Thursday, July 28, 2016

மந்திரக்குரலால் வசியம் செய்யும் மயக்கும் ' டோரி'.

குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படத்தை நீங்கள் காணச் செல்கிறீர்கள். அங்கு குழந்தைகளின் எண்ணிக்கையை விட பெரியவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருப்பது, சிறுவர்களின் ஆரவாரத்தை விட பெரியவர்களின் கைதட்டலும், விசிலும் அதிகமிருப்பதை நீங்கள் கண்டிருக்கிறீர்களா? சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் ஃபைண்டிங் டோரி(Finding Dory) திரைப்படத்திற்குச் சென்றால் இதைக் காணலாம். பொதுவாக ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் இரண்டாம், மூன்றாம் பாகம் என எடுத்துத் தள்ளுவது ஹாலிவுட் சினிமாக் கார ர்களின் வழக்கம். ஆனால் ஃபைண்டிங் நீமோ அசகாய வெற்றி பெற்றும் பிக்ஸார்(Pixar) நிறுவனம் அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. 2003 ஆம் ஆண்டு வெளிவந்த ஃபைண்டிங் நீமோ சூப்பர் டூப்பர் ஹிட். அதன் அன்றைய ரசிகர்கள் இன்று நடுவயதை எட்டி விட்டனர். தாங்கள் இளமையில் ரசித்த அந்தத் திரைப்படம் இன்றும் அவர்கள் நெஞ்சை விட்டு நீங்கவில்லை. ஆதலால் தான் திரையரங்குகளில் இத்தனை அமர்க்களம். தாங்கள் இளவயதில் பார்த்து ரசித்த அனைத்துப் பாத்திரங்களும் மீண்டும் வலம் வருவதைக் கண்டு அத்தனை ஆனந்தம்.
        வெளிவந்த பத்தே நாட்களில் பதிமூன்று கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது ஃபைண்டிங் டோரி. படத்தின் இயக்குநர் அண்ட்ரூ ஸ்டன்டன்( Andrew Stanton) கூறுகிறார்," ஃபைண்டிங் டோரி எடுக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியதே ஃபைண்டிங் நீமோவை முப்பரிமாணத்தில்(3D) மீண்டும் பார்த்த போது தான். டோரியிடம் எத்தனையோ கேள்விக்குரிய பதில்கள் விடையளிக்கப் படாமல் உள்ளன என்பதை மீண்டுமொரு முறை பார்த்த போது உணர்ந்தேன். டோரியால் எப்படி திமிங்கலங்களின் பாஷையைப் புரிந்து கொள்ள முடிந்தது? எப்படி வாசிக்க முடிந்தது? ஒவ்வொரு முப்பது விநாடிக்குள்ளும் நண்பர்களையே மறந்து விடும் டோரியை தனிமை சூழாதா? என்ற கேள்விகள் என்னுள் தோன்றின." அவர் கூறியது போலவே இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் ஃபைண்டிங் டோரியில் விடை கிடைத்து விடும். மேலும் கூறுகிறார்," தொடர் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தவுடன் அதில் சுய ஏற்பு(self- acceptance) ஐயும் தொட வேண்டும் என முடிவெடுத்து விட்டேன். நீங்கள் யார் என்று நீங்களே ஒப்புக்கொண்டால் ஒழிய உங்களுக்கு நிம்மதி இராது என்றக் கருத்தை வலியுறுத்த வேண்டும் என்று அனுமானித்தேன்" என்று கூறுகிறார். அவர் கூறுவது போலவே திரைப்படம் அதன் ரசிகர்களுக்கு சொல்லும் சேதி என்னவென்றால்,' நம்முடைய குற்றம் குறைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவை நம்மை வரையறுக்க அனுமதிக்க க்கூடாது ' என்பது தான்.
