Sunday, January 8, 2017

பசுமைப் போர்வை.

"என்னங்க.. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. உங்கள் நண்பரைப் போய் பார்த்து விட்டு வரலாமே!" காபியை நீட்டியவாறு சுமதி கூறினாள். நாளிதழில் மூழ்கியிருந்த சுந்தரம்," ம்..ம்.." என்றவாறே காபியை வாங்கிக் கொண்டார். 
அவருடைய தோழர் ராமலிங்கத்தின் மகன் சமீபத்தில் தான் சாலை விபத்தில் அகால மரணமடைந்தான். 'இந்தக் காலப் பசங்க என்ன வேகமாப் போறாங்க.. அது சில சமயங்களில் அவர்கள் உயிரையே பறித்து விடுகிறதே' என்று எண்ணியவாறே எழுந்தார். " சரி, சுமதி நான் ஒரு பதினோரு மணி வாக்கில் அவனைப் போய் பாரத்து விட்டு வருகிறேன். அவன் சோகத்தை சுலபமாக பகிர்ந்துக்க மாட்டான். அதான் யோசனையாக இருக்கு" என்றார்.
போகும் வழியெல்லாம் நண்பனை என்ன சொல்லி தேற்றுவது என்று பலவாறு யோசித்துக் கொண்டே போனார். நண்பர் வீட்டை நெருங்கும் போது வீடே ஜே ஜே என்றிருந்தது. நாலைந்து பேர் உள்ளேயும் வெளியேயும் ஓடிக் கொண்டிருந்தனர். வீட்டில் புது மாற்றமும் தெரிந்தது. புதிதாய் நிறைய மரக்கன்றுகள் வாசலில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. 
சுந்தரத்தைக் கண்டவுடன் ராமலிங்கம் புன்னகையுடன் ஓடி வந்தார். " வா.. சுந்தரம். என்ன இந்தப்பக்கம்? ரொம்ப நாளாக ஆளையே காணோம்" என்று கூட்டிக் கொண்டு போய் ஹாலில் உட்கார வைத்தார். அவரின் இந்த மாற்றம் ஆச்சர்யமளித்தது. என்றாலும் நண்பனின் பெரும் இழப்பைப் பேச சிறிது தயக்கமாக இருந்தது. 
அவருடைய சோகத்தை திரும்பவும் கிளறக் கூடாது என்று எண்ணிக் கொண்டாலும், அவர் அதிலிருந்து மீள வேண்டும் என்று அறிவுரை கூறுவது தன் கடமை என்று நினைத்தார். தன் வீட்டிற்கு அழைக்கலாம் அல்லது ஏதாவது சுற்றுலாவிற்கு அழைக்கலாம் என்று எண்ணினார்.
சுந்தரம் பேச்சை என்னவென்று ஆரம்பிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அவரே தொடங்கினார். " என் மகன் பறி போன பிறகு வாழவே பிடிக்க வில்லை. சோர்ந்திருந்த மனதைத் தேற்ற வழி தெரியவில்லை. வார்தா புயல் வந்து ஊரில் உள்ள மரமெல்லாம் சாய்ந்த  போது அக்கம் பக்கத்தில் உள்ள சில நல்ல உள்ளங்கள் திரும்பி மரம் நட ஆரம்பித்தனர். நானும் அவர்களுடன் இணைந்து கொண்டேன். இதோ இப்போது கூட நாங்கள் அனைவரும் இணைந்து அருகிலுள்ள பூங்காவில் மரம் நடப் போகிறோம். அதற்குத் தான் வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது" என்று புன்னகைத்தார்.
கேட்கவே சந்தோசமாக இருந்தது. அவரே தொடர்நதார்," என் மகன் போனது தீராத சோகம் தான். ஆனால்  அதிலிருந்து மீண்டு வர எனக்கு வழி தெரியவில்லை. அப்போது இந்த தன்னார்வலர்கள் இந்த சேவையில் ஈடுபட்டதைப் பார்த்து என்னை நானும் இணைத்துக் கொண்டேன்" என்றார். " நீயும் வா. உன்னால் முடிந்த உதவியைச்செய்." 
" கண்டிப்பாக " என்றபடி சுந்தரம் எழுந்தார். தான் எண்ணி வந்த வேலையை அந்த நல்ல நெஞ்சங்கள் ஏற்கனவே செய்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.நண்பனின் சோகம் தீர்க்க உதவுவதோடு பசுமையையும் உருவாக்க உதவப் போகிறோம் என்ற எண்ணமே அவருக்கு மகிழ்ச்சி அளித்தது. இருவரும் இணைந்து பூங்காவிற்குப் புறப்பட்டனர்.

Wednesday, October 26, 2016

உதவி!

