Wednesday, November 18, 2015

அடுக்கு மாடி குடியிருப்பு

தான் வாழும் வீட்டை ஒருவர் எத்தனை தூரம் நேசிக்கிறார் என்பது அவர்தம் பேச்சிலேயே தெரிந்து கொள்ளலாம். சொந்த வீடோ வாடகை வீடோ தன் வீட்டைப் பற்றி பேசும்போது அவர்தம் பேச்சில் பெருமை கொப்பளிக்கும்.
   இன்றைய காலகட்டத்தில் நகர்ப்பறங்களில் வீடு என்பது அடுக்குமாடி குடியிருப்புகளாகவே உள்ளன. ஜன நெரிசல் மிகுந்த பெரு நகரங்களில் தனி வீடு என்பது எட்டாத கனவு என்று உறுதிபட கூறலாம். அடுக்குமாடிக் குடியிருப்புகளே மக்களின் வீட்டுத்தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மழைக்காலக் காளான்கள் போல நகரங்களெங்கும் தோன்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளே இதற்கு சான்று.
         நகரங்களில் வீட்டுமனை வாங்கி அதில் வீட்டைக் கட்டமைப்பது என்பது இயலாத காரியம். அனைத்து விதமான சமூக்க்கட்டமைப்புகள் கொண்ட பகுதியில் வீட்டு மனைகள் காண்பது அரிதாகி விட்டது. அதனால் சொந்த வீட்டு கனவில் மிதக்கும் அனைவரும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கவே ஆர்வம் காட்டுகின்றனர்.
       நவீன அபார்ட்மெண்ட் வாழ்க்கையை விரும்பாதவர்கள் பலர் இருப்பினும் அது தரும் சௌகரியங்களை குறைத்து மதிப்பிட முடியாது. வீட்டுப் பராமரிப்பு என்பது மிகப்பெரிய பணி. கணவன், மனைவி என்று இருவரும் வேலைக்கு செல்லும் இந்தக் கால கட்டத்தில் சிறு , சிறு ரிப்பேர் வேலைகள் ஏற்ப்பட்டால் தனி வீடு என்றால் திண்டாட்டாம் தான். அடுக்குமாடி குடியிருப்பு எனில் அங்குள்ள சங்கத்தின்(அசோசியேசன்) பணியாளர்கள் அதை நிவர்த்தி செய்து விடுகின்றனர். திடக்கழிவு, கழிவு நீர்அகற்றல், நீர் விநியோகம், சலவை போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் பொதுவாய்  கிடைக்கின்றன. 
உலகில் எவரும் சமரசம் செய்து கொள்ள  விரும்பாத்து பாதுகாப்பு. அது அடுக்கு மாடி குடியிருப்பில் செக்யுரிட்டி மூலம் வழங்கப்படுகிறது. காவலாளிகள் பலர்நியமிக்கப்பட்டு ரோந்து வருகின்றனர். உள்ளே வரும் எவரும் பரிசோதிக்கப் பட்டே அனுப்பப்படுகின்றனர். ஆதலால் திருட்டு பயம் கிடையாது. அடுக்குமாடி குடியிருப்புகள் இப்போது எட்டு முதல் இருபது மாடிகளைக் கொண்டதாக அமைகின்றன. பொதுவாக தரைத்தளம் வாகனங்கள் நிறுத்தப் படுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. சீரான படிக்கட்டுகளும் மற்றும் மின்தூக்கிகளும் அமைக்கப்படுகின்றன. மின்தடை ஏற்படும் நேரங்களில் அவற்றை இயக்குவதற்காக ஜெனரேட்டர் வசதியும் செய்து தரப்படுகிறது. குழந்தைகள் விளையாடுவதற்கென பூங்காவும் , வயதில் மூத்தோர் நடை பயில நடைமேடையும் பொதுவாக அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளிலும் உள்ளன. இதர வசதிகளாக உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், மருந்தகம், குழந்தைகள் காப்பகம், பல்பொருள் அங்காடி போன்ற வசதிகளும் செய்து தரப்படுகின்றன. இப்படி மக்களுக்கு தேவையான அடிப்படை மற்றும் பல நவீன சொகுசு அம்சங்களை உள்ளடக்கி சிறந்த தொழில்நுட்பத்தின் சின்னமாக அடுக்குமாடி குடியிருப்புகள் திகழ்கின்றன.
