Friday, April 29, 2016

கப்பல் பயணம் போகலாம்..


இன்று பிரபலமான சுற்றுலா வகைகளுள் ஒன்றாக 'க்ரூஸ்' என்னும் கப்பல் பயணம் மாறிவிட்டது. சிங்கப்பூர் செல்லலாம் என்று முடிவெடுத்தவுடன் க்ரூஸ் என்னும் கப்பல் பயணமும் மேற்கொள்ளலாம் என்று என் கணவர் யோசனை தெரிவித்தார். நாங்கள் அரை மனதுடன் ஒத்துக் கொண்டோம். மூன்று நாட்கள் கப்பல் பயணம் என்பதால் மிகவும் போரடிக்கும் என்று கருதி வாசிப்பதற்கு சில புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டேன். ஆனால் ஆச்சர்யம் என்னவெனில் அவற்றை வாசிக்க எனக்கு நேரமே கிடைக்கவில்லை என்பது தான்.
           நாங்கள் சென்றது "சூப்பர் ஸ்டார் ஜெமினி" என்னும் சொகுசுக் கப்பலில். இதில் மொத்தம் பன்னிரெண்டு அடுக்குகள் இருந்தன. நாங்கள் தங்கியிருந்தது ஏழாவது அடுக்கில். அதன் சிறப்பம்சம் நடைப்பயிற்சி தளம் மற்றும் ரிசப்ஷன் . ரிசப்ஷன் எங்கள் தளத்தில் இருந்ததால் மோஸ்ட் happening place ஆகத் திகழ்ந்தது. கப்பலில் பயணிக்க ஆரம்பித்தவுடன் ஏனோ ஜாக் மற்றும் ரோஸ்..அதாங்க நம் டைட்டானிக் ஹீரோ ஹீரோயின் ., அநியாயத்துக்கு ஞாபகத்துக்கு வந்து தொல்லை பண்ணாங்க..உடனே நாங்களும் அவங்களை மாதிரி ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம்.என்ன சொன்னேன்? ஃபோட்டோ எடுத்தோம்னா? தப்பு..தப்பு எடுக்க முயற்சி செஞ்சோம்.ம்.. என்ன கேக்குறீங்க?அந்த ஃபோட்டோ எங்கன்னா? அந்தப்படம் சென்சார் கத்திரிக்கு தப்பலைங்க..ஆனாலும் அவங்க ரொம்ப ஸ்டிரிக்ட்..ஸ்டிரிக்ட்..ஸ்டிரிக்ட...(எக்கோஎஃபெக்ட் நல்லா இருக்காங்க??). 
           கப்பலின் அனைத்து தளங்களிலும் ஏதாவது ஒரு வகை பொழுதுபோக்கு அம்சம் இருந்தது. தியேட்டர், நீச்சல்குளம், ஸ்பா, ஜிம், மசாஜ், காசினோ, கரோக்கி, கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று சகல அம்சங்களுடன் கூடிய ஒரு சிறு நகரமாகத் திகழ்ந்தது. பகல் நேரத்தை இவற்றில் பொழுது போயிற்று எனில் மாலையில் வேளையில் மாஜிக் ஷோ, கேம் ஷோ,டிஜே நைட் என பொழுது கழிந்தது. நாள்தோறும் என்னென்ன நிகழ்வுகள் நடக்கப் போகின்றன என்று காலையிலேயே அச்சடித்த நோட்டீஸ் மூலம் தெரிவித்து விடுவார்கள்.நான் ஏதோ பரிட்சைக்குப் படிக்கும் மாணவி போல் அதை உன்னிப்பாக கவனித்து படிப்பேன். பின் என் கணவரிடமும் மகளிடமும் இத்தனாவது தளத்தில் இது நடக்கின்றது என்னு ஆல் இந்தியா ரேடியோவில் செய்தி வாசிப்பது போல் சொல்லுவேன். ஒவ்வொரு தளமாக்க் தேடிச்சென்று என்ன நடக்கின்றது என்று பார்த்து வருவதில் எனக்கு தீராத ஆர்வம். ஏதோ ட்ரெசர் ஹண்ட் விளையாடுவது போலிருந்தது. மலேசிய நாட்டின் குட்டித் தீவுகளுக்கு சிலர் கப்பலிலுந்து இறங்கி சுற்றுலா சென்று வந்தனர். நாங்கள் புலா ரெடேங் என்னுமிடத்தில் உள்ள ஷாப்பிங் மற்றும் snorkeling சென்று வந்தோம்.  
