Monday, October 12, 2015

எனக்குப் பிடித்த வீடு




கதவு பற்றிய புகைப்படக்கட்டுரை ஒன்றை தி இந்து ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தேன். ஜெய்ப்பூரில் உள்ள பாரம்பரியம் மிக்க வீடுகளின் கதவுகளைப் பற்றி அதன் ஆசிரியர் சிலாகித்து எழுதியிருந்தார். உடனே எனக்கு என் அம்மா வீட்டின் கதவு நினைவுக்கு வந்தது.
        சிவகாசியில் நான் பிறந்தேன். எனக்கு சுமார் பன்னிரெண்டு வயது இருக்கும் போது என் தந்தை எங்கள்
 வீட்டைக் கட்டினார். வீட்டின் ஒவ்வொரு வளர்ச்சியையும் என் தந்தை ரசித்து ரசித்து கட்டுவதையும், அதைப்பற்றி அனைவரிடமும் பெருமை பொங்க பேசுவதையும்  நான் சிறு வயதில் கண்டு வியந்திருக்கிறேன். வீட்டில் மார்பிள் தரை போட்டிருந்தோம். அதை வாங்குவதற்கு அந்தக் காலத்திலேயே என் தந்தை, ஆசாரி, இன்ஜினியர் மூவரும் ராஜஸ்தான் வரை சென்றனர். ஆசாரி திரும்பி வந்தவுடன் என் தந்தைக்கு ஒரே புகழாரம் தான், தான் எத்தனையோ வீடுகளில் வேலை செய்திருந்தாலும் தன்னை யாரும் இந்த அளவுக்கு மதித்து ஊருக்கு அழைத்து போய் மரியாதை செய்ததில்லை என்று நெகிழ்ந்து கூறினார்.
         வீட்டின் எல்லாம் கதவுகளும் வேலைப்பாடு மிக்கதாய் தான் இருந்தன என்றாலும் நிலைக்கதவு மிகவும் அழகிய வேலைப்பாடு கொண்டதாய் இருக்கும். ஆசாரி அக்கதவுகளை செதுக்கி செதுக்கி செய்த நாட்கள் இன்றும் என் நினைவிலாடுகின்றன. பாலிஷ் போட்டு சும்மா பளபளவென்று மின்னும். அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருபவர்கள் கதவு மிகவும் அழகாய் இருக்கின்றது என்று கண்டிப்பாய் பாராட்டி விட்டு செல்வார்கள். திருஷ்டி படுகின்றது என்று என் அன்னை கதவின் மேல் ஒரு சிறிய நிலைக்கண்ணாடி ஒன்றை மாட்டி வைத்தார்கள். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கூட சமீபத்தில்," கதவும் ஜன்னலும்  வீட்டின் அடையாளங்கள் மட்டும் அல்ல.அவை பண்பாட்டின் சின்னங்கள்." என்று எழுதியிருந்தார்.




