Friday, September 2, 2016

இனி தாமதியேன்.

         "இந்த ராமுவுக்கு எத்தனை முறை சொன்னாலும் புரிவதில்லை.. நானும் எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். அன்பாக சொன்னேன். கடுமையாகத்திட்டினேன். தண்டனைகள் கூட கொடுத்துப் பாத்துட்டேன். ஆனால் அவன் திருந்துகிற பாடாகத் தெரியவில்லை. தினமும் காலையில் தாமதமாகத்தான் வருகிறான்" சக ஆசிரியரிடம் ஆசிரியை சீதா பேசிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்த ஆங்கில ஆசிரியரும் அவருடன் இணைந்து கொண்டார். " நான் அவனுக்கு ஐந்தாம் வகுப்பு ஆசிரியர். அப்போதும் இப்படித்தான். நாள்தோறும் வகுப்பிற்கு தாமதமாகத்தான் வந்தான். அவன் திருந்தவே இல்லை. ஹெட் மாஸ்டரிடம் கூட அழைத்துச் சென்றேன்.  அவன் மாறவில்லை.என்ன... பையன் புத்திசாலி. படிப்பில் வெகு சுட்டி. பெற்றோர் தவறி விட்டனர். உறவினர் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறான். அதனால் அதிகமாக கண்டிக்க மனம் வரவில்லை."
     தமிழாசிரியர் முத்து இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு ராமுவைத் தெரியும். பையன் புத்திசாலி, ஆனால் சோம்பேறி. ஒரு முறை கேட்டால் போதும் 'டக்' எனப் புரிந்து கொள்வான். கற்பூர புத்தி என்பார்களே அதைப் போல. ஆனால் மகா கும்பகர்ணன். அவனுக்கு அவனுடைய தூக்கமே முதல் எதிரி. காலையில் எழுந்து சரியான நேரத்துக்கு பள்ளிக்கு வருவது என்பது அவனுக்கு அத்தனை கடினமான காரியம். எத்தனையோ முறை சொல்லியும் பல ஆசிரியர்கள் தண்டனை விதித்தும் அவன் கேட்கிறாற் போல இல்லை. தமிழாசிரியர் முத்து தான் ஒரு முறை முயற்சி செய்யலாம் என முடிவெடுத்தார்.
      வகுப்பு ஆசிரியை சீதாவிடம்," இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு ஆறாம் வகுப்பினர் முதல் வகுப்பை எனக்கு விட டுக் கொடுங்கள். என்னுடைய வகுப்புகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வாரத்திற்குப்பிறகு உங்கள் வகுப்பை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். ஆசிரியை சுமதியும் சம்மதித்தார். இதனை வகுப்பறையிலும் அறிவித்து விட்டார். 
       அடுத்த நாள் அறிவித்த படியே தமிழ் வகுப்பு முதல் வகுப்பாயிற்று. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியர் முத்து அனைவரையும் பாடப்புத்தகத்தை மூடி வைக்கச் சொல்லிவிட்டார். பின்னர் மஹாபாரதம் கதை ஒன்றைக் கூற ஆரம்பித்தார். வகுப்பே ஆர்வமுடன் ஆசிரியர் கதை கூறும் பாங்கினை ரசித்துக் கேட்டது. வழக்கம் போல இருபது நிமிடங்கள் தாமதமாக வகுப்பறைக்குள் நுழைந்தான் ராமு. தமிழாசிரியர் கதை கூறிக்கொண்டிருப்பதையும், வகுப்பு எந்த அரவமுமின்றி ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பதையும் கண்டான். தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டு பக்கத்திலிருந்த ராஜாவிடம்,' என்னடா இது?' என்று கேட்டான். ராஜா கதை கேட்கும் ஆர்வத்தில் இவன் கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ராமு அமைதியாக கதை கேட்க ஆரம்பித்தான். முதலில் இருந்து கவனிக்காத தால் அவனுக்கு புரியவில்லை. ஆசிரியரிடம் கேட்க பயம். நண்பர்கள் அனைவரும் கதையில் ஒன்றிப் போயிருந்தனர்.ஒன்றும் புரியாமலேயே அன்றைய வகுப்பு கடந்தது அவனுக்கு. வகுப்பு முடிந்த பின் நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் அவர்களுக்கு நேரம் இல்லை. சரி போகட்டும் என்று ராமு விட்டுவிட்டான்.