            இவை தவிர ஆங்காங்கே சிறு சிறு டெமோ.. ஜூம்பா, பிஸ்ஸா செய்வது, மாக்டெயில் செய்வது என்று ஊழியர்கள் கற்றுக் கொடுத்தார்கள். புரிகிறதோ இல்லையோ நான் அத்தனை இடத்திலும் ஆஜராகிவிடுவேன்.அவர்களைப் பற்றி சொல்லியே தீர வேண்டும். இன்முகத்துடன், புன்முறுவலுடன் அந்த மூன்று நாட்களையும் அவர்கள் நகர்த்திய விதமும் சேவை செய்த பாங்கும் , அவர்கள் எங்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று விட்டனர். சிலர் வெளியேறும் போது அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்கிக் கொண்டனர். நான் அந்த அளவிற்கு செல்லவில்லை..என் வீட்டில் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை மட்டும் மாட்டி வைத்துள்ளேன். 
        நான் மிகப் பெரிய உணவுப்பிரியை அல்ல. எடை கூடி விடுமோ என்ற அச்சத்தினால் எப்போதும், சுவை என்பதை விட ஆரோக்கியம் என்ற எண்ணம் மேலோங்குமாறு தேர்ந்தெடுத்து உண்ணுவேன். என்னுடைய இந்தக்கட்டுபாடுகளையெல்லாம் உடைத்து எரிந்தது இந்தப் பயணம். எத்தனை விதவிதமான உணவுகள், எத்தனை விதமான பழங்கள், எத்தனை விதமான பானங்கள். இந்திய உணவு, சீன உணவு, மெடிட்டெரேனியன் உணவு, மேற்க்த்திய உணவு என்று எத்தனை விதம்...ஸ்வீட், ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ் என எதை எடுத்தாலும் அதன் எண்ணற்ற வகைகள் என்னை திக்கு முக்காடச் செய்தன. அழகாக வடிவமைக்கப்பட்டு நேர்த்தியாக அடுக்கி இருந்த விதம் என்னை வெகுவாக்க் கவர்ந்தது.அனைத்தையும் ருசி பார்த்தே தீர வேண்டும் என்ற கங்கணத்துடன் ஒரு கை பார்த்தேன். என் கணவரும் மகளும் இந்திய உணவகத்திலேயே தங்கள் உணவு நேரத்தை செலவிட்டனர். ஆனால் எதற்கும் துணிந்தவள் போல தைரியமான சீன உணவு, மேற்கத்திய உணவு என அனைத்தையும் ஒரு கை பார்த்தேன். வாயில் நுழையாத பேர்களுடைய பதார்த்தமானாலும கண்ணுக்கு விருந்தாய் விரும்பி அழைத்தன. அந்த அன்பான அழைப்பை ஏற்று வயிற்றுக்கு விருந்தளித்தேன். பழங்கள் இத்தனை சுவையானவை என்பதை அங்கு தான் அறிந்து கொண்டேன். ஒரே அளவாய் வெட்டி அடுக்கப்பட்டிருந்த அவை நிமிடங்களில் காணாமல் போகும். கேக்குகள் கண்ணைப்பறிக்கும் வித்த்தில் இருந்தன. ' என்னையும்தான் ஒரு கை பாரேன் என்று கூவி கூவி அழைத்தன. பாவம் அவை மட்டும் என்ன பாவம் செய்தன என்று அவற்றையும் ஒரு கை பார்த்தேன். இவை அனைத்தும் முடிந்த பின் நீச்சல் குளத்தில் ஆனந்தக் குளியல் இட்டேன். இவை போதாதென்று இரவில் டிஜே நைட்டில் மாக் டெயில் என்று பழரசங்களை வாரி  வழங்கினர். அவற்றையும் ஒரு கை பார்த்தேன். ஓரவஞ்சனை கூடாதல்லவா?
         கடைசி நாளன்று கப்பலில் பணிபுரிந்த அனைவரையும் கப்பலில் பயணித்த எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தி அணிவகுத்து நின்றனர். கேப்டன் தலைமை செஃப் ஐ அறிமுகம் செய்த போது கரகோஷம் விண்ணைப்பிளந்தது.( பயபுள்ளைக.. எல்லோரும் என்னை மாதிரி தான் போலிருக்கு...)