      வெளிநாடுகளில் குறுகிய பரப்பளவு கொண்ட இடத்திலும் வீடுகளை அழகாக  கட்டமைத்து அசத்துகிறார்கள். ஒரே அறையிலேயே அனைத்து வகையான தேவைகளையும் நிவர்த்தி செய்யும் அளவிற்கு இடவசதியை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சிறிய இடத்திற்குள் எப்படி இத்தனை வசதிகளை உள்ளடக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சர்யப்பட வைக்கிறார்கள்.  ஒரே இடத்துக்குள் அனைத்துப் பொருட்களையும் இடம்பெற செய்தாலும் அறையை அலங்காரத்தால் அழகு படுத்தி விடுகிறார்கள். அது போன்று திட்டமிட்டு செயல்பட்டால் சிறிய இடத்திலும் கனவு இல்லத்தைக் கச்சிதமாய் கட்டமைத்து விடலாம். இலட்சக்கணக்கில் செலவு செய்து வீடு வாங்கிய பின் அதன் உள்ளமைப்பில் கவனம் செலுத்தினால் வீடு சிறப்பாக அமையும்.
      அடுக்கு மாடி வீடுகளின் உள்ளமைப்பில்  சின்ன சின்ன சங்கதிகளை சரிபார்த்தால் மிகச்சிறந்த வீட்டில் குடியேறலாம். முதலில் கவனத்தில் கொள்ள வேண்டியது , வரவேற்பறை பெரியதாக உள்ளதா என்பதை. வரவேற்பறைக்கு அதிக இடத்தை ஒதுக்கினால் வீடு சிறியதாக இருக்கும்
தோற்றத்தை போக்கிவிடும். சாப்பிடும் அறை, சமையலறை போன்றவற்றை வரவேற்பறையின் ஒரு பகுதியாக வடிவமைக்கலாம். குளியலறை, கழிவறை போன்றவற்றை தனித்தனியே அமைத்தால் அதுவே அதிக இடத்தை ஆக்ரமித்து விடும். அதன் ஒரு அங்கமாக வாஷ்பேசின் அமைத்தால் இடம் மீதியாகும். இது போன்ற சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனம் செலுத்தினால் சிறிய வீடு கூட சிறிது விசாலமாய்த் தெரியும்.
          அடுக்கு மாடியிருப்புகளில் வீடுகள் வாங்குவோர் முக்கியமாக நிலத்திற்கான ஆவணங்கள், கிரயப்பத்திரம், பட்டா, சிட்டா, அங்கிகாரச் சான்றிதழ், வில்லங்க சான்றிதழ், சட்ட வல்லுனர் ஒப்புதல் சான்றிதழ், உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். கட்டப்பட்ட இடத்திற்கான மண் பரிசோதனை, கான்கிரீட் பரிசோதனை சான்றிதழ் உள்ளனவா என்று ஆராய வேண்டும். எத்தனை தளங்களுக்கு அனுமதி பெற்று கட்டப்பட்ட அடுக்குமாடி என்று முக்கியமாகப் பார்க்க வேண்டும். பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் தரம் உறுதியாக இருக்கிறதா என்பதே முக்கியம்.
      இவ்வாறு அவசர உலகில் நகரத்து சொகுசு வாழ்க்கையை அனுபவிக்க வாழ்வியல் ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும் அடுக்குமாடி குடியிருப்புகள் பெரிதும் உதவுகின்றன. அவை கான்கிரீட் தோட்டம் என்றாலும் நம் மனமென்னும் வண்ணத்துப்ப்பூச்சி விரும்பி வாழும் உறைவிடம் ஆகும். வாழ்க்கையையே சங்கீதமாக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைவரும் விரும்பும் பூலோக சொர்க்கம் என்றால் மிகையல்ல.கவிப்பேர ரசு வைரமுத்துவின் வைர வரிகளில் கூறுவதென்றால்..
"இது மாடி வீடு, ஜோடி வீடு
  அட கோயில் கொஞ்சம் போரடித்தால்
   தெய்வம் வந்து வாழும் வீடு..."