      மறு நாளும் வழக்கம் போலவே தாமதமாக வந்தான். அவன் நுழையும் போது வகுப்பு அல்லோகல்ப்பட்டுக் கொண்டிருந்தது.' சார்.. சார்.. நான் பதில் சொல்றேன் சார்..,' என்று அனைவரும் கைகளை உயர்த்தி உற்சாகமாக கூவிக் கொண்டிருந்தனர்.தமிழாசிரியர் புதிர்கள் கேட்டுக் கொண்டிருந்தார். ராமு,' ஐயோ..புதிர்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்குமே! மிஸ் பண்ணி விட்டேனே! ' என வருந்தினான். ' சரி, மீதி நேரம் கேட்பாரல்லவா? அதில் ஜமாய்த்து விடலாம்' என்று அவன் எண்ணிக் கொண்டிருக்கும் போதே தமிழாசிரியர் நிறுத்தி விட்டு பாடத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார். ராமுவுக்கு 'சப்' பென்று ஆகிவிட்டது. ராஜா வேறு வகுப்பு என்னென்ன புதிர்கள் கேட்கப்பட்டன தான் எப்படியெல்லாம் புத்திசாலித்தனமாக பதில் கூறினான் என்று விலாவரியாக வருணித்துக் கொண்டே இருந்தான். ராமுவுக்கு கடுப்பாயிருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அமைதியாய் இருந்தான்.
          மறு நாள் இன்று என்ன நடக்கின்றதோ என்று ஆவலுடன் வகுப்பறைக்குள் நுழைந்தான். ஆனால் இன்றும் அவன் தாமதமாகத்தான் வந்திருந்தான். அனைவரும் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தனர். வரிகள் தெரியாத தால் அவனால் அவர்களுடன் இணைந்து பாட முடியவில்லை. அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. 
            மறு நாள் ராமு பள்ளிக்கு நேரத்திற்கு வந்துவிட்டான். சொல்லப்போனால் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து வகுப்பறையில் காத்திருந்தான். இன்று வகுப்பில் என்ன நடக்கும் என்ற ஆவல் அவன் கண்களில் தெரிந்தது. மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. நண்பர்கள் அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இன்று மழை வரும் என்று அவனைக் கிண்டல் செய்தனர். தமிழாசிரியர் உள்ளே நுழைந்தார். ராமு வகுப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்திருந்ததைக் கவனித்தார். ஆனால் ஒன்றும் கூறவில்லை. அன்று விடுகதைகள் கேட்க ஆரம்பித்தார். ராமு மற்ற மாணவர்களுடன் இணைந்து உற்சாகமுடன் பதிலளிப்பதைக் கண்டார். முடிவில்," நாளை முதல் முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே இது போன்று புதிர் போட்டிகள் நடத்துவேன்" என்று அறிவித்து விட்டு கிளம்பிவிட்டார்.
            மறு நாள் முதல் ராமு வகுப்பறைக்கு தாமதமில்லாமல் வந்தான் என்று சொல்லவும் வேண்டுமோ

Thursday, September 1, 2016

வண்ணமெல்லாம் நல்லதம்மா...

அம்மா அதிகாலையிலேயே எழுந்து வாசலில் அழகாக கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். வாசுவும் வழக்கம் போலவே அதிகாலையிலேயே எழுந்து விட்டான். அன்று விடுமுறை தினம். பள்ளிக்கு செல்ல வேண்டியதில்லை. ஆதலால் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். அருகில் பூங்கா ஒன்று இருக்கிறதே, அங்கு சென்று மரஞ்செடி கொடி வகைகளைப் பார்த்து ரசிக்கலாம் என்று எண்ணமிட்டவாறே பூங்காவிற்கு நடையைக் கட்டினான். அம்மாவின் எங்கே என்ற கேள்விப்பார்வைக்கு "பூங்காவிற்கு செல்கிறேன் அம்மா" என்று பதிலளித்துவிட்டு புன்னகைத்தான். அம்மா தலையசைத்து சம்மதித்தாள்.
