Wednesday, February 25, 2015

வாங்க சாப்பிடலாம்




    


நீங்கள் அம்மாவா? அப்பாவா? மகனா? மகளா? மாமாவா? அத்தையா? தாத்தாவா? பாட்டியா? தோழனா?தோழியா?ஹலோ...நீங்க என்னவா வேணா இருங்கள் ஆனால் உங்களை மூன்று வேளையும் அதிகாரம் பண்ண , மிரட்ட இருவர் இருக்கிறார்கள். நீங்கள் யாருக்கும் பயப்படாதவராய் இருக்கலாம். ஆனால் இவர்கள் வந்தால் அடங்கி ஒடுங்கி விடுவீர்கள். அவங்க இந்த தரணியை ஆளும் ராஜா ராணி.நீங்கள் கஷ்டப்பட்டு உழைப்பதெல்லாம் இவர்கள் அனுபவிப்பதற்கே....வயிறு எனும் மஹாராஜா தான் முதலில் வருவார். உங்களைக் கிள்ளுவார். உடனே நீங்கள் உணவைத்தேடுவீர்கள். இந்த உணவை சாப்பிடுவதற்கு முன் நாக்கு எனும் மஹாராணி வருவார். சுவையாக இருக்கிறதா பதமாக இருக்கிறதா, மஹாராஜாவுக்கு சேருமா என்று சோதனை இடுவார். ஓகே என்றால் உள்ளே அனுப்புவார் . இவர்கள் இருவரையும் சந்தோசப் படுத்தினால் தான் நீங்கள் நாள் முழுவதும் ஓடியாடி வேலை செய்ய முடியும்.
    
         இவர்கள் இருவரையும் சந்தோஷப்படுத்தும் இரண்டு சமையல் குறிப்புகளை நான் தர உள்ளேன். முதலில் அசைவப் பிரியர்களுக்கு...முதலில் இதனை எனக்கு கொடுத்து உதவிய முத்து விஜயா என்னும் விஜிக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .( ஓர் அறிமுகம்..விஜி- சமைப்பதில் கில்லாடி, home science படித்தவர், புதிது புதிதாக சமைத்து அசத்துவார், நன்றாக படம் வரைவார், பாட்டு கேட்பதில் அலாதி பிரியம்.)
Fish moilee:
தேவையான பொருட்கள் :
வஞ்சிரம் மீன்        : அரை கிலோ
வெங்காயம் பொடியாகவெட்டியது : 1 அல்லது 2
குடமிளகாய் 1" சதுரத்துண்டுகளாய் வெட்டியது : 1
தக்காளி 1" சதுரத்துண்டுகளாய் 
வெட்டியது : 1
பச்சை மிளகாய் : 4 அல்லது 5
தேங்காய்ப்பால் : 2 கப்
        1 கப் கெட்டியானது
        1 கப் நீர்த்தது
ஒயிட் பெப்பர் : அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் : 3 டேபிள்ஸபூன்
உப்பு.   : தேவைக்கேற்ப
கறிவேப்பிலை : 2 ஆர்க்கு
செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் காய வைத்து மீனை லேசாக வறுத்து தனியே வைக்கவும்.
2. பேன்(pan) ஒன்றில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
3. பின்னர் நீர்த்த தேங்காய்ப் பாலையும் உப்பையும் சேர்க்கவும். 
4. சிறிது நேரம் கொதித்த பின் வெட்டிய குடமிளகாயை சேர்க்கவும். மூடி வைக்கவும்.
5. குட மிளகாய் பாதி வெந்தவுடன் தக்காளிப்பழத்தை சேர்க்கவும். சில நிமிடங்கள் வேக விடவும். 
6. பின்னர் மீன் துண்டுகளைஒவ்வொன்றாக சேர்த்து வேக விடவும். 
7. கெட்டித்தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
8. ஒயிட் பெப்பர் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக விடவும். 
9. சுடச்சுட சாதம்,ஆப்பம் அல்லது தோசையுடன் பரிமாறவும்.
      இதை அவர் விவரித்த வித த்தைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊறியது. கண்டிப்பாக முயன்று பாருங்கள் . மீன் உண்ண விரும்பாதவர்கள் கூட இதை விரும்பி ருசிப்பர் என்று உறுதிபட கூறினார்.
               சைவப் பிரியர்களுக்கு புரோட்டீன் நிறைந்த , கொலஸ்ட்ரால் இல்லாத காளான் செய்முறை ஒன்றை அறிந்து கொண்டேன். இதனை எனக்கு தந்து உதவியவர் சங்கரேஸ்வரி- எனது தம்பி மனைவி, மற்றும் மகள். கோலம் போடுவதில் வல்லவர். சமையலில் அதீத ஈடுபாடு. குழந்தைகள் மீது கொள்ளை பிரியம். கொஞ்சித்தள்ளி விடுவார். இவரது சமையலுக்கு இவரது கணவரும் குழந்தைகளும் நம்பர் ஒன் ரசிகர்கள். குறிப்பாக மகன். நீங்களும் இதை முயற்சித்த பிறகு தீவிர ரசிகர்கள் ஆகிவிடுவீர்கள் என்று எதிர் பார்க்கிறேன். 
 