                 ஃபைண்டிங் டோரி யின் கதை மிக எளிமையானது தான். ' ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ்' (short term memory loss) இந்த நோயைப் பற்றி ஏற்கனவே ' கஜினி' படத்தின் சஞ்சய் ராமசாமியின் தயவால் தமிழ் ரசிகர்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். ஃபைண்டிங் நீமோ எனும் முதல் பாகத்தில் நீமோ எனும் குட்டி மீனைத் தொலைத்த அதன் தந்தை மார்லின் ( மெமரி லாஸ்ஸில் தவிக்கும்) டோரியின் துணை கொண்டு கண்டுபிடிக்கின்றது. அப்போதே, துணைக் கதாபாத்திரத்தில் வந்தாலும், டோரி அனைவர் உள்ளங்களையும் கவர்ந்தது. இம்முறை டோரி தன் பெற்றோரைத் தேடி கலிபோர்னியாவுக்குச் செல்கிறது. 
                    தாய் தந்தையைத் தேடி கலிபோர்னியாவுக்குச் செல்லும் டோரி அங்குள்ள மீன் பண்ணையில் மாட்டிக் கொள்கிறது. அங்கு பல நிறத்தில் மாறக் கூடிய ஆக்டோபஸுடன் நட்பாகிறது. அங்கிருந்து திமிங்கல சுறா, பெலுகா திமிங்கலம், கடல் சிங்கங்கள் என்று செல்லுமிடமெல்லாம் தோழர்களை பெற்றுக் கொண்டே செல்கிறது டோரி. இறுதியில் தன் பெற்றோருடன் இணையும் காட்சிகளை எமோசனலாவும் காமெடியாகவும் சொல்லி இருக்கிறது படம். படம் முழுக்க," ஆமா.. நான் ஏன் இங்க இருக்கேன்? எங்கிட்ட ஏன் இது இருக்கு? உனக்கு நான் ஏன் ஐடி கார்டு தரணும்? எங்கிட்ட எதுவும் இல்ல... இந்த ஐடி கார்ட வைச்சுக்கிறியா?" என்று படம் முழுக்க டோரி கலக்கியிருக்கிறது. ' ஜஸ்ட் கீப் ஸ்விம்மிங்..ஸ்விம்மிங்.. ஸ்விம்மிங்..' என்று அது பாடுவது மிகப் பிரபலமாகி விட்டது.
                  டோரி இத்தனை பிரபலமாவதற்கு அதற்குக் குரல் கொடுத்த வித்தகர் எல்லன் டி ஜெனரஸ் (Ellen De Generes)தான் காரணம். அந்த மந்திரக்குரலுக்கு சொந்தக்கார்ரான அவர் டோரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். எல்லனைப் பற்றி ஒரு வார்த்தையில் கூறுவதென்றால் அவர் ' உலகிற்குக் கிடைத்த உற்சாக்க் குவியல்'. தன்னுடைய டாக் ஷோ மூலமாக நடனமாடிக் கொண்டே நம் மனதிற்குள் நுழைந்த அவர் இப்போது டோரிக்குக் குரல் கொடுத்ததன் மூலம் அனைவர் மனதிலும் சம்மணமிட்டு உட்கார்ந்து விட்டார்.
                    ஸ்டாண்ட் அப் காமெடியனாக தன் வாழ்க்கையைத் துவங்கிய அவரின் வாழ்க்கையே டோரியின் கதையை விட நம்பிக்கை ஊட்டுவதாய் இருக்கும். வெற்றி பெற்ற மனிதர்கள் தங்களுடைய தோற்றத்தை, ஆளுமையை பிறருக்காக மாற்றிக் கொள்வதில்லை என்று உறுதிபட கூறுகிறார். உலகெங்கும் பரவி இருக்கும் எதிர்மறை எண்ணங்களைப் புறந்தள்ளி விட்டு இன்பம் மற்றும் மகிழ்ச்சிகரமான மனநிலைக்கு மாறுங்கள் என்று கூறுகிறார்.தோல்வி தாக்க முற்படும் போது துணிந்த மனநிலையுடனும், உற்சாகமான நடவடிக்கையுடனும் அதனை எதிர்கொள்ளுங்கள் என்கிறார்.விமரிசனங்களைத்தாங்கும் மனப்பக்குவமும், வாழ்வின் சின்னச்சின்ன இன்பங்களை அனுபவிப்பதில் உள்ள ஆர்வமுமே தன் வெற்றிக்குத் தூண்டுகோலாய் இருந்தன என்கிறார்.