    பூங்காவில் அப்போதே ஒரு சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். வரிசையாய் அழகாய் நட்டு வைத்திருந்த செடிகளையும் அவற்றில் பூத்திருந்தப் பூக்களையும் ரசித்தவாறே பூங்காவின் நடுவில் பெரிதாய் வியாபித்திருந்த மரத்தின் நிழலுக்குச் சென்றான். வாகாய் உட்காருவதற்கு அ
தன் அடியில் சேர் போடப்பட்டிருந்தது. அதில் சாய்ந்தவாறு அமர்ந்து பறக்கும் பட்டாம் பூச்சிகளையும் ஓடி விளையாடும் அணில்களையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். கீச்மூச் என்று கத்தும் கிளிக்கூட்டம், ஜோடிகளாய்ப் பறந்த சிட்டுக்குருவிகள், தொடர்ந்து கரைந்து கொண்டிருந்த காகம், த த்தித் த த்தி ஒய்யாரமாய் நடை பயின்ற வெண்புறாக்கள் என அனைத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான். நேரம் செல்ல செல்ல பறவைகளின் ஒலி அதிகரித்துக்கொண்டே சென்றது.
     பறவைகள் பேசிக் கொள்கின்றனவா அல்லது சண்டையிட்டுக் கொள்கின்றனவா என அவனுக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. இந்தப் பறவைகள் பேசினால் எப்படி இருக்கும்? என்ன பேசிக் கொள்ளும்? அவனுடைய கற்பனை விரிந்தது.
       கிளி தான் முதலில் பேசியது. டாண் என்று மணியடித்தாற் போல கணீரென்ற குரலில் உரத்துப் பேசியது,' பறவைகளிலேயே நான் தான் அழகியவள்.என் பச்சை வண்ணமும், சிகப்பு மூக்கும், அழகிய குரலும் எவரையும் மயக்கும். பச்சை வண்ணம் தான் அழகு' என்றது. புறா செருமிக் கொண்டே உள்ளே நுழைந்தது,' வெண்மை தான் அழகு. வெண்ணிறப் புறாக்களை விரும்பாதவர்கள் எவரும் உளரோ? என் அழகில் மயங்கித்தானே ஆலிவ் இலை அளித்து என்னை சமாதானத் தூதுவர் ஆக்கியுள்ளனர்' என்றது. மயில் கம்பீரமாக உள்ளே நுழைந்தது. ' உங்கள் அனைவரையும் விட என்னுடைய நீலம் தான் அழகு. என்னுடைய அழகைக் கருத்தில் கொண்டுதானே என்னை நம் நாட்டின் தேசியப்பறவை ஆக்கியுள்ளனர்.' என்றது.
       காகம் மெல்ல கனைத்துக் கொண்டு வாக்குவாத த்திற்குள் நுழைந்தது.' கருமை தான் அழகு. அதனால் தான் உணவை முதலில் எனக்குப் படைக்கின்றனர்' என்றது. மற்ற பறவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து,' சீச்சீ... கருமை அழகா?  இல்லவே இல்லை. உன்னை விரட்டி அல்லவா அடிக்கிறார்கள். உன் குரலும் கர்ண கொடூரமாக உள்ளது' என்றன. காகத்தின் முகம் வாடிவிட்டது. குருவி, மரங்கொத்தி, மீன்கொத்தி போன்ற ஏனைய பறவைகளைத் தனக்கு சாதகமாகப் பேசுவர் என்று நம்பிக்கையுடன் பாரத்தது. ஆனால் அவை முகத்தைத்திருப்பிக்கொண்டுவிட்டன. ' ஆனால், என்னிடம் பல நல்ல குணங்கள் உள்ளனவே. பகிர்ந்துண்ணும் பழக்கம் உள்ளதே. புற அழகை விட அக அழகே சிறந்தது என்று உங்களுக்குத்தெரியாதா? மனம் தூய்மையாய் இருக்குமிடத்தில் தான் அழகு உள்ளது. தோற்றத்தில் அல்ல' என்றது. மயில்,' நீ இத்தனை நீளமாய், சாதுர்யமாயப் பேசினால் உனது வண்ணம் அழகானது என்று ஆகிவிடுமா? இதை ஒத்துக் கொள்ள முடியாது' என்றது. பிற பறவைகளும் இணைந்து கொண்டன,' ஆம்... ஆம்.. கருமை அழகு அல்ல..' காகம் கவலையுடன் நின்று கொண்டிருந்தது.
