Tuesday, September 15, 2015

மனம் விரும்புதே...


வீடு என்பது கல்லும், மண்ணும், செங்கலும் அல்ல. அன்பு, அழகு, தூய்மை என்பன போன்ற இடுபொருட்களால் நிறைந்தது. சில வருடங்களுக்கு முன்பு வரை சிவகாசியில் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தோம். என் கணவரின் தொழில் நிமித்தமாக சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, அபார்ட்மெண்டில் வாழ வேண்டிய கட்டாயமும், சூழலும் ஏற்பட்டது. 
     மிகப்பெரிய வீட்டில் காலாற நடந்து பழகிய எங்களுக்கு, திரும்பியவுடன் கிச்சன், திரும்பியவுடன் பெட்ரூம் என்று அனைத்தும்  அருகருகே இருந்தது ஆச்சர்யமான விஷயம். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றவுடன் ஓடி ஓடி வீட்டை ஒதுக்கும் வழக்கம் உள்ள எனக்கு, அந்த வேலை மிகச்சுலபமாய் முடிவதை உணர முடிந்தது. 
    அபாண்டமெண்ட் வந்ததால், வீட்டிற்கு சாமான்களை வாங்கிவிட்டு பின் உபயோகமில்லாதவற்றை பரண் மீது தூக்கிவைக்கும் வழக்கம் நின்று போனது. எந்தப் பொருளை வாங்குவதானாலும் , 'இது தேவைதானா? இடத்தை அடைக்காதா?' என்று ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் தேவையற்ற பொருட்கள் குவிவது குறைந்தது. வேலையும் சுளுவாயிற்று. குறைந்தபட்ச தேவைகளுடன் நிறைவான வாழ்க்கை வாழ்வது எப்படி என்று புரிந்தது.
     சில வீடுகள் இறுக்கமாயிருக்கும். போதிய வெளிச்சம் இருக்காது. பகல் நேரங்களிலும் லைட் போட்டே இருக்க வேண்டியதிருக்கும். போதுமான ஜன்னல்கள் இல்லாத தால் காற்று வராது. ஆனால் எங்கள் அபார்ட்மெண்டில் ஒவ்வொரு பெட்ரூமிற்கு அருகிலும் ஒரு பால்கனி உண்டு. அதனால் கதவைத்திறந்தால் பளீரென்ற வெளிச்சமும், திமுதிமுவென்று காற்றும் வரும்.
    வீடு கடற்கரைக்கு அருகே இருப்பதால் காற்று வாங்க என்று எங்கேயும் செல்ல வேண்டியதில்லை. பால்கனியில் நின்றால் போதும் தென்றல் வந்து வருடும். நகரங்கள் பொதுவாய் கான்கிரீட் காடுகளாய்த் திகழ்கின்றன என்ற குற்றச்சாட்டு உண்டு. ஆனால் எங்கள் பால்கனியில் அமர்ந்தால் சோலைவனம் போல நாலாபுறமும் மரங்கள் தெரிகின்றன. பக்கத்து வீட்டில் மிகப்பெரிய மாமரம் ஒன்று உள்ளது. அதனை நான் ரசித்துக்கொண்டே இருப்பேன். பூத்து, பின் காய்த்து, பின் தளிர்பச்சையில் புது இலைகளுடன் என்று அதன் வளர்ச்சியை வருடந்தோறும் உணர்வு பூர்வமாய் கண்டு கழிப்பேன். வெள்ளிக்கிழமைதோறும் பக்கத்து வீட்டு பெரியம்மா மாலையில் கோலமிட்டு துளசிமாடத்தில் விளக்கேற்றி வழிபடுவார்கள். அதனையும் மேலேயிருந்தே கண்டு ரசிப்பேன் .
