Saturday, June 18, 2016

கண்ணன் கற்றுக் கொண்ட பாடம்.

      அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே கண்ணனுக்கு மிகவும் அயர்ச்சியாக இருந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு படுக்க சென்று விட்டான். படுக்கையில் படுத்து விட்டானே தவிர தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். சென்ற வாரம் புத்தக்க்காட்சிக்கு சென்ற போது வாங்கிய புத்தகங்கள் நினைவுக்கு வந்தன. உடனே அதை எடுத்தான். 
        புத்தகத்தைத் திறந்தவுடன் மிகப் பிரகாசமாய் அறையெங்கும் ஒரு ஒளி பரவியது. புத்தகமே ஒரு பெரிய ஜன்னலைப் போல் விரிந்தது. உள்ளேயிருந்து இரு அழகிய கரங்கள் அவனை இழுத்தன.
        அந்தக் கைகளுக்கு உரியவன் அவன் வயதை ஒத்த ஒரு சிறுவன். அவன் சற்று விநோதமாய் இருந்தான். அவனுடைய கண்களும் காதுகளும் சற்றே பெரிதாய் இருந்தன. அவன் சற்று குள்ளமாய் இருந்தான். அவன் புனகைத்த போது போது நட்சத்திரம் போல் மின் வெட்டியது. வேற்றுலக வாசியோ என கண்ணன் சந்தேகப்பட்டான்.
        " என் பெயர் ஹேப்பி " என அறிமுகப்படுத்திக் கொண்டான். அரக்கப்பறக்க விழித்த கண்ணனைப் பார்த்து," பயப்படாதே.. நான் உன் தோழன். உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்," என்று கை குலுக்கினான். கண்ணனும் நம்பிக்கை பெற்றவனாய்," ஹலோ ஹேப்பி...நைஸ் டு மீட் யு." என்றான். ஹேப்பி புன்னகையுடன்," நாம் இருவரும் தோழர்கள் அல்லவா. சேர்ந்து ஊர் சுற்றலாம்." என்றபடி வா என்கிறாற்போல கையசைத்தான். உடனே ஒரு கம்பளம் பறந்து வந்தது.
          கண்ணனும் ஹேப்பியும் அதில் ஏறி அமரந்தவுடன் அது மீண்டும் பறக்கத் தொடங்கியது. எங்கே நம்மைக் கூட்டி செல்கிறான் என்று கண்ணன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். கடற்கரையோரம் சென்றது. இருவரும் இறங்கிக் கொண்டனர்.
           அங்கே அவன் கண்ட காட்சி விந்தையாய் இருந்தது. மீன்கள் அனைத்தும் கடற்கரை மணலில் நடைபயின்று கொண்டிருந்தன. மீன்களுக்கு கால்கள் இருந்தன. கண்ணனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. அருகில் சென்றான். மீன் ஒன்று," நீ மனிதன் அல்லவா? இங்கு எதற்காக வந்தாய்?" என்று கோபமாக க் கேட்டு விட்டு ஓடி விட்டது. கண்ணன் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் மற்றொரு மீன் வந்து கண்ணன் முன் வந்து நின்றது. கண்ணன்," மீன்கள் ஏன் தரையில் இருக்கிறீர்கள்?" என மெல்லக் கேட்டான். " மனிதர்களாகிய உங்களால் தான் நாங்கள் இப்படி மாறிவிட்டோம். நீங்கள் கடலை மிகவும் மாசு படுத்திவிட்டீர்கள். கடலில் இப்போது எங்களால் மூச்சு விட முடியவில்லை. அவ்வளவு குப்பை, அழுக்கு. ஆகவே சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக அவ்வப்போது நாங்கள் வெளியே வந்து நடக்கின்றோம். பின் கடலுக்குள் சென்று விடுவோம். பரிணாம வளர்ச்சியாக எங்களுக்கு கால்கள் தோன்றியுள்ளன. என்றைக்கு நீங்கள் திருந்துகிறீர்களோ அன்றறைக்குத்தான் எங்களுக்கு விடிவு காலம்." என்றபடி தண்ணீருக்குள் சென்றது அம்மீன். பதில் பேசுவது அறியாது நின்றான் கண்ணன்.
         ஹேப்பி கண்ணனைப் பார்த்து புன்னகைத்தவாறு வா போகலாம் என்றான். இருவரும் மீண்டும் கம்பளத்தின் மீதேறி பறந்தார்கள்.
