங்குக் கற்களால் அமைக்கலாம், மரத்தால் அமைக்கலாம். மரத்தால் அமைக்கும் போது தேர்வு செய்யும் பலகையின் உறுதித்தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். பளிங்கு கற்களால் அமைக்கும் படிக்கட்டுகள் ஒரு எடுப்பான தோற்றத்தைத் தரும். கண்ணாடிப்படிக்கட்டுகளை வீடுகளில் அமைப்பதில்லை. பெரும்பாலும் மிகப் பெரிய ஷோரூம்களிலும், மால் என்னும் பல்பொருள் அங்காடிகளிலும் அமையக் காணலாம். உலோகப்படிக்கட்டுகள் உறுதியுடன் திகழும், என்றாலும் துருப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் இவற்றிற்கு அடிக்கடி வண்ணம் பூசி புதுப்பிக்க வேண்டும். பெரும்பாலும் படிக்கட்டுகளின் ஒரு பக்கம் சுவரும் மற்றொரு பக்கம் கைப்பிடியுடன் கூடிய தடுப்புகள் இருக்கும். சமயங்களில் இரு பக்கமும் தடுப்புகளை அமைப்பதும் உண்டு. மரத்தாலான டிசைன்களில், இரும்புக்கம்பிகளாலான டிசைன்களில், மார்பிள் கற்களால் ஆன டிசைன்களில் என ஏராளமான வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் எது நம் வீட்டிற்கு பொருத்தமானதோ அதை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 
             மாடிப்படிகளின் கீழிருக்கும் வெற்றிடத்தை சிறந்த சேமிப்புக்கான அறையாக மாற்றலாம். புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்கலாம். குழந்தைகளின் பொம்மைகள் ஆங்காங்கே இறைந்து கிடக்காமல், விளையாடிய நேரம் போக எஞ்சிய நேரம் மாடிப்படிகளின் கீழ் அடுக்கி வைக்கலாம். இடப்பற்றாக்குறையால் இன்னலுறும் போது கொஞ்சம் யோசித்து இவ்விடத்தை பயனுள்ளதாக மாற்றலாம். ஜிம் உபகரணங்கள், வாஷிங்டன் மெஷின், டிஷ் வாஷர் போன்றவற்றை இங்கு அமைத்து விட்டால் இடநெருக்கடி குறையும்.அடிக்கடி உபயோகப்படுத்தாத பொருட்களை கப்போர்ட் அமைத்து இங்கு சேமித்து வைக்கலாம்.
             வளைவான மாடிப்படிகளின் அழகு வேறு எதிலும் இல்லை. அதன் பக்கவாட்டில் ஆர்ச் போன்ற பெரிய ஜன்னல்களை அமைத்தால் மிக எடுப்பான தோற்றம் தரும். மாடிப்படிகளின் ஒரு புறமாக அமைந்த சுவர்களை அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கலாம். நம் வீட்டிற்கான ஆர்ட் கேலரியாக அதனை மாற்றலாம். அழகான ஓவியங்கள் அல்லது புகைப்படங்களை அங்கே மாட்டி வைத்தால் மிக அழகாக இருக்கும். படிகளின் முகப்பில் மிகப் பெரிய ஷோபீஸ் அல்லது பூஞ்ஜாடி கொண்டு அலங்கரிக்கலாம். முகப்பில் வேலைப்படாமைந்த கார்பெட்களை விரித்தால் இன்னும் சிறப்பு. 
            வரவேற்பறையில் அமையும் படிக்கட்டுகளை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நம் கற்பனைக்கு ஏற்றவாறு அலங்கரிக்கலாம். பொதுவாக முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் என்பார்கள். அதை மனதில் கொண்டு வீட்டிற்கு வரும் விருந்தினரை ஈர்க்கும் வண்ணம் அலங்கரிக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால் என் எண்ணம், நாம் வீட்டை விட்டு விட்டு வெளியேறும் போது நம் கண்களை நிறைக்கும் அழகிய தோற்றம் எப்பொழுதுமே மனதிற்கு ஒரு நிறைவைத்தரும். அதை மனதில் கொண்டு வரவேற்பறையின் படிக்கட்டுகளை அலங்கரிக்கலாம்.