" மாணவர்களே! திருக்குறள் பொழிப்புரை எத்தனை பேர் எழுதி வந்தீர்கள்?" அனைவரும் கைகளை உயர்த்தினர். அனைவரும் எழுதியிருந்தனர். அது தான் தமிழாசிரியர் முத்துவின் திறமை. அவர் என்ன கூறினாலும் மாணவ கண்மணிகள் உடனே அதை செய்து முடிப்பர். அந்த அளவு அவர் மாணவர்கள் அவர் மீது பிரியமாய் இருப்பார்கள். அவரும் அத்தனை மாணவர்கள் மீதும் பாசத்தைப் பொழிவார். இதுவரை ஒருவர் மீது கூட அவர் கடுஞ்சொல் கூறியது கிடையாது.
        கண்ணன் எழுந்து," ஐயா! நான் பொழிப்புரை எழுதியிருந்தாலும் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன ஐயா" என்றான். அவரும்," என்ன அது? கேள் சொல்கிறேன்" என்றார். 

"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
இது குறள். இதன் பொருளாவது,' பயனைக் கருதவும் செய்த உதவியின் நன்மையை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்' என்பதாம். இந்தக்குறளில் பயன் கருதி செய்த உதவி என்று வருகிறது., உதவி செய்பவர் யாராக இருந்தாலும் அதற்குரிய பயனை எதிர்பார்ப்பார்களே ஐயா?"
" அல்ல கண்ணா! பரிசுத்தமான உள்ளம் பிரதிபலனை எதிர்ப்பார்க்காது. அதைத்தான் வள்ளுவர் அங்ஙனம் கூறுகிறார்." மாணவர்களிடம் திரும்பி," மாணவர்களே! இதோ கண்ணன் நம் அனைவரிடமும் ஒரு சந்தேகத்தைஎழுப்பியுள்ளான். இதனை உங்கள் செயல்களின் மூலமே விளக்குகின்றேன். நாளை உங்கள் அனைவருக்கும் ஒரு கடமை. இன்று மாலை பள்ளியை விட்டைச் சென்றடைந்ததும் யாருக்காவது உதவி செய்யுங்கள். அதனை நாளை காலை வந்து வகுப்பறையில் பகிருங்கள். என்ன? சரிதானா?" என்றார். மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் " சரி ஐயா" என்று உரத்துக் கூறினர். உடனேயே சளசளவென்று அருகில் பேச ஆரம்பித்தனர். ' என்ன செயவது' என்ற விவாதம் போலும். தமிழாசிரியர், " போதும்..போதும் இனி பாடத்தை கவனிக்கவும்" என்று பாடத்தை நடத்த ஆரம்பித்தார்.
          மறுநாள் தமிழ் வகுப்பு காலையில் இரண்டாவதாக வந்தது. ஆசிரியர் உள்ளே வந்ததும் கலகலத்துக் கொண்டிருந்த வகுப்பறை அமைதியானது. மாணவர்கள் முகங்கள் அனைத்தும் பிரகாசித்தன. முத்து புன்னகைத்துக் கொண்டார். முதலில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்து விட்டு பின் மாணவர்களிடம்," மாணவர்களே! நான் நேற்று சொன்னதைச் செய்தீர்களா?" "ஓ..." அனைவரும் ஒருமித்த குரலில் கூறினார்கள். "ம்..ம்.. எங்கே ஒவ்வொருவராக அவரவது அனுபவங்களைக் கூறுங்கள்" என்றபடி தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.
       கண்ணன்," ஐயா.. என் பாட்டிக்கு மூன்று குடம் தண்ணீர் அடித்துக் கொடுத்தேன்" என்றான். லதா எழுந்து," என் தங்கை வீட்டுப் பாடம் எழுத உதவினேன்" என்றாள். ரமேஷ்," நான் என் நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்த போது திடீரென்று மினசாரம் நின்று போனது. உடனே அனைவரும் பயந்து விட்டனர். நான் என் வீட்டிற்கு ஓடிச் சென்று மெழுகுவர்த்தி எடுத்து வந்து ஏற்றினேன்" என்றான். முத்து," ம்..ம். நல்லது.. வேறு..வேறு" என்றார்.
      அகிலன்," ஐயா! என் வீட்டின் அருகில் ஒரு பூங்கா உள்ளது. அங்கு மாலையில் அனைவரும் நடைப் பயிற்சி செய்வர். குழந்தைகள் விளையாடுவர். பலரும் கூடுவது வழக்கம். நான் என் தந்தையிடம் கேட்டு ஒரு கரும்பலகை வாங்கினேன். அதை அந்தப் பூங்காவில் நிறுவி, நீங்கள் கற்றுக்கொடுத்த குறளையும் அதன் கருத்தையும் எழுதினேன். பலரும் அதனை நின்று வாசித்து விட்டு சென்றனர். இனி அதை நாள்தோறும் செய்வது என் திட்டம்" என்றான்.ஆசிரியர்," பலே!" என்றார். யாழினி மெதுவாக பேச ஆரம்பித்தாள். " ஐயா! என் வீட்டில் என் தாய் தந்தையர் எனக்கு நிறைய புத்தகங்கள் வாங்கித் தந்துள்ளனர். அவற்றில் நான் படித்து முடித்துவிட்ட சிலவற்றை எடுத்து என் வீட்டின் வெளியே உள்ள சன்னலில் ஒரு பெட்டி வைத்து அதில் அடுக்கி வைத்துள்ளேன். அதன் அருகே' உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளலாம். அதே போல் அந்தப் பெட்டியில் உங்களுக்கு தேவைப்படாத புத்தகங்களை கொண்டு வந்து வைக்கலாம்' என்று எழுதி வைத்துள்ளேன். நேற்றே எங்கள் குடியிருப்பில் உள்ள சிறுவர்கள் சிலர் என் புத்தகங்களை எடுத்துக் கொண்டு போய் தங்கள் புத்தகங்களை கொண்டு வந்து வைத்துள்ளனர். இப்போது அது ஒரு லெண்டிங் லைப்ரரியாக மாறிவிட்டது" என்றாள். "அருமை..அருமை ..உட்கார் யாழினி!"என்றபடி தமிழாசிரியர் எழுந்தார்.
     " மாணவர்களே! கவனித்தீர்களா...உதவி என்றவுடன் உங்கள் தாத்தா, பாட்டி , அம்மா, அப்பா, உறவினர் என்று பலரும் உதவி செய்தீர்கள். அதை நான் பாராட்டுகிறேன். என்றாலும் அகிலன் மற்றும் யாழினி செய்த உதவிகளில் பரந்த நோக்கும் பொது நலமும் கலந்திருப்பதைப் பார்த்தார்களா? அது போல் உதவ வேண்டும். தன்னலம் இல்லாத செயல்கள் தான் எப்போதும் பெரிதும் பாராட்டப்படும். கண்ணன்... நேற்று நீ கேட்ட கேள்விக்கு உனக்கு விடை புரிந்திருக்கும் என நினைக்கின்றேன்." கண்ணன்," நன்றாகப் புரிந்து கொண்டேன் ஐயா!" என்றான். ஆசிரியர் மேலும்,"அனைவரையும் உங்கள் செயல்களுக்காக நான் பாராட்டுகிறேன். என்றாலும், நீங்கள் அனைவரும் அகிலன் மற்றும் யாழினிக்கு கை தட்டி பாராட்ட வேண்டும்" என்றார். அனைவரும் மகிழச்சியடன் கை தட்டி தங்கள் பாராட்டைத் தெரிவித்தனர். அகிலன் மற்றும் யாழினி போல தாங்களும் தன்னலமில்லா உதவி புரிய வேண்டும் என்று உறுதி பூண்டனர்.