          இம்முறை சாலை ஒன்றில் இறங்கினர். இங்கும் அவன் விநோதமான காட்சிகளைக் கண்டான். யானை ஒன்று ஸ்ட்ரா போட்டு கரும்புச்சாறு உறிஞ்சிக் கொண்டிருந்தது. முயல் மொளகா பஜ்ஜியும் நரி பானிபூரியையும் மொக்கிக் கொண்டிருந்தன. சிங்க ராஜா தோரணையாய் அமர்ந்து சிக்கன் 65 சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கண்ணன் திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இம்முறை சிங்கமே ஆரம்பித்தது. " என்ன.. ஆச்சர்யமா இருக்கா? காட்டில் வாழ வேண்டிய நாங்கள் இப்படி ரோட்டில் நடமாடுகிறோமே என்று பார்க்கிறாயா? இப்போது காடு என்ற ஒன்று எங்கே இருக்கிறது? மனிதர்களாகிய நீங்கள் உங்கள் தேவைகளுக்கு அனைத்தையும் அழித்து விட்டீர்களே! ஆதலால் நாங்கள் உங்களுடைய ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு மாறி விட்டோம்." கண்ணன் வாயடைத்து போய் நின்றான். சுற்றிலும் பார்த்தான். அனைத்து விலங்குகளும் மனிதர்களைப் போல சர்வ சாதாரணமாய் திரிந்து கொண்டிந்தன.
             கண்ணன் அப்போது தான் ஒன்றை கவனித்தான். சுற்றிலும் இருந்த மரங்கள் யாவும் சோபை இழந்து குள்ளமாய் சூம்பி காட்சி அளித்தன. அருகில் சென்றான். மரம் பேசவில்லை. ஆனால் கண்ணீர் விடுவது போல அவனுக்குத் தோன்றியது. உங்கள் வாகனங்களின் நச்சுப் புகை எங்களை எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கி உள்ளது என்று குற்றம் சாட்டுவது போலிருந்தது அந்தப் பார்வை. அதனை கட்டித் தழுவி முத்தமிட்டான். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. பதறிப்போன ஹேப்பி ," நண்பா.. என்ன இது?" என்றபடி அழைத்து வந்தான். மனமெங்கும் வருத்தத்துடன் இருந்த கண்ணனிடம்," இப்போதும் ஒன்றும் கைமீறவில்ல. இப்போதும் உன் நண்பர்கள்,உறவினர்கள் அனைவரிடமும் எடுத்துரை. தூய்மை பேணுதல், உலக வெப்பமயமாதல், காற்று மாசுபடுதல், காடுகளை அழித்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு கொள்ளுங்கள். பூமியை காப்பாற்றுங்கள்." என்றான். கண்ணன் தலையசைத்தான். பேசிக் கொண்டிருந்த ஹேப்பி கம்பளத்திலிருந்து நழுவி கீழே விழுந்தான்." ஐயோ.. நண்பாஆஆ.." என்ற அலறியபடியே எழுந்தான் கண்ணன்.
                 அவன் அவனது கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தான். கண்டதெல்லாம் கனவு என்பது புரிந்தது. கண்டது கனவு என்றாலும் கற்ற பாடத்தை மறக்கவில்லை. நாளை முதல் அவனுடைய பணி என்ன என்று அவனுக்குப் புரிந்தது.
 





Friday, June 17, 2016

சமையலறை வசீகரமாய் இருக்க வேண்டுமெனில்....

ஒரு வீட்டில் சமையலறை என்பது மிகவும் இன்றியமையாத து. இல்லத்தின் பெண்கள் அதிக நேரம் புழங்கும் இடம் என்பதாலும், குடும்பத்தினரின் பசியைத் தீர்த்து அவர்களின் ஆரோக்கியத்தைப் பேணும் இடம் என்பதாலும் சமையலறை வீட்டில் முக்கிய இடம் வகிக்கின்றது. சமையலறை இத்தனை முக்கியத்துவம் பெறுகின்றது என்றால் காதலன் காதலியிடம் ," உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?" என்று காதல் ரசம் சொட்ட பாடுவதாகவும் பாடல்கள் வந்துள்ளன. 
              பெண்கள் தங்களுடைய அதிகமான நேரத்தை சமையலறைகளில் செலவழிக்கின்றனர். சமையலறை வடிவமைப்பை அவர்கள் சமைப்பதற்கு ஏதுவாக அமைப்பதால் அவர்களுக்கு நேரம் சேமிக்கப்படும். நேர்த்தியாக வடிவமைத்தால் இடமும் சேமிக்கப்பட்டு கூடுதல் இடத்தை வீட்டின் பிற பகுதிகளில் சேர்த்துக் கொள்ளலாம். சமையலறை பழமையானதாக இருந்தாலும் கையாளுவதில் எளிமை இருந்தால் அனைவரும் விரும்புவர். 
           சமையலறை வடிவமைப்பின் போது மூன்று முக்கிய பொருள்களைக் கருத்தில் கொண்டு வடிவமைப்பர். சிங்க், அடுப்பு, மற்றும் குளிர் சாதன பெட்டி மூன்றும் சமையல் புரிவதற்கு முக்கிய பங்காற்றும். இதனை work triangle என்று கூறுவர்.இவை மூன்றையும் நேர்த்தியாக இலகுவாக கையாளும் வண்ணம் சமையலறை அமைப்பது அவசியம். இவ்விடம் சிறிய சமையலறை என்றால் 4 அடி முதல் 9 அடி வரை இருக்கலாம், அறை பெரியதாயின் 12 அடி முதல் 26 அடி வரை இருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இவை அமைவதைப் பொருத்து சமையலறையை ஐந்து வகையாகப் பிரிக்கின்றனர்.  