Thursday, April 21, 2016

வீட்டுக்கடன்

எலி வளையானாலும் தனி வளையா இருக்கணும் ..என்பது பழைய மொழி. ஆனால் அது இன்றும் நம் அனைவரது மனங்களிலும் கன ன்று கொண்டிருக்கும் நீங்காத ஆசை. ஒரு கிரவுண்ட் கூட வேண்டாம., அரை கிரவுண்டிலோ அல்லது சிங்கிள் பெட்ரூம் பிளாட் கூட போதும்., ஒரு அழகான வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கனவு.
    இந்தக் கனவு நிறைவேற முன்பை விட இப்போது அதிக சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன. வங்கிக்கடன், அதுவும் வீட்டுக்கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. 10.8 முதல் 10.30 வரை வட்டி விகிதம் நிலவுகின்றது. இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். மற்ற கடன்களைக்காட்டிலும் வீட்டுக் கடனுக்கு சில சலுகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று கடனைத்திருப்பி செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். கடனை நாம் ஐந்து ஆண்டுகளிலும் திருப்பி செலுத்தலாம். இருபத்தைந்து ஆண்டுகளிலும் திருப்பி செலுத்தலாம். அது நாம் தேர்ந்தெடுக்கும் கடன் தொகை மற்றும் திட்டத்தைப் பொறுத்தது ஆகும்.
          வங்கிகள் நாம் புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டவும், புது வீடு வாங்கவும், புது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், பழைய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், இருக்கும் வீட்டை மேம்படுத்தவும் கடன் வழங்குகின்றன. கடன் பெற தகுதி என்பது பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை ஆகும் . சில வங்கிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் அல்லது சட்ட வல்லுநர்கள் எனில் அறுபது வயது வரை அளிக்கின்றனர். வீடு கட்ட கடன் தொகை மூன்று முதல் ஐந்து கோடி வரையும் வீட்டு மேம்பாட்டு கடன் இருபத்தைந்து லட்சம் வரை பெறலாம் என்று வங்கித்துறையினர் கூறுகின்றனர். கடன் பெறும் நபர் பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் EMI முடிந்து விடுமா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன. ஒருவேளை ஓய்வு பெற்ற பின்னும் EMI செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, அதற்கேற்ற வருமானம் நமக்கு இருக்கும் பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும். சில சமயங்களில் கடன் பெறுபவர் அறுபது வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால் அவரது துணைவியோ, வாரிசுதார ரோ எழுத்துப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் வாரிசுதார ர்(co-obligant) அதனை செலுத்த நேரிடும்.
             வங்கிகள் கடன் அளிக்கும் என்றாலும் முதல் இருபது முதல் இருபத்து ஐந்து சதவீத முதலீட்டை நாம் தான் செலவிட வேண்டும். மீதியைத்தான் கடனாகத் தருவார்கள். இதை கட்டுமானம் முடிய முடிய மூன்று நான்கு தடவையாகப் பிரித்து தருவார்கள். வீட்டின் விலை அல்லது தோராயமான மதிப்பீட்டின் எண்பது சதவீதம் கடனாக க் கிடைக்கும் என்றாலும் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப தான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். 25- 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல எழுபது மடங்கு கிடைக்கும். 45 வயதிற்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல ஐம்பது முதல் அறுபது மடங்கு வரை கிடைக்கும். 45 வயதிற்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால் நம் ஆண்டு வருமானத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு கிடைக்கும். வங்கிக்கடனைத் திருப்பி செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற EMI போக, வீட்டுக்கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் முப்பத்தைந்து சதவீதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டு செலவுகளை சமாளிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும்.
         பொதுவாக நாம் வங்கிகளில் விண்ணப்பிக்கும் போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்து தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. வங்கிகளில் எதிர்ப்பார்க்கும் ஆவணங்கள்... 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், 
விண்ணப்பதார ரின் புகைப்படம், 
புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று, 
முகவரிச்சான்று, 
வயதுச்சான்று( பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பின் மதிப்பெண் பட்டியல்), 
மனைப்பத்திரம்( சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது),
தாய்ப்த்திரம்,
வில்லங்கச் சான்றிதழ்,
விற்பனைச் பத்திரத்தின் நகல்,
சட்ட வல்லுநரின் கருத்து,
வீட்டிற்கு உண்டான வரைபடம், அங்கிகாரம் நகல்,
வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை,
வருமானச் சான்றிதழ்,
கடந்த ஆறுமாத த்துக்கான வங்கி பாஸ் புக் நகல்,
வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகல்,
பான் அட்டையின் நகல்.
           கடன் கொடுப்பதுடன் வங்கியின் கடமை முடிந்து விடாது. வீடு கட்டி முடியும் வரை தனது பொறியாளர்கள் வைத்து திட்டத்திலிருந்து மாறாமல் வீடு கட்டப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கும். EMI ஒரு மாதமோ இரண்டு மாதமோ கட்டத் தவறினாலும் அதற்கு அபராதம் உண்டு. வீடு கட்டி முடித்த பின் அதன் இன்டீரியர் எனும் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் ' டாப் அப் லோன்' எனும் வசதி அளிக்கின்றனர். அதன்படி கடன் தொகையிலிருந்து பதினைந்து சதவிகீதம்  கிடைக்கும். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு மட்டுமே கிடைக்கும். செயல் முறை கட்டணம் என்று அளிக்கப்படும் கடன் தொகையின் 1 சதவீத த்தை வங்கி எடுத்துக்கொள்ளும். பிற வங்கிகளிலிருந்து கடனை எடுத்துக் கொள்ளும் வசதியும் பல வங்கிகளில் உண்டு. அதாவது பாதி கடன் செலுத்திய நிலையில் நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேறு வங்கியில் மாறிக் கொள்ளலாம்.
               வீடு கட்ட, வீடு வாங்குவதற்கு, வீட்டை விரிவுபடுத்துவதற்கு, வீட்டை மேம்படுத்துவதற்கு என பலவிதமான கடன் வசதிகள் பல விதமான வட்டி விகிதங்கள். வீட்டுக் கடன் என்பது பெர்சனல் லோன் மற்றும் வாகனக் கடன் போன்றது அல்ல. அளவு மிகவும் பெரியது என்பதால் சிறிய அளவு வட்டி விகிதம் கூட பெரிய அளவு மாற்றம் தரும். என்றாலும் எல்லாக்கடனையும் விட வீட்டுக் கடனுக்கு வட்டிவிகிதம் குறைவாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது. நம்முடைய ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் வங்கிக்கடன் பதினைந்து நாட்களுக்குள் கிடைத்து விடும் என்கிறார் வங்கி மேலாளர். வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதன் நடைமுறை வழக்கங்களைப் பற்றி இணையத்திலோ அல்லது வங்கி உயரதிகாரிகளிடமோ கேட்டு அறிந்து கொள்வது நல்லது. வங்கிகள் அளிக்கும் விட்டிவிகிதங்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம், அவற்றை ஒரு முறை ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம். கடன் ஒப்பந்தம் முழுவதையும் கவனமாக படிக்க வேண்டும்.

Wednesday, April 20, 2016

பயணங்கள் பலவிதம்.

