Thursday, November 12, 2015

தீபாவளி


பண்டிகைகள்பற்றி நமது தொலைக்காட்சிகளும் விளம்பரங்களும் நினைவு படுத்தாவிடில், இன்றைய வேகமான உலகில் பண்டிகைகளை நாம் மறந்து போயிருக்கலாம் என்ற சந்தேகம் என்னுள் அவ்வப்போது எழும். தீபாவளி வருவதற்கு ஒரு மாத த்திற்கு முன்பிருந்தே கார்த்தி " கம்ம்மிங்... கம்ம்மிங்" என்று நினைவு படுத்திக் கொண்டே இருந்தார். கமல்ஹாசன் மற்றும் சூர்யா தம் பங்கிற்கு அபிமானத்தையும் டோட்டலி ஹேப்பி ஃபேமிலி என்றும் வற்புறுத்தி க்கொண்டிருந்தனர். இது போன்ற விளம்பரங்கள் தவிர தீபாவளி தரும் விடுமுறை மட்டுமே தீபாவளியை இன்றைய காலகட்டத்தில் நினைவில் நிறுத்துகிறது.
      சில பல வருடங்களுக்கு முன்னர் தீபாவளித் திருநாள் என்பது வாழ்க்கையோடு இணைந்த பொன்னாளாக கருதப்பட்டது. அது தந்த சின்ன சின்ன சந்தோசங்களை இன்றைய தலைமுறை சரிவர புரிந்து கொள்ளவில்லை என்றே கூறலாம். தீபாளிக்கு பத்து நாட்களுக்கு முன்பிருந்தே வீட்டுப் பெண்கள் என்னென்ன பலகாரங்கள் சுடவேண்டும் என்று திட்டமிட்டு தினமொன்று என்ற வித த்தில் விதவிதமாய் பலகாரம் சுட்டது அந்தக்காலம். சமயங்களில் பக்குவம் தவறும் போது பக்கத்து வீட்டுப் பெண்களுடன் கலந்து பேசி ஏதாவது செய்து சரிக்கட்டி விடுவர். கடுக் முடுக் என்று பக்குவம் தவறிய பலகாரங்கள் கூட அப்போது வீட்டில் உள்ளோருக்கு தேனாய்த் தித்தித்தது. இந்தக் காலத்து கதையே வேறு. ஸ்வீட் பாக்ஸே சரணம் என்று மக்கள் சாஷ்டாங்கமாய் பலகாரக் கடைகளிடம் சரணாகதி ஆகி விட்டனர். கேட்டால் நேரமில்லை என்ற பதிலே பிரதானமாய் வரும். தீபாவளி அன்றே கூட பல பேர் வீட்டில் உணவு விடுதிக்கு  சென்று விடுகின்றனர் அல்லது அங்கிருந்து தருவித்து உண்ணுகிறார்கள். எண்ணெய் குளியலை மறந்து விட்டீர்கள் என்று நான் நினைவு படுத்தினால் சின்ன வாண்டு கூட ' பழைய பஞ்சாங்கம்' என்று என்னை எள்ளி நகையாடும். சீயக்காய்த்தூளை ஷாம்பூக்கள் கபளீகரம் செய்து ஒரு மாமாங்கம் ஆகிவிட்டது.
         தீபாவளி என்றாலே பட்டாசு தான் பிரதானம். சில நாட்களுக்கு முன்பிருந்தே பட்டாசு வெடிக்கத் தொடங்கி, தீபாவளியன்று அடைமழை பெய்தாலும்் நமத்துப் போன கம்பி மத்தாப்பு மற்றும் குச்சி மத்தாப்புக்ளுடன் போராடுவது அந்தக் காலம். இன்று மத்தாப்புகள் மற்றும் பட்டாசுகள் கொளுத்தி மகிழும் மகிழ்ச்சியை அறியாமலேயே குழந்தைகள் வளர்கின்றனர். " பூமிக்கு கேடு, காற்றுக்கு மாசு" என்று பெரிய மனித தோரணையுடன் குழந்தைகள் பேசுகின்றன. குழந்தைப்பருவத்திற்கே உரித்தான இன்பங்களைத் தர மறுப்பது அல்லவா இச்செய்கை? இது போன்ற பிரச்சாரங்களால் ஒரு தொழிலே நசிந்தது வருவதை அவர்கள் அறிவார்களா? இதனை நம்பி வாழும் ஆயிரக்கணக்கானவர்களின் இயல்வாழ்க்கை பாதிக்கப்படுவதை உணர்வார்களா?