U வடிவ சமையலறை, 
L வடிவ சமையலறை, 
G வடிவ சமையலறை, 
ஒற்றைச் சுவர் சமையலறை(single wall kitchen), 
தாழ்வான சமையலறை( galley kitchen) மற்றும் 
தீவு அம்சம்( island feature) என்பனவாகும். ஒவ்வொன்றுமே அதனதன் சௌகர்யங்களின் படி தனித்தன்மை வாய்ந்தது. எல்லா வகையான சமையலறையிலும் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டு இருக்கும். உங்கள் சமையலறை தனித்துவமாய் தெரிய வேண்டுமெனில் அதை நீங்கள் பாங்குடன் அலங்கரித்தல் மற்றும் கையாளுவதில் தான் இருக்கிறது.
              வொர்க் டிரைஆங்கிள் ( work triangle) என்று அழைக்கப்படும் மூன்றையும் நேர்த்தியாக இலகுவாக கையாளும் வண்ணம் சமையலறை அமைப்பது அவசியம். அருகருகே அமைத்து ஒழுங்கற்ற தோற்றம் கொடுக்காமல் போதுமான தொலைவில் அமைத்து நடப்பதற்கு தோதான இடம் அளிக்க வேண்டும். சிங்க் வலதுகை பக்கத்தில் அமைத்தல் நலம், மேலும் அறையின் மூலையிலும் அமையா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிர் சாதனப்பெட்டி திறந்து மூட தோதான வகையில் வைப்பதற்கு இடையூறு இல்லாத இடத்தில் அமைக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் மைக்ரோவேவ் ஓவன் மற்றும் டிஷ் வாஷர் போன்ற உபகரணங்களும் அதிக புழக்கத்துக்கு வந்துள்ள படியால் அவற்றிற்கும் தோதான இடம் அமைத்து சமையலறையை வடிவமைக்க வேண்டும். மின் சாதனங்கள் புழங்குகின்றபடியால் அதற்கேற்றபடி படி முதலிலேயே மின் இணைப்பு மற்றும் மின்விசைகளை அமைக்க வேண்டும்.
                  குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கு அச்சாரம் இடும் இடம் என்பதால் சமையலறையில் நல்ல காற்றோட்டம் இருப்பது அவசியம். புகை மற்றும் தூசி வெளியேறும் வண்ணம் வெளியேற்றும் விசிறி( exhaust fan) அமைக்க வேண்டும். பழங்காலங்களில் விறக்கடுப்பைப் பயன்படுத்திய போது புகைபோக்கி என்பது கட்டாயமான ஒன்றாகத் திகழ்ந்தது. இன்றைய நவநாகரீகமான உலகில் எலெக்ட்ரிக் சிம்னி வந்து விட்டது. இதன் மூலம் புகையற்ற ஆவியற்ற சமையலறையைப் பெறலாம். அதே போல கிருமிகளைக் கொல்லும் திறன் சூரிய ஒளிக்கு உண்டு என்பதால் இயற்கை நமக்கு அளித்துள்ள கிருமிநாசினியான சூரிய ஒளி நன்றாக விழும்படி சமையலறையை அமைக்க வேண்டும்.
                  சமைப்பது என்பது நான்கு முக்கிய செயல்களைக் கொண்டது. அந்த நான்கையும் திறம்பட எவ்வித இடையூறும் இல்லாமல் போதிய இடைவெளியோடு செய்ய வேண்டியது அவசியம். சமையல் செய்வதற்கு முன் காய்கறி அரிவது போன்ற முஸ்தீபுகள், அடுப்பில் சமையல் செய்வது, சாப்பிடத் தோதான வகையில் சமைத்த பொருளை அடுக்குவது, பின் பாத்திரங்களை சிங்க் இல் சுத்தம் செய்வது. இதற்கேற்ப சமையலறை மேடையை நேர்த்தியாக அமைக்க வேண்டும். பொதுவாக இதன் உயரம் 32 "அகலம் 24 "என்று அமைப்பர். நீளம் நாம் எந்த வகையான சமையலறையைத் தேரந்தெடுக்கின்றோமோ அதைப் பொறுத்து அமையும். சமையலறை மேடை கிரானைட் ,கடப்பா, மார்பிள், டைல்கள் மரம்,ஸடீல் என்று எவற்றினாலும் நமது பட்ஜெட்டிற்கேற்ப அமைக்கலாம் என்றாலும் பயன்படுத்த எளிது மற்றும் நீண்ட கால உழைப்பு போன்றவற்றை மனதில் கொண்டு சிறந்ததைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சமைப்பதற்கு ஏராளமான மூலப் பொருட்களும் , இயந்திரங்களும் இன்றைய காலகட்டத்தில் தேவை. இவை தவிர பரிமாறப் பயன்படும் பொருட்கள் வேறு உண்டு. இவை அனைத்தையும் தன்னுள்ளே சேமித்துக் கொள்ள சமையலறையில் கேபினட் மற்றும் ஷெல்ப்கள் அவசியம். இவற்றை மேடையின் கீழும் அமைக்கலாம் , அருகிலும் அமைக்கலாம்.  அடுப்பின் பின் உள்ள சுவரில் அழகிய டைல்கள் அமைத்து சமையலறைக்கு இனிய கவர்ச்சிகரமான தோற்றத்தை அளிக்கலாம். மேலும் சமையல் செய்யும்போது போது பாழாவதைச் சுத்தப்படுத்துவதும் எளிது என்பதால் கட்டாயம் டைல்ஸ் பதிக்கின்றனர்.