           எந்த ஊருக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அதைப் பற்றி முன்னரே இணையத்தில் தகவல்கள் தேடுவது என் வழக்கம். மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள " லோனாவாலா" செல்வது என்று முடிவானதும் கூகுளிடம் சரண் அடைந்தேன். அதனைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்கள் யாவும் என் ஆர்வத்தை மேலும் தூண்டுவனவான அமைந்தன. அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
            செப்டெம்பர் 28, 2015 லோனாவாலாக்கு என் குடும்பத்தினருடன் பயணமானோம். இன்றைய ட்ரெண்டின் படி ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலும் பதிவிட்டு விட்டு கிளம்பினோம். ஒன்றரை நாள் இரயில் பயணமாகையால் உற்சாகத்திற்கு குறைவில்லை. தமிழகம் தாண்டியதும் வருண பகவானும் கருணை காட்டி மழை பொழிய வைத்து பயணத்தின் போது அனல் தெரியாமலிருக்க உதவினான். லோனாவாலா புனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவிலிருக்கிறது. இதன் இதமான, மிதமான குளிருடன் கூடிய சீதோஷ்ணநிலை, அழகிய வண்ணப்பூக்களுடன் திகழும் சிறிய மலைக்குன்றுகள், பரந்து விரிந்துப்பட்ட ஏரிகள், அடிக்கடி மழை பெய்து குளிர்ச்சியான சூழல் போன்றவை சுற்றுலா வரத்தூண்டுவனவாய் அமைந்துள்ளன. மும்பை மற்றும் புனேவாசிகளின் வார இறுதி நாட்களின் விருப்பத் தேர்வாக லோனாவாலா மாறியுள்ளது.(weekend getaway).
          நகரமயமாதலின் சாயல் இன்னும் அதிகம் விழாத சிறு நகரான லோனாவாலாவின் எளிமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. நகரின் மிக அருகில் அமைந்த Tiger point இன் எழில் காண்போரை தன் வசமாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாய் வனப்புடன் திகழ்ந்தது. இயற்கை எங்களுக்கு, குறிப்பாக கண்களுக்கு, என்ன விருந்தளிக்கப் போகிறதோ என்று ஆவலுடன் பயணித்தோம். இயற்கை அன்னை எங்களை ஏமாற்றவில்லை. வாரி வழங்கியிருந்தாள். பரந்து விரிந்த மலைப்பிரதேசமெங்கும் பூத்துக் குலுங்கிய சிறு மலர்கள் ...காணக் கண் கோடி வேண்டும்.
          ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாக கழிப்பதற்கு உகந்த அழகான, இயற்கைப் பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளைப் பிண்ணனியாக்க் கொண்டு 'புஷி அணை' அமைந்துள்ளது. இதன் அமைதியான சூழலும், ஸ்படிகம் போன்ற நீரும் மனதிற்கு இன்பம் அளிக்கும் விதமாக இருந்தது. மழைக்காலத்தில் இந்த இடத்தைப்பார்ப்பது சிறந்ததாக இருக்கும். அச்சமயத்தில் அணை நிரம்பி வழிந்து நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மழைக்காலங்களில் வழிந்தோடும் நீரில் படிக்கட்டுகளில்  நனைத்து கொண்டு குழந்தைகளுடன் பெரியவர்களும் குதூகலிப்பதைக் காணலாம்.
            லோனாவாலா இத்தகைய எழில் காட்சிகளைக் கொண்டிருந்தாலும் இதன் சுற்று வட்டாரத்தில் பாரம்பரியம் மிக்க கோட்டைகளையும் புராதனக் குகைகளையும் கொண்டுள்ளது. கார்லா குகைகள் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைக் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஹீனயானம் எனப்படும் பௌத்த மரபுப்படி அமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் புராதன சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக  கருதப்படுகின்றது கார்லா குகையின் அருகிலேயே ஏக்வீராதேவியின் திருக்கோயில் அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு மிகவும் தோதான இடம், பாரம்பரியமும், புராதனமும் அருகருகே அமைந்துள்ளபடியால்.
              கார்லா குகைகயைப் போலவே பாஜாக் குகைகளும் உள்ளன. பள்ளி ஒன்று சுற்றுலா வந்திருந்தபடியால் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சூரிய ஒளி மாலை வேளையில் நேரடியாக குகைக்குள் விழுவதால் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் நன்கு தெரிகின்றன. மிகப் பெரிய சைதன்யம், எளிமையான எண்கோண தூண்கள், அவற்றின் மீது அமைந்த அரை நீள் வட்ட கூரை, மர வளைவுகள், வெளிப்புற சாளரங்கள், நுட்பமான சிற்பங்கள் என இவற்றின் அழகியலை வருணித்துக் கொண்டே போகலாம். துறவிகள் தண்ணீர் குடிக்க என இருக்கும் அமைப்புகள், தங்குவதற்கான சிறிய அறைகள் என அதிஅற்புதமான மடாலயங்களாகத் திகழ்கின்றன. கல்லிலான நுட்பமான சிற்பங்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும். வணிகர், துணைகளுடன் வரும் தலைவன், யானை மீதமர்ந்த கந்தர்வன், தபேலா வாசிக்கும் பெண்,நடனமாடும் பெண் என பல தரப்பட்டன. மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், சாஞ்சி போன்று இல்லாமல் இங்கு ஒரே இடத்தில் அமைந்திருக்கும் கல்லிலான பதினான்கு ஸ்தூபிகள்.ஒரு சிறு குகைக்குள் ஒன்பதும், குகைக்கு வெளியே ஐந்துமாய் நெருக்கமாய் உள்ளன.இவற்றைக் கண்டவுடன் நம் முன்னோர்கள் மீது மரியாதையும், நாம் வாழும் தேசம் குறித்து பெருமிதமும் ஏற்படுவது திண்ணம்.
                 சுமார் 52 கி.மீ தொலைவில் உள்ள இரும்புக்கோட்டை என்று அழைக்கப்படும் லோஹ்ஹார் கோட்டைப் பயணமானோம். சிகரம் வைத்தாற் போல பாங்குடன் திகழ்ந்த இந்தக் கோட்டையை அடைய சிறிது சிரமாயிருந்தது. கீழே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்ட போது பட்ட கஷ்டம் மேலே உள்ள காட்சி(view)யைக் கண்டவுடன் மறந்துவிடும் என்றார். உண்மை தான். என்னை அறியாமல் 'வாவ்' என்றேன் நான். குரு கோவிந்த் சிங்கினால் கட்டப்பட்ட இக்கோட்டை அதிக வருடங்கள் மராட்டிய அரசுகளின் வசமே இருந்தது. ஐந்து வருடங்கள் முகலாயர்கள் வசம் இருந்ததாகவும் பின் மாவீரன் சிவாஜி அதை மீட்டு தன்னுடைய கருவூலமாகப் பயன்படுத்தினான் என வரலாறு கூறுகிறது. 
                   மஹாராஷ்டிர உணவான வடாபாவ், போஹா, மிசெல் போன்றவை, அம்மாநிலப் பெண்களின் 
சேலை கட்டும் பாங்கு, ஆண்கள் பலர் காந்தி குல்லாய் அணிந்து வெண்ணிற உடைகளில் வலம் வந்தது என ஒவ்வொன்றையும் ரசித்தேன். தங்கியிருந்த ஹோட்டலில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு ஒரு நாள் காலையில் ட்ரெக்கிங்(trekking) அழைத்து சென்றார்கள். அப்போது மும்பையைச் சேர்ந்த என் வயதை ஒத்த இரு பெண்கள் தோழிகள் ஆகிவிட்டனர். நம் ஊரின் பில்டர் காபியின் சுவையையும் மணத்தையும் வானளாவப் புகழந்தனர். அவர்கள் கூறிய ஆச்சர்யமூட்டும் தகவல் ஒன்று. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து லோனாவாலாக்கு, அவர்களுடைய மாமா வீட்டுக்கு வரும் போது , இன்ஜின் டிரைவரிடம் சொல்லி மாமா வீட்டின் எதிரிலேயே இறங்கிக் கொள்வார்களாம்( அவர்களுடைய மாமா வீடு இரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்தது). ஆச்சர்யத்துடன் அதிர்ந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் ., ஆனால் திரும்பி மும்பை செல்ல இரயில் நிலையம் தான் செல்ல வேண்டும் என்றார்கள் சிரிப்பினூடே.
                லோனாவாலாவும் அதனைச் சுற்றி அமைந்த இடங்களும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடங்கள் என்றே கூற வேண்டும். மழைக்காலங்களில் அதன் அறியப்படாத பேரழகு பன்மடங்காகின்றது. கட்டாயம் பார்த்து மகிழ் வேண்டிய இடங்களில் ஒன்று.
           