 தேவையான பொருட்கள்:
காளான்.    : ஒரு பாக்கெட்
வெங்காயம்: 2
தக்காளி.     :3
குடமிளகாய்.: 2
உப்பு
சர்க்கரை
எண்ணெய்
எண்ணெயில் வதக்கி பின் அரைத்துக் கொள்ளவும்:
துருவியதேங்காய் : 2 டேபிள்ஸபூன்
மிளகு   : அரை டீஸ்பூன் 
பட்டை : சிறிய துண்டு
லவங்கம்: சிறிய துண்டு
பூண்டு  : 7 பல்
இஞ்சி : 1 அங்குலத்துண்டு
செய்முறை:
1. காளானை எலுமிச்சை கலந்த நீரில் கழுவி , நீரை வடித்து விட்டு மெல்லிய துணியில் பரப்பி உலர வைக்கவும். இரண்டிரண்டாக அரியவும்.
2. வெங்காயம் , தக்காளி , குடமிளகாய் இவற்றை நீளவாக்கில் அரிந்து கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு , காய்ந்தவுடன் வெங்காயத்தை போட்டு , பின் குட மிளகாயைப் போட்டு வதக்கவும்.
4. நன்றாக சிவந்தவுடன் தக்காளியைப் போட்டு ஈரப்பதம் போகும்வரை வதக்கவும்.
5. பின் காளான் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும்.
6. இத்துடன்அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும். உப்பு, சர்க்கரையை ருசிக்கேற்ப அளவோடு சேர்க்கவும்.
7. எண்ணெய் பிந்து வரும் வரை வதக்கவும். 8. தேவைக்கேற்ப நீர் ஊற்றி குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
9.புல்கா அல்லது சப்பாத்தியுடன் சூடாகப் பரிமாறவும்.
 நீங்கள் கவனித்திருக்கிறீர்களா!! ஹோட்டலுக்குச் செல்கிறோம். மெனு கார் டைப் பார்த்து அலசி ஆராய்ந்து ஒரு உணவை வாங்கி ரசித்து சாப்பிடுகிறோம். சிலர் அத்துடன் விடுவதில்லை அதை எப்படி தயாரித்துள்ளார்கள் என்று சிஐடி போல் ஆராய்ச்சி செய்வார்கள். வீட்டிற்கு வந்தவுடன் அதே மாதிரி செய்ய முயல்வார்கள். சிலர் ஹோட்டலில் வீட்டில் கிடைப்பது வீட்டில் கிடைக்காது என்று குடும்பத்தினருக்கு உணர்த்தி விட்டு நிம்மதியாய் இருப்பார்கள். முதலில் பாரத்தவர்களுக்கு சமைப்பதில் ஆர்வம். இரண்டாம் வகையினருக்கு சாப்பிடுவதில் ஆர்வம். நீங்கள் எந்த ரகம்? சொல்லுங்கள்.

   ஒன்று சொல்லட்டுமா? அருணா என்னுடன் பேசிக்கொண்டிருந்த போது, அம்மா ஒரே மாதிரி எழுதாதீங்கம்மா..கொஞ்சம் different ஆ try பண்ணுங்க. Recipe போடுங்க.,கதை எழுதுங்க( ஐயோ பாவம் நீங்கள்.. அதை வேறு முயற்சி பண்ணலாம்னு இருக்கேன்.. உங்களை மாதிரி புண்ணியவான்களை நம்பித்தான்) என்றாள். அதன் பிரதிபலிப்பு தான் இந்த சமையல் குறிப்புகள். நண்பர்களே இந்த சமையல் குறிப்புகள் உங்களுக்குப் பிடித்ததா? உன்னிடம் இல்லையா என்று கேட்காதீர்கள். அதன் பின்னால் பெரிய கதை உள்ளது. என் சமையல் ஞானத்தை அடுத்த பகிர்வில் விவரிக்கின்றேன். அது வரை காத்திரு ங்கள்.
              ( தொடரும்)

