Tuesday, March 15, 2016

தேர்தல் நினைவுகள்.


   அப்போதையக் குழந்தைகளின் உலகத்தை தொலைக்காட்சியும், இணையதளமும் வியாபித்திருக்கவில்லை. தெருக்கோடியில் நண்பர்களுடன் விளையாடிய நேரம் போக மீதி எந்நேரமும் பேச்சு, பேச்சு,பேச்சு தான். செவி வழிச்செய்திகளே அனைவரது வாழ்விலும் முக்கிய பங்காற்றின. தகவல்கள் அப்பொழுதெல்லாம் கொட்டிக் கிடக்கவில்லை. பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் கூறும் அனுபவத்துளிகளில் இருந்து வாழ்க்கைப்பாடம் கற்று வந்தோம். என்னுள் எப்படி இந்த அதீத அரசியல் ஆர்வம் வந்தது என்று சிந்தித்துப் பார்க்கையில் என் தந்தையின் பேச்சால் ஈர்க்கப்பட்டு சிறு வயது முதலே அரசியலை ஆர்வத்துடன் கவனித்து வந்தது நினைவுக்கு  வருகிறது. 
    என் தந்தைக்கு அபார அரசியல் ஞானம். துக்ளக், தினமணி படித்துவிட்டு அதன் கருத்துக்களையும் தனது எண்ண ஓட்டங்களையும் கண்டிப்பாக எதிர்படுபவர்களிடம் விவாதிப்பார். வியாபார நிமித்தம் சிவகாசியிலிருந்து அடிக்கடி மதுரைக்கு வாடகை சிற்றுந்தில் செல்வார். பள்ளி விடுமுறை எனில் குடும்பத்தினரும் அதில் பயணிப்போம். அதன் ஓட்டுநர் காங்கிரஸ் அனுதாபி. என் தந்தையோ கலைஞர் கருணாநிதியின் தீவிர பக்தர். வாக்குவாதம் கலந்த உரையாடலுக்கு பஞ்சமா வரும்!? வழியெங்கும் சுவாரசிய தகவல்கள் இறைக்கப்படும்,விவாதங்கள் நடைபெறும். அன்னை இந்திராவும், முன்னாள் தமிழக முதல்வர் திரு. எம்.ஜி.்ஆர் அவர்களும் என் தந்தையின் எள்ளலுக்கு ஆளானார்கள். ஓட்டுநர் தீனஸ்வரமாய் திருமதி இந்திரா காந்தி அவர்களை ஆதரித்து பேசுவார். சுமார் பன்னிரண்டு வயது என்றாலும் நான் அவற்றை மிகவும் உன்னிப்பாக ஆவலுடன் கவனித்து வருவேன். வீட்டிற்கு வந்தவுடன் அவர்கள் விவாதித்த பொருளைப் பற்றி துக்ளக் ஐ எடுத்து வாசித்து அறிந்து கொள்வேன். காங்கிரஸ் இரட்டைக் காளை சின்னத்திலிருந்து பசுவும் கன்றும் சின்னத்திற்கு மாறியதும் , அதன் பின் கை சின்னத்திற்கு மாறியதும் இந்தக் காலக்கட்டத்தில் தான். ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னமும் இன்னமும் என் நினைவில் நிற்கிறது. மற்றொரு சம்பவம். சிவகாசி அப்போது பாராளுமன்ற தொகுதி.( இப்போது இல்லை) அதன் பாராளுமன்ற உறுப்பினராக பிரபல கல்வியாளர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி அமர ர் எஸ்.ஆர். நாயுடு அவர்களின் புதல்வி திருமதி வி. ஜெயலெஷிமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அந்நாளில் சிவகாசி காங்கிரஸின் கோட்டையாக்க் கருதப்பட்டது. இரு முறை எம்.பியாகத் திகழ்ந்த அவரைப் பற்றி ஒரு கூடுதல் தகவல் , இது போன்ற ஒரு பயணத்தில்,தெரிந்து கொண்டேன். முன்னாள் மத்திய அமைச்சர் திரு மோகன் குமாரமங்கலம் அவர்கள் பயணித்த விமானம்  1976இல் விபத்துக்கு உள்ளாதனல்லவா! அதில் உயிர் பிழைத்த மிகச்சிலருள் இவரும் ஒருவர்.
