Wednesday, April 20, 2016

பயணங்கள் பலவிதம்.

           எந்த ஊருக்கு சுற்றுலா செல்வதாக இருந்தாலும் அதைப் பற்றி முன்னரே இணையத்தில் தகவல்கள் தேடுவது என் வழக்கம். மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள " லோனாவாலா" செல்வது என்று முடிவானதும் கூகுளிடம் சரண் அடைந்தேன். அதனைப் பற்றிய செய்திகள், கட்டுரைகள், புகைப்படங்கள் யாவும் என் ஆர்வத்தை மேலும் தூண்டுவனவான அமைந்தன. அந்த நாளுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன்.
            செப்டெம்பர் 28, 2015 லோனாவாலாக்கு என் குடும்பத்தினருடன் பயணமானோம். இன்றைய ட்ரெண்டின் படி ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று அனைத்திலும் பதிவிட்டு விட்டு கிளம்பினோம். ஒன்றரை நாள் இரயில் பயணமாகையால் உற்சாகத்திற்கு குறைவில்லை. தமிழகம் தாண்டியதும் வருண பகவானும் கருணை காட்டி மழை பொழிய வைத்து பயணத்தின் போது அனல் தெரியாமலிருக்க உதவினான். லோனாவாலா புனேவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவிலிருக்கிறது. இதன் இதமான, மிதமான குளிருடன் கூடிய சீதோஷ்ணநிலை, அழகிய வண்ணப்பூக்களுடன் திகழும் சிறிய மலைக்குன்றுகள், பரந்து விரிந்துப்பட்ட ஏரிகள், அடிக்கடி மழை பெய்து குளிர்ச்சியான சூழல் போன்றவை சுற்றுலா வரத்தூண்டுவனவாய் அமைந்துள்ளன. மும்பை மற்றும் புனேவாசிகளின் வார இறுதி நாட்களின் விருப்பத் தேர்வாக லோனாவாலா மாறியுள்ளது.(weekend getaway).
          நகரமயமாதலின் சாயல் இன்னும் அதிகம் விழாத சிறு நகரான லோனாவாலாவின் எளிமை என்னை வெகுவாகக் கவர்ந்தது. நகரின் மிக அருகில் அமைந்த Tiger point இன் எழில் காண்போரை தன் வசமாக்கிக் கொள்ளும் திறன் கொண்டதாய் வனப்புடன் திகழ்ந்தது. இயற்கை எங்களுக்கு, குறிப்பாக கண்களுக்கு, என்ன விருந்தளிக்கப் போகிறதோ என்று ஆவலுடன் பயணித்தோம். இயற்கை அன்னை எங்களை ஏமாற்றவில்லை. வாரி வழங்கியிருந்தாள். பரந்து விரிந்த மலைப்பிரதேசமெங்கும் பூத்துக் குலுங்கிய சிறு மலர்கள் ...காணக் கண் கோடி வேண்டும்.
          ஒரு மாலை நேரத்தை ஏகாந்தமாக கழிப்பதற்கு உகந்த அழகான, இயற்கைப் பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளைப் பிண்ணனியாக்க் கொண்டு 'புஷி அணை' அமைந்துள்ளது. இதன் அமைதியான சூழலும், ஸ்படிகம் போன்ற நீரும் மனதிற்கு இன்பம் அளிக்கும் விதமாக இருந்தது. மழைக்காலத்தில் இந்த இடத்தைப்பார்ப்பது சிறந்ததாக இருக்கும். அச்சமயத்தில் அணை நிரம்பி வழிந்து நீர்வீழ்ச்சி போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. மழைக்காலங்களில் வழிந்தோடும் நீரில் படிக்கட்டுகளில்  நனைத்து கொண்டு குழந்தைகளுடன் பெரியவர்களும் குதூகலிப்பதைக் காணலாம்.
            லோனாவாலா இத்தகைய எழில் காட்சிகளைக் கொண்டிருந்தாலும் இதன் சுற்று வட்டாரத்தில் பாரம்பரியம் மிக்க கோட்டைகளையும் புராதனக் குகைகளையும் கொண்டுள்ளது. கார்லா குகைகள் சுமார் 16 கி.மீ தொலைவில் உள்ளது. இரண்டாம் நூற்றாண்டைக் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஹீனயானம் எனப்படும் பௌத்த மரபுப்படி அமைக்கப் பட்டுள்ளது. இந்தியாவின் புராதன சிற்பக்கலைக்கு எடுத்துக் காட்டாக  கருதப்படுகின்றது கார்லா குகையின் அருகிலேயே ஏக்வீராதேவியின் திருக்கோயில் அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்க விரும்புவோருக்கு மிகவும் தோதான இடம், பாரம்பரியமும், புராதனமும் அருகருகே அமைந்துள்ளபடியால்.