Saturday, February 14, 2015

பேச்சுக்கலை கைவந்த கலை

சிறு வயதில் எனக்கு ஏதாவது ஒரு சந்தேகம் தோன்றும். உடனே அறிந்தவர் தெரிந்தவர் என அனைவரிடமும் அதைப் பற்றிக் கேட்பேன்.அவர்களுக்குத் தெரியாவிட்டால் லைப்ரரியில் போய் அதைப் பற்றி ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்பேன். அங்கும் இல்லை என்றால் அதற்கு மேல் முயற்சி செய்ததில்லை. ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. Google என்று எனக்கொரு பெரிய அக்கா இருக்கிறார்கள்.,அவர்கள் வசம் web, news, YouTube, blogs என்று ஒரு பெரும் படையே உள்ளது. அவர்களிடம் சரண்டைந்து விடுவேன். இவர்களில் யாராவது ஒருவரிடம் என் தேடலுக்கு கண்டிப்பாக விடை இருக்கும்.
நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? Google நமக்கு முன்னாலேயே நம் வேலையை செய்ய ஆரம்பித்து விடுவதை.. உதாரணத்திற்கு ஏதாவது ஒரு வார்த்தையை மட்டும் டைப் செய்து பாருங்கள். உடனே அதுவாகவே யூகித்துக்கொண்டு சுமார் பத்து தேடல்களை நமக்கு அது வழங்கும். இப்படித்தான் ஒரு நாள் YouTube இல் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சும்மா வேடிக்கையாக "how to talk" என்று டைப் செய்தேன். நமக்கே பேச சொல்லித்தரபோகிறார்களா...திருநெல்வேலிக்கே அல்வா வா? என்று நகைப்பினூடே ஸ்க்ரோல் செய்தேன் . நமக்கே பேசக்கற்றுக் கொடுக்கும் சில வீடியோக்களை காட்டியது. அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பார்க்க ஆரம்பித்தேன்.
           இந்தியர்களான நமக்கு இந்தப் பயிற்சியெல்லாம் தேவையில்லை. உங்கள் உரையாடலை யாருடனாவது ஒரேயொரு கேள்வியுடன் ஆரம்பித்தால் போதும், அதற்குப்பின் உரையாடல் நீடிக்க அவரே பார்த்துக் கொள்வார். நீங்கள் போதும் போதும் என்று நினைக்கும் அளவிற்கு அனைவரும் பேசுவர். உதாரணமாக நீங்கள் பார்க்கிலோ , பீச்சிலோ அல்லது க்யுவில் நிற்கும் போது அருகிலிருப்பவரிடம் சும்மா ஒரு பேச்சுக்காக ஒரு கேள்வி கேட்டு உங்கள் உரையாடலைத் தொடங்குங்கள். அப்புறம் அவர்கள் நிறுத்தவே மாட்டார்கள். மாறி மாறி பேசிக் கொண்டே இருப்பார்கள் .நீங்களாக நினைத்தால் கூட உரையாடலிருந்து வெளியே வருவது கஷ்டம் தான். நாகரீகம் கருதி தலையை ஆட்டிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
        உங்களுக்கு யாரிடமாவது பேச விருப்பம்? ஆனால் அவர்கள் உங்களிடம் பேசுவாரா?உங்களை அவருக்குப் பிடிக்குமா என்ற சந்தேகம் உள்ளதா? கவலையை விடுங்கள், கைவசம் ஒரு டெக்னிக் உள்ளது. அதைப்பின்பற்றினால் யாராக இருந்தாலும் அவருக்கு உங்களைப் பிடித்து விடும். முதலில் அவரை உற்று கவனியுங்கள். அவரிடம் புகழத்தக்க ஏதேனும் ஒரு அம்சம் இருக்கும். அதனைக் கூறுங்கள். உடனே அவருடைய முகத்தில் ஆயிரம் வாட்ஸ்பல்ப் எரியும். சந்தோசப்படுவார். பிறகென்ன அவருக்கு உங்களை ரொம்பப்பிடிக்கும் .உங்களுடன் பேச ஆசைப்படுவார். சில நாட்களுக்கு அவருடைய சந்தோசம் தொடரும்.
         ஆனால் ( என்னை அறிந்தால் படத்தில் அஜித் கூறுவது போல) ஒரு மெல்லிய கோடு தான் பாராட்டுவதையும் ஐஸ் வைப்பதையும் பிரிக்கிறது. அதை உணர்ந்து அந்த எல்லை தாண்டாதீர்கள். இதையும் மீறி அவர் சீரியஸானவராக இருக்கிறார் என்றால், இன்னொரு அஸ்திரம் உள்ளது, அதைப் பயன்படுத்துங்கள். 'உங்களுக்குப் புகழ்ச்சி பிடிக்காது என்று தெரியும்' என்று புகழ்ந்து கூறுங்கள். இந்தப் புகழச்சிக்கு மயங்காதவர்