Sunday, October 16, 2016

குழந்தைப்பாடல்..

காட்டில் உள்ள சிறுத்தை
நாட்டில் புகுந்து சேதம்!
செய்தி கேட்டு மனம்
மெய்யோ என வருந்தியது.

யானைக் கூட்டம் சிலவும் இரயில்
பாதையை கடக்க முற்பட்டு
மாண்டே விட்டனர்  என்றறிந்தவுடன்
கல்லாய் மனம் கனத்தது.

காட்டு விலங்கு யாவும்
நாட்டினுள் புகுந்து நாசம்!
நித்தம் மக்கள் புகார் என்றும்
சத்தமாக உலகம் வம்பளக்கின்றது.

ஒன்றை மறந்துவிட்டாய் மனிதா
கானகத்தின் உள்ளே நீ சென்று
அவற்றை உறைவிடத்தை நீ சிதைத்தாய்!
இப்போது அவை அழிக்கின்றன ஊரகத்தை.

பூமி உருண்டை மொத்தமும் உனக்கல்ல!
புவியில் வாழ அனைத்திற்கும்
சமமான உரிமை இங்குண்டு!
சடுதியில் உணர்ந்திடு மனிதகுலமே!
 
விலங்கு இனமும் மனித இனமும்
இணைந்தே பூவுலகில் வாழவேண்டும்.
இயற்கையை அழித்து ஆதிக்கம் செலுத்தினால்
இன்னல்கள் ஆயிரம் உண்டு, உணர்ந்திடு !




சாலை விதிகளை மதித்திடுவோம்..

சாலை விதிகளை மதித்திடுவோம்
காலை மாலை இரு வேளையும்!
எல்லையில்லாக் குழப்பம் இந்நாளில்
இல்லையென்று சீராக நடந்திடுவோம்!

நடந்து நீ சென்றால்
நடைமேடை மட்டும் பயன்படுத்து!
இருசக்கர வாகனத்தில் நீ சென்றால்
இணக்கமாய் ஹெல்மெட் பயன்படுத்து!

சிக்னலில் சிகப்பு வந்தால்
சிறிது நேரம் நின்றிடுவோம்!
இண்டிகேட்டர் சரியாய் பயன்படுத்தி
இந்த உலகை உன்னதமென்று உணர்ந்திடுவோம்!

மது அருந்தி பயணம் செய்தால்
அது தவறென்று அவருக்கு உணர்த்திவிடு!
உரிமம் பெறாமல் வாகனம் ஓட்டினால் 
உலகின் மிகப்பெரும் தவறென்று உணர்த்திவிடு!

நான்கு சக்கர வாகனமெனில்
நாளும் சீட்பெல்ட் அணிந்திடுவோம்!
சாலை சந்திப்புகளில் அடையாளக்குறியீடுகள்
வாகன பதிவெண் விதிகள் செவ்வனே அறிந்திடுவோம்!

அதிக வேகம் ஆபத்து என்றுன்னை
கதியே என்றிருக்கும் குடும்பம் உணர்த்தும்!
போக்குவரத்துக்கு இடையூறு ஆகாதென்று
போலீஸ் நாளும் உலகிற்கு உணர்த்தும்!
 