            இன்றைய நவ நாகரீக உலகில் மாடுலர் கிச்சன் எனப்படும் நவீன சமையலறை முண்ணனியில் உள்ளது. சந்தையில் உங்கள் வீட்டின் சமையலறையின் அளவிற்கேற்ப நீள அகலங்களில் மாடுலர் கிச்சன் கிடைக்கின்றது. இதனை அமைத்து விட்டால் அழகிய தோற்றமும் கிடைத்து விடும், பல்வேறு விதமான பொருட்களை பாங்குடன் அடுக்கி வைப்பதற்கு தோதான இடமும் கிடைத்து விடும். பழங்காலங்களில் அமைக்கப்பட்ட சமையலறைகளில் உள்ள குறைகளைக் களைந்து நவீனமாக்கப்பட்டு இன்றைய  நாகரீக யுவதிகளுக்கு ஏற்றவாறு இவை அமைக்கப்படுகின்றன. பளீரென்ற வண்ணங்களிலும் இவை கிடைக்கின்றன. இயற்கையான வெளிர் நிறங்களிலும் இவை கிடைக்கின்றன. வீட்டின் பிற பகுதிகளை நாம் வடிவமைத்திருக்கிறோமோ அதை மனதில் கொண்டு இதன் வண்ணத்தை நாம் தேர்வு செய்ய வேண்டும். வீட்டின் பிற பகுதிகளுடன் இணைந்து சமையலறை தெரிய வேண்டும் என்பதில் கவனம் தேவை. அதே போல சமையலறையில் அமைக்கப்படும் தரைத்தளம் மற்றும் பூசப்படும் வண்ணம் ஆகியவற்றையும் வீட்டின் பிற பகுதிகளின் வடிவமைப்பிற்கேற்ப தேர்வு செய்ய வேண்டும்.சமீப காலங்களில் சமையலறையையும் சாப்பாட்டு அறையையும் இணைத்து பெரியதாக அமைக்கிறார்கள். அறையின் ஒரு பகுதியில் சாப்பாட்டு மேஜை அமைத்து அங்கேயே உணவு உண்ணும் வகையில் அறையின் நீள அகலத்தை அதிகப்படுத்துகின்றனர்.
            ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும், குடும்பம் நிறைய குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உள்ளடக்கியது, மற்றும் நீண்ட  நேரம் தொடர்ந்து சமையலறையில் இருக்க வேண்டிய சூழ்நிலை அமையும் எனில் அதற்கேற்றவாறு பெரியதாக அனைத்து வசதிகளுடன் அமைக்க வேண்டும். மிகச் சிறிய குடும்பம் என்றால் அதற்கேற்றாற் போல சிறியதாக அமைக்கலாம். என்றுமே எளிமை நலம். பார்த்துப் பார்த்து மாளிகை போன்ற ஒரு வீட்டை வடிவமைத்தாலும் சமையலறையில் குற்றம் குறை இருப்பின் பெண்கள் மனம் நிறைவடையாது. ஆதலால் சமையலறையை அவர்கள் மனம் விரும்பும்படி அமைக்க வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அது போல உங்கள் வீட்டின் அழகு உங்கள் அடுப்பறையில் தெரியும்.
 




சாலைப் போக்குவரத்து விதிகள்..

ஆண்டுதோறும்  சம்பிரதாயச் சடங்காக வந்து செல்லும் " சாலை பாதுகாப்பு வாரம்" இந்த ஆண்டும் வந்து சென்றது. வழக்கம் போலவே ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சிட்டாய்யப் பறக்கின்றன. விதிமுறகள் மீறப்படுகின்றன.. நாளிதழ்களை விரித்தால் விபத்துச்செய்திகள் நம்மை பயமுறுத்தும் வண்ணம் வந்து கொண்டே இருக்கின்றன. சாலைபாதுகாப்பு என்பது பல காரணிகளை உள்ளடக்கியது. சீரிய சாலைகள், அளவான வாகனங்கள், போக்குவரத்து விதிகள் தெரிந்த ஓட்டுநர்கள், குறைந்த அளவு மாசு உண்டாக்கும் வாகனங்கள் என இன்னும் பட்டியல் நீளும். ஆனால் இங்கு எல்லாமே தலைகீழ். குண்டுகுழியுமான சாலைகள், பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இல்லாத சப்வேகள், அவசரகதியில் இயங்கும் ஓட்டுநர்கள், அதிகமான, எதிர்பாராத இடத்தில் வேகத்தடைகள், சாலை சந்திப்புகளில் போதிய அடையாள குறியிட்டுப்பலகைகள் இல்லாமை என்று அனைத்தும் அச்சுறுத்துகின்றன. எனினும் ஒரு சிறு முயற்சியாக சாலை விதிகளை நாம் அனைவரும் தெளிவுற தெரிந்து கொள்வது நலம்.