Sunday, March 27, 2016

பச்சைப்பாம்பும் நானும்.

அது என்னவோ தெரியலீங்க... இந்தப் பெண்களுக்கு சமைக்கிறதுன்னா எங்கேயிருந்து தான் இவ்வளவு உற்சாகம் வருதோ!? இரண்டு பெண்கள் சந்தித்தால் உடனே சமையலைப் பற்றியும், சேலை பற்றியும், பிள்ளைகளின் படிப்பையும் பற்றியே பேசுகின்றனர். தான் காலையில் என்ன சமைத்தேன், எப்படி சமைத்தேன், எப்படி எல்லோரும் விரும்பி சாப்பிட்டனர் என்று விலாவரியாக பேசுகின்றனர். ஏனோ எனக்கு இந்த கலை கைவர மாட்டேன் என்கிறது.
        காலையில் என்ன சமைத்தோம் என்பது பற்றி மாலையில் பேச அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சமைப்பதையும் தாண்டி உலகில் முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கே! உடனே உலகப் பொருளாதாரம் பற்றியா பேச்ச்சொல்கிறாய்? அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் பேசுகிறார்கள், உனக்கென்ன? என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால்... சமையலறையையும் தாண்டி பெண்கள் விஷய ஞானம் உள்ளவர்களாய்த் திகழ வேண்டும் என்பது தான். பெண்கள் தங்களையே சமையலறைகளில் தொலைத்து விடுகின்றனர். ஆனால் நம் பெண்களுக்கு தங்களைத்தேடும் பிரக்ஞை இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்வின் பெரும் பகுதியை குடும்ப உறுப்பினர்களுக்காக அடுக்களையில் தொலைத்து விட்டு தனக்கென ஒரு தனித்துவம் இல்லாமல் போய்விடுகின்றனர். சரி, அவர்கள் செய்யும் சேவைக்கு ஒரு அங்கிகாரமாவது கிடைக்கிறதா? அதுவும் இல்லை. கணவரும், குழந்தைகளும் தரும் பட்டம்," அவளுக்கு ஒண்ணும் தெரியாது" என்பது தான்.
      ஆனால் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை. பெண்களில் எத்தனை பேர் நாளிதழ்களைப் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்? பொது அறிவு என்பது பக்கத்து வீட்டில் என்ன நடந்தது? மூணாவது தெரு பெண் யாரைக் காதலிக்கிறாள் போன்ற அதிமுக்கியமான நிகழ்வுகள் அல்ல. எத்தனை பேருக்கு வங்கிக்கணக்கு பார்க்கத் தெரியும்? சீட்டுப் போட்டு தவணையில் பொருட்கள் வாங்கும் கணக்கு கணக்கு அல்ல. 'ஸ்மார்ட்' ஃபோன் வைத்திருந்தாலும் அதனை இயக்கத்தெரியாமல் விழிப்பதும், மாலை வேளைகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடைப்பதும் வாடிக்கையான ஒன்று தானே!
        பொதுவாக, எனக்கு ஒரு அபிப்ராயம் உண்டு. நமது சமையல் முறைகள் அவ்வளவு எளியவனாக இல்லை என்று. காலையில் நாம் சமைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் ஒன்றுஅல்லது ஒன்றரை மணி நேரம். இதில் முந்தைய நாள் முஸ்தீபுகளின் நேரத்தை நான் கணக்கில் சேர்க்கவில்லை. முந்தைய நாள் முஸ்தீபுகள் என்று நான் சொன்னது இட்லி, தோசை, ஆப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு மாவாட்டுவதைத்தான். மதியம் சமைப்பதற்கு சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறோம். அதற்கு முன்பு காய்கறி வாங்குவதற்கு எனத் தனியே அரை மணி நேரம். இரவில் சமைக்க ஒரு மணி நேரம். இடையிடையே டீ, காபி, பால் என்று நேரம் பறந்தோடுகிறது. ஆனால் வெளிநாடுகளில் சமைப்பதற்கு இவ்வளவு நேரம் செலவளிப்பதில்லை. அவர்களுடைய மெனுவில் இத்தனை ஐட்டங்கள் கிடையாது. வீட்டில் உள்ளோர்கள அனைவருமே பணிக்கு செல்வதால் சமையலை எளிமையாகசெய்கின்றனர். ஆண் பெண் பாகுபாடின்றி வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கின்றனர். பதின் பருவத்தினர் கூட கட்டாயம் பெற்றோருக்கு உதவ வேண்டும். ஆனால் நம் நாட்டில் எல்லாமே தலை கீழ்.
          நேரம் அதிகமானாலும் , சாப்பாட்டிற்கு சுவை ஊட்டுகிறேன் பேர்வழி என்று நெய்யையும், முந்திரியையும் அனைத்திலும் வாரி இறைத்து சர்க்கரை வியாதியையும், கொலஸ்ட்ராலையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்போர் அதிகம்.சுவையை விட ஆரோக்யமே பிரதானம் என்று சமைக்க வேண்டும். சமையலை எளிதாக்குங்கள். உங்கள் பொன்னான நேரத்தை உங்களுக்கான நேரமாக்கி உங்களுக்காக செலவிடுங்கள்.சரி, நான் ஏதோ சொல்கிறேன் என்றாலும் எனக்கு என் சமையலின் மீது கொஞ்சம் அவநம்பிக்கை உண்டு. என் கணவரும், குழந்தைகளும் நான் நன்றாக சமைக்கிறேன் என்று எனக்கு சான்றிதழ் அளித்தாலும், நான் நம்பிக்கை இன்றி," நிஜமாகவே நன்றாக இருக்கிறதா?" என்ற கேட்டுக்கொண்டே இருப்பேன்.
           இப்படித்தான் முன்பொரு நாள், என்னுடைய இளவயதில், என் வீட்டில் பணிபுரியும் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன். நன்றாக சமைக்க என்ன செய்ய வேண்டும் என நான் அவளிடம் கேட்டேன். கவனமாக, பொறுமையாக, ஈடுபாட்டோடு ..இது போன்ற ஒரு பதிலை நான் எதிர் பார்த்தேன். ஆனால் நான் அதிரும் வகையில் ஒரு பதிலைக் கூறினாள் அவள். "அம்மா...பச்சைப்பாம்பை ஒரு தடவை தொட்டிங்கன்னா, உங்களுக்கு கைமணம் தானாகவே வரும். அப்புறம் உங்க கைப்பக்குவம் யாருக்கும் வராது." என்றாள்.முதலில் நான் அதிர்ந்து போனேன். பிறகு சிரித்துக்கொண்டே," நடக்கிற காரியமாகப் பேசு. பச்சைப்பாம்புக்கு நான் எங்கே போக?" என்றேன். நல்லவேளை நான் பிடித்துக்கொண்டு வருகிறேன் என்று அவள் கிளம்பவில்லை. 
         இது நடந்து முடிந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது என் மகளே நன்றாக சமைப்பாள். ஒரு மாலை வேளையில் குடும்பமாக உரையாடிக் கொண்டிருந்த போது இந்த பழைய சம்பவத்தை நினைவுபடுத்தி கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்தேன். உடனே என்மூத்த மகள்," அம்மா.. நான் பச்சைப் பாம்பை தொட்டிருக்கேன் மா. நம் பெரியம்மா வீட்டில் ஒரு முறை தோட்டக்கார ர் பச்சைப்பாம்பை தோட்டத்தில் அடித்து விட்டு பெரியம்மாவிடம் அதைத் தொடச் சொன்னார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த என்னையும் தொடச் சொன்னார்கள்" என்றாள் புன்னகையுடன். 
       உடனே என் இளைய மகள்," அம்மா ..பாத்தீங்களா..அது உண்மை தான் போலிருக்கு. நீங்களும் பச்சைப்பாம்பை தொட்டிருக்கலாம்" என்றாள் சிரித்துக்கொண்டே. "இப்ப என்ன சொல்ல வர்ற? என் சமையல் சரியில்லை என்றா?" என நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னை வாருவதையே தொழிலாகக்கொண்ட என் கணவர் இப்போது உள்ளே நுழைந்தார், " அதை நாங்க எங்க வாயால சொல்ல மாட்டோம்." நான் அடிக்க கையை ஓங்கியவுடன் மூவரும் ஓடி விட்டனர். " எங்கே போறிங்க?" என்ற எனது கேள்விக்கு அவர்கள் தந்த பதில் "உங்களுக்கு பச்சைப்பாம்பு பிடிக்க...."