       " எங்கள் வீட்டில் இவ்வளவு பட்டாசு வாங்கினார்கள்..எங்கள் வீட்டில் இன்னென்ன பலகாரம் செய்தார்கள்" என்று தோழர்களிடம் பெருமை பொங்க கதைத்த காலம் அது. அவர்களுடன் பகிர்ந்து உண்டு, வெடிகளை பரிமாறி வெடித்த காலம் அது. குழுவாய் சேர்ந்தே பெரும்பான்மையான செயல்கள் அமைந்ததால் பகிர்தளித்தல்,சகிப்புத்தன்மை , சமயோசிதம்,பேச்சுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை போன்ற குணங்கள் வளர்ந்தன. இப்போதும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பரிசளிக்கின்றனர். அது பெரும்பாலும் டேப்லெட் அல்லது செல் பேசியாகவே இருக்கிறது. இருக்கிறவர் இல்லாதவர் அனைவரும் தங்கள் தகுதிக்கேற்ப வாங்கிக் கொடுக்கிறார்கள். பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களில் விளையாடுவர் என்ற பரந்த எண்ணம் போலும். இவை தரும் விளையாட்டுகள் குழந்தைகள் மனதில் தனிமை உணர்ச்சியையும், வன்முறை உணர்ச்சியையும் தூண்டுகின்றன என்று ஆய்வுகள் சொல்கின்றன. அவர்கள் மெல்ல மெல்ல இழந்து வரும் குழந்தைப் பருவ மகிழ்ச்சியை மீட்டெடுக்கும் சந்தர்ப்பமாக பண்டிகைகளைப் பார்க்க வேண்டும்.
         தீபாவளி யன்று வீட்டின்பெரியவர்களைச் சந்தித்து அவர்களிடம் ஆசி வாங்குவது அன்றைய வழக்கம். நாமே மூத்தவர்களாக இருந்தால் இளையவர்கள் நம்மைத் தேடி வந்து ஆசிர்வாதம் வாங்கினர். ஆனால் டிவியே கதியென்று காலை முதல் அதன் முன்னரே தவம் கிடப்பது இன்றைய வழக்கம். தொலைக்காட்சி சானல்கள் வேறு ' உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக.... திரைக்கு வந்து சில நாட்களே ஆன...செம ஹிட், தெறி ஹிட், சரவெடி ஹிட்" என்று சகட்டு மேனிக்கு புதுப்படங்களை அள்ளித் தெளிக்கின்றன. பிறகு கேட்கவா வேண்டும்? உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க தான் ஃபேஸ்புக் , வாட்ஸ் அப்,ஹைக் என்று எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றதே. புத்தாடைகளை அணிந்துஇரண்டு கம்பி மத்தப்புகளை கையில் பிடித்த வாறு ஃபோட்டோ அப்லோட் செய்து" செம தீபாவளி மச்சி.." என்று ஸ்டேட்டஸ் அப்டேட் செய்வது தான் தீபாவளிக் கொண்டாட்டம்.
           அன்றைய தலைமுறை தீபாவளி மலர்கள் அத்தனையையும் படித்து  ஆன்மீக்க் கருத்துகள், தகவல்கள்,தலைசிறந்த சிறுகதைகள் என்று ரசித்த தலைமுறை. ஆனால் இன்று எத்தனை பேருக்கு தீபாவளி ஏன் கொண்டாடுகின்றனர் என்ற வரலாறு தெரியும் என்பது கேள்விக்குறி. கற்றுத்தர சென்ற தலைமுறைக்கு விருப்பம் இல்லையா அல்லது கற்றுக்கொள்ள இன்றைய தலைமுறைக்கு விருப்பம் இல்லையா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இரு இளம் பெண்கள் பேசிக்கொண்டதைக்கேட்டேன்," எங்கள் காலேஜில் தீபாவளிக்கு ஒரு பிரசெண்டேஷன்( presentation) பண்ணினார்கள். அதில் நரகாசுரனை கிருஷ்ணர் கொன்றதைத்தான் நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம் என்று சொன்னார்கள்" என்று பேசிக்கொண்டார்கள். இது போன்ற தகவல்கள் கூட இன்றைய இளம் தலைமுறைக்கு பிரசெண்டேஷன் மூலமாகத்தான் சென்றடைகின்றன என்ற யதார்த்த உண்மை திகைக்க  வைக்கிறது. மொத்ததில் தீபாவளி என்பது மக்களின் திருவிழா என்பதை விட வியாபாரிகளின் திருவிழா என்று  கூறலாம்.

No comments:

Post a Comment