Tuesday, December 1, 2015

கோயிலுக்குப் போகலாம்

            ஞாயிற்றுக்கிழமைகளில் கண்ணனும் அவனுடைய நண்பன் ரவியும் தவறாமல் மாலையில் சந்திப்பார்கள். பூங்காவில் அமர்ந்து சிறிது நேரம் அளவளாவி விட்டு இரவு எட்டு மணி ஆனதும் அவரவர் வீட்டிற்கு சென்று விடுவர்.
             அன்று கண்ணனுக்குப் பிறந்த நாள். சந்தோசமாகப் பேசிக் கொண்டிருந்த போது அருகில் உள்ள கோயிலில் மணி அடித்தது. " கண்ணா கோயிலுக்குப் போகலாமா? உன் பிறந்த நாளன்று உன் பெயரில் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வரலாம்." என்றான் ரவி. "ஓ! போகலாமே" என்றவாறே டக்கென்று எழுந்தான் கண்ணன்.
              அந்த பூங்காவின் மிக அருகில் ஒரு பிரபலமான கோயில் இருந்தது. அதன் உட்பிரகாரமும் வெளிப்பிரகாரமும் மிக விசாலமாக இருக்கும். கோயிலைச்சுற்றி சுமார் நூறு கடைகள் இருக்கும். எப்போதும் வியாபாரம் ஜே..ஜே என்று இருக்கும். செவ்வாய் , வெள்ளி என்றில்லாமல் எல்லா நாளும் கூட்டம் அலைமோதும். 
               சுவாமிக்கு கண்ணன் பெயரில் ரவி அர்ச்சனை செய்தான். கண்ணன் அமைதியாய் சாமி கும்பிட்டான். ரவி அர்ச்சகர் தட்டில் பத்து ரூபாய் போட்டான். அவர் அவனுக்கு விபூதி ,பிரசாதம் தந்தார். கண்ணன் ஒன்றும் போடவில்லை. அர்ச்சகர் அவனை கண்டுகொள்ளாமல் சென்று விட்டார்.  கண்ணன் ரவியினுடையதை எடுத்து இட்டுக் கொண்டான். கோயில் உண்டியலில் கண்ணன் காணிக்கை போடுவான் என்று ரவி எதிர்பார்த்தான். ஆனால் அவன் செய்யவில்லை. கண்ணனுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது போல என்று ரவி எண்ணிக் கொண்டான். ஆனால் கேட்கவில்லை. பைக்கை நோக்கி சென்றனர்.
               பைக்கில் ஏறியவாறே கண்ணன்," ரவி நான் ஒரு கோயிலுக்கு கூட்டிட்டு போறேன். வர்றியா?" என்றான். தலையை ஆட்டியவாறே பைக்கில் ரவி அவன் பின் ஏறினான். ஊருக்கு வெளியே இருந்தது அந்த கோயில். கூட்டமே இல்லை. பழமையான பாரம்பரியமான கோயில் அது. ஒன்றிரண்டு வயதானவர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். அர்ச்சகர் நிதானமாக மந்திரம் சொல்லி பூஜை செய்தார். விபூதி தட்டில் ஐம்பது ரூபாய் போட்டான் கண்ணன். அவர் அவனை ஆசிர்வாதம் செய்தார். 
                உண்டியலில் ஆயிரம் ரூபாய் போட்டான். ஐந்து நிமிடம் தியானம் செய்தான். பின் " போகலாமா?" என்று எழுந்தான்.
                 ரவி அவனை ஆச்சர்யமாகப் பார்த்தான். அவன் மனதில் ஓடியது கண்ணனுக்கு புரிந்தது போல. " அங்கு வேறு மாதிரியும் இங்கு வேறு மாதிரியும் நடந்து கொள்கிறேன் என்று பார்க்கிறாயா? அந்தக் கோயில் வியாபார மயமாகிவிட்டது. நான் ஒருவன் கொடுப்பதால் அங்கு நிறையப் போவதில்லை. ஆனால் இங்கே நான் கொடுத்த பணம் உரிய வகையில் செலவிடப்படும். " என்று புன்னகைத்தான். ரவியின் மனதில் கண்ணன் பல மடங்கு உயர்ந்தான். கண்ணனை மனதார வாழ்த்தியவாறு ரவி அவன் பைக்கில் ஏறினான்.

2 comments:

  1. முரு,,,,கதை அருமையா இருக்கு...நான் முதியோர் இல்லம் அழைத்து செல்வானோ என நினைத்தேன்ப்பா...;)

    ReplyDelete