Tuesday, September 8, 2015

ஒரு பக்க கதை

" உங்கம்மா சீரியல் பாக்கும் போது இடியே விழுந்தாலும் அவங்களுக்குத் தெரியாது..கோவுச்சுக்காதீங்க..உள்ளதைச்சொன்னேன்."
" உங்க தம்பி தேவைன்னா மட்டும் தான் இந்தப் பக்கம் தலை காட்டுவார். இல்லைன்னா நம்ம இருக்கிற திசை பக்கம் திரும்ப கூட மாட்டார்."
" நீங்க எப்பவுமே இப்படித்தான். அவசரப்படுவீங்க. அவசரப்பட்டா ஜோலி ஆகாதுன்னு உங்களுக்குப் புரியாது. தப்புன்னா மன்னிச்சுக்கோங்க."
"உங்க குடும்பத்துல எல்லோருக்கும் இதே பழக்கம் தான். பணத்தை வாரி இறைக்கிறது.. அப்புறம் உக்காந்து வருத்தப்படறது...ஆனா இதெல்லாம் சொல்றதுக்கு நான் யாரு? நானாட்டம் என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருக்கிறேன்."
இவையெல்லாம் ராஜேஷுடைய சகதர்மினி  
சுதாவின் வார்த்தைகள். சுதா சும்மா இருக்க மாட்டாள். வார்த்தை குத்தீட்டிகளால் காயப்படுத்துவாள். அப்புறம் எனக்கு எதுக்கு பொல்லாப்பு என ஒதுங்கிக் கொள்வாள். இதை சொல்லாமலேயே இருக்கலாம். ராஜேஷின் மனம் புண்படுவதாவது குறையும் என்று அவனுக்குத் தோன்றும்.
             இதைப்பற்றி ஜாடை மாடையாக  குறை சொல்லாதே என்று சொல்லிப்பார்ததான் ராஜேஷ். ஆனால் சுதாவிற்கு மண்டையில் ஏறுகிற மாதிரி தெரியவில்லை. அவளுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசிக்கலானான்.
             ஒரு ஞாயிற்றுக்கிழமையில் காலையிலேயே ஆரம்பித்தான்..." காபியில் சூடு கம்மி..ஆனால் நான் ஏன் சொல்லணும். சொன்னா உனக்கு கோபம் வரும்" என்றபடி அந்தப்பக்கம் திரும்பிக் கொண்டான். சுதாவிற்கு சுருக் என்றிருந்தது. காபி சூடாகத்தான் இருந்தது. அவன் வேண்டுமென்றே சொல்கிறான் என்று அவளுக்குப் புரிந்தது.
               காலை டிபனின் போது," இதே தானா தினமும்...போர்" என்றான்." இதை நான் சொன்னா தப்பாயிடும். எனவே நான் கப்சிப்..." என பொய்யாக வாயை மூடிக்கொண்டான். சுதா கஷ்டப்பட்டு கோபத்தை அடக்கிக் கொண்டாள். 
               மதியம் சாப்பிடும் போதும் ஏதாவது ஆரம்பிப்பான் என்று சுதா எதிர்பார்த்தாள் . ஆனால் அவன் அமைதியாய் சாப்பிட்டான். அவளுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் அவன் வேறு வித்த்தில் ஆரம்பித்தான். " சிலர் வீட்டை எப்படி சுத்தமா வைச்சிருக்காங்க..ம்ம்ம்..அய்யோ எனக்கு ஏன் இந்த பொல்லாப்பு."
           அவ்வளவு தான் இதற்கு மேல் சுதாவிற்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறீர்கள்? சொல்வதை நேரடியாக சொல்வது தானே???இதென்ன இரட்டை வேடம்? " என்று பிலுபிலுவென பிடித்துக்கொண்டாள்.
             ராஜேஷ் அவளையே பாரத்துக் கொண்டிருந்தான். பின் மெல்ல ஆரம்பித்தான்" நீ இப்படித்தான் செய்கிறாய். யாரையாவது குறை சொல்கிறாய். பின் உனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாத து போல பேசுகிறாயே. நீ நடந்து கொள்ளும் வித்த்தைக் உனக்கு உணர்த்தவே இப்படி நடந்து கொண்டேன். மற்றபடி உன் மீது எனக்கு வருத்தமே கிடையாது . இனி புரிந்து நடந்து கொள்வாய் என நம்புகிறேன்.." என்றவாறே அவளை அணைத்துக் கொண்டாள். தவறை உணர்ந்தவளாய் சுதா அவனது அணைப்பில் மகிழ்ந்தாள்.

No comments:

Post a Comment