உலகில் எவருமே இல்லை. 
      பொதுவாக உங்கள் பேச்சினூடே நகைச்சுவை இழையோடினால் அனைவரும் ரசிப்பர். சீரியஸாக நமக்குத் தெரிந்த விஷயங்களைப் பேசி நாம் ரொம்ப புத்திசாலியாக்கும் என்று பறைசாற்றுவதை விட நகைச்சுவையாக் பேசி உங்களில் ஒருவன் நான் என்ற எண்ணத்தை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தினால் அனைவருக்கும் பிடிக்கும். அந்த நகைச்சுவையின் உட்பொருள் நீங்களாகவே இருந்தால் அது அதிக நன்மை பயக்கும். 
யாருக்கும் பிறர் நம்மை கிண்டல் கேலி செய்வது பிடிக்காது. ஆனால் எல்லோருக்கும் அடுத்தவரை கிண்டல் செய்வதை ரசிக்க ரொம்பப்பிடிக்கும். இதை எழுதும் போது என்னால் இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. என் பிள்ளைகளிடம் பேசும்போது ஏதாவது ஜோக் சொல்லி சிரிப்பேன். உடனே அவர்கள் சொல்வார்கள்' அம்மா ஜோக்குக்கு அம்மா மட்டும் தான் சிரிப்பாங்க..' அவர்களுக்கு நான் கேலிப்பொருள் ஆவதில் ஒரு சின்ன சந்தோசம். சில சம்பவங்களை எப்போது நினைவு கூர்ந்தாலும் சிரிப்பு வரும் ., அது போன்ற சம்பவங்களை திரும்பத் திரும்பக் கூறி இடத்தை கலகலப்பாக்கலாம்.
       எந்த விஷயத்தைப் பற்றியும் 10 விநாடிகளுக்கும் பேசலாம் ., 20 நிமிடங்களுக்கும் பேசலாம். அது பேசுபவரது திறமை மற்றும் கேட்பவரது பொறுமை .. இரண்டையும் சார்ந்தது. நாம் பேசுவதை பிறர் ஆர்வத்துடன் கவனிக்க வைப்பது தனிக்கலை. அதில் தான் நம் திறமை உள்ளது. இன்னொரு முக்கிய விஷயம் ., புன்னகை தவழும் முகத்துடன் பேச வேண்டும். யாரிடம் எதைப்பற்றி பேசினால் அவர்களுக்குப் பிடிக்கும் என்று தெரிந்து கொண்டு அதைப் பற்றி பேச வேண்டும். அது சிலருக்கு கை வந்த கலை. தெரியாதவர்களுக்கு ஒரு சின்ன டிப்..டீன் ஏஜ் பையன்களாக இருந்தால் அவர்களிடம் வீடியோ கேம்ஸ் பற்றி பேசுங்கள்., டீன் ஏஜ் பெண்களாக இருந்தால் அவர்களிடம்
மேக் அப் பற்றி பேசுங்கள் ., இளம் பெண்களிடம் குழந்தை வளர்ப்பு பற்றியும்.,ஆண்களிடம் கிரிக்கெட் மற்றும் சினிமா பற்றியும்.,நாற்பது வயதிற்கு (ஆண், பெண்) மேற்ப்பட்டவரிடம் ஆன்மீகம்
 பற்றியும் பேசலாம்.
        சரி பேச்சை எப்படி ஆரம்பித்து எப்படி கொண்டு செல்லலாம் என்று பார்த்தோம். எப்படி முடிப்பது?? சிலர் இடைவிடாது பேசிக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடமிருந்து எப்படி விடைபெறுவது?நாசுக்காக அவர்கள் மனம் புண்படாதவாறு எப்படி வெளியேறுவது? ஒரு எளிய முறை உள்ளது. பேசிக்கொண்டிருக்கும் போதே உங்கள் மொபைல் போனை வெளியே எடுங்கள்., அதைப்பார்த்தவாறே ' ஒரு நிமிடம்., முக்கியமான மெஸேஜ் வந்திருக்கு. உடனே போகணும்' என்று சொல்லுங்கள். அவர் விடை கொடுத்து விடுவார்.
          எதையும் வீணாக்காதவர்கள் நம் மக்கள். உதாரணமாக நீங்கள் எங்காவது போகும் போது உங்களைச் சுற்றிலும் உள்ளவர்களை உற்றுப்பாருங்கள் , மற்றும் கேளுங்கள்..பேசிக்கொண்டே இருப்பார்கள். கிடைக்கும் நேரத்தை வீணாக்காமல் பேசிப்பேசி உபயோகமாக்குபவர்கள் நம் மக்கள். நான் ஒரு வீடியோ பார்த்தேன் என்று முதலில் கூறினேன் அல்லவா? அது ராமித் சேத்தி என்னும் அமெரிக்க இந்தியரது. சேத்திசார் அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் பேச சொல்லிக்கொடுக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ளவர்களுக்கு அது கூடவேப் பிறந்தது , தானா வரும்.