பின்னர் அனைவருக்கும் டின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்த போது திடீரென்று சிப்பந்திகள் அனைவரும் ஒரே மாதிரி நடனமாடிய ஆனந்த அதிர்ச்சி அளித்தனர். பயணிகள் ஸ்பூனையும் ஃபோர்க் ஐயும் கீழே போட்டு ஹேண்டிகேம் ஐயும் காமிராவையும் ஹேண்ட் பேக்கிலிருந்து துழாவி எடுத்து அவசரமாக படமெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் எனக்கு அந்த சிரம்மெல்லாம் இல்லை. நான் தான் மும்முரமாக உணவு ஐட்டங்களை ஏற்கனவே படம் பிடித்துக் கொண்டிருந்தேனே. நாங்கள்லாம் யாரு..ஐடியா அன்னார்சாமிகளாயிற்றே.. துரிதமாக முழு நடனத்தையும் படம் பிடித்தோம். என்ன..கேமிரா தான்  நான் எப்போது வேண்டுமானாலும் உயிரை விடுவேன்..பேட்டரி லோ..என்று பயமுறுத்திக் கொண்டே இருந்தது. ஆனால் பயந்த வண்ணம் எதுவும் நடக்கவில்லை.
         மூன்று நாட்கள் நொடிப்பொழுதில் ஓடிவிட்டது. பயணத்தின் முடிவில்நிறைய நண்பர்களைப் பெற்றிருந்தோம். நிறைந்த மனதுடன் சிங்கப்பூரை சுற்றிப் பார்க்க கிளம்பினோம். வீடு திரும்பிவுடன் எடை மெஷினில் ஏறி நின்றேன். அதிர்ந்தேன். ம்ம்ம... என்ன சார் கேக்குறீங்க?? எடை கூடி விட்டேனா என்றா??...அது சஸ்பென்ஸ் சார்.


Wednesday, April 27, 2016

இல்லத்தை அலங்கரிக்கும் மாடிப்படிகள்.





           நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம் .. நாயகன் வில்லனிடம் சவால் விடும் காட்சி அல்லது நாயகன் நாயகியின் அழகில் மயங்கி காதலில் விழும் காட்சி..இது போன்ற காட்சிகள் மிகப் பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் அவர்கள் இறங்கி வரும் போது  நடைபெறும். வீட்டின் விஸ்தீரணத்தை இந்த மாடிப்படிகள் பறைசாற்றுவதைக் காணலாம். வீட்டின் அழகை அதிகமாக்குவதில் மாடிப்படிகள் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. இரு தளங்களை இணைக்கும் கட்டுமானமாகத் திகழும் மாடிப்படிகள் வீட்டின் தோற்றத்தை நிர்ணயிப்பது கண்கூடு. 
            மாடிப்படிகள் ஒன்று வீட்டின் வெளிப்புறம் அமைக்கப்படும் அல்லது வீட்டின் உள்புறம் அமைக்கப்படும். வெளிப்புற படிக்கட்டுகள் பெரும்பாலும் கான்கிரீட்டினால் அமைக்கப்படுகின்றன. உட்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகளில் கான்கிரீட், மரம், கண்ணாடி, கிரானைட் என்று பலவிதமாக நமது இரசனைக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன. இன்டீரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கபட்டாலும், வீட்டில் உள்ளோரின் உடல்நிலை, பழக்கவழக்கம் ஆகியனவும் கருத்தில் கொள்ளப் படுகின்றது. வயது முதிர்ந்தோர், குழந்தைகள் வாழும் வீடு எனில் அவர்களது பாதுகாப்பு மற்றும் சௌகர்யத்தைக் கணக்கில் கொண்டு மாடிப்படிகள் அமைக்கப்படுகின்றன். பொதுவாக படிக்கட்டுகளின் சாய்வுதளம் 25 டிகிரி முதல் 40 டிகிரி வரையும், படிக்கட்டுகளின் அகலம் குறைந்த பட்சம் மூன்று அடிகளாவது அமைவது நலம் என்று பொறியாளர்கள் கருதுகின்றனர். 