        

Thursday, November 12, 2015

தீபாவளி


பண்டிகைகள்பற்றி நமது தொலைக்காட்சிகளும் விளம்பரங்களும் நினைவு படுத்தாவிடில், இன்றைய வேகமான உலகில் பண்டிகைகளை நாம் மறந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் என்னுள் அவ்வப்போது எழும். தீபாவளி வருவதற்கு ஒரு மாத த்திற்கு முன்பிருந்தே கார்த்தி " கம்ம்மிங்... கம்ம்மிங்" என்று நினைவு படுத்திக் கொண்டே இருந்தார். கமல்ஹாசன் மற்றும் சூர்யா தம் பங்கிற்கு அபிமானத்தையும் டோட்டலி ஹேப்பி ஃபேமிலி என்றும் வற்புறுத்தி க்கொண்டிருந்தனர். இது போன்ற விளம்பரங்கள் தவிர தீபாவளி தரும் விடுமுறை மட்டுமே தீபாவளியை இன்றைய காலகட்டத்தில் நினைவில் நிறுத்துகிறது.
      சில பல வருடங்களுக்கு முன்னர் தீபாவளித் திருநாள் என்பது வாழ்க்கையோடு இணைந்த பொன்னாளாக கருதப்பட்டது. அது தந்த சின்ன சின்ன சந்தோசங்களை இன்றைய தலைமுறை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே கூறலாம். தீபாளிக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வீட்டுப் பெண்கள் என்னென்ன பலகாரங்கள் சுடவேண்டும் என்று திட்டமிட்டு தினமொன்று என்ற வித த்தில் விதவிதமாய் பலகாரம் சுட்டது அந்தக்காலம். சமயங்களில் பக்குவம் தவறும் போது பக்கத்து வீட்டுப் பெண்களுடன் கலந்து பேசி ஏதாவது செய்து சரிக்கட்டி விடுவர். கடுக் முடுக் என்று பக்குவம் தவறிய பலகாரங்கள் கூட அப்போது வீட்டில் உள்ளோருக்கு தேனாய்த் தித்தித்தது. இந்தக் காலத்து கதையே வேறு. ஸ்வீட் பாக்ஸே சரணம் என்று மக்கள் சாஷ்டாங்கமாய் பலகாரக் கடைகளிடம் சரணாகதி ஆகி விட்டனர். கேட்டால் நேரமில்லை என்ற பதிலே பிரதானமாய் வரும். தீபாவளி அன்றே கூட பல பேர் வீட்டில் உணவு விடுதிக்கு  சென்று விடுகின்றனர் அல்லது அங்கிருந்து தருவித்து உண்ணுகிறார்கள். எண்ணெய் குளியலை மறந்து விட்டீர்கள் என்று நான் நினைவு படுத்தினால் சின்ன வாண்டு கூட ' பழைய பஞ்சாங்கம்' என்று என்னை எள்ளி நகையாடும். சீயக்காய்த்தூளை ஷாம்பூக்கள் கபளீகரம் செய்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது.
         தீபாவளி என்றாலே பட்டாசு தான் பிரதானம். சில நாட்களுக்கு முன்பிருந்தே பட்டாசு வெடிக்கத் தொடங்கி, தீபாவளியன்று அடைமழை பெய்தாலும்் நமத்துப் போன கம்பி மத்தாப்பு மற்றும் குச்சி மத்தாப்புக்ளுடன் போராடுவது அந்தக் காலம். இன்று மத்தாப்புகள் மற்றும் பட்டாசுகள் கொளுத்தி மகிழும் மகிழ்ச்சியை அறியாமலேயே குழந்தைகள் வளர்கின்றனர். " பூமிக்கு கேடு, காற்றுக்கு மாசு" என்று பெரிய மனித தோரணையுடன் குழந்தைகள் பேசுகின்றன. குழந்தைப்பருவத்திற்கே உரித்தான இன்பங்களைத் தர மறுப்பது அல்லவா இச்செய்கை? இது போன்ற பிரச்சாரங்களால் ஒரு தொழிலே நசிந்தது வருவதை அவர்கள் அறிவார்களா? இதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கானவர்களின் இயல்வாழ்க்கை பாதிக்கப்படுவதை உணர்வார்களா?
