Sunday, March 27, 2016

பச்சைப்பாம்பும் நானும்.

அது என்னவோ தெரியலீங்க... இந்தப் பெண்களுக்கு சமைக்கிறதுன்னா எங்கேயிருந்து தான் இவ்வளவு உற்சாகம் வருதோ!? இரண்டு பெண்கள் சந்தித்தால் உடனே சமையலைப் பற்றியும், சேலை பற்றியும், பிள்ளைகளின் படிப்பையும் பற்றியே பேசுகின்றனர். தான் காலையில் என்ன சமைத்தேன், எப்படி சமைத்தேன், எப்படி எல்லோரும் விரும்பி சாப்பிட்டனர் என்று விலாவரியாக பேசுகின்றனர். ஏனோ எனக்கு இந்த கலை கைவர மாட்டேன் என்கிறது.
        காலையில் என்ன சமைத்தோம் என்பது பற்றி மாலையில் பேச அது என்ன அவ்வளவு முக்கியமான விஷயமா? சமைப்பதையும் தாண்டி உலகில் முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கே! உடனே உலகப் பொருளாதாரம் பற்றியா பேச்ச்சொல்கிறாய்? அவர்களுக்கு விருப்பமானதை அவர்கள் பேசுகிறார்கள், உனக்கென்ன? என நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. நான் சொல்ல வருவது என்னவென்றால்... சமையலறையையும் தாண்டி பெண்கள் விஷய ஞானம் உள்ளவர்களாய்த் திகழ வேண்டும் என்பது தான். பெண்கள் தங்களையே சமையலறைகளில் தொலைத்து விடுகின்றனர். ஆனால் நம் பெண்களுக்கு தங்களைத்தேடும் பிரக்ஞை இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்வின் பெரும் பகுதியை குடும்ப உறுப்பினர்களுக்காக அடுக்களையில் தொலைத்து விட்டு தனக்கென ஒரு தனித்துவம் இல்லாமல் போய்விடுகின்றனர். சரி, அவர்கள் செய்யும் சேவைக்கு ஒரு அங்கிகாரமாவது கிடைக்கிறதா? அதுவும் இல்லை. கணவரும், குழந்தைகளும் தரும் பட்டம்," அவளுக்கு ஒண்ணும் தெரியாது" என்பது தான்.
      ஆனால் அவர்களைச்சொல்லியும் குற்றமில்லை. பெண்களில் எத்தனை பேர் நாளிதழ்களைப் படித்து பொது அறிவை வளர்த்துக் கொள்கின்றனர்? பொது அறிவு என்பது பக்கத்து வீட்டில் என்ன நடந்தது? மூணாவது தெரு பெண் யாரைக் காதலிக்கிறாள் போன்ற அதிமுக்கியமான நிகழ்வுகள் அல்ல. எத்தனை பேருக்கு வங்கிக்கணக்கு பார்க்கத் தெரியும்? சீட்டுப் போட்டு தவணையில் பொருட்கள் வாங்கும் கணக்கு கணக்கு அல்ல. 'ஸ்மார்ட்' ஃபோன் வைத்திருந்தாலும் அதனை இயக்கத்தெரியாமல் விழிப்பதும், மாலை வேளைகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கி கிடைப்பதும் வாடிக்கையான ஒன்று தானே!
        பொதுவாக, எனக்கு ஒரு அபிப்ராயம் உண்டு. நமது சமையல் முறைகள் அவ்வளவு எளியவனாக இல்லை என்று. காலையில் நாம் சமைக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சுமார் ஒன்றுஅல்லது ஒன்றரை மணி நேரம். இதில் முந்தைய நாள் முஸ்தீபுகளின் நேரத்தை நான் கணக்கில் சேர்க்கவில்லை. முந்தைய நாள் முஸ்தீபுகள் என்று நான் சொன்னது இட்லி, தோசை, ஆப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு மாவாட்டுவதைத்தான். மதியம் சமைப்பதற்கு சுமார் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொள்கிறோம். அதற்கு முன்பு காய்கறி வாங்குவதற்கு எனத் தனியே அரை மணி நேரம். இரவில் சமைக்க ஒரு மணி நேரம். இடையிடையே டீ, காபி, பால் என்று நேரம் பறந்தோடுகிறது. ஆனால் வெளிநாடுகளில் சமைப்பதற்கு இவ்வளவு நேரம் செலவளிப்பதில்லை. அவர்களுடைய மெனுவில் இத்தனை ஐட்டங்கள் கிடையாது. வீட்டில் உள்ளோர்கள அனைவருமே பணிக்கு செல்வதால் சமையலை எளிமையாகசெய்கின்றனர். ஆண் பெண் பாகுபாடின்றி வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்கின்றனர். பதின் பருவத்தினர் கூட கட்டாயம் பெற்றோருக்கு உதவ வேண்டும். ஆனால் நம் நாட்டில் எல்லாமே தலை கீழ்.