  

Friday, February 6, 2015

என் காதல் கதை சொல்ல வந்தேன்



              அதிகாலை மணி ஆறு. அவளுக்காக நான் ஆவலுடன் காத்திருந்தேன். கையில் காப்பியுடன் என்னவள் வருகிறாளா வருகிறாளா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை சைக்கிளில் சுமந்து வருகிறான் ஒரு வாலிபன். அவசரகதியில் அவளைத்தூக்கியெறிந்து விட்டு தன் வழியே பறக்கிறான். பாவம் அவன் அவசரம் அவனுக்கு . எட்டு மணிக்கு வேறு வேலைக்குப் போக வேண்டும் அல்லவா அவன்.
          ஆனால் எனக்குத்தான் மனம் பதைபதைக்கின்றது. ஓடிப்போய் அவளை அள்ளி எடுக்கின்றேன். மண்ணில் பட்டு அவள் மேனி சிதைந்துள்ளதா என சரி பார்க்கின்றேன். ஒன்றும் ஆகவில்லை அவளது திருமேனிக்கு என்று அறிந்தவுடன் மகிழ்ச்சியுடன் அவளை அணைத்தவாறே வீட்டினுள் நுழைகின்றேன். இதோ அவளை அள்ளி முகரப் போகின்றேன். .. அவள் தான் என் மனம் கவர்ந்த காதலி, தினந்தோறும் என் வீடு தேடி வரும் உற்ற தோழி, நாளெல்லாம் என்மீது மையல் கொள்ளும் மங்கை..... அவள் என்று ஒருமையிலா குறிப்பிட்டேன்? தவறு., எனக்கு நான்கைந்து காதலிகள்.. ஆங்கிலம், தமிழ் என தலா இரண்டு காதலிகள். 

                  தினசரி நாளிதழ்களே என் காதலிகள். நாள்தோறும் இவர்கள் தரும் மகிழ்ச்சிக்கு ஈடுஇணை இல்லை. சாப்பாடு இல்லாமல் நான் இருந்து விடுவேன் , ஆனால் இவர்களைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது. ஒரு நாள் இவர்களை தரிசிக்காவிட்டால் அந்த நாள் எனக்கு முழுமை அடையாது. மறுநாள் ஞாபகமாக முந்திய நாள் தோழியை வாங்கி படித்து விடுவேன். இவர்கள் மீது எனக்கு இருக்கும் பைத்தியக்காரத்தனமான அன்பைப் பற்றி என் கணவர் நன்கு அறிவார். என்ன ஆனாலும்., எவ்வளவு தொலைவில் இருந்தாலும்., எந்த நேரமானலும்., எந்த ஊருக்குப் போனாலும் எனக்கு கட்டாயம் நாளிதழ்கள் வாங்கி வந்து விடுவார்.
                   நான் இவ்வளவு சிலாகித்துப் பேசும் நாளிதழ்கள் என்க்கு வாழ்வில் பலவற்றை கற்றுக்கொடுத்தன. கல்லூரிக் காலத்தை முழுமையாக படித்துணர்ந்து அனுபவிக்க முடியாத எனக்கு இவர்களே ஆசான்கள். தெரியாத விஷயங்களை இவர்களை ஊன்றிப் படித்து தெரிந்து கொண்டேன். எவ்வளவோ நான் கற்றுக்கொண்டாலும், நீ இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது பல உள்ளது என நாள்தோறும் புதிது புதிதாய் தகவல்களைத் தாங்கி வரும் தாரகைகள் இவர்கள்.
              நாள்தோறும் ஒரு சிறப்பு ஆடை உடுத்தி இவர்கள் என்னை மயக்குவார்கள். ஆன்மீகம், சினிமா, அறிவியல், பெண்கள் பகுதி, விளையாட்டு என இவர்களது ஆடைகள் ஜொலிஜொலிக்கும்.  அதுவும் ஞாயிறு என்றால் போச்சு... ஏதோ fashion paradeக்குப் போவது போல வித விதமாய் ஒய்யாரமாய் வலம் வருவார்கள். என்னால் அன்று அவர்களை விட்டு கண்ணை எடுக்கமுடியாது..ஜாலக்காரிகள்..அவர்களது மாய வலையில் நான் வீழ்ந்து விட்டேன்.
                 உங்களுக்கெல்லாம் கதை பேசுவது, வம்பளப்பது எல்லாம் பிடிக்கும் தானே? எனக்கு ரொம்பப்பிடிக்கும். அதைத்தெரிந்து இந்த அழகிகள் நள்தோறும் சுவையான தகவல்கள் தருவார்கள். நவரசத்திற்குப்பஞ்சமே இராது. திகில், நகைச்சுவை, கோபம், அருவருப்பு என்று பல தரப்பட்ட உணர்ச்சிகளுக்கு இவர்களைப் படித்தவுடன் ஆளாவேன்.
          சமீபத்தில் நான் வாய்விட்டு சிரித்த இரண்டு நிகழ்ச்சிகள்...கிரீஸ் நாட்டின் அதிபர் தேர்தல் சமீபத்தில் நடந்தது. பொருளாதார மந்த நிலையில் இருக்கும் கிரீஸ் நாட்டு அதிபர் வெளியிட்ட முதல் அறிக்கை என்ன தெரியுமா? நாட்டின் பொருளாதார நிலை சீரடையும்வரை தான் டை அணியப்போவதில்லை என்று..ஹா..ஹா.. இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குப் புரியவில்லை .
          மற்றொன்று சென்ற வாரம் நியுஸிலாந்து சென்ற கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஹாரிஸ்சொஹைல் தனது அறையில் பேய் இருப்பதாகத் கூறி அங்கிருந்து வெளியேறினாராம்..ஹா..ஹா..
         மனம் துணுக்குற்ற செய்தி..ஆன்லைன் மூலமாக துப்பாக்கி வாங்கிய இளைஞர்.
          இவ்வாறாக என்னுடைய எண்ணம், சிந்தனை , செயல் என அனைத்திலும் இவர்களே வியாபித்துள்ளனர். இவர்களைத்தாண்டி என்னால் யோசனை செய்ய முடியாது.. இவர்கள் இல்லாத வாழ்வை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை.என் கணவருடனான காரசாரமான விவாதம் இவர்களைப் பற்றியே இருக்கும். உற்றார்உறவினருடனான என்னுடைய உரையாடலில் உட்பொருள் இவர்களே தான்.
 