       " எங்கள் வீட்டில் இவ்வளவு பட்டாசு வாங்கினார்கள்..எங்கள் வீட்டில் இன்னென்ன பலகாரம் செய்தார்கள்" என்று தோழர்களிடம் பெருமை பொங்க கதைத்த காலம் அது. அவர்களுடன் பகிர்ந்து உண்டு, வெடிகளை பரிமாறி வெடித்த காலம் அது. குழுவாய் சேர்ந்தே பெரும்பான்மையான செயல்கள் அமைந்ததால் பகிர்தளித்தல்,சகிப்புத்தன்மை , சமயோசிதம்,பேச்சுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை போன்ற குணங்கள் வளர்ந்தன. இப்போதும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்கின்றனர். அது பெரும்பாலும் டேப்லெட் அல்லது செல் பேசியாகவே இருக்கிறது. இருக்கிறவர் இல்லாதவர் அனைவரும் தங்கள் தகுதிக்கேற்ப வாங்கிக் கொடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களில் விளையாடுவர் என்ற பரந்த எண்ணம் போலும். இவை தரும் விளையாட்டுகள் குழந்தைகள் மனதில் தனிமை உணர்ச்சியையும், வன்முறை உணர்ச்சியையும் தூண்டுகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. அவர்கள் மெல்ல மெல்ல இழந்து வரும் குழந்தைப் பருவ மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் சந்தர்ப்பமாக பண்டிகைகளைப் பார்க்க வேண்டும்.
         தீபாவளி யன்று வீட்டின்பெரியவர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆசி வாங்குவது அன்றைய வழக்கம். நாமே மூத்தவர்களாக இருந்தால் இளையவர்கள் நம்மைத் தேடி வந்து ஆசிர்வாதம் வாங்கினர். ஆனால் டிவியே கதியென்று காலை முதல் அதன் முன்னரே தவம் கிடப்பது இன்றைய வழக்கம். தொலைக்காட்சி சானல்கள் வேறு ' உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.... திரைக்கு வந்து சில நாட்களே ஆன...செம ஹிட், தெறி ஹிட், சரவெடி ஹிட்" என்று சகட்டு மேனிக்கு புதுப்படங்களை அள்ளித் தெளிக்கின்றன. பிறகு கேட்கவா வேண்டும்? உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க தான் ஃபேஸ்புக் , வாட்ஸ் அப்,ஹைக் என்று எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றதே. புத்தாடைகளை அணிந்துஇரண்டு கம்பி மத்தப்புகளை கையில் பிடித்த வாறு ஃபோட்டோ அப்லோட் செய்து" செம தீபாவளி மச்சி.." என்று ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது தான் தீபாவளிக் கொண்டாட்டம்.
           அன்றைய தலைமுறை தீபாவளி மலர்கள் அத்தனையையும் படித்து  ஆன்மீக்க் கருத்துகள், தகவல்கள்,தலைசிறந்த சிறுகதைகள் என்று ரசித்த தலைமுறை. ஆனால் இன்று எத்தனை பேருக்கு தீபாவளி ஏன் கொண்டாடுகின்றனர் என்ற வரலாறு தெரியும் என்பது கேள்விக்குறி. கற்றுத்தர சென்ற தலைமுறைக்கு விருப்பம் இல்லையா அல்லது கற்றுக்கொள்ள இன்றைய தலைமுறைக்கு விருப்பம் இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இரு இளம் பெண்கள் பேசிக்கொண்டதைக்கேட்டேன்," எங்கள் காலேஜில் தீபாவளிக்கு ஒரு பிரசெண்டேஷன்( presentation) பண்ணினார்கள். அதில் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்றதைத்தான் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம் என்று சொன்னார்கள்" என்று பேசிக்கொண்டார்கள். இது போன்ற தகவல்கள் கூட இன்றைய இளம் தலைமுறைக்கு பிரசெண்டேஷன் மூலமாகத்தான் சென்றடைகின்றன என்ற யதார்த்த உண்மை திகைக்க  வைக்கிறது. மொத்ததில் தீபாவளி என்பது மக்களின் திருவிழா என்பதை விட வியாபாரிகளின் திருவிழா என்று  கூறலாம்.