        வாசு திடுக்கிட்டு எழுந்தான். பறவைகள் இது போன்று சண்டையிட்டுக் கொள்ளவில்லை. அவை த த்தம் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தன. நல்ல வேளை அனைத்தும் கற்பனேயே. ஆனால் இப்போது அவனுக்கு அந்த சந்தேகம் வந்துவிட்டது. வண்ணங்களில் எது சிறந்தது? யாரிடம் கேட்டு தன் ஐயத்தைத் தீர்த்துக்கொள்ளலாம் என யோசிக்கலானான்.
        பூங்காவில் ஓவியர் ஒருவர் சித்திரம் தீட்டிக் கொண்டிருப்பதைக் வாசு கண்டான். தன் சந்தேகத்தைத் தீர்க்க அவர் தான் சரியான நபர் என்று அவரின் அருகில் சென்றான். ' ஐயா..' என்றழைத்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். தனக்கு ஏற்ப்பட்ட விநோதமான கற்பனையையும் அதனைத்தொடர்ந்து எழுந்த சந்தேகத்தையும் கூறினான். பறவைகளின் வாக்குவாத்த்தைக் கேட்ட அவர் மனம் விட்டு சிரித்தார்.' உனக்கு நல்ல கற்பனை வளம் இருக்கு தம்பி' என்றவாறு அவன் தோள்களில் கை வைத்துப் பேசலானார்.
          புன்னகையுடன்,' தம்பி... வண்ணங்களுடனேயே வாழும் என்னிடம் வண்ணங்களைப் பற்றிக் கேட்டது பற்றி மிக்க மகிழ்ச்சி. ஒரு ஓவியராக எனக்கு அனைத்து வண்ணங்களையும் பிடிக்கும். இது உயர்வு, இது தாழ்வு என எதுவும் கிடையாது. மண்ணில் படைக்கப்பட்ட அனைத்துமே அழகு தான். கடவுள் படைப்பில் அனைத்துமே இன்றியமையாதவை தான். சிகப்பு, பச்சை, நீலம், வெள்ளை, கருப்பு என அனைத்து வண்ணங்களுமே உயிர் ஊட்டுவன தான். ஓவியத்திற்குத் தக்கவாறு வண்ணங்களை நான் கூட்டி மற்றும் குறைத்தும் பயன்படுத்துவேன்' என்றார்.
          மேலும் தொடர்ந்தார்,' உன் கற்பனையில் கூறிய படி கருப்பு ஒன்றும் வெறுக்கத் தக்க வண்ணம் அல்ல. வெண் மேகங்கள் கருமை அடைந்தவுடன் தானே மழை பொழிகின்றது! உன் கண்ணின் கருவிழிகள் எத்தனை முக்கியமானது என்று நீ அறிவாய் தானே? அவ்வளவு ஏன்? நாள் தோறும் உன் பள்ளியில் உன் ஆசிரியர் கரும் பலகையில் எழுதித் தானே உனக்குப் பாடங்களைக் கற்றுத்தருகிறார்?  எனது ஓவியங்களிலும் கருமை முக்கிய பங்காற்றுகிறது...அவுட்லைன் என்ற வித த்தில்...'
           சந்தேகம் தெளிந்தவனாக எந்த வண்ணமும் நல்ல வண்ணம் தான் என்ற முடிவுக்கு வந்தவனாக ஓவியருக்கு நன்றி கூறிவிட்டு நடையைக் கட்டினான் வீட்டுக்கு. அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அழகிய வானவில் தோன்றியிருந்தது. வண்ணங்கள் நாங்கள் ஒற்றுமையுடன் இருக்கிறோம் என்று அவனிடம் கூறுவது போலிருந்தது. வாசு சிரித்துக்கொண்டான்.