          முடிவில் ஒரு சிறிய சந்தேகம். நானோ பெண். நான் நாளிதழ்களை உருவகப்படுத்தியதோ காதலிகளாக.. தவறோ?!? காதலனாக உருவகப்படுத்த வேண்டுமோ என்ற ஐயம் எழுந்தது. விமரிசனம் எழுந்தால் அதை சமாளிப்பதற்காக இந்தக்
கடைசிப் படம்.( பெருமாள் முருகன் சம்பவத்தை வாசித்ததினால் ஏற்ப்பட்ட தாக்கம்..எதற்கும் ஒரு முன் எச்சரிக்கை உணர்வு தான் . சரி தானா அன்பர்களே?!)

              


Wednesday, February 4, 2015

அக்கா என்னும் மந்திரச்சொல்

அழகிய மாலைப் பொழுது., கைப்பை நிறையப் பணம். மனம் நிறைய சந்தோசம். தேவைகள் பல. என்ன செய்யலாம் ? பொழுது போக வேண்டுமா? உடனே ஸ்கூட்டியை எடு. விடு பல்பொருள் அங்காடிக்கு( அதாங்க சூப்பர் மார்க்கெட்..) குளிரூட்டப்பட்ட அங்காடியில் கதவைத்திறந்தவுடன் ஜிலீரென்ற ஏசிக்காற்று முகத்தில் அறைந்து வரவேற்கின்றது. என்னை எடுத்துக்கொள்ளேன் என்று கெஞ்சலாய்ப்பார்க்கின்றன தள்ளுவண்டிகள். அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள். தேடி எடுப்பதற்கு இலகுவான வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதையும் மீறி தேர்வு செய்ய தடுமாற்றம் ஏற்ப்பட்டால் புன்சிரிப்புடன் ஓடி வந்து உதவும் ஊழியர்கள். தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு பில்போட கவுண்டருக்குச் சென்றால் சட்டென சிறிதும் தாமதமின்றி பில் போடப் படுகின்றது. சில்லறை இல்லை என்று சாக்லேட் தரும் அடாவடித்தனம் இல்லை. Family card என்ற பெயரில் செய்யும் மோசடி இல்லை. வாசல் வரை வந்து பொருட்களைக் கொணர்ந்து தரும் ஊழியர். மீண்டும் இதே கடைக்கு வரவேண்டும் என்று நிறைவான மனதுடன் திரும்பும் நாம்..... இதெல்லாம் கனவில் தான் நடக்கும். ஷாப்பிங் என்பது சுகானுபவமாகி இருந்த நிலை மாறி நினைத்தாலே மிரள வைக்கும் அனுபவமாக மாறி வருகிறது.
              இப்போதெல்லாம் பல்பொருள் அங்காடியில் நுழைந்தால் , பகல் நேரத்தில் ஏசி எதற்கு என்று சிக்கன நடவடிக்கையாக ஏசியை அணைத்து விடுகிறார்கள். பொதுவாக ஏசிக்காக ஜன்னல்கள் இல்லாத கட்டிடங்களாக அவை இருப்பதால் சுத்தமாக காற்றோட்டமே இருப்பதில்லை. நாம் வெந்து போவோம். பொருட்கள் ஒழுங்காக அடுக்கி வைக்கப் படுவதில்லை. மானாவாரியாக இறைந்து கிடக்கும். தேடித்தேடி எடுக்க வேண்டியதிருக்கும். ஊழியர்களிடம் ஏதாவது விபரம் கேட்டோம் என்றால் அங்கு தான் இருக்கும் தேடிப்பாருங்கள் என்று நமக்கு உத்தரவு கிடைக்கும்.  சரி போகட்டும் தலைவிதியே என்று தேடி எடுத்து விடுவேன். (சின்ன வயதில் விளையாடிய விளையாட்டுக்கள் இப்போது உபயோகமாய் இருக்கிறது. அப்போதெல்லாம் என் தம்பி தங்கைகள் என்னுடைய கழுகுக் கண்களில் அவர்களுடைய விளையாட்டுப் பொருட்கள் சிக்கி விடக்கூடாது என ஒளித்து வைப்பர். ஆனால் விடுவேனா நான்? தேடி எடுத்து விடுவேன். அந்த அனுபவம் இப்போது கைகொடுக்கிறது).இப்போதும் அதே போல் தான், எனக்குத்தேவையான பொருட்களை எப்படியாவது தேடி எடுத்து விடுவேன். பல சமயங்களில் நான் வேறு ஏதோ ஒன்றைத்தேட வேறு ஏதோ ஒன்று கண்ணில் தட்டுப்படும். யுரேகா..இதை எவ்வளவு நாட்களாகத்தேடிக் கொண்டிருந்தோம் என நான் குதூகலித்த நாட்களும் உண்டு. சரி அது போகட்டும் , பில் போடும் போது அங்கு காத்திருக்கும் நேரம் தான் மிக கொடுமையானது. கூட்டம் அதிகமிருந்தால் மற்றொரு கவுண்டரில் பில் போடலாம் தானே. சும்மாவேனும் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். நம் அவசரம் அவர்களுக்குப் புரிவது இல்லை.