  

Friday, September 2, 2016

இனி தாமதியேன்.

         "இந்த ராமுவுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை.. நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அன்பாக சொன்னேன். கடுமையாகத்திட்டினேன். தண்டனைகள் கூட கொடுத்துப் பாத்துட்டேன். ஆனால் அவன் திருந்துகிற பாடாகத் தெரியவில்லை. தினமும் காலையில் தாமதமாகத்தான் வருகிறான்" சக ஆசிரியரிடம் ஆசிரியை சீதா பேசிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்த ஆங்கில ஆசிரியரும் அவருடன் இணைந்து கொண்டார். " நான் அவனுக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். அப்போதும் இப்படித்தான். நாள்தோறும் வகுப்பிற்கு தாமதமாகத்தான் வந்தான். அவன் திருந்தவே இல்லை. ஹெட் மாஸ்டரிடம் கூட அழைத்துச் சென்றேன்.  அவன் மாறவில்லை.என்ன... பையன் புத்திசாலி. படிப்பில் வெகு சுட்டி. பெற்றோர் தவறி விட்டனர். உறவினர் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறான். அதனால் அதிகமாக கண்டிக்க மனம் வரவில்லை."
     தமிழாசிரியர் முத்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ராமுவைத் தெரியும். பையன் புத்திசாலி, ஆனால் சோம்பேறி. ஒரு முறை கேட்டால் போதும் 'டக்' எனப் புரிந்து கொள்வான். கற்பூர புத்தி என்பார்களே அதைப் போல. ஆனால் மகா கும்பகர்ணன். அவனுக்கு அவனுடைய தூக்கமே முதல் எதிரி. காலையில் எழுந்து சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவது என்பது அவனுக்கு அத்தனை கடினமான காரியம். எத்தனையோ முறை சொல்லியும் பல ஆசிரியர்கள் தண்டனை விதித்தும் அவன் கேட்கிறாற் போல இல்லை. தமிழாசிரியர் முத்து தான் ஒரு முறை முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தார்.
      வகுப்பு ஆசிரியை சீதாவிடம்," இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு ஆறாம் வகுப்பினர் முதல் வகுப்பை எனக்கு விட டுக் கொடுங்கள். என்னுடைய வகுப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்குப்பிறகு உங்கள் வகுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். ஆசிரியை சுமதியும் சம்மதித்தார். இதனை வகுப்பறையிலும் அறிவித்து விட்டார். 
       அடுத்த நாள் அறிவித்த படியே தமிழ் வகுப்பு முதல் வகுப்பாயிற்று. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியர் முத்து அனைவரையும் பாடப்புத்தகத்தை மூடி வைக்கச் சொல்லிவிட்டார். பின்னர் மஹாபாரதம் கதை ஒன்றைக் கூற ஆரம்பித்தார். வகுப்பே ஆர்வமுடன் ஆசிரியர் கதை கூறும் பாங்கினை ரசித்துக் கேட்டது. வழக்கம் போல இருபது நிமிடங்கள் தாமதமாக வகுப்பறைக்குள் நுழைந்தான் ராமு. தமிழாசிரியர் கதை கூறிக்கொண்டிருப்பதையும், வகுப்பு எந்த அரவமுமின்றி ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு பக்கத்திலிருந்த ராஜாவிடம்,' என்னடா இது?' என்று கேட்டான். ராஜா கதை கேட்கும் ஆர்வத்தில் இவன் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ராமு அமைதியாக கதை கேட்க ஆரம்பித்தான். முதலில் இருந்து கவனிக்காத தால் அவனுக்கு புரியவில்லை. ஆசிரியரிடம் கேட்க பயம். நண்பர்கள் அனைவரும் கதையில் ஒன்றிப் போயிருந்தனர்.ஒன்றும் புரியாமலேயே அன்றைய வகுப்பு கடந்தது அவனுக்கு. வகுப்பு முடிந்த பின் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. சரி போகட்டும் என்று ராமு விட்டுவிட்டான்.
      மறு நாளும் வழக்கம் போலவே தாமதமாக வந்தான். அவன் நுழையும் போது வகுப்பு அல்லோகல்ப்பட்டுக் கொண்டிருந்தது.' சார்.. சார்.. நான் பதில் சொல்றேன் சார்..,' என்று அனைவரும் கைகளை உயர்த்தி உற்சாகமாக கூவிக் கொண்டிருந்தனர்.தமிழாசிரியர் புதிர்கள் கேட்டுக் கொண்டிருந்தார். ராமு,' ஐயோ..புதிர்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்குமே! மிஸ் பண்ணி விட்டேனே! ' என வருந்தினான். ' சரி, மீதி நேரம் கேட்பாரல்லவா? அதில் ஜமாய்த்து விடலாம்' என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே தமிழாசிரியர் நிறுத்தி விட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார். ராமுவுக்கு 'சப்' பென்று ஆகிவிட்டது. ராஜா வேறு வகுப்பு என்னென்ன புதிர்கள் கேட்கப்பட்டன தான் எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாக பதில் கூறினான் என்று விலாவரியாக வருணித்துக் கொண்டே இருந்தான். ராமுவுக்கு கடுப்பாயிருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருந்தான்.
          மறு நாள் இன்று என்ன நடக்கின்றதோ என்று ஆவலுடன் வகுப்பறைக்குள் நுழைந்தான். ஆனால் இன்றும் அவன் தாமதமாகத்தான் வந்திருந்தான். அனைவரும் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தனர். வரிகள் தெரியாத தால் அவனால் அவர்களுடன் இணைந்து பாட முடியவில்லை. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. 
            மறு நாள் ராமு பள்ளிக்கு நேரத்திற்கு வந்துவிட்டான். சொல்லப்போனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து வகுப்பறையில் காத்திருந்தான். இன்று வகுப்பில் என்ன நடக்கும் என்ற ஆவல் அவன் கண்களில் தெரிந்தது. மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. நண்பர்கள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இன்று மழை வரும் என்று அவனைக் கிண்டல் செய்தனர். தமிழாசிரியர் உள்ளே நுழைந்தார். ராமு வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்ததைக் கவனித்தார். ஆனால் ஒன்றும் கூறவில்லை. அன்று விடுகதைகள் கேட்க ஆரம்பித்தார். ராமு மற்ற மாணவர்களுடன் இணைந்து உற்சாகமுடன் பதிலளிப்பதைக் கண்டார். முடிவில்," நாளை முதல் முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே இது போன்று புதிர் போட்டிகள் நடத்துவேன்" என்று அறிவித்து விட்டு கிளம்பிவிட்டார்.
            மறு நாள் முதல் ராமு வகுப்பறைக்கு தாமதமில்லாமல் வந்தான் என்று சொல்லவும் வேண்டுமோ