போடுங்கம்மா வோட்டு மீன் சின்னத்த பாத்து...

1984ம் வருடம். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் புதிதாய் வீடு கட்டி புகுந்திருந்தோம். சட்டசபைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பதின்பருவத்திலிருந்த எனக்கு கட்சிகளும், கொடிகளும், நாளிதழ்களில் பக்கம் பக்கமாய எழுதப்பட்டிருந்த கட்டுரைகளும் அரசியல் மீது ஆர்வத்தை தூண்டுவதாய் அமைந்தன. சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு கட்சிகளின் வேட்பாளர்கள் எப்போதும் சிவகாசியைச் சுற்றியுள்ள ஏதேனும் ஒரு கிராமத்தை சார்ந்தவர்களாகவே இருப்பர். நம் சொந்த ஊர்க்கார்ர் வேட்பாளராய்த் திகழ் வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு ஏக்கம் எப்போதும் இருந்தது. 
         அந்த வருடம் சிவகாசியைச் சேர்ந்த திரு. கிரகதுரை அவர்கள் மீன் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டார். சிவகாசியின் பிரபல தொழிலதிபர் அவர். உடனே ஊரெங்கும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. தேர்தல் பிரச்சாரம் களை கட்டியது. தெருவுக்கு தெரு, விதிக்கும் வீதி மீன் சின்ன போஸ்டர்களும், கொடிக்கம்பங்களும், தோரணங்களும் ஊரே அல்லகோலப்பட்டது. ஆட்டோ, மோட்டார் சைக்கிள்  என்று ஒலிபெருக்கி மூலம் மீன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்துக் கொண்டே இருந்தனர். ஊரில் இரண்டு பேர் கூடிப் பேசினால் அது கிரகதுரை அண்ணாச்சி தேர்தலில் போட்டியிடுவது பற்றியும் அவருடைய வெற்றி வாய்ப்பு எவ்வளவு என்பது பற்றியும் தான் இருந்தது ஊருக்குள் அனைவருக்கும் அவர் வெல்ல வேண்டும் என்ற பேரவா இருந்தது. நம் ஊர்க்கார்ர் நம் சார்பாக சட்டசபையில் இருந்தால் ஊருக்கு நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் எதிர்ப்பார்ப்பு.
          தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கடைசி கட்ட பிரச்சாரம் ஜரூராய் நடைப்பெற்றுக் கொண்டு இருந்தது. எங்கள் தெருவில் உள்ளவர்கள் ஏதோ அவர்கள் வீட்டு விஷேசம் போல் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தனர். உற்சாக மிகுதியில் பக்கத்து வீட்டுக்கார்ர் எங்கள் வீட்டின் சுவர் முழுக்க மீன் சின்ன போஸ்டர் ஒட்டி மீன் சின்ன முத்திரை பதித்து விட்டார். அப்போது தான் கட்டிய புதிய வீடு என்று சொன்னேன் அல்லவா? என் அன்னைக்கு அதைப்பார்த்தவுடன் கோபம் வந்துவிட்டது. பொதுவாக அமைதியாக இருக்கும் அவர்கள் பக்கத்து வீட்டுக்கார்ரிடம் சண்டைக்குசென்று விட்டார். என் தந்தையோ ஊரில் இல்லை. பிள்ளைகள் நாங்கள் நால்வரும் பயந்து போய் வீட்டில் அமர்ந்திருந்தோம். அம்மா திட்டியதால் சண்டை பெரியதாகி விடுமோ என்று எங்களுக்கு உள்ளூர பயம். ஆனால் அவர்கள் மன்னிப்பு கேட்டு வந்து போஸ்டரை கிழித்து விட்டனர். இன்றும் இந்த மீன் சின்ன களேபரங்கள் என் நினைவிலாடுகின்றன.
            தேர்தல் நாளன்று சைக்கிள் ரிக்ஷாவில் வாக்குச் சாவடிக்கு அனைவரையும் அழைத்துச் சென்றனர். வெற்றி நிச்சயம் போன்ற ஒரு மாயத் தோற்றம் நிலவியது. ஆனாலும் அந்த தேர்தலில் அவர் வெல்லவில்லை. சிவகாசியிலுள்ள வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குப் பெட்டிகள் அனைத்திலும் மீன் சின்னத்திற்கு வாக்குகள் விழுந்திருந்தனவாம். ஆனால் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் இரட்டை இலைக்கு வாக்கு பதிவாகி இருந்ததாம். அந்தத் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த திரு V.பாலகிருஷ்ணன் அவர்கள் வெற்றி பெற்றார்.
-
            