          நேரம் அதிகமானாலும் , சாப்பாட்டிற்கு சுவை ஊட்டுகிறேன் பேர்வழி என்று நெய்யையும், முந்திரியையும் அனைத்திலும் வாரி இறைத்து சர்க்கரை வியாதியையும், கொலஸ்ட்ராலையும் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்போர் அதிகம்.சுவையை விட ஆரோக்யமே பிரதானம் என்று சமைக்க வேண்டும். சமையலை எளிதாக்குங்கள். உங்கள் பொன்னான நேரத்தை உங்களுக்கான நேரமாக்கி உங்களுக்காக செலவிடுங்கள்.சரி, நான் ஏதோ சொல்கிறேன் என்றாலும் எனக்கு என் சமையலின் மீது கொஞ்சம் அவநம்பிக்கை உண்டு. என் கணவரும், குழந்தைகளும் நான் நன்றாக சமைக்கிறேன் என்று எனக்கு சான்றிதழ் அளித்தாலும், நான் நம்பிக்கை இன்றி," நிஜமாகவே நன்றாக இருக்கிறதா?" என்ற கேட்டுக்கொண்டே இருப்பேன்.
           இப்படித்தான் முன்பொரு நாள், என்னுடைய இளவயதில், என் வீட்டில் பணிபுரியும் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தேன். நன்றாக சமைக்க என்ன செய்ய வேண்டும் என நான் அவளிடம் கேட்டேன். கவனமாக, பொறுமையாக, ஈடுபாட்டோடு ..இது போன்ற ஒரு பதிலை நான் எதிர் பார்த்தேன். ஆனால் நான் அதிரும் வகையில் ஒரு பதிலைக் கூறினாள் அவள். "அம்மா...பச்சைப்பாம்பை ஒரு தடவை தொட்டிங்கன்னா, உங்களுக்கு கைமணம் தானாகவே வரும். அப்புறம் உங்க கைப்பக்குவம் யாருக்கும் வராது." என்றாள்.முதலில் நான் அதிர்ந்து போனேன். பிறகு சிரித்துக்கொண்டே," நடக்கிற காரியமாகப் பேசு. பச்சைப்பாம்புக்கு நான் எங்கே போக?" என்றேன். நல்லவேளை நான் பிடித்துக்கொண்டு வருகிறேன் என்று அவள் கிளம்பவில்லை. 
         இது நடந்து முடிந்து இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது என் மகளே நன்றாக சமைப்பாள். ஒரு மாலை வேளையில் குடும்பமாக உரையாடிக் கொண்டிருந்த போது இந்த பழைய சம்பவத்தை நினைவுபடுத்தி கேலியும் கிண்டலுமாய் பேசிக் கொண்டிருந்தேன். உடனே என்மூத்த மகள்," அம்மா.. நான் பச்சைப் பாம்பை தொட்டிருக்கேன் மா. நம் பெரியம்மா வீட்டில் ஒரு முறை தோட்டக்கார ர் பச்சைப்பாம்பை தோட்டத்தில் அடித்து விட்டு பெரியம்மாவிடம் அதைத் தொடச் சொன்னார். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த என்னையும் தொடச் சொன்னார்கள்" என்றாள் புன்னகையுடன். 
       உடனே என் இளைய மகள்," அம்மா ..பாத்தீங்களா..அது உண்மை தான் போலிருக்கு. நீங்களும் பச்சைப்பாம்பை தொட்டிருக்கலாம்" என்றாள் சிரித்துக்கொண்டே. "இப்ப என்ன சொல்ல வர்ற? என் சமையல் சரியில்லை என்றா?" என நான் சிரித்துக்கொண்டே கேட்டேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் என்னை வாருவதையே தொழிலாகக்கொண்ட என் கணவர் இப்போது உள்ளே நுழைந்தார், " அதை நாங்க எங்க வாயால சொல்ல மாட்டோம்." நான் அடிக்க கையை ஓங்கியவுடன் மூவரும் ஓடி விட்டனர். " எங்கே போறிங்க?" என்ற எனது கேள்விக்கு அவர்கள் தந்த பதில் "உங்களுக்கு பச்சைப்பாம்பு பிடிக்க...."

1 comment:

  1. சுவைபட எழுதியிருக்கேப்பா....இந்த பச்சை பாம்பு விஷயம் என்னோட அப்பாயி காலத்துலேர்ந்து இருக்கு....எப்படியோ நீ சொல்ற விஷயத்த நான் அடிக்கடி யோசிப்பாது உண்டு....அதோட எனக்கு சின்ன பிள்ளையில இருந்து ஆசை உண்டு...அது வந்து காலையா இருக்கட்டும் மாலையா இருக்கட்டும் டீக்கடை வாசல்ல எல்லா ஆம்புளப்பிள்ளைகளும் ஜாலியா நின்னுகிட்டு டீ குடிக்குங்க...ஆனா பொம்பளைப்பிள்ளைகள் யாரையும் பாக்க முடியாது....அங்கன நாமல்லாம் சேந்துகிட்டு டீ சாப்பிட்டுட்டு கதைபேசிகிட்டு வரனும்...:)

    ReplyDelete