                     2014 ஆம் ஆண்டு அகாடெமி (ஆஸ்கர்) விருது வழங்கும் விழாவை அவர் தொகுத்து அளித்த விதம் அனைவரையும் கவர்ந்தது. பிரபலங்கள் அனைவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டதும், விழாவிற்கு வருகை புரிந்த பிரபலங்களுக்கு பிஸ்ஸா ஆர்டர் செய்து இன்ப அதிர்ச்சி ஊட்டியதும் மிகவும் பிரபலமானது. அப்போது அவர் எடுத்த செல்ஃபி அடுத்த சில மணி நேரத்தில் டிவிட்டரில் அதிக முறை ரீடுவீட் செய்யப் பட்டது. மற்றுமொரு சுவாரசியத் தகவல். ஃபைண்டிங் நீமோ வெற்றி பெற்றாலும் 'பிக்ஸார்' ஏனோ இரண்டாம் பாகம் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் அதன் ஒரு பகுதியாகத் திகழ்ந்த எல்லனுக்கு அதன் மீது ஆர்வம் அதிகம். தன்னுடைய டாக் ஷோவில் ஏன் ஃபைண்டிங் நீமோவிற்கு தொடர்ச்சி( sequel)   
எடுக்கவில்லை என நகைச்சுவையாக குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதைப் பற்றி குறிப்பிட அவர் தயங்கவில்லை. வயது ஏறும் போது தன் குரலில் மாற்றம் வந்து விடுமோ என்று அச்சப்பட்டார். அதையும் வெளியிட அவர் தயங்கவில்லை. முடிவில் 2013ஆம் ஆண்டு ஃபைண்டிங் டோரி திரைப்படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதையும் தனது டாக் ஷோ மூலமே முதலில் அறிவித்தார். 
              இன்று படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் குழந்தைகள் பெட் ஷாப் (pet shop) இல் போய் டோரி வேண்டும் என்று கேட்பதாய் செய்திகள் வருகின்றன. சென்ற முறை ஃபைண்டிங் நீமோ வந்த போது க்லௌன்( clown fish) ஃபிஷ் ஆல் ஈர்க்கப்பட்டு அனைவரும் அதனை வளர்க்க விரும்பி அது அதற்கு பேராபத்தாய் முடிந்தது. கடலில் அதிக அளவில் அவை பிடிக்கப்பட்டன. மிருக ஆர்வலர்கள் புகுந்து அவற்றை அழிவிலிருந்து காப்பாற்றினர். இப்போது முன்னெச்சரிக்கையாக தயாரிப்பு நிறுவனமே மக்களிடம் டோரியின் மீன் இனமான நீல டாங்( blue tang) அக்வேரியம் மற்றும் தேர்ந்த வல்லுநர்களால் மட்டுமே வளர்க்க முடியும். எனவே மக்கள் அதனை தொந்தரவு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமூக அக்கறையுள்ள, மற்றும் மிருக ஆர்வலரான எல்லனும் இதே கோரிக்கையை தன்னுடைய டாக் ஷோவில் விடுத்துள்ளார்.
           ஃபைண்டிங் டோரி குழந்தைகள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளதைப் போலவே எல்லனும் நம் அனைவர் மனதிலும் நிறைந்துள்ளார். திரையரங்கை விட்டு வெளியே வந்த பின்னும் தன் மயக்கும் குரலால் நம் காதுகளில் டோரியாய் ரீங்காரமிட்டு நம்மை வசீகரித்துள்ளார் எல்லன்.