Saturday, March 26, 2016

Terrarium

                  சொல்லும் போதே மனசுக்குள் மழை பொழிய வைக்கும் சொல் வீடு. நம் ரசனையின் வெளிப்பாடாகத் திகழும் வீட்டை அலங்கரிக்க அனைவரும் கொஞ்சமாவது பிரயத்னப்படுவோம். அலங்கார விளக்குகள், அழகழகான பொம்மைகள், கண்கவர் மரச்சாமான்கள் என்று விதவிதமான பொருட்களைக் கொண்டு வீட்டை அலங்கரித்தாலும் செடிகளைக் கொண்டுவீட்டை அலங்கரித்தால் அதன் குளுமையான பசுமையே கூடுதல் அழகு தரும். நகர்புறங்களில் வாழ்பவர்களுக்கு, அடுக்குமாடி வீடுகளில் வாழ்பவர்களுக்கு வீட்டை சுற்றி பெரிய தோட்டம் அமைத்துக் கொள்ள வாய்ப்பில்லை. வீட்டினுள்ளேயே செடிகளை வைத்து அழகு படுத்தவே அவர்கள் விரும்புகின்றனர். அவர்களுக்காகவே கண்டுபிடித்தாற்ப் போல இப்போது புதிதாக டெர்ரரியம் என்ற புதுமையான தோட்டக்ககலை வந்துள்ளது. இது வீட்டினுள்ளே அலங்காரமாக கண்ணாடி பேழை அல்லது குடுவையில் செடிகள் வளர்ப்பது ஆகும்.  இதற்கு அழகிய கண்ணாடி குடுவைகள், வாயகன்ற  பாட்டில்கள் அல்லது சிறிய மீன் தொட்டிகளைக் கூட பயன்படுத்தலாம். தொங்க விட இயலும் கண்ணாடி குடுவைகளையும் பயன்படுத்தலாம். மிகச்சிறிய கள்ளிச்செடிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல கற்பனை வளத்துடன் தோட்டம் போன்ற அமைப்பை கண்ணாடி குடுவையினுள் அமைக்க வேண்டும். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை. இணையத்தில் தேடினால் எண்ணிலடங்கா ஐடியாக்கள் கொட்டிக் கிடக்கின்றன. மனதைக் கொள்ளை கொள்ளும் இவ்வகைத் தோட்டங்களை நம் வரவேற்பறையில் ஒயிலாக இடம் பெறச் செய்யலாம்.
              கண்ணாடிக் குடுவையில் முதலில் அழகிய கூழாங்கற்களை அடுக்க வேண்டும் . இதனை மிகவும் பொறுமையாக நீண்ட கரண்டியின் உதவியுடன் செய்யலாம். கூழாங்கற்களுக்குப் பதில் மொசைக் சிப்ஸ்களையும் இடலாம்.அதன் மீது தேவையான அளவு மண் கலவை இட வேண்டும்.அமைத்த தன் மீது வகை வகையான செடிகளை நடலாம்.சிறிய செடிகளே இவ்வகை தோட்டத்திற்கு தோதானவை. அலங்கார முட்செடிகள் இதனுள் அமைத்தால் கம்பீரம் பெறுகிறது. மெதுவாக வளரும் செடிகளே நல்லது. விரைவில் வளரும் செடிகளை வைத்தால் விரைவில் குடுவையுள் இடப் பற்றாக்குறை ஏற்படும். புஃனல் மூலம் மிக ஜாக்கிரதையாக தண்ணீர் ஊற்ற வேண்டும். கவனமாகவும் திட்டமாகவும் தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட்டால் அதனை வெளியேற்றுவது கடினமாகி செடிகளுக்கு நோய் வர வாய்ப்புள்ளது.மினியேச்சர் நாற்காலி, பறவைகள், பீங்கான் பொருட்கள் என்று ஏதேனும் அலங்காரம் செய்யலாம். அழகுறத் திகழும் இதனை வரவேற்பறையில் மேடையிட்டு அமைக்கலாம் . சாப்பாட்டு அறையில், வெராண்டாவில், பால்கனியில் என்று எங்கு அமைந்தாலும் கண்ணைக் கவரும்.சவாலான காரியமாய் திகழ்ந்தாலும் அதன் எழில் உங்கள் வீட்டிற்கு வருபவர்களை அசர வைக்கும்.இதே போல அகலமான பீங்கான் தட்டுகளிலும் சிறிய தோட்டங்கள் அமைத்து வீட்டை அலங்கரிக்கலாம். 
