Saturday, December 5, 2015

இலக்கை நோக்கிய பயணம்

பிரையன் டிரேசி.

                 உலகில் உள்ள சுயமுன்னேற்ற பயிலரங்குகள் அனைத்திலும் மிகப் பிரபலமான பெயர் " பிரையன் டிரேசி". தன்னுடைய உற்சாகமான உரைகளாலும், புதுமையான பயிற்சிப் பட்டறைகளாலும் உலகின் இளைஞர்கள் அனைவரையும் கவர்ந்தவர் இந்த எண்பது வயது இளைஞர். மிக சமீபத்தில் சென்னைக்கு வந்து தனது ஆணித்தரமான உரையால் உன்னத இலக்குகளை நேர்த்தியாக அடைய சில இலகுவான முறைகளை கற்றுத்தந்தார்.  அவற்றின் சில துளிகள்:
                   பெரும்பாலானோருக்கு தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவுகளாகவே இருக்கும் போது ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்து விட முடிகிறது?  இலக்குகளை நிர்ணயிக்கவும் , அவற்றை நோக்கி பயணிக்க எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும், வெற்றியடைய பின்பற்ற வேண்டிய உத்திகளைப் பற்றியும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்தார்.
                   எந்த அளவுக்கு உங்களால் முடியுமோ அந்த அளவுக்கு தெளிவாகவும், விரிவாகவும் உங்கள் இலக்குகளை நீங்கள் வரையறுக்க வேண்டும். இலக்குகள் தான் உங்களை உந்தித் தள்ளும் மாபெரும் சக்தி. இலக்கில்லா மனிதனின் சக்தி, தெளிவில்லாத நீரோடையைப் போல பெருமளவு வீணாகின்றது. வெற்றியடைய ஒரு சுலபமான வழி உள்ளது. அடுத்த ஒரு ஆண்டுக்கு பத்து இலக்குகளை நிர்ணயிங்கள். அவற்றை ஒரு வாரத்திற்குரிய இலக்குகள், ஒரு மாத த்திற்குரிய இலக்குகள், ஆறு மாத த்திற்குரிய இலக்குகள், ஒரு வருடத்திற்குரிய இலக்குகள் என பிரித்துக் கொள்ளுங்கள். அவற்றை அடைய எல்லாவிதமான முயற்சிகளையும் தொடர்ந்து செய்து வாருங்கள். ஒரு வருடத்தின் இறுதியில் நீங்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தைக் கண்டால் நீங்களே வியந்து போவீர்கள். 
                    தடைகளைக் கண்டு தளர வேண்டாம். தடைகள் யாவும் நாம் தகர்த்தெறிவதற்காகவே தோன்றுவன. தடைகளில் இருபது சதவீதம் மட்டுமே வெளியிலிருந்து வரும். எண்பது சதவீத தடைகள் மனத்தடைகள் தாம். மனத்தடைகளை வென்று விட்டால் அதுவே வெற்றிக்கும், மகிழ்ச்சிக்குமான ஒரு வழிப்பாதையாய் அமையும்.
                    நம் படைப்பாற்றலை வெளிக்கொணரும் திறவுகோல் என்ன என்பதை முதலில் கண்டுணர வேண்டும். நம்முடைய மிகப்பெரிய இலக்குகளை அடைய இருபது வழிகளை எழுத வேண்டும்.முதல் ஐந்து வழிகள் மிகவும் எளிதானவையாக இருக்க வேண்டும். அடுத்த ஐந்து வழிகள் கடினமானதாக இருக்க வேண்டும்.  அதற்கு அடுத்த ஐந்து வழிகள் வலி ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கு அடுத்த ஐந்து வழிகள் மிகவும் கடினமான,  எளிதில் செயல்படுத்த முடியாத, வலி ஏற்படுத்தும் வழியாக இருக்க வேண்டும். அந்த இருபதாவது வழி தான் நம்முடைய வழி.  அதனை செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம்.
                           எதுவுமே கடினமல்ல. எதையும் கற்று கொள்ளலாம். எதற்கும் காலம் கடந்து விடவில்லை. இன்றைக்கு பெரும் சாதனையாக கருதப்படும் வியாபாரத் திறன்கள், விற்பனைத்திறன்கள், பணம் பண்ணும் திறன்கள் யாவும் கற்றுக் கொள்ளும் அளவிற்கு எளிதானவையே, முறையாக பயிற்சி செய்தால். இன்றைக்குப் பெரும் பணக்கார ர்களாய்த் திகழும் எல்லோரும் ஒரு கால கட்டத்தில் எளியவர்களாய்த் திகழ்ந்தவர்களே. அவர்கள் ஆற்றிய சாதனைகள் யாவும் கடும் முயற்சிக்குப் பின் கிடைக்கப்பெற்றவையே ஆகும். 
           இலக்குகளை எழுதுங்கள். பின் காலக்கெடுவை நிர்ணயிங்கள். பின் அதனை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்குங்கள். " ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு சின்ன அடியில் தான் தொடங்குகிறது." நாம் பட்டியலிட்ட வழிமுறைகளை ஒழுங்கு படுத்த வேண்டும். எந்த வரிசைக்கிரமத்தின் படி செய்ய வேண்டும், எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். இருபது சதவித ஒழுங்கு படுத்தலின் நேரம் நமது எண்பது சதவீத உழைப்பை நிர்ணயிக்கும்.
              சுருக்கமாக பிரையன் டிரேசி அவர்களின் அறிவுரை:
1. உன் லட்சியம் எதுவோ அதை காகித த்தில் எழுது.
2. நேரம், அளவு, செயல் திட்டம் என முடிந்த அளவு காகித த்தை நிரப்பு.
3. உன் லட்சியத்தை ஏற்கனவே அடைந்தவரைப் பட்டியலிடு.
4. அவர்கள் என்ன செய்ததினால் வெற்றி அடைந்தார்கள் என கண்டுபிடி.
5. நீயும் அதையே செய்.
வெற்றி பெற நமக்குத் தேவையான குணநலன்களாக இவற்றை பட்டியலிடுகிறார். தெளிவு, தகுதி, அர்ப்பணிப்பு, படைப்புத்திறன், கொள்கை மாறாதிருத்தல், கற்றலை நிறுத்தாதிருத்தல். அறிவியல் கண்ணோட்டத்துடன் , ஆனால் எளியதாக புரிந்து கொள்ளும் வகையில் வெற்றிப்படிகளில் ஏறுவது எப்படி என விளக்குகிறார்.
                    இந்த வழிமுறைகளை நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொண்டாமானால் நமது இலக்குகளை வெகு விரைவில் தொட்டு விடலாம். திருவள்ளுவர் மிக அழகாக இரண்டு அடிகளில் கூறுகிறார்,
" தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
    மெய்வருத்த கூலி தரும்." 

1 comment:

  1. superb!உத்வேகம் தரும் பதிவு! வாழ்த்துகள் முரு.

    ReplyDelete