Thursday, September 1, 2016

வண்ணமெல்லாம் நல்லதம்மா...

அம்மா அதிகாலையிலேயே எழுந்து வாசலில் அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். வாசுவும் வழக்கம் போலவே அதிகாலையிலேயே எழுந்து விட்டான். அன்று விடுமுறை தினம். பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. ஆதலால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அருகில் பூங்கா ஒன்று இருக்கிறதே, அங்கு சென்று மரஞ்செடி கொடி வகைகளைப் பார்த்து ரசிக்கலாம் என்று எண்ணமிட்டவாறே பூங்காவிற்கு நடையைக் கட்டினான். அம்மாவின் எங்கே என்ற கேள்விப்பார்வைக்கு "பூங்காவிற்கு செல்கிறேன் அம்மா" என்று பதிலளித்துவிட்டு புன்னகைத்தான். அம்மா தலையசைத்து சம்மதித்தாள்.
    பூங்காவில் அப்போதே ஒரு சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். வரிசையாய் அழகாய் நட்டு வைத்திருந்த செடிகளையும் அவற்றில் பூத்திருந்தப் பூக்களையும் ரசித்தவாறே பூங்காவின் நடுவில் பெரிதாய் வியாபித்திருந்த மரத்தின் நிழலுக்குச் சென்றான். வாகாய் உட்காருவதற்கு அ
தன் அடியில் சேர் போடப்பட்டிருந்தது. அதில் சாய்ந்தவாறு அமர்ந்து பறக்கும் பட்டாம் பூச்சிகளையும் ஓடி விளையாடும் அணில்களையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கீச்மூச் என்று கத்தும் கிளிக்கூட்டம், ஜோடிகளாய்ப் பறந்த சிட்டுக்குருவிகள், தொடர்ந்து கரைந்து கொண்டிருந்த காகம், த த்தித் த த்தி ஒய்யாரமாய் நடை பயின்ற வெண்புறாக்கள் என அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல பறவைகளின் ஒலி அதிகரித்துக்கொண்டே சென்றது.
     பறவைகள் பேசிக் கொள்கின்றனவா அல்லது சண்டையிட்டுக் கொள்கின்றனவா என அவனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. இந்தப் பறவைகள் பேசினால் எப்படி இருக்கும்? என்ன பேசிக் கொள்ளும்? அவனுடைய கற்பனை விரிந்தது.
       கிளி தான் முதலில் பேசியது. டாண் என்று மணியடித்தாற் போல கணீரென்ற குரலில் உரத்துப் பேசியது,' பறவைகளிலேயே நான் தான் அழகியவள்.என் பச்சை வண்ணமும், சிகப்பு மூக்கும், அழகிய குரலும் எவரையும் மயக்கும். பச்சை வண்ணம் தான் அழகு' என்றது. புறா செருமிக் கொண்டே உள்ளே நுழைந்தது,' வெண்மை தான் அழகு. வெண்ணிறப் புறாக்களை விரும்பாதவர்கள் எவரும் உளரோ? என் அழகில் மயங்கித்தானே ஆலிவ் இலை அளித்து என்னை சமாதானத் தூதுவர் ஆக்கியுள்ளனர்' என்றது. மயில் கம்பீரமாக உள்ளே நுழைந்தது. ' உங்கள் அனைவரையும் விட என்னுடைய நீலம் தான் அழகு. என்னுடைய அழகைக் கருத்தில் கொண்டுதானே என்னை நம் நாட்டின் தேசியப்பறவை ஆக்கியுள்ளனர்.' என்றது.
       காகம் மெல்ல கனைத்துக் கொண்டு வாக்குவாத த்திற்குள் நுழைந்தது.' கருமை தான் அழகு. அதனால் தான் உணவை முதலில் எனக்குப் படைக்கின்றனர்' என்றது. மற்ற பறவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து,' சீச்சீ... கருமை அழகா?  