சாலை விதிகள் குறித்த முக்கிய தகவல்கள் 

1.இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல் மெட்டல் அணிவது அவசியம்.
2.சாலையில் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால்,போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் வாகனங்களை சாலையில் ஓரமாக நிறுத்த வேண்டும்.
3.நடந்து செல்பவர்கள் நடைமேடையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4.வாகன ஓட்டிகள் சிக்னல்களை மதித்து செயல்பட வேண்டும்.
5.மதுபானம் அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது.
6.உரிம்ம் பெறாதவர்கள் வண்டி ஓட்டக்கூடது.
7.அதிக வெளிச்சம் தரக்கூடிய பல்புகளை எரிய விடுவதால் ,எதிரே வரும் வாகன ஓட்டங்களுக்கு கண்கள் கூசி, விபத்துக்கு வழிவகுக்கின்றன. இதனை தவிர்க்கும் பொருட்டு முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.
8.பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். 
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். 
சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது. 
ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். 
9.ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும். 
10.ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது. 
11.கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும். 
12.நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும். 
வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும். 
13.கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும். 
14.நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்கள் வெளியிடும் கரிமிலாவாயுவான கார்பன் டை ஆக்சைடை அதிகம் உறிஞ்சிக் கொள்கிறது. அத்தோடு விலங்குகளும் இவற்றை உண்பதில்லை. 
15.நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும். 

மனதை மயக்கும் தரைகள்...

வீட்டிற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் முக்கியமானது தரைகள். பளிச்சென்று மிளிரும் தரைகள் அறையின் அழகியலை அதிகரிக்கச் செய்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சிமெண்ட் தரை, ரெட் ஆக்ஸைடு தரை, பூக்கல், மொசைக் தரை போன்றவை யாவும் இப்போது காணாமல் போய்விட்டன. வீட்டிற்கு ஆடம்பரத் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் இயற்கையான கற்களான மார்பிள் அல்லது கிரானைட் கொண்டு தளம் அமைக்கின்றனர். இவை விலை உயர்ந்தவை என்றாலும் அதற்கென உரிய இரசிகர்கள் அதனையே பயன்படுத்துகின்றனர். என்றாலும் சந்தையில் கண்கள் மற்றும் மனதை கொள்வதோ, செலவு, மற்றும் சிக்கன அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும், டைல்ஸ்கள் தான்.
              கட்டுமானத்துறையில் கிரானைட் நுழைந்ததென்னவோ வழுவழுப்பான தரை என்ற நியதியில் தான், அதன் பிறகு பெரிய, பெரிய கட்டிடங்களின் வெளிப்புறத்து அலங்காரத்துக்கு கம்பீரமாய் துணை நின்றன. சுத்தம் செய்ய எளிதாய் இருப்பதாலும், ஆளுமைத் தோற்றத்தை தருவதாலும் இன்றளவும் பன்னாட்டு விமான நிலையங்கள் கிரானைட் கற்களையே உபயோகிக்கின்றன. வீடுகளில் கிரானைட் பதிக்கும் போது அதன் 'பளிச்' தோற்றம் காண்போரை கவர்ந்திழுக்கும். வீடு முழுக்க என்றில்லா விட்டாலும் சமையலறை மேடையை பெரும்பாலும் கிரானைட் கொண்டே அமைக்கிறார்கள். குளியலறைகளிலும், ஷவர் சுவர்களிலும் பலர் இதனை உபயோகப்படுத்துகின்றனர், ஏனெனில் இவை தண்ணீரால் பாழாகாது மற்றும் பாக்டீரியா எதிர்க்கும் தன்மை கொண்டவை. 
               மார்பிள் என்பது பல நூற்றாண்டுகளாக வட மாநிலங்களில் பயன்படுத்தப் படுகின்றது என்றாலும் நம் வீடுகளில் சுமார் இருபது முப்பது வருடங்களாகத்தான் உபயோகிக்கின்றோம். இதன் எழில் தோற்றம் வீட்டின் ரம்மியத்தை அழகுற எடுத்துக் காட்டுகின்றது. தனித்தன்மையுடன் திகழும் மார்பிள் கற்களை பதித்த பின் அதற்கு பாலிஷ் போட்டு மெருகேற்றுவர். பெரிய அளவிலான கற்களை வாங்கி நம் விருப்பம் மற்றும் சௌகர்யத்திற்கேற்ற வகையில் வெட்டி பயன்படுத்துவர். டிசைன்களை உருவாக்குவதில் வானமே எல்லை. இரு வண்ண மார்பிள் கற்களை இணைத்து பதிக்கலாம், வேறுப்பட்ட வண்ண பார்டர் அமைக்கலாம். இதன் குளிர்ச்சியான தன்மை, மற்றும் வழுவழுப்புத்தன்மை பெரிதும் விரும்பப்படுகின்றது.
