Wednesday, December 9, 2015

பிறந்த நாள்



ராஜாவுக்கு பிறந்த நாள் இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடும். ராஜா எப்பவும் தன் பிறந்த நாளுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருப்பான். அம்மா, அப்பா, அக்கா என்று எல்லோரும் ஏதாவது ஒரு கிப்ட் தருவார்கள். ஆனாலும் அவனுக்கு அவனுடைய தாத்தா ஏகாம்பரம் தரும் கிப்ட் தான் ஸ்பெஷல். 
         அவன் அப்படித்தான். சிறு வயதிலிருந்தே  அவருடன் ரொம்ப நெருக்கம். காலையில் பள்ளிக்குச் செல்லும் செல்லும் போது பிரியாவிடை கொடுத்து கிளம்புவதிலிருந்து, மாலையில் அவருடன் வாக்கிங் செல்வது வரை எல்லாமே அவனுக்கு பிடித்தமான செயல்கள். அவன் இரவு உணவருந்துவது அவர் கூடத்தான். இரவில் தனக்குத் தெரிந்த இதிகாசக் கதைகள் முதல் தற்போது படித்த நாகரீக கதைகள் அனைத்தையும் அவனுடன் பகிர்ந்து கொள்வார். ராஜாவும் தான் கற்ற நவீன சமாச்சாரங்களை அவருக்கு கற்றுத் தருவான். 'டச்' ஃபோனின் சகல சமாச்சாரங்களும் அவருக்கு அத்துப்படி.
        அவனுடைய பத்தாவது பிறந்த நாளுக்கு நாய்க்குட்டி ஒன்றைப் பரிசளித்தார். அவனுடைய பன்னிரெண்டாவது பிறந்த நாளுக்கு மாங்கன்று ஒன்றைப் பரிசளித்தார். அன்றிலிருந்து அவனுக்குத் தோட்டக்கலையின் மீது ஆர்வம் வந்துவிட்டது. இப்போது அவன் வீட்டில் நிறைய பூஞ்செடிகள் பூத்துக் குலுங்கின்றன.
        அவனது பிறந்த நாளும் வந்தது.காலையில் தோசை வார்த்துக் கொண்டிருந்த அம்மாவிடம் கேட்டான்," அம்மா, தாத்தா என்ன கிப்ட் தரப் போறார்மா? உனக்கு ஏதாவது தெரியுமா?" என்று ஆர்வமுடன் கேட்டான். " தெரியலையே..ஆனா இது வரைக்கும் ஒண்ணும் வாங்கின மாதிரித் தெரியலை."  அம்மாவுக்கு வீட்டிற்குள் நுழையும் ஒரு சிறு எறும்பு கூடத் தெரியும். அவளே தெரியவில்லை என்றால்....ஒரு வேளை தாத்தா ஒண்ணும் வாங்கலையோ?? தாத்தா எதுவுமே நடக்காத்து போல் வீட்டில் சுற்றிக் கொண்டிருந்தார். இன்று பதினெட்டாவது பிறந்த நாள். பெரிய சர்ப்ரைஸ் இருக்கும் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
       மணி பன்னிரெண்டடித்தது. தாத்தா,"ராஜா.. உனக்கு லன்ச் ஒரு ஸ்பெஷல் இடத்தில் . வா போகலாம்" என்று சட்டையை மாட்டிக்கொண்டு அழைத்தார். " எங்கே தாத்தா?" என்று ஆர்வமுடன் ராஜா கேட்டான்." காட்றேன்..காட்றேன்" என்றவாறே திரும்பி," அம்மா.. மருமகளே! நாங்க ரெண்டு பேரும் வெளியே சாப்பிட்டுக்கிறோம்" என்றார்.'ஓ! லன்ச் வாங்கித்தரப் போறாராக்கும்..' என்று எண்ணியவாறே," அம்மா..பை.." என்று தாத்தாவைப் பின் தொடர்ந்தான்.
        இரண்டு தெருக்கள் வரை நடத்தியே கூட்டிச் சென்றார் தாத்தா. ' எங்கே என்று சொன்னால் பைக்கில் கூட்டிக் கொண்டு போகலாம்' என்று அவன் மனதில் தோன்றியது. அங்கே ஒரு அனாதை ஆசிரம ம் இருந்தது. அங்கு அனைவரும் அவனுக்காக வரிசையாக காத்திருந்தனர். அவன் உள்ளே நுழைந்ததும் " ஹேப்பி பர்த் டே டு யூ..." என்று கோரஸாகப் பாடினார்கள். சிஸ்டர் வந்து, " தம்பி, நீ தான் ராஜாவா? ஹேப்பி பர்த்டே.. என்னோடு வா" என்று உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
          ராஜா நெகிழ்ந்து விட்டான். திரும்பி தாத்தாவைப் பார்த்தான். அவர் புன்னகைத்தார். சிஸ்டர் உள்ளே அழைத்து சென்று," தம்பி ராஜா, இன்று உன் தயவால், உன் பிறந்த நாளை முன்னிட்டு இந்தக் குழந்தைகள் வயிறார சாப்பிடப் போகிறார்கள். உன் தாத்தா இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். வா.. உன் கைகளால் அவர்களுக்கு இனிப்பு கொடு. " என்றார். அனைவரும் வரிசையாக அமர்ந்நதிருந்தனர். ராஜா ஒவ்வொவருக்காய் இனிப்பு வழங்கினான். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டு," நன்றி அண்ணா" என்று கூறிய போது அவன் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அவனும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டான். சில குழந்தைகள் அவனிடம் ஓடி வந்து பேசின. சில அவன் பேரைச் சொல்லி புன்னகைத்தன. 
          சுமார் ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். தாத்தா," கிளம்பலாமா ராஜா?" என்று கேட்டார். உண்மையில் அவனுக்குக் கிளம்ப மனமில்லை. என்றாலும்,"ம்...ம்.." என்றான். சிஸ்டர், ஆசிரியர்கள், குழந்தைகள் அனைவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கிளம்பினர். வழியெங்கும் மௌனமாய் வந்தான். வீடு நெருங்கியது. தாத்தாவைப் பார்த்து " தேங்க்ஸ் தாத்தா" என்றான். தாத்தா புன்னகைத்தார். இருவரின் மனமும் நிறைந்திருந்தது.
         -முருகேஸ்வரி ரவி,
            சென்னை-13.