இல்லவே இல்லை. உன்னை விரட்டி அல்லவா அடிக்கிறார்கள். உன் குரலும் கர்ண கொடூரமாக உள்ளது' என்றன. காகத்தின் முகம் வாடிவிட்டது. குருவி, மரங்கொத்தி, மீன்கொத்தி போன்ற ஏனைய பறவைகளைத் தனக்கு சாதகமாகப் பேசுவர் என்று நம்பிக்கையுடன் பாரத்தது. ஆனால் அவை முகத்தைத்திருப்பிக்கொண்டுவிட்டன. ' ஆனால், என்னிடம் பல நல்ல குணங்கள் உள்ளனவே. பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளதே. புற அழகை விட அக அழகே சிறந்தது என்று உங்களுக்குத்தெரியாதா? மனம் தூய்மையாய் இருக்குமிடத்தில் தான் அழகு உள்ளது. தோற்றத்தில் அல்ல' என்றது. மயில்,' நீ இத்தனை நீளமாய், சாதுர்யமாயப் பேசினால் உனது வண்ணம் அழகானது என்று ஆகிவிடுமா? இதை ஒத்துக் கொள்ள முடியாது' என்றது. பிற பறவைகளும் இணைந்து கொண்டன,' ஆம்... ஆம்.. கருமை அழகு அல்ல..' காகம் கவலையுடன் நின்று கொண்டிருந்தது.
        வாசு திடுக்கிட்டு எழுந்தான். பறவைகள் இது போன்று சண்டையிட்டுக் கொள்ளவில்லை. அவை த த்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. நல்ல வேளை அனைத்தும் கற்பனேயே. ஆனால் இப்போது அவனுக்கு அந்த சந்தேகம் வந்துவிட்டது. வண்ணங்களில் எது சிறந்தது? யாரிடம் கேட்டு தன் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளலாம் என யோசிக்கலானான்.
        பூங்காவில் ஓவியர் ஒருவர் சித்திரம் தீட்டிக் கொண்டிருப்பதைக் வாசு கண்டான். தன் சந்தேகத்தைத் தீர்க்க அவர் தான் சரியான நபர் என்று அவரின் அருகில் சென்றான். ' ஐயா..' என்றழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தனக்கு ஏற்ப்பட்ட விநோதமான கற்பனையையும் அதனைத்தொடர்ந்து எழுந்த சந்தேகத்தையும் கூறினான். பறவைகளின் வாக்குவாத்த்தைக் கேட்ட அவர் மனம் விட்டு சிரித்தார்.' உனக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு தம்பி' என்றவாறு அவன் தோள்களில் கை வைத்துப் பேசலானார்.
          புன்னகையுடன்,' தம்பி... வண்ணங்களுடனேயே வாழும் என்னிடம் வண்ணங்களைப் பற்றிக் கேட்டது பற்றி மிக்க மகிழ்ச்சி. ஒரு ஓவியராக எனக்கு அனைத்து வண்ணங்களையும் பிடிக்கும். இது உயர்வு, இது தாழ்வு என எதுவும் கிடையாது. மண்ணில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகு தான். கடவுள் படைப்பில் அனைத்துமே இன்றியமையாதவை தான். சிகப்பு, பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு என அனைத்து வண்ணங்களுமே உயிர் ஊட்டுவன தான். ஓவியத்திற்குத் தக்கவாறு வண்ணங்களை நான் கூட்டி மற்றும் குறைத்தும் பயன்படுத்துவேன்' என்றார்.
          மேலும் தொடர்ந்தார்,' உன் கற்பனையில் கூறிய படி கருப்பு ஒன்றும் வெறுக்கத் தக்க வண்ணம் அல்ல. வெண் மேகங்கள் கருமை அடைந்தவுடன் தானே மழை பொழிகின்றது! உன் கண்ணின் கருவிழிகள் எத்தனை முக்கியமானது என்று நீ அறிவாய் தானே? அவ்வளவு ஏன்? நாள் தோறும் உன் பள்ளியில் உன் ஆசிரியர் கரும் பலகையில் எழுதித் தானே உனக்குப் பாடங்களைக் கற்றுத்தருகிறார்?  எனது ஓவியங்களிலும் கருமை முக்கிய பங்காற்றுகிறது...அவுட்லைன் என்ற வித த்தில்...'
           சந்தேகம் தெளிந்தவனாக எந்த வண்ணமும் நல்ல வண்ணம் தான் என்ற முடிவுக்கு வந்தவனாக ஓவியருக்கு நன்றி கூறிவிட்டு நடையைக் கட்டினான் வீட்டுக்கு. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அழகிய வானவில் தோன்றியிருந்தது. வண்ணங்கள் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்று அவனிடம் கூறுவது போலிருந்தது. வாசு சிரித்துக்கொண்டான்.