                படிக்கட்டுகள் வடிவமைப்பில் வளைவுப் படிக்கட்டுகள், நேரான படிக்கட்டுகள், மிதக்கும் படிக்கட்டுகள், சுழல் படிக்கட்டுகள் எனப் பல வகைகள் உள்ளன. நேரான படிக்கட்டுகள் சில சமயலங்களில் L வடிவத்திலும், இரட்டை L வடிவத்திலும், U வடிவத்திலும் அமைக்கப்படும். சுருக்கமான இடம் எனில் U வடிவப்படிக்கட்டுகளே நல்லது. நேரான படிக்கட்டுகளில் திருப்பங்கள் அமைத்தால் அது L வடிவப்படிக்கட்டு ஆகும். திருப்பங்கள் இல்லாமல் ஒரே வீச்சாக படிக்கட்டுகள் இருந்தால் ஏறுவது சிரம ம் தரும். அரைவட்ட திருப்பம், கால் திருப்பம், திறந்தவெளி திருப்பம் ..இவற்றில் நம் வீட்டிற்கு எது பொருத்தமானதோ அதை கட்டிட வல்லுனரின் ஆலோசனையின் படி அமைக்கலாம். சுழல் படிக்கட்டுகள் மற்றும் வளைவுப் படிக்கட்டுகளில் வரவேற்பறையில் பிரதானமாக அமைத்தால் வரவேற்பறையின் அழகு கூடும். மிதக்கும் படிக்கட்டுகள் என்பது அந்தரத்தில் மிதப்பவை அல்ல. ஒருப்பக்கம் சுவற்றில் இணைக்கப்பட்டிருக்கும். படிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் தனித்தனியே நிற்கும்.
              படிக்கட்டுகளை கிரானைட் எனும் பளிங்குக் கற்களால் அமைக்கலாம், மரத்தால் அமைக்கலாம். மரத்தால் அமைக்கும் போது தேர்வு செய்யும் பலகையின் உறுதித்தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். பளிங்கு கற்களால் அமைக்கும் படிக்கட்டுகள் ஒரு எடுப்பான தோற்றத்தைத் தரும். கண்ணாடிப்படிக்கட்டுகளை வீடுகளில் அமைப்பதில்லை. பெரும்பாலும் மிகப் பெரிய ஷோரூம்களிலும், மால் என்னும் பல்பொருள் அங்காடிகளிலும் அமையக் காணலாம். உலோகப்படிக்கட்டுகள் உறுதியுடன் திகழும், என்றாலும் துருப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் இவற்றிற்கு அடிக்கடி வண்ணம் பூசி புதுப்பிக்க வேண்டும். பெரும்பாலும் படிக்கட்டுகளின் ஒரு பக்கம் சுவரும் மற்றொரு பக்கம் கைப்பிடியுடன் கூடிய தடுப்புகள் இருக்கும். சமயங்களில் இரு பக்கமும் தடுப்புகளை அமைப்பதும் உண்டு. மரத்தாலான டிசைன்களில், இரும்புக்கம்பிகளாலான டிசைன்களில், மார்பிள் கற்களால் ஆன டிசைன்களில் என ஏராளமான வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் எது நம் வீட்டிற்கு பொருத்தமானதோ அதை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 
             மாடிப்படிகளின் கீழிருக்கும் வெற்றிடத்தை சிறந்த சேமிப்புக்கான அறையாக மாற்றலாம். புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்கலாம். குழந்தைகளின் பொம்மைகள் ஆங்காங்கே இறைந்து கிடக்காமல், விளையாடிய நேரம் போக எஞ்சிய நேரம் மாடிப்படிகளின் கீழ் அடுக்கி வைக்கலாம். இடப்பற்றாக்குறையால் இன்னலுறும் போது கொஞ்சம் யோசித்து இவ்விடத்தை பயனுள்ளதாக மாற்றலாம். ஜிம் உபகரணங்கள், வாஷிங்டன் மெஷின், டிஷ் வாஷர் போன்றவற்றை இங்கு அமைத்து விட்டால் இடநெருக்கடி குறையும்.அடிக்கடி உபயோகப்படுத்தாத பொருட்களை கப்போர்ட் அமைத்து இங்கு சேமித்து வைக்கலாம்.