              கார்லா குகைகயைப் போலவே பாஜாக் குகைகளும் உள்ளன. பள்ளி ஒன்று சுற்றுலா வந்திருந்தபடியால் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். சூரிய ஒளி மாலை வேளையில் நேரடியாக குகைக்குள் விழுவதால் அதன் நுட்பமான வேலைப்பாடுகள் நன்கு தெரிகின்றன. மிகப் பெரிய சைதன்யம், எளிமையான எண்கோண தூண்கள், அவற்றின் மீது அமைந்த அரை நீள் வட்ட கூரை, மர வளைவுகள், வெளிப்புற சாளரங்கள், நுட்பமான சிற்பங்கள் என இவற்றின் அழகியலை வருணித்துக் கொண்டே போகலாம். துறவிகள் தண்ணீர் குடிக்க என இருக்கும் அமைப்புகள், தங்குவதற்கான சிறிய அறைகள் என அதிஅற்புதமான மடாலயங்களாகத் திகழ்கின்றன. கல்லிலான நுட்பமான சிற்பங்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும். வணிகர், துணைகளுடன் வரும் தலைவன், யானை மீதமர்ந்த கந்தர்வன், தபேலா வாசிக்கும் பெண்,நடனமாடும் பெண் என பல தரப்பட்டன. மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், சாஞ்சி போன்று இல்லாமல் இங்கு ஒரே இடத்தில் அமைந்திருக்கும் கல்லிலான பதினான்கு ஸ்தூபிகள்.ஒரு சிறு குகைக்குள் ஒன்பதும், குகைக்கு வெளியே ஐந்துமாய் நெருக்கமாய் உள்ளன.இவற்றைக் கண்டவுடன் நம் முன்னோர்கள் மீது மரியாதையும், நாம் வாழும் தேசம் குறித்து பெருமிதமும் ஏற்படுவது திண்ணம்.
                 சுமார் 52 கி.மீ தொலைவில் உள்ள இரும்புக்கோட்டை என்று அழைக்கப்படும் லோஹ்ஹார் கோட்டைப் பயணமானோம். சிகரம் வைத்தாற் போல பாங்குடன் திகழ்ந்த இந்தக் கோட்டையை அடைய சிறிது சிரமாயிருந்தது. கீழே வந்து கொண்டிருந்த ஒருவரிடம் கேட்ட போது பட்ட கஷ்டம் மேலே உள்ள காட்சி(view)யைக் கண்டவுடன் மறந்துவிடும் என்றார். உண்மை தான். என்னை அறியாமல் 'வாவ்' என்றேன் நான். குரு கோவிந்த் சிங்கினால் கட்டப்பட்ட இக்கோட்டை அதிக வருடங்கள் மராட்டிய அரசுகளின் வசமே இருந்தது. ஐந்து வருடங்கள் முகலாயர்கள் வசம் இருந்ததாகவும் பின் மாவீரன் சிவாஜி அதை மீட்டு தன்னுடைய கருவூலமாகப் பயன்படுத்தினான் என வரலாறு கூறுகிறது. 
                   மஹாராஷ்டிர உணவான வடாபாவ், போஹா, மிசெல் போன்றவை, அம்மாநிலப் பெண்களின் 
சேலை கட்டும் பாங்கு, ஆண்கள் பலர் காந்தி குல்லாய் அணிந்து வெண்ணிற உடைகளில் வலம் வந்தது என ஒவ்வொன்றையும் ரசித்தேன். தங்கியிருந்த ஹோட்டலில் அருகிலுள்ள வனப்பகுதிக்கு ஒரு நாள் காலையில் ட்ரெக்கிங்(trekking) அழைத்து சென்றார்கள். அப்போது மும்பையைச் சேர்ந்த என் வயதை ஒத்த இரு பெண்கள் தோழிகள் ஆகிவிட்டனர். நம் ஊரின் பில்டர் காபியின் சுவையையும் மணத்தையும் வானளாவப் புகழந்தனர். அவர்கள் கூறிய ஆச்சர்யமூட்டும் தகவல் ஒன்று. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு மும்பையிலிருந்து லோனாவாலாக்கு, அவர்களுடைய மாமா வீட்டுக்கு வரும் போது , இன்ஜின் டிரைவரிடம் சொல்லி மாமா வீட்டின் எதிரிலேயே இறங்கிக் கொள்வார்களாம்( அவர்களுடைய மாமா வீடு இரயில் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் இருந்தது). ஆச்சர்யத்துடன் அதிர்ந்து போய்க் கேட்டுக் கொண்டிருந்த என்னிடம் ., ஆனால் திரும்பி மும்பை செல்ல இரயில் நிலையம் தான் செல்ல வேண்டும் என்றார்கள் சிரிப்பினூடே.
                லோனாவாலாவும் அதனைச் சுற்றி அமைந்த இடங்களும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட இடங்கள் என்றே கூற வேண்டும். மழைக்காலங்களில் அதன் அறியப்படாத பேரழகு பன்மடங்காகின்றது. கட்டாயம் பார்த்து மகிழ் வேண்டிய இடங்களில் ஒன்று.
           

3 comments:

  1. பயணம் செய்த போது இருந்த சுகத்தை விட அதை கட்டுரையாக எழுத்துகளில் படிக்கும் போது சுகம் அதிகமாக இருக்கிறது.

    ReplyDelete
  2. நேரில் கண்ட அனுபவம் கிடைத்தது . எளிய நடையில் அருமையான பயண கட்டுரை .

    ReplyDelete
  3. போகும் போது ரயில் பிரயாணம் 11/2 நாள். குடும்பத்தின் அனைவரும் சேர்ந்து பயணம் செய்த அந்த 1 1/2 நாட்கள் மீண்டும் எப்போது வர போகிறது என்று தெரியவில்லை.(ரயிலில் பயணம் செய்யவும் என்ற யோசனை கூறிய பம்பாய் நண்பர் திரு.சுப்பு அவர்களுக்கு நன்றி)

    ReplyDelete