           மீன் தொட்டிகளிலும் இது போன்று தோட்டம் அமைக்கலாம். முதலில் கூழாங்கற்களை இட்டு பின மண்கலவையை இட வேண்டும். உயரமான செடிகளை முதலிலும் குட்டையான செடிகளை பிறகும் அமைக்க வேண்டும். மிக அகலமான தொட்டிகள் எனில் நீர் தாவரங்களையும் வளர்க்கலாம். அழகான நீர் வாழ் தாவரங்களில் சில முழுவதுமாய் தண்ணீரில் அமிழ்ந்திருக்கும், சில நீரின் மேல் மிதந்து கொண்டிருக்கும். அழகிய பீங்கான் பாத்திரங்களை கலைநயத்துடன் தொட்டியினுள் அமைத்து விட்டால் காணக் கண் கோடி வேண்டும். தண்ணீரின் அசைவினால் இச்செடிகள் இங்கும் அங்கும் இடம் மாறிக்கொண்டே இருப்பது தனி அழகு தான். விருப்பமென்றால் தண்ணீரினுள் மீன்களை விடலாம். ஆனால் மீன் வளர்த்தால் அதற்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்கிறதா என கவனிக்க வேண்டும். அதற்கு மின் இயந்திரம் மாட்டி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                வீட்டின் உட்புறத்தை அழகு படுத்துவதைப் போல வெளித் தோற்றத்தையும் செடிகளால் அழகு படுத்தலாம். தனி வீடு எனில் தோட்டம் அமைப்பது முதல், வெளிப்பூச்சு, முகப்புத்தோற்றம் வரை வித்தியாசமாய் வடிவமைத்து நம் வீட்டை தனித்துக் காட்டலாம். ஆனால் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் எனில் அது சாத்தியமில்லை. ஆனால் நம் வீட்டை எப்படி தனித்த அழகுடன் காட்டுவது? அதற்கு ஒரு வழி இருக்கிறது. சன்னல் தோட்டம் என்பதே அது. சன்னல்கள் அதிக ஒளியும் காற்றோட்டத்துடனும் திகழ்வதால் தோட்டம் அமைக்க ஏதுவானதாகும். சன்னல் மேடை எவ்வளவு அகலம் உள்ளது என்பதைப்பொருத்து உள்பக்கத்தில் அல்லது வெளிப் பக்கத்தில் செடிகள் வைக்கலாம்.மேடை சிறியதாக இருந்தால் அதற்கேற்ற சிறு தொட்டிகளும், அவற்றைக் கையாளும் போது எளிதில் விழுந்து விடாமல் இருக்க சிறிய சட்டம் ஒன்றை சன்னல் நீளத்திற்கு பொருத்திவிட வேண்டும். சன்னலின் உட்புறத்தில் செடிகளை வைக்கும் போது செடிகளையும், தொட்டிகளையும் தேர்ந்து எடுப்பதில் அதிக கவனம் வேண்டும். தொட்டிகள் அல்லது பெட்டிகள் மிகவும் அழகானதாகவும், அறையில் உள்ள மற்ற சாதனங்களோடு பொருந்துவதாகவும் இருக்க வேண்டும். அவற்றின் வண்ணமும் அமைப்பும் அறையில் உள்ள அலமாரிகள் சோபா ஆகியவற்றோடு இணைவதாகவும் இருக்க வேண்டும். சன்னலின் உட்புறம் வைக்கும் செடிகளின் பெட்டிக்குள் கீழ் உள்ள இடத்தை அலமாரி போல் உபயோகப்படுத்தலாம். சன்னலின் வெளிப்பக்கம் செடிகளை வைக்க வேண்டுமெனில் இரும்பு ஸ்டாண்டுகளில் பெட்டியை வைத்து சன்னல் கம்பிகளில் மாட்டி விடலாம்.
        சன்னலின் பக்கம் அதிக சூரிய ஒளி படும் எனில் பூக்கும் செடிகளையும், குறைவாக ஒளி படும் எனில் குரோட்டன்ஸ் செடிகளை வைக்கலாம். பூக்களின் அழகு எங்கிருந்து பார்த்தாலும் நம் வீட்டை அழகுற காட்டும். எத்தனாவது மாடி என்றாலும் உங்கள் வீடு தனித்துத் தெரியும். அதன் அழகிற்காக நீங்கள் கட்டாயம் பாராட்டப் படுவீர்கள்.
      மேல் நாடுகளில் ஒவ்வொரு வீட்டிலும் அலங்கார செடிகளை வளர்த்து வீட்டை அழகுபடுத்தும் வழக்கம் உள்ளது. நம் நாட்டில் செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற சூழலும் ஆர்வமும் குறைவாக உள்ளது. மனம் தளராமல் மாறி வரும் நகர சூழ்நிலைக்கு ஏற்றவாறு இயன்றவரை அழகிய தோட்டங்களை நாமும் வீட்டில் அமைக்கலாமே!. பூக்கள் பூத்து குலுங்கும் வகையில் தோட்டம் அமைத்தால் பூக்களின் வாசம் வீட்டிற்கு வருபவர்களை ஈர்க்கும் விதமாக இருக்கும். மனதிற்கு புத்துணர்ச்சியை அளிப்பதில் செடிகளை விட சிறந்த மருத்துவர்கள் கிடையாது. இது போல் அழகிய தோட்டங்களை வீட்டினுள்ளேயே அமைத்தால் மனதில் மத்தாப்பூவாய் மகிழ்ச்சி பொங்கும்.
- முருகேஸ்வரி ரவி,
சென்னை-13.்்