          இவ்வாறு அரசியல் பேச்சுக்களால் கவரப்பட்ட எனக்கு வாக்களிக்கும் ஆசை பள்ளிப்பருவத்திலே வந்தது. வாக்கு இயந்திரம் , வாக்காளர் அடையாள அட்டை போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத்தினாலோ என்னவோ என்னால் அந்த உள்ளாட்சித் தேர்தலில் பக்கத்து விட்டு தமக்கையின் வாக்கை அளிக்க முடிந்தது. அந்தத் தேர்தலில் பெரும் கட்சிகளுக்கு இணையாக இரண்டு சுயேச்சை வேட்பாளர்கள்( அவர்களின் பெயர் நினைவில் இல்லை, ஆனால் சின்னம் நினைவில் நிற்கிறது....மீன் மற்றும் பானை.) ஆரவாரமாக போட்டியிட்டனர். தெருவெங்கும் தோரணங்களும், போஸ்டர்களும் களை கட்டி இருந்தன. மாலை நான்கு வரை வீட்டு வீடாகச்சென்று வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு சைக்கிள் ரிக்ஷாவில் அழைத்து சென்றனர். மறு நாள் சென்று என் தேர்தல் அனுபவங்களை என் தோழிகளிடம் பகிர்ந்து கொண்டேன்.
            என்னுடைய நேரடி அனுபவம் உள்ளாட்சித்தேர்தலில் தான் என்றாலும் சட்டமன்ற தேர்தலகளையும், பாராளுமன்ற தேர்தலையும் நான் கவனிக்கத் தவறவில்லை.1975 ம் வருடம் நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப் பட்டது. தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர்.திரு மொரார்ஜி தேசாயிடம் கைது செய்யும் வேளையில் பத்திரிக்கையாளர்கள் கருத்து கேட்கிறார்கள்.அதற்கு மொரார்ஜி சொன்ன இரண்டே வார்த்தைகள் –. “விநாச காலே – விபரீத புத்தி”. இது என் தந்தை சிலாகித்து கூறிய சம்பவம். அந்த வேளையில் பத்திரிக்கையாளர்களின் குரல்வளையை அரசு நெறித்த வேளையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் துணிந்து தன் கடமையை ஆற்றியதாக்க் கூறுவார். பின்னர் நெருக்கடி நிலை காரணமாக காங்கிரஸ் வீழ்ச்சியை சந்தித்த காலம் அது. ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை எதிர் கொண்டனர். கதம்பக் கூட்டணியாய் திகழ்ந்த ஜனதாக் கட்சி வென்றது. அதன் வெற்றியை தன் வெற்றியாகவே பாவித்த என் தந்தையின் சந்தோசம் பல நாள் நீடிக்கவில்லை. தேசத்தின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் சர்வரோக நிவாரணியாக்க் கருதப்பட்ட முன்னாள் பிரதமர், காந்தியவாதி திரு. மொரார்ஜி தேசாய் அவர்களின் அரசு குறுகிய காலமே நீடித்தது. அக்காலத்தில் அந்த அரசு சாமான்ய மக்களுக்காக கொண்டு வந்த 'ஜனதா சாப்பாடு' மிகவும் பிரபலமாயிருந்தது. அடிக்கடி வெளியூர்களுக்கு பயணப்படும் என் தந்தை மற்றும் அவரின் ஊழியர்கள் குறைந்த விலையில் கிடைத்த ஜனதா சாப்பாட்டை புகழ்ந்து சொன்னது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.
                இதன் பின் எத்தனையோ தேர்தல்கள், கூட்டணிகள், ஆட்சிமாற்றங்களை சந்தித்து விட்டோம். கால சுழற்சி பழையனவற்றை மறக்கச்சொல்கிறது. புதிது புதிதாய் நடந்தேறும் சம்பவங்கள் பழைய நிகழ்வுகளின் கடுமையை குறைத்து விடுகின்றன. நம் நாட்டை ப் பொறுத்தவரை அதிகாரம் கைமாறும், ஆட்சி மாறும், பணமும் செல்வமும் வந்து போகும். ஆனால் ஊழல் மட்டுமே நீடித்து நிற்கும். காலம் கற்று தந்திருக்கும் பாடம் இது தான்.

No comments:

Post a Comment