                 ஆனாலும் சந்தையில் கோலோச்சுவதென்னவோ டைல்ஸ் வகைகள் தான். பல வண்ணங்களில், பல வடிவங்களில், பல பிராண்ட்களில், பல வகைகளில் கிடைப்பதால் அவை தனி ராஜாங்கம் நடத்துகின்றன. பராமரிக்க சுலபம், நீண்டநாள் உழைப்பு, அமைப்பதற்கு நேரம் குறைவு, சிக்கனமானது மற்றும் வசீகரமானது போன்ற காரணங்களால் அனைவராலும் விரும்ப ப்படுவதாகத் திகழ்கின்றது. டைல்ஸ் பல வகைகளில் கிடைக்கின்றன. வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் டைல்ஸ் வேறு ரகமாகவும், வீடுகளில் பயன்படுத்தப்படும் டைல்ஸ் வேறு ரகமாகவும் உள்ளன. வீட்டில் பயன்படுத்தப்படும் டைல்ஸ்களிலேயே வெளிப்புறத் தேவைகளுக்கு ஒருமாதிரியும், வீட்டினுள்ளே வாழும் அறை, குளியலறை, சமையலறை என ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான டைல்ஸ் பதிக்கப்படுகின்றன.. 
                 பொதுவாக டைல்ஸ் செராமிக், போர்சலின் என்று இரு வகைப்படும். செராமிக் டைல்ஸ் கிளேஸ்டு மற்றும் அன்கிளேஸ்டு என இரு வகைப்படும். கிளேஸ்டு டைல்ஸ் என்பது டைல்களுக்கு நூற்றுக்கணக்கான வண்ணங்களைத் தருவது ஆகும். செராமிக், போர்செலின் என இரண்டு வகை டைல்ஸ்களையும் நாம் வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம். மொசைக் டைல்ஸ் என்று மிகச்சிறிய டைல்ஸ் உள்ளது. அவற்றை குளியலறை அலங்காரத்திற்கும், சமையலறையில் அடுப்பினை ஒட்டிய சுவர் பகுதிக்கும் (backsplash ) பயன்படுத்தலாம். செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் என்று பல விதங்களில் கிடைக்கின்றன. க்வாரி டைல்ஸ் என வழங்கப்படும் டைல்ஸ்களில் வழுவழுப்புத் தன்மை இல்லாதபடியால் தோட்டத்தின் நடைபாதைகள்,நீச்சல் குளத்தை ஒட்டிய நடைபாதைகள் , கார் பார்க்கிங், வாசல் படிக்கட்டுகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இவற்றை சிலர் அலுவலங்களுக்கும், குளிர் தாக்குப்பிடிக்கும் என்பதால் குளிர் பிரதேசங்களில் உள்ள வீடுகளிலும் பயன்படுத்துகின்றனர். டைல்களின் அளவு என்பது 10 செ.மீ*10 செ.மீ என்ற அளவில் ஆரம்பித்து 30செ.மீ* 100செ.மீ என்ற அளவு வரை உள்ளது. சதுர அடிக்கு ரூபாய் 45 முதல் ரூபாய் 150 வரை டைல்ஸ் விற்பனையாகின்றது. ஒரு முறை பதித்து விட்டால் சுமார் இருபத்தைந்து வருடங்கள் நீடிக்கும் என விற்பனையாளர்கள் உறுதி அளிக்கின்றனர். 
                   வெறும் டைல்ஸ்களினால் என்ன செய்து விட முடியும் என்று எண்ணி விடாதீர்கள் , இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் டைல்ஸ் வகைகளைக் கொண்டு எளிய வீட்டிற்கும் மாடமாளிகை போன்ற தோற்றத்தை கொடுக்க இயலும். எனவே தான் தொழிற்சாலை, ஆட்டோமொபைல் ஷோரூம்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மருத்துவமனைகள், நீச்சல்குளங்கள் என அனைத்து இடங்களிலும் விதவிதமான டைல்கள் வண்ணவண்ணமாய் வியாபித்து நிற்கின்றன. நாமும் வீட்டிற்கு டைல்ஸ் பயன்படுத்தும் போது நமது படைப்பற்றலுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாம். கற்பனைத் திறன் மட்டுமிருந்தால் போதும் எதையும் செய்யலாம், ஆனால் தவறாகி விடுமோ என்ற சந்தேகத்தை மட்டும் விட்டொழிக்க வேண்டும்.