Saturday, December 5, 2015

இலக்கை நோக்கிய பயணம்

பிரையன் டிரேசி.

                 உலகில் உள்ள சுயமுன்னேற்ற பயிலரங்குகள் அனைத்திலும் மிகப் பிரபலமான பெயர் " பிரையன் டிரேசி". தன்னுடைய உற்சாகமான உரைகளாலும், புதுமையான பயிற்சிப் பட்டறைகளாலும் உலகின் இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்தவர் இந்த எண்பது வயது இளைஞர். மிக சமீபத்தில் சென்னைக்கு வந்து தனது ஆணித்தரமான உரையால் உன்னத இலக்குகளை நேர்த்தியாக அடைய சில இலகுவான முறைகளை கற்றுத்தந்தார்.  அவற்றின் சில துளிகள்:
                   பெரும்பாலானோருக்கு தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவுகளாகவே இருக்கும் போது ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்து விட முடிகிறது?  இலக்குகளை நிர்ணயிக்கவும் , அவற்றை நோக்கி பயணிக்க எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும், வெற்றியடைய பின்பற்ற வேண்டிய உத்திகளைப் பற்றியும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்.
                   எந்த அளவுக்கு உங்களால் முடியுமோ அந்த அளவுக்கு தெளிவாகவும், விரிவாகவும் உங்கள் இலக்குகளை நீங்கள் வரையறுக்க வேண்டும். இலக்குகள் தான் உங்களை உந்தித் தள்ளும் மாபெரும் சக்தி. இலக்கில்லா மனிதனின் சக்தி, தெளிவில்லாத நீரோடையைப் போல பெருமளவு வீணாகின்றது. வெற்றியடைய ஒரு சுலபமான வழி உள்ளது. அடுத்த ஒரு ஆண்டுக்கு பத்து இலக்குகளை நிர்ணயிங்கள். அவற்றை ஒரு வாரத்திற்குரிய இலக்குகள், ஒரு மாத த்திற்குரிய இலக்குகள், ஆறு மாத த்திற்குரிய இலக்குகள், ஒரு வருடத்திற்குரிய இலக்குகள் என பிரித்துக் கொள்ளுங்கள். அவற்றை அடைய எல்லாவிதமான முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வாருங்கள். ஒரு வருடத்தின் இறுதியில் நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டால் நீங்களே வியந்து போவீர்கள். 
                    தடைகளைக் கண்டு தளர வேண்டாம். தடைகள் யாவும் நாம் தகர்த்தெறிவதற்காகவே தோன்றுவன. தடைகளில் இருபது சதவீதம் மட்டுமே வெளியிலிருந்து வரும். எண்பது சதவீத தடைகள் மனத்தடைகள் தாம். மனத்தடைகளை வென்று விட்டால் அதுவே வெற்றிக்கும், மகிழ்ச்சிக்குமான ஒரு வழிப்பாதையாய் அமையும்.