பாத்திரக்கடைக்குச் சென்றேன். பாத்திரங்கள் மலை போல் குவிந்து கிடந்தன. ஆட்களும் அதிகம் ., ஆனால் இரண்டிரண்டு பேராக நின்று வம்பளத்துக் கொண்டிருந்தார்கள். நெருங்கிச் சென்று கேட்டால் ... வீட்டுக்கதை. ஆனாலும் வியாக்கியானம் பேசுவதில் இந்தியர்களுக்கு நிகர் ஒருவரும் இல்லை .( ரஜினி கூட தன்னுடைய பாஷா படத்தில் கூறுவார் .. "பேசாம இருந்தா இந்தியாக்காரன் செத்துப்போயிருவான்னு சொன்னீங்களே..சூப்பர் மேட்டர் யா....")வேலை நேரத்தில் கதை பேசு வதை என்னால் ஒத்துக்கொள்ளவே முடியாது. ஒருடாக்டரோ அல்லது ஒரு ஆசிரியரோ தன்னுடைய வேலை நேரத்தில் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருந்தால் ஒத்துக்கொள்வோமா? அது போலத்தான்  இதுவும். எனக்கு வெகு நாட்களாக ஒரு எண்ணம் தோன்றுவதுண்டு.. இது போல் sales செய்யும் நபர்களுக்கு குறைந்த பட்சம் மூன்று மாத டிரெய்னிங் கொடுக்க வேண்டும் என்று ..ஆனால் இது நடைமுறை சாத்தியம் இல்லை என எனக்குத் தெரியும். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே குதிரைக்கொம்பாய் இருக்கும் வேளையில் எந்த உரிமையாளர் இது போல் தகுதித்தேர்வு வைத்து ஆட்களை எடுப்பார்?
ஜவுளிகள் கடைக்குச் சென்றாலும் இதே கதை தான். அங்கு பத்து சேலைகளுக்கு மேல் எடுத்துக்காட்டுவதில்லை. அவ்வளவு தான் என்று சொல்லி விடுவார்கள். நாம் அனைத்தையும் பார்த்து விட்டு ஒன்றும் பிடிக்கவில்லை என்று சொல்லி விட்டால் அவர்கள் தானே அதை மடித்துவைக்க வேண்டும்.இதில் அவர்களை மட்டும் குறை கூறி புண்ணியமில்லை., நம் பெண்களுக்கு சும்மா சேலைகளைப் பார்ப்பதில் ஒரு அலாதி இன்பம். வாங்கும் எண்ணமே இல்லை என்றாலும் பல சமயங்களில் சும்மா பார்ப்பார்கள்.
 இப்படித்தான் நான் ஷாப்பிங் போவது பற்றி வெறுப்பாய்பேசி வந்த காலத்தில் ஒரு நாள் ஒரு பாத்திரக்கடைக்குப்போனேன். யாரும் நம்மை கவனிக்க மாட்டார்கள் நாமே தான் தேடி எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ரசக்கும்பாவை தேடிக்கோண்டிருந்தேன். என்ன அக்கா வேண்டும் என்று ஒரு குரல்.. பாரதியார் கூறியது போல் என் காதில் தேன் வந்து பாய்ந்தாற் போலிருந்தது . இன்ப அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன்.சுமார் இருபது வயது மதிக்கத்தக்க கடைப்பையன்  என்னக்கா தேடுறீங்க என்றான். ரசக்கும்பா என்றவுடன் அவனுக்கு விளங்கவில்லை. அவனுக்கு விளக்கிக் கூறினேன் . அது இல்லை ஆனால் தருவித்துத் தருகிறேன் என்றான். பொருள் கிடைக்கவில்லை என்றாலும் அந்தப் பையன் அக்கா அக்கா என்று அழைத்ததினால் மனம் நிறைய  சந்
தோசம் ஏற்பட்டது. நானாக நினைத்துக் கொண்டேன்.. அந்தப் பையன் நிச்சயம் திருநெல்வேலி பக்கமாகத்தான் இருக்க வேண்டும். சென்னையில் உள்ளவர்கள் இப்படி மரியாதையாகப் பேச மாட்டார்கள். வயது வித்தியாசம் பார்க்காமல் இன்னாம்மா நீ என்று ஒருமையில் தான் விளிப்பார்கள்