             வளைவான மாடிப்படிகளின் அழகு வேறு எதிலும் இல்லை. அதன் பக்கவாட்டில் ஆர்ச் போன்ற பெரிய ஜன்னல்களை அமைத்தால் மிக எடுப்பான தோற்றம் தரும். மாடிப்படிகளின் ஒரு புறமாக அமைந்த சுவர்களை அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கலாம். நம் வீட்டிற்கான ஆர்ட் கேலரியாக அதனை மாற்றலாம். அழகான ஓவியங்கள் அல்லது புகைப்படங்களை அங்கே மாட்டி வைத்தால் மிக அழகாக இருக்கும். படிகளின் முகப்பில் மிகப் பெரிய ஷோபீஸ் அல்லது பூஞ்ஜாடி கொண்டு அலங்கரிக்கலாம். முகப்பில் வேலைப்படாமைந்த கார்பெட்களை விரித்தால் இன்னும் சிறப்பு. 
            வரவேற்பறையில் அமையும் படிக்கட்டுகளை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நம் கற்பனைக்கு ஏற்றவாறு அலங்கரிக்கலாம். பொதுவாக முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் என்பார்கள். அதை மனதில் கொண்டு வீட்டிற்கு வரும் விருந்தினரை ஈர்க்கும் வண்ணம் அலங்கரிக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால் என் எண்ணம், நாம் வீட்டை விட்டு விட்டு வெளியேறும் போது நம் கண்களை நிறைக்கும் அழகிய தோற்றம் எப்பொழுதுமே மனதிற்கு ஒரு நிறைவைத்தரும். அதை மனதில் கொண்டு வரவேற்பறையின் படிக்கட்டுகளை அலங்கரிக்கலாம்.



Thursday, April 21, 2016

வீட்டுக்கடன்

எலி வளையானாலும் தனி வளையா இருக்கணும் ..என்பது பழைய மொழி. ஆனால் அது இன்றும் நம் அனைவரது மனங்களிலும் கன ன்று கொண்டிருக்கும் நீங்காத ஆசை. ஒரு கிரவுண்ட் கூட வேண்டாம., அரை கிரவுண்டிலோ அல்லது சிங்கிள் பெட்ரூம் பிளாட் கூட போதும்., ஒரு அழகான வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கனவு.
    இந்தக் கனவு நிறைவேற முன்பை விட இப்போது அதிக சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன. வங்கிக்கடன், அதுவும் வீட்டுக்கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. 10.8 முதல் 10.30 வரை வட்டி விகிதம் நிலவுகின்றது. இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். மற்ற கடன்களைக்காட்டிலும் வீட்டுக் கடனுக்கு சில சலுகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று கடனைத்திருப்பி செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். கடனை நாம் ஐந்து ஆண்டுகளிலும் திருப்பி செலுத்தலாம். இருபத்தைந்து ஆண்டுகளிலும் திருப்பி செலுத்தலாம். அது நாம் தேர்ந்தெடுக்கும் கடன் தொகை மற்றும் திட்டத்தைப் பொறுத்தது ஆகும்.
          வங்கிகள் நாம் புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டவும், புது வீடு வாங்கவும், புது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், பழைய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், இருக்கும் வீட்டை மேம்படுத்தவும் கடன் வழங்குகின்றன. கடன் பெற தகுதி என்பது பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை ஆகும் . சில வங்கிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் அல்லது சட்ட வல்லுநர்கள் எனில் அறுபது வயது வரை அளிக்கின்றனர். வீடு கட்ட கடன் தொகை மூன்று முதல் ஐந்து கோடி வரையும் வீட்டு மேம்பாட்டு கடன் இருபத்தைந்து லட்சம் வரை பெறலாம் என்று வங்கித்துறையினர் கூறுகின்றனர். கடன் பெறும் நபர் பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் EMI முடிந்து விடுமா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன. ஒருவேளை ஓய்வு பெற்ற பின்னும் EMI செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, அதற்கேற்ற வருமானம் நமக்கு இருக்கும் பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும். சில சமயங்களில் கடன் பெறுபவர் அறுபது வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால் அவரது துணைவியோ, வாரிசுதார ரோ எழுத்துப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் வாரிசுதார ர்(co-obligant) அதனை செலுத்த நேரிடும்.