    மாலை மணி நான்கு ஆனவுடன் பள்ளி விட்டு வரும் குழந்தைகள் கீழே விளையாட ஆரம்பித்து விடுவார்கள். நான் பால்கனியில் ஒரு சேர் போட்டு அமர்ந்து கொண்டு அவர்களை வேடிக்கை பார்ப்பேன். அவர்கள் சைக்கிள் ஓட்டுவதும் ஓடிப்பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி, கிரிக்கெட் என வித விதமாய் விளையாடுவார்கள். சமயங்களில் பெரியவர்கள் இறகுப்பந்து விளையாடுவதும் உண்டு.
        பச்சைக்கிளிகள் அதிகம் இருக்கும். அதன் கீச் கீச் ஒலியைக்கேட்டவுடன் ஓடிச்சென்று பார்ப்பேன் . அவை பறந்த வண்ணம் இருக்கும் நம் வீட்டிற்கு அவை வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அவற்றிற்கு தினமும் அரிசியும் தண்ணீரும் பால்கனியில் வைக்கிறேன். என்றாலும்  கிளிகளின் கடைக்கண் பார்வை எங்கள் வீட்டின் மீது படவில்லை. செடி கொடி இருந்தால் அவை வரும் என்று ஒருவர் சொன்னார் . இப்போது சில பூந்தொட்டிகள் வைத்து செடிகள் வளர்க்கின்றேன். காகங்கள் தான் வருகின்றன. அவை உரிமையாய் வந்து கத்தி என்னைக்கூப்பிடும். என் கணவரோ என்னைக் கேலி செய்வார்,'உன் ஃபிரண்டஸ் உன்னைக் கூப்பிடுகிறார்கள் .. பார்' என்று. என்றேனும் ஒருநாள் கிளிகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். புறாக்களுக்கும் பஞ்சமில்லை. அருகிலுள்ள மருத்துவமனையில் ஆஸ்பெஸ்டாஸ் வேய்ந்த கூரையில் அவை த த்தி த த்தி நடந்து பேரணி நடத்தும். பைனாக்குலர் வைத்துக்கொண்டு அவற்றைப்பார்த்து ரசிப்பேன்.என் இளைய மகள், " அம்மா உன் அலப்பறைக்கு்ஒரு அளவே இல்லையா?" என்று கிண்டல் அடிப்பாள்.
     அம்மா மடியில் சாய்ந்து கொண்டு கதைகள் கேட்பது போன்ற இன்பத்தை இந்த பால்கனி எனக்கு அளிக்கின்றது. மொட்டை மாடியில் வைத்து சாதம் ஊட்டும் அம்மாவிடம் கதைகள் கேட்ட காலம் ஒன்று உண்டு. இளமைக்கால நினைவுகளை திகட்ட திகட்ட நினைத்துப் பார்த்து மகிழும் வழக்கம் எனக்கு உண்டு. அம்மா நினைவு வந்து அவ்வப்போது தனிமை வாட்டும் போது பால்கனியில் அமர்ந்து நிலவையே பார்த்துக் கொண்டிருப்பேன். நிலவு 'வருத்தப்படாதே நான் அருகில் வருகிறேன்' என்று கூறியவாறு அருகில் வருவது போல் தோன்றும். 
இப்படி என் வீட்டின் பால்கனி என் உள்ளத்தைக்கவர்ந்து ராஜாங்கம் நடத்துகின்றது.வீட்டிற்கு விருந்தினர் யார் வந்தாலும் அவர்களிடம் பால்கனி புராணம் பாடாமல் விடுவதில்லை.இப்போது 
பால்கனி தான் என் கண்ணிற்கும், மனதிற்கும் இதமளிக்கும் சோலை.





3 comments:

  1. :) தி இந்து பத்திரிக்கைக்கு அனுப்புப்பா....வீட்டில் நமக்கு பிடித்த இடத்தைப்பற்றி கேட்டுள்ளார்கள்.அருமையா எழுதியிருக்கிறாய்!

    ReplyDelete
    Replies
    1. அதற்கு எழுதியது தான் தென்றல்.😊

      Delete
  2. பச்சை கிளிகளுக்கு தோழியின் தோழமை கிடைத்திட வாழ்த்துக்கள்

    ReplyDelete