                




Thursday, June 16, 2016

இரும்பு சிம்மாசனத்திற்கு ஒரு யுத்தம்...

நெருப்பை உமிழ்ந்தபடி அங்குமிங்கும் பறக்கும் டிராகன்கள், தீ வெப்பத்தினால் தாக்கமுடியாத நாயகி, சூனியக் கிழவிகள் என்று நம்ப முடியாத சூழல்களைத் தன்னகத்தே கொண்ட கதை இது என்றால் நீங்கள் என்ன கூறுவீர்கள்? இது அம்புலிமாமா கதை, குழந்தைகளுக்கானது என்று நகைப்பீர்கள். ஆனால் இத்தகைய ஃபேண்டஸி கதையான ' கேம் ஆஃப் த்ரோன்ஸ்' (Game of Thrones) தான் இன்றைய நம்பர் ஒன் சீரிஸ். HBO வில் ஒளிப்பரப்பாகும் இத்தொடர் உலகெங்கும் உள்ள கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. ரசிகர்கள் என்றால் வெறுமனே பார்த்து ரசிப்பவர்கள் அல்ல. அவர்கள் பேச்சு, சிந்தனை, செயல் எங்கும் இத்தொடர் வியாபித்து நிற்பதை அவர்களுடன் பேசினால் அறிந்து கொள்ளலாம்.  இதன் ரசிகர் ஒருவருடன் பேசிப் பாருங்கள் அவர் வாய் ஓயாது அதனைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார். நீங்கள் அதன் கதை அறியாதவர் எனில் அதைப்பற்றி உங்களிடம் விவரிப்பார், அறிந்தவர் எனில் அதைப் பற்றி உங்களிடம் விவாதிப்பார். 
           சுருங்கக் கூறினால் ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய பெரிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி யார் என்று சண்டையிட்டுக் கொள்வதே கதை. யூகிக்கவே முடியாத திருப்பங்களும், நினைத்துப் பார்க்கவே முடியாத கதை நிகழ்வுகளும் கொண்ட பிரம்மாண்டமான அரண்மனைச் சதி தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். வெஸ்ட்ரோஸ் அரசின் இரும்பு சிம்மாசனத்தைக் கைப்பற்ற பல சக்திகள் போராடுகின்றன. கதையின் பெரும் பகுதி வெஸ்ட்ரோஸ் (Westeros) இலும் எல் காஸோ(El Caso)இலும் நடக்கிறது. இந்த இரு கண்டங்களிளையும் பிரிப்பது Narrow Sea. ஏழு நிலங்களைத் தன்னகத்தே கொண்ட வெஸ்ட்ரோஸை ஆள்பவர் Kings Landing என்னும் இடத்திலும், இவர்களை அழித்து டிராகன்களின் துணையோடு இழந்த ராஜ்யத்தை கைப்பற்றத் துடிக்கும் ட்நேரியஸ் டார்க்கேரியன்(Daenerys Targaryen)க்கும் இடையே நடக்கும் கதை தான் கேம் ஆஃப் த்ரோன்ஸ். பல்வேறு சதிகளும், தந்திரங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கையில் பிராந்தியத்தின் தடுப்புச்சுவரான 'வொயிட் வால்' க்கு புறத்தே இருக்கும் பனிப் பிரதேசத்திலிருக்கும் வைல்ட்லிங்க்ஸ்(wildlings) மற்றும் வொயிட் வாக்கர்ஸ்(white walkers) எனும் கொடிய சக்திகள் நாட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பிக்கின்றன. இவ்வாறு சுவாரஸ்யமாய் பின்னப்பட்டுள்ள கதையில்ஒவ்வொரு பிரச்சனையும் எவ்வாறு சமாளிக்கப் படுகிறது என்று தொடர் மிகப் பிரமாண்டமாய் விளக்குகின்றது. 
              இதன் மூல நாவலைப் படைத்தவர் ஆர். ஆர் மார்டின். 1996 ஆம் ஆண்டில் மிகப் பிரபலமாய்த் திகழ்ந்த ' A SONG OF FIRE AND ICE' என்ற மிகப் பெரிய புத்தகத்தொடரின் மறு ஆக்கமே ' கேம் ஆஃப் த்ரோன்ஸ்'. வருடத்திற்கு ஒரு சீசன். சீசனுக்கு பத்து எபிஸோட் என்று பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் இத்தொடர் உருவான விதம் குறித்து ஒரு சுவாரஸ்யத் தகவல். தாங்கள் இளம் வயதில் படித்து ரசித்த நாவலுக்கு திரைக்கதை எழுத அனுமதி வாங்க ஆர். ஆர் மார்ட்டினைச் சந்தித்துப் பேச டேவிட் பெனியாஃப்( David Benioff), டி. பி. வைஸ்(D.B. Weiss) இருவரும் சென்றனர். அப்போது ஆர். ஆர். மார்ட்டின் மிகவும் தயங்கினாராம். தன்னுடைய புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களும், சம்பவங்களும் இத்தனை நூதனமானவும் சிக்கலானதாகவும் இருப்பதால் அதனை அத்தனை சுலபமாய் தொலைக்காட்சித்தொடராய் ஆக்க இயலாது என்பதில் உறுதியாய் இருந்தார். விடாது வேண்டுகோள் விடுத்த இருவரிடமும் வெகு நேரத்திற்குப் பிறகு நீண்ட யோசனையுடன்,' நான் சில கேள்விகளைக் கேட்கிறேன். நீங்கள் அவற்றிற்கு சரியான விடை அளித்தால் சம்மதிக்கிறேன்' என்றாராம். பின்னர் நுணுக்கமான சில கேள்விகளைக் கேட்டாராம். கதையின் ரசிகர்களான இருவரும் மிகச்சரியானப் பதிலைத் தந்ததும் புன்னகை ஒன்றையே பதிலாய் அளித்தாராம். அவர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. பிறகு சம்மதம் என்ற தகவல் வந்தது. 