                    நம் படைப்பாற்றலை வெளிக்கொணரும் திறவுகோல் என்ன என்பதை முதலில் கண்டுணர வேண்டும். நம்முடைய மிகப்பெரிய இலக்குகளை அடைய இருபது வழிகளை எழுத வேண்டும்.முதல் ஐந்து வழிகள் மிகவும் எளிதானவையாக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து வழிகள் கடினமானதாக இருக்க வேண்டும்.  அதற்கு அடுத்த ஐந்து வழிகள் வலி ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த ஐந்து வழிகள் மிகவும் கடினமான,  எளிதில் செயல்படுத்த முடியாத, வலி ஏற்படுத்தும் வழியாக இருக்க வேண்டும். அந்த இருபதாவது வழி தான் நம்முடைய வழி.  அதனை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
                           எதுவுமே கடினமல்ல. எதையும் கற்று கொள்ளலாம். எதற்கும் காலம் கடந்து விடவில்லை. இன்றைக்கு பெரும் சாதனையாக கருதப்படும் வியாபாரத் திறன்கள், விற்பனைத்திறன்கள், பணம் பண்ணும் திறன்கள் யாவும் கற்றுக் கொள்ளும் அளவிற்கு எளிதானவையே, முறையாக பயிற்சி செய்தால். இன்றைக்குப் பெரும் பணக்கார ர்களாய்த் திகழும் எல்லோரும் ஒரு கால கட்டத்தில் எளியவர்களாய்த் திகழ்ந்தவர்களே. அவர்கள் ஆற்றிய சாதனைகள் யாவும் கடும் முயற்சிக்குப் பின் கிடைக்கப்பெற்றவையே ஆகும். 
           இலக்குகளை எழுதுங்கள். பின் காலக்கெடுவை நிர்ணயிங்கள். பின் அதனை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்குங்கள். " ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சின்ன அடியில் தான் தொடங்குகிறது." நாம் பட்டியலிட்ட வழிமுறைகளை ஒழுங்கு படுத்த வேண்டும். எந்த வரிசைக்கிரமத்தின் படி செய்ய வேண்டும், எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். இருபது சதவித ஒழுங்கு படுத்தலின் நேரம் நமது எண்பது சதவீத உழைப்பை நிர்ணயிக்கும்.
              சுருக்கமாக பிரையன் டிரேசி அவர்களின் அறிவுரை:
1. உன் லட்சியம் எதுவோ அதை காகித த்தில் எழுது.
2. நேரம், அளவு, செயல் திட்டம் என முடிந்த அளவு காகித த்தை நிரப்பு.
3. உன் லட்சியத்தை ஏற்கனவே அடைந்தவரைப் பட்டியலிடு.
4. அவர்கள் என்ன செய்ததினால் வெற்றி அடைந்தார்கள் என கண்டுபிடி.
5. நீயும் அதையே செய்.
வெற்றி பெற நமக்குத் தேவையான குணநலன்களாக இவற்றை பட்டியலிடுகிறார். தெளிவு, தகுதி, அர்ப்பணிப்பு, படைப்புத்திறன், கொள்கை மாறாதிருத்தல், கற்றலை நிறுத்தாதிருத்தல். அறிவியல் கண்ணோட்டத்துடன் , ஆனால் எளியதாக புரிந்து கொள்ளும் வகையில் வெற்றிப்படிகளில் ஏறுவது எப்படி என விளக்குகிறார்.
                    இந்த வழிமுறைகளை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொண்டாமானால் நமது இலக்குகளை வெகு விரைவில் தொட்டு விடலாம். திருவள்ளுவர் மிக அழகாக இரண்டு அடிகளில் கூறுகிறார்,
" தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும்." 