             வங்கிகள் கடன் அளிக்கும் என்றாலும் முதல் இருபது முதல் இருபத்து ஐந்து சதவீத முதலீட்டை நாம் தான் செலவிட வேண்டும். மீதியைத்தான் கடனாகத் தருவார்கள். இதை கட்டுமானம் முடிய முடிய மூன்று நான்கு தடவையாகப் பிரித்து தருவார்கள். வீட்டின் விலை அல்லது தோராயமான மதிப்பீட்டின் எண்பது சதவீதம் கடனாக க் கிடைக்கும் என்றாலும் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப தான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். 25- 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல எழுபது மடங்கு கிடைக்கும். 45 வயதிற்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல ஐம்பது முதல் அறுபது மடங்கு வரை கிடைக்கும். 45 வயதிற்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால் நம் ஆண்டு வருமானத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு கிடைக்கும். வங்கிக்கடனைத் திருப்பி செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற EMI போக, வீட்டுக்கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் முப்பத்தைந்து சதவீதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டு செலவுகளை சமாளிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும்.
         பொதுவாக நாம் வங்கிகளில் விண்ணப்பிக்கும் போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்து தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. வங்கிகளில் எதிர்ப்பார்க்கும் ஆவணங்கள்... 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், 
விண்ணப்பதார ரின் புகைப்படம், 
புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று, 
முகவரிச்சான்று, 
வயதுச்சான்று( பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பின் மதிப்பெண் பட்டியல்), 
மனைப்பத்திரம்( சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது),
தாய்ப்த்திரம்,
வில்லங்கச் சான்றிதழ்,
விற்பனைச் பத்திரத்தின் நகல்,
சட்ட வல்லுநரின் கருத்து,
வீட்டிற்கு உண்டான வரைபடம், அங்கிகாரம் நகல்,
வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை,
வருமானச் சான்றிதழ்,
கடந்த ஆறுமாத த்துக்கான வங்கி பாஸ் புக் நகல்,
வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகல்,
பான் அட்டையின் நகல்.
           கடன் கொடுப்பதுடன் வங்கியின் கடமை முடிந்து விடாது. வீடு கட்டி முடியும் வரை தனது பொறியாளர்கள் வைத்து திட்டத்திலிருந்து மாறாமல் வீடு கட்டப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கும். EMI ஒரு மாதமோ இரண்டு மாதமோ கட்டத் தவறினாலும் அதற்கு அபராதம் உண்டு. வீடு கட்டி முடித்த பின் அதன் இன்டீரியர் எனும் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் ' டாப் அப் லோன்' எனும் வசதி அளிக்கின்றனர். அதன்படி கடன் தொகையிலிருந்து பதினைந்து சதவிகீதம்  கிடைக்கும். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு மட்டுமே கிடைக்கும். செயல் முறை கட்டணம் என்று அளிக்கப்படும் கடன் தொகையின் 1 சதவீத த்தை வங்கி எடுத்துக்கொள்ளும். பிற வங்கிகளிலிருந்து கடனை எடுத்துக் கொள்ளும் வசதியும் பல வங்கிகளில் உண்டு. அதாவது பாதி கடன் செலுத்திய நிலையில் நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேறு வங்கியில் மாறிக் கொள்ளலாம்.
               வீடு கட்ட, வீடு வாங்குவதற்கு, வீட்டை விரிவுபடுத்துவதற்கு, வீட்டை மேம்படுத்துவதற்கு என பலவிதமான கடன் வசதிகள் பல விதமான வட்டி விகிதங்கள். வீட்டுக் கடன் என்பது பெர்சனல் லோன் மற்றும் வாகனக் கடன் போன்றது அல்ல. அளவு மிகவும் பெரியது என்பதால் சிறிய அளவு வட்டி விகிதம் கூட பெரிய அளவு மாற்றம் தரும். என்றாலும் எல்லாக்கடனையும் விட வீட்டுக் கடனுக்கு வட்டிவிகிதம் குறைவாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது. நம்முடைய ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் வங்கிக்கடன் பதினைந்து நாட்களுக்குள் கிடைத்து விடும் என்கிறார் வங்கி மேலாளர். வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதன் நடைமுறை வழக்கங்களைப் பற்றி இணையத்திலோ அல்லது வங்கி உயரதிகாரிகளிடமோ கேட்டு அறிந்து கொள்வது நல்லது. வங்கிகள் அளிக்கும் விட்டிவிகிதங்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம், அவற்றை ஒரு முறை ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம். கடன் ஒப்பந்தம் முழுவதையும் கவனமாக படிக்க வேண்டும்.

Wednesday, April 20, 2016

பயணங்கள் பலவிதம்.