           HBO மிகப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வழங்கிக் கொண்டிருக்கும் இந்தத் தொடர்தான் உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்டது என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. பிரம்மாண்டமாய் தயாரிக்கப்பட்டுள்ளது என்ற பெருமையுடன் செறிவான வசனங்களுக்கும் பேர் போனது இத்தொடர். பல்வேறு முக்கிய கதாபாத்திரங்கள் வரப்போகும் ஆபத்தைப் பற்றிப் பேசிப் பேசியே திகிலை ஏற்படுத்துகின்றன. உதாரணமாக குளிர் காலம் வரப்போகிறது என்று பலரும் பேசியே நம்முள் குளிர்காலத்தின் மீதான பயத்தை விதைக்கிறார்கள். முத்திரை வசனம் பலர் பேசினாலும் டிரியன் லேன்னிஸ்டர் (Tyrion Lannister) என்னும் குள்ள பாத்திரம் பேசும் வசனம் பொன்மொழிகளாக அதன் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ' கடவுள் பாதி மிருகம் பாதி' என்று கூறுவதைப் போல் அனைத்து கதாபாத்திரங்களிலும் சிறந்த குணநலன்களும் உண்டு , நயவஞ்சகமும் உண்டு. எவரும் முழுமையாக நல்லவரும் இல்லை, முழுமையாக கெட்டவரும் இல்லை. ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பைத் தூண்டி பின்னர் அதை சிதைக்கும் வண்ணம் அந்தக் கதாபாத்திரத்தைக் கொல்வது தொடரில் சர்வ சாதாரணம். ' அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா..' என்று ஒரு பிரபல வசனம் உண்டு. அதைப் போல நயவஞ்சகமும், சூழ்ச்சியும் அரசியல் என்று வந்து விட்டால் சர்வ சாதாரணம் என்பது போல் நடந்து கொள்கின்றனர். இதைப் பற்றி ஆர். ஆர். மார்ட்டினிடம் கேட்ட போது அவர் கூறினார்,' சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டும் சாவதும், நாயகர்களுக்கு மரணம் இல்லை என்று காட்டுவது நேர்மையற்ற செயல். ஃபேண்டஸி எழுத்தாளர் என்றாலும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும்' என்றார். 
          எந்த ஒரு கதாபாத்திரமும் எப்போது வேண்டுமாலும் கொல்லப்படலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடனேயே ரசிகர்கள் இதைப் பார்க்கின்றனர். அதீத வன்முறையும் பாலுணர்வுக் காட்சிகளை தன்னகத்தே கொண்டாலும் நேர்த்தியான திரைக்கதை, அழகிய காட்சியமைப்பு, பொருத்தமான நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, இம்மியளவும் குறையாத விறுவிறுப்பு  போன்றவை தொடரின் வெற்றிக்கு வழிவகுக்கின்றன. இது வரை ஆறு சீசன்களும் எட்டு எபிஸோடுகளும் வெற்றி முழக்கமிடுகின்றன. வயதான படியால் முடிவை( க்ளைமாக்ஸ்) தொடரின் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ரகசியமாய் பகிர்ந்துள்ளார் ஆர். ஆர் . மார்ட்டின் என்ற வதந்தி இணையமெங்கும் நிலவுகிறது. இணையத்தில் இதன் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. ஒரு முறை தொடரின் தயாரிப்பாளர்கள் எக்ஸ்ட்ரா ரோலுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ற போது வந்து குவிந்த விண்ணப்பங்களைப் பார்த்து மிரண்டு விட்டனராம். தொடரில் தானும் எவ்வாறாவது இடம் பெற வேண்டும் என்ற நெட்டிசன்களின் பேரவா அலாதியானது. ஒவ்வொரு சீசனிலும் ஒன்பதாவது எபிஸோடு மிகவும் சுவாரஸ்யமாயத் திகழ்ந்துள்ளபடியால் இம்முறையும் அதற்காக அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது கூடுதல் தகவல்.