எனக்கு மற்றொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. நான் சென்னை வந்த புதிதில் வாசலில் தள்ளு வண்டியில் கொய்யாப்பழம் வந்தது. வாங்கச்சென்றேன்., நான் வாயைத்திறந்ததும் வியாபாரி உடனே கேட்டார். "ஊருக்குப்புதுசாம்மா?" எப்படித்தான் கண்டுபிடித்தாரோ.. நான் விழித்ததிலிருந்தா அல்லது என் பேச்சிலிருந்தா .. தெரியவில்லை ., ஆனால் நான் அசட்டு சிரிப்பு சிரித்து சமாளித்தேன். மற்றொரு முறை காய்கறிக்கார்ரிடம் பேரம் பேசினேன். அவர் உடனே " உனக்கு திருநெல்வேலி பக்கமா?" என்று கண்டுபிடித்து விட்டார். அத்துடன் விடவில்லை தான் நாசரேத்திலிருந்து வந்துள்ளதாகவும் பதினைந்து வருடங்களாக சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வருவதாகவும் கூறினார். அவர் இப்போது எனக்கு ரொம்ப friend ஆகிவிட்டார்.
 என் பிள்ளைகளுக்கு எப்போதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. சந்தையில் இல்லாத ஒன்றைத் தான் கேட்பார்கள். Diary milk எல்லோருக்கும் பிடிக்கும். சிறிய ஸ்டோர் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து இடங்களிலும் கிடைக்கும். 5 ரூபாய், 10, 20 ,50 , 100 என வகை வகையாய் கிடைக்கும். அதனால் சாக்லேட் வாங்க வேண்டும் என்றால் பிரச்னையின்றி எங்காவது  சென்று வாங்கி வந்து விடுவேன். ஆனால் சில நாட்களுக்கு முன் home treats என்று புதிதாக ஒரு diary milk அறிமுகப்படுத்தினர்.
 அதனை உடைக்க வேண்டியதில்லை. சாப்பிடுவதற்கு ஏதுவாக இரண்டிரண்டாக உடைத்து மொத்த பேக் ஆக கிடைக்கும்.தன்பிறந்த நாளுக்கு அது தான் வேண்டும் என்று கூறினாள். என் தோழிகள் சாப்பிட வசதியாக இருக்கும் என்றாள். Nilgiris இல் ஸ்டாக் இல்லை என்று கூறிவிட்டார்கள். நானும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கினேன். எங்கும் இல்லை. ஒரு சூப்பர் மார்க்கெட்டில் கேட்டேன். அவர்கள் இருக்கிற அனைத்து வகைகளையும் எடுத்துக்காட்டினர். நான் இவை இல்லை என்று அவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தேன். அப்போது மானேஜர் அங்கு வந்தார் விபரம் கேட்டார் . சொன்னேன் . இவை இல்லை .,எப்படி home treatsசிறு சிறு துண்டுகளாக சாப்பிடுவதற்கு வசதியாக இருக்கும் என விளக்கினேன். அவர்" ஓ.. இப்படி புதிதாக வருகிறதா? இன்று காலையில் கூட diary milk 4 box டெலிவரி கொடுத்தார்கள். ஆனால் இதைப்பற்றி சொல்லவிலையே., தெரிந்திருந்தால் வாங்கியிருப்பேன்." என்று டீலர் மீது கோப்ப்பட்டார். " அக்கா .. சொன்னதற்கு நன்றி.,நான் வாங்கி வைக்கிறேன் சாயங்காலம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்." என்றார். ( மறுபடியும் அக்கா .. என் மகிழ்ச்சியை சொல்லவும் வேண்டுமோ?)
    அடுத்த முறை அங்கு போன போது இராஜ உபசாரம் தான் போங்கள். அக்கா home treats வந்து விட்டது .. வேறு ஏதாவது வேண்டுமா? என்று மானேஜரே வந்து தேவையானவற்றை எடுத்துக் கொடுத்து பேசுவார். நானும் அண்ணாச்சி என்று அழைத்து தேவையானவற்றை சந்தோசமாக வாங்கி வருவேன். புதிதாக ஏதாவது கேட்டால்தான் நம்மை நினைவில் வைத்துக்கொள்வார்கள் போலிருக்கிறது .இப்போது எனது ஷாப்பிங் எல்லாம் அந்த சூப்பர் மார்கக்கெட்டில் தான் என்பதை சொல்லவும் வேண்டுமோ?