           எந்த ஊருக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அதைப் பற்றி முன்னரே இணையத்தில் தகவல்கள் தேடுவது என் வழக்கம். மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள " லோனாவாலா" செல்வது என்று முடிவானதும் கூகுளிடம் சரண் அடைந்தேன். அதனைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்கள் யாவும் என் ஆர்வத்தை மேலும் தூண்டுவனவான அமைந்தன. அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
            செப்டெம்பர் 28, 2015 லோனாவாலாக்கு என் குடும்பத்தினருடன் பயணமானோம். இன்றைய ட்ரெண்டின் படி ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலும் பதிவிட்டு விட்டு கிளம்பினோம். ஒன்றரை நாள் இரயில் பயணமாகையால் உற்சாகத்திற்கு குறைவில்லை. தமிழகம் தாண்டியதும் வருண பகவானும் கருணை காட்டி மழை பொழிய வைத்து பயணத்தின் போது அனல் தெரியாமலிருக்க உதவினான். லோனாவாலா புனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவிலிருக்கிறது. இதன் இதமான, மிதமான குளிருடன் கூடிய சீதோஷ்ணநிலை, அழகிய வண்ணப்பூக்களுடன் திகழும் சிறிய மலைக்குன்றுகள், பரந்து விரிந்துப்பட்ட ஏரிகள், அடிக்கடி மழை பெய்து குளிர்ச்சியான சூழல் போன்றவை சுற்றுலா வரத்தூண்டுவனவாய் அமைந்துள்ளன. மும்பை மற்றும் புனேவாசிகளின் வார இறுதி நாட்களின் விருப்பத் தேர்வாக லோனாவாலா மாறியுள்ளது.(weekend getaway).
          நகரமயமாதலின் சாயல் இன்னும் அதிகம் விழாத சிறு நகரான லோனாவாலாவின் எளிமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. நகரின் மிக அருகில் அமைந்த Tiger point இன் எழில் காண்போரை தன் வசமாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாய் வனப்புடன் திகழ்ந்தது. இயற்கை எங்களுக்கு, குறிப்பாக கண்களுக்கு, என்ன விருந்தளிக்கப் போகிறதோ என்று ஆவலுடன் பயணித்தோம். இயற்கை அன்னை எங்களை ஏமாற்றவில்லை. வாரி வழங்கியிருந்தாள். பரந்து விரிந்த மலைப்பிரதேசமெங்கும் பூத்துக் குலுங்கிய சிறு மலர்கள் ...காணக் கண் கோடி வேண்டும்.
          ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாக கழிப்பதற்கு உகந்த அழகான, இயற்கைப் பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளைப் பிண்ணனியாக்க் கொண்டு 'புஷி அணை' அமைந்துள்ளது. இதன் அமைதியான சூழலும், ஸ்படிகம் போன்ற நீரும் மனதிற்கு இன்பம் அளிக்கும் விதமாக இருந்தது. மழைக்காலத்தில் இந்த இடத்தைப்பார்ப்பது சிறந்ததாக இருக்கும். அச்சமயத்தில் அணை நிரம்பி வழிந்து நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மழைக்காலங்களில் வழிந்தோடும் நீரில் படிக்கட்டுகளில்  நனைத்து கொண்டு குழந்தைகளுடன் பெரியவர்களும் குதூகலிப்பதைக் காணலாம்.
            லோனாவாலா இத்தகைய எழில் காட்சிகளைக் கொண்டிருந்தாலும் இதன் சுற்று வட்டாரத்தில் பாரம்பரியம் மிக்க கோட்டைகளையும் புராதனக் குகைகளையும் கொண்டுள்ளது. கார்லா குகைகள் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைக் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஹீனயானம் எனப்படும் பௌத்த மரபுப்படி அமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் புராதன சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக  கருதப்படுகின்றது கார்லா குகையின் அருகிலேயே ஏக்வீராதேவியின் திருக்கோயில் அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு மிகவும் தோதான இடம், பாரம்பரியமும், புராதனமும் அருகருகே அமைந்துள்ளபடியால்.