Wednesday, November 4, 2015

டிப்ஸ்.....

உண்ணவும், உறங்கவும், கதை பேசுவதற்கான இடம் மட்டுமா வீடு??அன்னையின் மார்போடு அணையும் கதகதப்பைத் தர வல்லதல்லவா வீடு!!வெயில், மழை, பனி, குளிர் என அனைத்திலிருந்தும் நம்மைக் காக்கும் வீடு. நம் துக்கம், சந்தோசம், கோபம், விருப்பு, வெறுப்பு என்று அனைத்து உணர்ச்சிகளையும் மௌனமாய் உள்வாங்கிக் கொள்ளும் உயிரற்ற, ஆனால் உயிருக்குயிரான இடமல்லவா வீடு!
        ஆனால் அதைப் பராமரிப்பதில் நம் காட்டும் அக்கறையை பற்றி சொல்ல வாரத்தைகளில்லை. பல லட்சம் செலவு செலவு செய்து வீட்டைக் கட்டி வந்தவுடன் முடிந்து விடுவதில்லை. அதனை அழகு படுத்துவதிலும் பராமரிப்பதிலும் தான் உண்மையான திறமை உள்ளது. அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. மிக எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நம்முடைய வீட்டை அனைவரும் ரசித்து பாராட்டும் வண்ணம் அமைக்கலாம்.
             வீடு பொலிவுடன் திகழ அலங்காரமான, படோபமான பொருட்கள் தேவை என்றில்லை. எளிமை தான் என்றுமே அழகு. வீடெங்கும் நிறைந்திருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினாலேயே வீடு அழகு பெற்றுவிடும். வீடு சிறியதாக இருக்கிறது, ஆனால் பொருட்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது , எதை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை.. பழையன கழிந்த பிறகு மட்டுமே புதியன புக வேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களை சேர்க்காதீர்கள். என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்று பழைய பொருட்களை சேகரிக்காதீர்கள்.  ஒரு பொருளை ஒரு மாத த்திற்கு ஒரு முறையேனும் நாம் உபயோகிக்கவில்லையெனின் அதன் பயன்பாடு நமக்குத்தேவையில்லை என்றே அர்த்தம். அதை தூர வீசிவிடலாம். மனமில்லை எனின் அட்டைப்பெட்டியில் போட்டு லாஃப்ட் என்னும் பரணில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
         வீட்டின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதே. சிலர் விருந்தாளிகள் வரலாம் என்று வரவேற்பறையை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு பிற அறைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவர். இது தவறு. சமையலறை, படுக்கையறை, குளியலறை என்று வீடு முழுக்கவுமே கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டியது அவசியம். கூடுதலாக சில நிமிடங்கள் வீட்டைப் பேணுவதில் செலவழித்தால் இது சாத்தியமே.
           வீட்டின் தரையை தினமும் சுத்தம் செய்து போலவே சமையல் மேடையையும், சிங்க் ஐயும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். குளியலறையை தினமும் கழுவி நீரில்லாமல் துடைத்து விட்டால் அவை நீண்ட நாட்கள் பொலிவுற விளங்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜ் இல் உள்ள காய், பழவகைகளை கை பார்க்க வேண்டும். பழைய மீந்த குழம்பு வகைகளை தூர வீச வேண்டும். வாரம் ஒரு முறை மைக்ரோவேவ் மற்றும் ஃபிரிட்ஜை சுத்தமாக துடைக்க வேண்டும். மாதமொரு முறை அனைத்து கப்போர்ட்களையும் ஒதுக்கி பேப்பர் மாற்ற வேண்டும். சமையலறைப் பொருட்களை சரி பார்த்து வெயிலில் காய வைக்க வேண்டியவற்றை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.மின் சாதனங்களை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அடிக்கடி துடைத்து சரிபார்த்து உள்ளே வைக்க வேண்டும். அழையா விருந்தாளிகளாய் வரும் தூசியும், பூச்சிகளும், தன்னுடன் அழைத்து வருவது நோய்நொடிகளைத்தான் என்பதை உணர்ந்து சுத்தத்தை பேண வேண்டும்.
        வீட்டிற்கு விருந்தினர் வரும் வீடு அழகாய்த் திகழ வேண்டும் என்பது அனைவரின் அவாவும் கூட. அந்நேரம் அனைத்தையும் ஒதுக்கி அடுக்கி வைக்காமல் எப்போதுமே அது போல் வைத்திருப்பது தான் சாமர்த்தியம். எந்தப்பொருளையையுமே எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்தாலே பாதி வேலை முடிந்துவிடும்.எந்தப் பொருளையும் தேடாமல் எடுத்துக்கொடுக்கும் நம் வீட்டில் பொருட்கள் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து முயன்றால் மட்டுமே வீட்டை அழகாக பராமரிக்க முடியும். வீட்டை கலைநயத்துடன் கட்டமைத்து, உள் அலங்காரம் செய்திருந்தாலும் அதை பராமரிப்பதைப் பொறுத்தே வீட்டின் அழகு வெளிப்படும்.