Tuesday, March 15, 2016

தேர்தல் நினைவுகள்.


   அப்போதையக் குழந்தைகளின் உலகத்தை தொலைக்காட்சியும், இணையதளமும் வியாபித்திருக்கவில்லை. தெருக்கோடியில் நண்பர்களுடன் விளையாடிய நேரம் போக மீதி எந்நேரமும் பேச்சு, பேச்சு,பேச்சு தான். செவி வழிச்செய்திகளே அனைவரது வாழ்விலும் முக்கிய பங்காற்றின. தகவல்கள் அப்பொழுதெல்லாம் கொட்டிக் கிடக்கவில்லை. பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் கூறும் அனுபவத்துளிகளில் இருந்து வாழ்க்கைப்பாடம் கற்று வந்தோம். என்னுள் எப்படி இந்த அதீத அரசியல் ஆர்வம் வந்தது என்று சிந்தித்துப் பார்க்கையில் என் தந்தையின் பேச்சால் ஈர்க்கப்பட்டு சிறு வயது முதலே அரசியலை ஆர்வத்துடன் கவனித்து வந்தது நினைவுக்கு  வருகிறது. 
    என் தந்தைக்கு அபார அரசியல் ஞானம். துக்ளக், தினமணி படித்துவிட்டு அதன் கருத்துக்களையும் தனது எண்ண ஓட்டங்களையும் கண்டிப்பாக எதிர்படுபவர்களிடம் விவாதிப்பார். வியாபார நிமித்தம் சிவகாசியிலிருந்து அடிக்கடி மதுரைக்கு வாடகை சிற்றுந்தில் செல்வார். பள்ளி விடுமுறை எனில் குடும்பத்தினரும் அதில் பயணிப்போம். அதன் ஓட்டுநர் காங்கிரஸ் அனுதாபி. என் தந்தையோ கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தர். வாக்குவாதம் கலந்த உரையாடலுக்கு பஞ்சமா வரும்!? வழியெங்கும் சுவாரசிய தகவல்கள் இறைக்கப்படும்,விவாதங்கள் நடைபெறும். அன்னை இந்திராவும், முன்னாள் தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.்ஆர் அவர்களும் என் தந்தையின் எள்ளலுக்கு ஆளானார்கள். ஓட்டுநர் தீனஸ்வரமாய் திருமதி இந்திரா காந்தி அவர்களை ஆதரித்து பேசுவார். சுமார் பன்னிரண்டு வயது என்றாலும் நான் அவற்றை மிகவும் உன்னிப்பாக ஆவலுடன் கவனித்து வருவேன். வீட்டிற்கு வந்தவுடன் அவர்கள் விவாதித்த பொருளைப் பற்றி துக்ளக் ஐ எடுத்து வாசித்து அறிந்து கொள்வேன். காங்கிரஸ் இரட்டைக் காளை சின்னத்திலிருந்து பசுவும் கன்றும் சின்னத்திற்கு மாறியதும் , அதன் பின் கை சின்னத்திற்கு மாறியதும் இந்தக் காலக்கட்டத்தில் தான். ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னமும் இன்னமும் என் நினைவில் நிற்கிறது. மற்றொரு சம்பவம். சிவகாசி அப்போது பாராளுமன்ற தொகுதி.( இப்போது இல்லை) அதன் பாராளுமன்ற உறுப்பினராக பிரபல கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி அமர ர் எஸ்.ஆர். நாயுடு அவர்களின் புதல்வி திருமதி வி. ஜெயலெஷிமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்நாளில் சிவகாசி காங்கிரஸின் கோட்டையாக்க் கருதப்பட்டது. இரு முறை எம்.பியாகத் திகழ்ந்த அவரைப் பற்றி ஒரு கூடுதல் தகவல் , இது போன்ற ஒரு பயணத்தில்,தெரிந்து கொண்டேன். முன்னாள் மத்திய அமைச்சர் திரு மோகன் குமாரமங்கலம் அவர்கள் பயணித்த விமானம்  1976இல் விபத்துக்கு உள்ளாதனல்லவா! அதில் உயிர் பிழைத்த மிகச்சிலருள் இவரும் ஒருவர்.
          இவ்வாறு அரசியல் பேச்சுக்களால் கவரப்பட்ட எனக்கு வாக்களிக்கும் ஆசை பள்ளிப்பருவத்திலே வந்தது. வாக்கு இயந்திரம் , வாக்காளர் அடையாள அட்டை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத்தினாலோ என்னவோ என்னால் அந்த உள்ளாட்சித் தேர்தலில் பக்கத்து விட்டு தமக்கையின் வாக்கை அளிக்க முடிந்தது. அந்தத் தேர்தலில் பெரும் கட்சிகளுக்கு இணையாக இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள்( அவர்களின் பெயர் நினைவில் இல்லை, ஆனால் சின்னம் நினைவில் நிற்கிறது....மீன் மற்றும் பானை.) ஆரவாரமாக போட்டியிட்டனர். தெருவெங்கும் தோரணங்களும், போஸ்டர்களும் களை கட்டி இருந்தன. மாலை நான்கு வரை வீட்டு வீடாகச்சென்று வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ரிக்ஷாவில் அழைத்து சென்றனர். மறு நாள் சென்று என் தேர்தல் அனுபவங்களை என் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டேன்.
            என்னுடைய நேரடி அனுபவம் உள்ளாட்சித்தேர்தலில் தான் என்றாலும் சட்டமன்ற தேர்தலகளையும், பாராளுமன்ற தேர்தலையும் நான் கவனிக்கத் தவறவில்லை.1975 ம் வருடம் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் பட்டது. தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.திரு மொரார்ஜி தேசாயிடம் கைது செய்யும் வேளையில் பத்திரிக்கையாளர்கள் கருத்து கேட்கிறார்கள்.அதற்கு மொரார்ஜி சொன்ன இரண்டே வார்த்தைகள் –. “விநாச காலே – விபரீத புத்தி”. இது என் தந்தை சிலாகித்து கூறிய சம்பவம். அந்த வேளையில் பத்திரிக்கையாளர்களின் குரல்வளையை அரசு நெறித்த வேளையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் துணிந்து தன் கடமையை ஆற்றியதாக்க் கூறுவார். பின்னர் நெருக்கடி நிலை காரணமாக காங்கிரஸ் வீழ்ச்சியை சந்தித்த காலம் அது. ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர் கொண்டனர். கதம்பக் கூட்டணியாய் திகழ்ந்த ஜனதாக் கட்சி வென்றது. அதன் வெற்றியை தன் வெற்றியாகவே பாவித்த என் தந்தையின் சந்தோசம் பல நாள் நீடிக்கவில்லை. தேசத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக்க் கருதப்பட்ட முன்னாள் பிரதமர், காந்தியவாதி திரு. மொரார்ஜி தேசாய் அவர்களின் அரசு குறுகிய காலமே நீடித்தது. அக்காலத்தில் அந்த அரசு சாமான்ய மக்களுக்காக கொண்டு வந்த 'ஜனதா சாப்பாடு' மிகவும் பிரபலமாயிருந்தது. அடிக்கடி வெளியூர்களுக்கு பயணப்படும் என் தந்தை மற்றும் அவரின் ஊழியர்கள் குறைந்த விலையில் கிடைத்த ஜனதா சாப்பாட்டை புகழ்ந்து சொன்னது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.
                இதன் பின் எத்தனையோ தேர்தல்கள், கூட்டணிகள், ஆட்சிமாற்றங்களை சந்தித்து விட்டோம். கால சுழற்சி பழையனவற்றை மறக்கச்சொல்கிறது. புதிது புதிதாய் நடந்தேறும் சம்பவங்கள் பழைய நிகழ்வுகளின் கடுமையை குறைத்து விடுகின்றன. நம் நாட்டை ப் பொறுத்தவரை அதிகாரம் கைமாறும், ஆட்சி மாறும், பணமும் செல்வமும் வந்து போகும். ஆனால் ஊழல் மட்டுமே நீடித்து நிற்கும். காலம் கற்று தந்திருக்கும் பாடம் இது தான்.