Tuesday, December 1, 2015

கோயிலுக்குப் போகலாம்

            ஞாயிற்றுக்கிழமைகளில் கண்ணனும் அவனுடைய நண்பன் ரவியும் தவறாமல் மாலையில் சந்திப்பார்கள். பூங்காவில் அமர்ந்து சிறிது நேரம் அளவளாவி விட்டு இரவு எட்டு மணி ஆனதும் அவரவர் வீட்டிற்கு சென்று விடுவர்.
             அன்று கண்ணனுக்குப் பிறந்த நாள். சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள கோயிலில் மணி அடித்தது. " கண்ணா கோயிலுக்குப் போகலாமா? உன் பிறந்த நாளன்று உன் பெயரில் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்." என்றான் ரவி. "ஓ! போகலாமே" என்றவாறே டக்கென்று எழுந்தான் கண்ணன்.
              அந்த பூங்காவின் மிக அருகில் ஒரு பிரபலமான கோயில் இருந்தது. அதன் உட்பிரகாரமும் வெளிப்பிரகாரமும் மிக விசாலமாக இருக்கும். கோயிலைச்சுற்றி சுமார் நூறு கடைகள் இருக்கும். எப்போதும் வியாபாரம் ஜே..ஜே என்று இருக்கும். செவ்வாய் , வெள்ளி என்றில்லாமல் எல்லா நாளும் கூட்டம் அலைமோதும். 
               சுவாமிக்கு கண்ணன் பெயரில் ரவி அர்ச்சனை செய்தான். கண்ணன் அமைதியாய் சாமி கும்பிட்டான். ரவி அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாய் போட்டான். அவர் அவனுக்கு விபூதி ,பிரசாதம் தந்தார். கண்ணன் ஒன்றும் போடவில்லை. அர்ச்சகர் அவனை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார்.  கண்ணன் ரவியினுடையதை எடுத்து இட்டுக் கொண்டான். கோயில் உண்டியலில் கண்ணன் காணிக்கை போடுவான் என்று ரவி எதிர்பார்த்தான். ஆனால் அவன் செய்யவில்லை. கண்ணனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது போல என்று ரவி எண்ணிக் கொண்டான். ஆனால் கேட்கவில்லை. பைக்கை நோக்கி சென்றனர்.
               பைக்கில் ஏறியவாறே கண்ணன்," ரவி நான் ஒரு கோயிலுக்கு கூட்டிட்டு போறேன். வர்றியா?" என்றான். தலையை ஆட்டியவாறே பைக்கில் ரவி அவன் பின் ஏறினான். ஊருக்கு வெளியே இருந்தது அந்த கோயில். கூட்டமே இல்லை. பழமையான பாரம்பரியமான கோயில் அது. ஒன்றிரண்டு வயதானவர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். அர்ச்சகர் நிதானமாக மந்திரம் சொல்லி பூஜை செய்தார். விபூதி தட்டில் ஐம்பது ரூபாய் போட்டான் கண்ணன். அவர் அவனை ஆசிர்வாதம் செய்தார். 
                உண்டியலில் ஆயிரம் ரூபாய் போட்டான். ஐந்து நிமிடம் தியானம் செய்தான். பின் " போகலாமா?" என்று எழுந்தான்.
                 ரவி அவனை ஆச்சர்யமாகப் பார்த்தான். அவன் மனதில் ஓடியது கண்ணனுக்கு புரிந்தது போல. " அங்கு வேறு மாதிரியும் இங்கு வேறு மாதிரியும் நடந்து கொள்கிறேன் என்று பார்க்கிறாயா? அந்தக் கோயில் வியாபார மயமாகிவிட்டது. நான் ஒருவன் கொடுப்பதால் அங்கு நிறையப் போவதில்லை. ஆனால் இங்கே நான் கொடுத்த பணம் உரிய வகையில் செலவிடப்படும். " என்று புன்னகைத்தான். ரவியின் மனதில் கண்ணன் பல மடங்கு உயர்ந்தான். கண்ணனை மனதார வாழ்த்தியவாறு ரவி அவன் பைக்கில் ஏறினான்.