Wednesday, August 24, 2016

நட்பென்னும் சரணாலயம்.

' இந்த மீன்களையும், காய்ஞ்சு போன மரங்களையும் பாத்துப் பாத்து போரடிக்குதே.. எப்போ தான் இந்தப் பறவைக்கூட்டமெல்லாம் வரப்போகுதோ? அவை வந்தால் தான் இந்த இடமே களை கட்டும்.' என்று மனதிற்குள் எண்ணியவாறே மெல்ல நடை போட்டது அந்த குட்டி ஆமை. 
       அந்த ஆமை இருப்பது ஒரு பறவைகள் சரணாலயத்தின் சிறிய குளத்தில். அமைதியாக இருக்கும் மீன்களைக் கண்டால் ஆமைக்குப் பிடிக்காது. சத்தம் எழுப்பியவாறே வரும் பறவைகளையும், அவற்றின் படபடவன பறக்கும் ஓசையும், அவை பறந்து செல்லும் அழகையும் பார்க்க அதற்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவை எப்போதும் அங்கிருப்பதில்லையே! வருடத்திற்கு ஆறு மாதங்கள் மட்டுமே அங்கிருந்து விட்டு மற்ற மாதங்கள் தன் சொந்த நாட்டிற்குச் சென்றுவிடுமே! 
       ஆமை அந்தப் பறவைகளின் வருகையை விரும்ப மற்றொரு காரணமும் உள்ளது. அந்தப் பறவைகளைப் பார்க்க ஊர் மக்கள் திரளாக திரண்டு வருவர். இது தவிர வெளியூர்களிலிருந்தும் கார்களிலும், பைக் க்களிலும் மக்கள் வந்து குவிவர். காமிரா, பைனாக்குலர் சகிதம் வரும் அவர்கள் கூடவே குழந்தைகளையும் அழைத்து வருவதுண்டு. கைகளில் ஐஸ்க்ரீம் அல்லது கொரிப்பான்களை மென்று கொண்டே அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பெற்றோர் மிகப் பொறுமையாக பதிலளிப்பதை ஆமை ரசித்துப் பார்க்கும்.
        குட்டி ஆமைக்குப் வீடு அதன் முதுகிலேயே உள்ளது. வீட்டின் உள்ளேயே இருந்து போரடித்துப் போயிருக்கும் அதற்கு இப்படி திருவிழா போல அந்த சரணாலயம் திகழ்வது ரொம்பப் பிடிக்கும். பாறையின் மீதமர்ந்து தலையை நீட்டி எல்லோரையும் வேடிக்கை பார்க்கும். ஆனால் யாராவது அருகில் வருகிறார்கள் என்றால் அதற்கு வெட்கம் வந்துவிடும். உடனே தலையை உள்ளே இழுத்துக்கொள்ளும்.
          இப்படித்தான் பறவைகள் வந்த பிறகு ஆமை உற்சாகமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு நாள் நாரை ஒன்று அதன் அருகில் வந்து," நண்பா!" என்று அழைத்தது. திடுக்கிட்ட ஆமை வெட்கத்தால் வீட்டினுள் ஒளிந்து கொண்டது. சிறுது நேரம் கழித்து நாரை போய் விட்டதா என்று மெல்ல எட்டிப் பார்த்தது. ' ஐயோ! என்ன இது? இன்னும் நின்று கொண்டிருக்கிறதே! இந்த நாரை போனால் தான் நான் வீட்டை விட்டு வெளியே வருவேன்!' என்று எண்ணியபடியே காத்திருந்தது. ' பேசாமல் தண்ணீரில் குத்தித்து விடலாமா? ஆனால் அது அங்கேயும் பின் தொடருமே!' என்று அங்கலாய்த்துக் கொண்டே யோசனையில் ஆழ்ந்தது.
         கொஞ்ச நேரம் கழித்து தைரியத்தை வரவைத்துக் கொண்டு மெதுவாக எட்டிப் பார்த்தது. இன்னும் அந்த நாரை நின்று கொண்டிருந்தது. " ஹலோ நண்பா.." என்றபடியே கை நீட்டியது. ஆமையும் தயங்கி தயங்கி கைகுலுக்கி மெல்லிய குரலில்" ஹலோ!" என்றது. நாரை கம்பீரமாக," என்ன! என்னைப் பார்த்து பயமா? நான் உன் நண்பன். உன்னை ஒன்றும் செய்து விட மாட்டேன். நான் புதிதாக இங்கு வந்துள்ளேன்" என்றது புன்னகையுடன்.
          ஆமையும் ," ஓ.. அப்படியா? நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று கேட்டது. நாரை, " நான் சைபீரியாவிலுருந்து வருகிறேன். அங்கு இப்போது பனி அதிகம். எனவே நானும் எனது நண்பர்கள் சிலரும் இந்த இடத்தைத் தேர்வு செய்து வந்துள்ளோம்." என்றது. " ஓ..நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இங்கு தான்" என்றது. " நல்லதாயப் போயிற்று. உங்கள் ஊர், மற்றும் உங்கள் நாட்டைப் பற்றிக் கூற உன்னை விட சிறந்தவர் யாருமில்லை. அதனாலேயே உன்னுடன் சிநேகமாய் இருக்க வந்துள்ளேன்" என்றது. ஆமைக்கு அதன் பேச்சில் ஆர்வம் வந்தது. லாகவமாகப் பேசும் நாரையைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்து," ஓ! அதுக்கென்ன! சொல்லிவிட்டால் போச்சு. அதற்கு முன் நீ கடந்து வந்த நாடுகளைப் பற்றியும், கண்ட காட்சிகளைப் பற்றியும் கூறு " என்றது. நாரையும் கூறலாயிற்று. பல தரப்பட்ட பறவைகள் கூட்டம் கூட்டமாய் வந்தாலும் தங்களுக்கு அந்த இடம் சௌகர்யமாய் இருந்தால் மட்டுமே அங்கு தங்குமாம். தோதுப்படவில்லை என்றால் வேறு இடம் தேடி செல்லுமாம். முட்டையிட்டு குஞ்சு பொரித்து, பின் குஞ்சுகளுக்கு பறக்கத் தெரிந்தவுடன் தன்னுடன் அழைத்துச்செல்லுமாம். உணவுக்காக அருகில் உள்ள ஊர்களில் உள்ள ஏரிகளுக்குச் செல்லுமாம். ஆமை ஆர்வமாய் கேட்டுக் கொண்டது. பொழுது போனதே தெரியாமல் கதை பேசிக் கொண்டிருந்ததில் மாலை நெருங்கியதை இருவரும் கவனிக்கத் தவறி விட்டனர். பின்னர் சுதாரித்து மறு நாள் சந்திக்க உறுதி பூண்டனர்.

