Wednesday, November 4, 2015

டிப்ஸ்.....

உண்ணவும், உறங்கவும், கதை பேசுவதற்கான இடம் மட்டுமா வீடு??அன்னையின் மார்போடு அணையும் கதகதப்பைத் தர வல்லதல்லவா வீடு!!வெயில், மழை, பனி, குளிர் என அனைத்திலிருந்தும் நம்மைக் காக்கும் வீடு. நம் துக்கம், சந்தோசம், கோபம், விருப்பு, வெறுப்பு என்று அனைத்து உணர்ச்சிகளையும் மௌனமாய் உள்வாங்கிக் கொள்ளும் உயிரற்ற, ஆனால் உயிருக்குயிரான இடமல்லவா வீடு!
        ஆனால் அதைப் பராமரிப்பதில் நம் காட்டும் அக்கறையை பற்றி சொல்ல வாரத்தைகளில்லை. பல லட்சம் செலவு செலவு செய்து வீட்டைக் கட்டி வந்தவுடன் முடிந்து விடுவதில்லை. அதனை அழகு படுத்துவதிலும் பராமரிப்பதிலும் தான் உண்மையான திறமை உள்ளது. அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. மிக எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நம்முடைய வீட்டை அனைவரும் ரசித்து பாராட்டும் வண்ணம் அமைக்கலாம்.
             வீடு பொலிவுடன் திகழ அலங்காரமான, படோபமான பொருட்கள் தேவை என்றில்லை. எளிமை தான் என்றுமே அழகு. வீடெங்கும் நிறைந்திருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினாலேயே வீடு அழகு பெற்றுவிடும். வீடு சிறியதாக இருக்கிறது, ஆனால் பொருட்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது , எதை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை.. பழையன கழிந்த பிறகு மட்டுமே புதியன புக வேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களை சேர்க்காதீர்கள். என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்று பழைய பொருட்களை சேகரிக்காதீர்கள்.  ஒரு பொருளை ஒரு மாத த்திற்கு ஒரு முறையேனும் நாம் உபயோகிக்கவில்லையெனின் அதன் பயன்பாடு நமக்குத்தேவையில்லை என்றே அர்த்தம். அதை தூர வீசிவிடலாம். மனமில்லை எனின் அட்டைப்பெட்டியில் போட்டு லாஃப்ட் என்னும் பரணில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
         வீட்டின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதே. சிலர் விருந்தாளிகள் வரலாம் என்று வரவேற்பறையை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு பிற அறைகளை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவர். இது தவறு. சமையலறை, படுக்கையறை, குளியலறை என்று வீடு முழுக்கவுமே கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டியது அவசியம். கூடுதலாக சில நிமிடங்கள் வீட்டைப் பேணுவதில் செலவழித்தால் இது சாத்தியமே.
           வீட்டின் தரையை தினமும் சுத்தம் செய்து போலவே சமையல் மேடையையும், சிங்க் ஐயும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். குளியலறையை தினமும் கழுவி நீரில்லாமல் துடைத்து விட்டால் அவை நீண்ட நாட்கள் பொலிவுற விளங்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜ் இல் உள்ள காய், பழவகைகளை கை பார்க்க வேண்டும். பழைய மீந்த குழம்பு வகைகளை தூர வீச வேண்டும். வாரம் ஒரு முறை மைக்ரோவேவ் மற்றும் ஃபிரிட்ஜை சுத்தமாக துடைக்க வேண்டும். மாதமொரு முறை அனைத்து கப்போர்ட்களையும் ஒதுக்கி பேப்பர் மாற்ற வேண்டும். சமையலறைப் பொருட்களை சரி பார்த்து வெயிலில் காய வைக்க வேண்டியவற்றை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும்.மின் சாதனங்களை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அடிக்கடி துடைத்து சரிபார்த்து உள்ளே வைக்க வேண்டும். அழையா விருந்தாளிகளாய் வரும் தூசியும், பூச்சிகளும், தன்னுடன் அழைத்து வருவது நோய்நொடிகளைத்தான் என்பதை உணர்ந்து சுத்தத்தை பேண வேண்டும்.
        வீட்டிற்கு விருந்தினர் வரும் வீடு அழகாய்த் திகழ வேண்டும் என்பது அனைவரின் அவாவும் கூட. அந்நேரம் அனைத்தையும் ஒதுக்கி அடுக்கி வைக்காமல் எப்போதுமே அது போல் வைத்திருப்பது தான் சாமர்த்தியம். எந்தப்பொருளையையுமே எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்தாலே பாதி வேலை முடிந்துவிடும்.எந்தப் பொருளையும் தேடாமல் எடுத்துக்கொடுக்கும் நம் வீட்டில் பொருட்கள் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து முயன்றால் மட்டுமே வீட்டை அழகாக பராமரிக்க முடியும். வீட்டை கலைநயத்துடன் கட்டமைத்து, உள் அலங்காரம் செய்திருந்தாலும் அதை பராமரிப்பதைப் பொறுத்தே வீட்டின் அழகு வெளிப்படும்.
 

No comments:

Post a Comment