              கார்லா குகைகயைப் போலவே பாஜாக் குகைகளும் உள்ளன. பள்ளி ஒன்று சுற்றுலா வந்திருந்தபடியால் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சூரிய ஒளி மாலை வேளையில் நேரடியாக குகைக்குள் விழுவதால் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் நன்கு தெரிகின்றன. மிகப் பெரிய சைதன்யம், எளிமையான எண்கோண தூண்கள், அவற்றின் மீது அமைந்த அரை நீள் வட்ட கூரை, மர வளைவுகள், வெளிப்புற சாளரங்கள், நுட்பமான சிற்பங்கள் என இவற்றின் அழகியலை வருணித்துக் கொண்டே போகலாம். துறவிகள் தண்ணீர் குடிக்க என இருக்கும் அமைப்புகள், தங்குவதற்கான சிறிய அறைகள் என அதிஅற்புதமான மடாலயங்களாகத் திகழ்கின்றன. கல்லிலான நுட்பமான சிற்பங்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும். வணிகர், துணைகளுடன் வரும் தலைவன், யானை மீதமர்ந்த கந்தர்வன், தபேலா வாசிக்கும் பெண்,நடனமாடும் பெண் என பல தரப்பட்டன. மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், சாஞ்சி போன்று இல்லாமல் இங்கு ஒரே இடத்தில் அமைந்திருக்கும் கல்லிலான பதினான்கு ஸ்தூபிகள்.ஒரு சிறு குகைக்குள் ஒன்பதும், குகைக்கு வெளியே ஐந்துமாய் நெருக்கமாய் உள்ளன.இவற்றைக் கண்டவுடன் நம் முன்னோர்கள் மீது மரியாதையும், நாம் வாழும் தேசம் குறித்து பெருமிதமும் ஏற்படுவது திண்ணம்.
                 சுமார் 52 கி.மீ தொலைவில் உள்ள இரும்புக்கோட்டை என்று அழைக்கப்படும் லோஹ்ஹார் கோட்டைப் பயணமானோம். சிகரம் வைத்தாற் போல பாங்குடன் திகழ்ந்த இந்தக் கோட்டையை அடைய சிறிது சிரமாயிருந்தது. கீழே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்ட போது பட்ட கஷ்டம் மேலே உள்ள காட்சி(view)யைக் கண்டவுடன் மறந்துவிடும் என்றார். உண்மை தான். என்னை அறியாமல் 'வாவ்' என்றேன் நான். குரு கோவிந்த் சிங்கினால் கட்டப்பட்ட இக்கோட்டை அதிக வருடங்கள் மராட்டிய அரசுகளின் வசமே இருந்தது. ஐந்து வருடங்கள் முகலாயர்கள் வசம் இருந்ததாகவும் பின் மாவீரன் சிவாஜி அதை மீட்டு தன்னுடைய கருவூலமாகப் பயன்படுத்தினான் என வரலாறு கூறுகிறது. 
                   மஹாராஷ்டிர உணவான வடாபாவ், போஹா, மிசெல் போன்றவை, அம்மாநிலப் பெண்களின் 
சேலை கட்டும் பாங்கு, ஆண்கள் பலர் காந்தி குல்லாய் அணிந்து வெண்ணிற உடைகளில் வலம் வந்தது என ஒவ்வொன்றையும் ரசித்தேன். தங்கியிருந்த ஹோட்டலில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு ஒரு நாள் காலையில் ட்ரெக்கிங்(trekking) அழைத்து சென்றார்கள். அப்போது மும்பையைச் சேர்ந்த என் வயதை ஒத்த இரு பெண்கள் தோழிகள் ஆகிவிட்டனர். நம் ஊரின் பில்டர் காபியின் சுவையையும் மணத்தையும் வானளாவப் புகழந்தனர். அவர்கள் கூறிய ஆச்சர்யமூட்டும் தகவல் ஒன்று. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து லோனாவாலாக்கு, அவர்களுடைய மாமா வீட்டுக்கு வரும் போது , இன்ஜின் டிரைவரிடம் சொல்லி மாமா வீட்டின் எதிரிலேயே இறங்கிக் கொள்வார்களாம்( அவர்களுடைய மாமா வீடு இரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்தது). ஆச்சர்யத்துடன் அதிர்ந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் ., ஆனால் திரும்பி மும்பை செல்ல இரயில் நிலையம் தான் செல்ல வேண்டும் என்றார்கள் சிரிப்பினூடே.
                லோனாவாலாவும் அதனைச் சுற்றி அமைந்த இடங்களும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடங்கள் என்றே கூற வேண்டும். மழைக்காலங்களில் அதன் அறியப்படாத பேரழகு பன்மடங்காகின்றது. கட்டாயம் பார்த்து மகிழ் வேண்டிய இடங்களில் ஒன்று.