          பொழுது புலர்ந்தது. ஆமை நாரையின் வருகைக்காக காத்திருந்தது. வந்தவுடன்," நீ உன் நாட்டைப் பற்றி கூறினாயல்லவா!  நான் எங்கள் நாட்டின் அழகை உனக்குக் காட்டுகிறேன்." என்று கானகத்துள்ளே அழைத்துச்சென்றது. மழை மேகமாய் இருந்தபடியால் அங்கு மயில் ஒன்று தோகையை விரித்து நடனமாடிக் கொண்டிருந்தது. ' இத்தனை அழகான பறவையா!' என்று நாரை அதனை வைத்த கண் வாங்காமல் பார்த்தது. ஆமை," இது தான் எங்கள் தேசியப்பறவை.. அதோ அந்தக் குளத்தில் அழகழகாய்ப் பூத்திருக்கிறதே.. அது தான் எங்கள் தேசிய மலரான தாமரை." என்றது. இவை இரண்டின் அழகில் அப்படியே சொக்கிப் போய் நின்றது நாரை. தேசிய விலங்கான புலியின் கம்பீரத்தைப் பற்றியும், வீரத்தைப் பற்றியும் கூறியது. ஆமை மேலும் தொடர்ந்தது," இந்த நாட்டின் மக்களும் அன்பானவர்கள். அருகில் சரணாலயம் இருப்பதால் இந்த ஊர் மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடு கின்றனர். பறவைகள் பயப்படக் கூடாது என்ற காரணத்திற்காக. அவற்றை இடையூறு செய்யக்கூடாது என்று தொலைநோக்கிக் கருவி மூலமே பறவைகளைக் கண்டு களிக்கின்றனர். விலங்குகள், பறவைகள் மீது அவர்களுக்கு எப்போதும் மாறாக் காதல் உண்டு."  நாரை வியந்து கேட்டுக் கொண்டிருந்தது.  " நண்பா! வந்து தங்கப்போகும் இடத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருந்தேன். இப்போது பெருமையாக இருக்கிறது." என்றது." நீ பறந்து வரும் வழியில் அழகிய கோயில்கள், சர்ச்கள், மசூதிகள் பலவற்றைக் கண்டிருக்கலாம். அவை யாவும் இந்த நாட்டு மக்கள் ஒற்றுமையாய் வாழ்வதற்கான ஆதாரம்" என்றது ஆமை. 

       அதன்பின் நாள்தோறும் இருவரும் சந்தித்து பல கதைகள் பேசி மகிழ்ந்தனர். தன் நட்பின் அடையாளமாய் ஆமை மிக அழகிய கூழாங்கல் ஒன்றை நாரைக்குப் பரிசளித்தது. நாட்கள் பறந்து சென்றன. நாரை தன் நாட்டிற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்தது. ஆமைக்கு நண்பனை விட்டுப் பிரிய மனமில்லை. நாரை தான் விரைவில் மீண்டும் சந்திக்கலாம் என்று தைரியம் கூறி தன்நண்பர்களுடன் கிளம்பத் தயாரானது. ஆமையும் அதன் வருகைக்காக காத்திருப்பதாக உறுதியளித்து விட்டு பிரியாவிடை அளித்தது.

   இப்போது தன் நண்பன் எப்போது வருவான், அவனோடு எப்போது கதைகள் பேசி மகிழலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ சிறிய விமானம் தரை இறங்குவது போல ஒயிலாக இறக்கையை விரித்து தரை இறங்கித் தன்னைத் தேடி வரும் காட்சியைக் காண காத்துக் கொண்டிருக்கிறது.