       நாங்கள் நால்வர். எங்கள் உலகமே அந்த வெராண்டாவில் தான் சுழலும். அனைவரும் ஒரே பள்ளியில் படித்ததால், மாலையில் பள்ளி விட்டு வந்தவுடன் அவரவர் வகுப்பில் என்னென்ன நடந்தது என்று வெராண்டாவில் உட்கார்ந்து விவாதிப்போம். வெராண்டாவின் கிரில்கள் மிகவும் வித்தியாசமானவை. என் தந்தை தெய்வ பக்தி மிக்கவர். கிருஷ்ணர் அபிமானி. எனக்கு கூட அதனாலேயே அந்த பெயரையே வைத்துள்ளார். அவருடைய அந்த அபிமானம் எங்கள் வீட்டு  கிரில்களில் பிரதிபலித்தது. வீடெங்கும் கிருஷ்ணர் நீக்கமற கிரில்கள் மூலம் நீக்கமற நிறைந்திருப்பார். வாசலில் மிகப்பெரிய குத்துவிளக்குகள் இரண்டு, பக்கத்து கிரில்களில் ராதையுடன் கிருஷ்ணரும், ஊஞ்சலாடும் குழந்தைக் கிருஷ்ணரும் இருக்கும். அந்த வெராண்டாவிற்கு ஜன்னல்கள் கிடையாது. கிரில்கள் மட்டுமே. அதனை ஒரு ஆர்டிஸ்ட்  மூலம் வரைந்து பின் கிரில் செய்பவரிடம் கொடுத்து ஸ்பெஷலாக டிசைன் செய்ததாக என் தந்தை கூறியுள்ளார். அதைப் பற்றி அவ்வளவு பெருமை அவருக்கு. புதிதாய் வீடு கட்டுபவர்கள் கிரில் டிசைன் மிகவும் அழகாய் இருக்கிறதென்று வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு போன சம்பவங்களும் உண்டு. 
      நிலா ஒளியுயோடு வரும் போது லட்சக்கணக்கான நட்சத்திரங்களையும் கொண்டு வருவதைப் போல அந்த கிரில்களுடன் கலந்த நினைவுகள் பல வந்து மோதுகின்றன.கிரில்கள் எத்தனைதான் அழகாய் இருந்தாலும் அவற்றால் என் அன்னைக்கு ஒரு கஷ்டம் ஏற்ப்பட்டது. அவற்றைத்துடைப்பது கடினமாயிருந்தது. நுணுக்கமான வேலைப்பாடுகளை அவை கொண்டிருந்தமையால் தூசியை அகற்றுவது கடினமாயிருந்தது. ஆனால் என் அன்னை ஓர் உபாயம் செய்வார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் கிரில்கள் , கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை நாங்கள் துடைத்து சுத்தம் செய்தால் மாலையில் அனைவரையும் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளிப்பார்கள். தியேட்டர் வீட்டின் அருகிலேயே இருந்தது. நாங்கள் அனைவரும் அத்தனை சுட்டி..விரைவிலேயே முடித்து விட்டு மதியமே அழைத்து செல்லச்சொல்வோம்.

          பொதுவாகவே சிறிய ஊர்களில் கொல்லைப் புறங்களில் தான் அதிகம் பழங்குவார்கள். என் அம்மா வீட்டிலும் அப்படித்தான். என் அன்னை காய்கறி அரிவது, பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்று அனைத்தையும் அங்குதான் செய்வார். அந்த இடத்தில் ஒரு ஊஞ்சல் உண்டு. நாங்கள் அதில் ஆடிக்கொண்டே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்போம் அல்லது வேலை செய்து கொண்டிருப்போம். முருங்கை மரத்தின் காய்களைப் பறிப்பது, இருக்கும் மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளைப் பகிர்ந்து செய்வோம்.
       வாழ்க்கை என்னும் நீரோடை எங்கள் நால்வரையும் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்றாலும், பண்டிகை , விடுமுறை ஆகிய நாட்களில் நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் அம்மா வீட்டில் இணைந்து விடுவோம். நாங்கள் பேசிய பேச்சுக்கள்,விளையாடிய விளையாட்டுகள் என்று இரவு நெடுநேரம் வரை பேசி மகிழ்வோம். வீட்டின் ஒவ்வொரு பொருளும் ஒரு சம்பவத்தை நினைவு படுத்துவதாய்த் தோன்றும். பழைய ஆல்பங்களை எடுத்துப் பார்ப்போம். ஆச்சர்யம் என்னவென்றால் எங்கள் குழந்தைகளுக்கும் எங்களுடைய அம்மா வீடு மிகவும் பிடித்துப்போனது தான். அவர்களுக்கும் சைக்கிள் பழக, வீதிகளில் விளையாட என்று மிகவும் வசதியாக இருப்பதால் அங்கு செல்ல ஆசைப்படுகிறார்கள். 
         நான் சின்ன வயதில் பார்த்த போது என்னுடன் பேசிப் பழகி விளையாடிய என் வயதை ஒத்தவர்கள் இப்போது யாரும் அங்கில்லை. காலத்திற்கேற்ப பல மாற்றங்கள் அருகாமையில் உள்ள வீடுகளில். என்றாலும் மிக நீண்ட பெரிய படிகளில் உட்கார்ந்து கொண்டு நாங்கள் நால்வரும் பழைய கதைகளைப் பேசிக்கொண்டிருப்போம்.பக்கத்து வீட்டுப் பெண்களுடன் போட்டி போட்டுக்கொண்டு வாசலை அடைத்துகோலங்கள் போட்டது,  ஓவர் டாங்கு நிரம்பி வழியும் நீரில் குளித்தது, பால் ஐஸ் , கப் ஐஸ் என்று தெருவில் போகும் ஒன்றைக் கூட விடாமல் வாங்கி சாப்பிட்டது, பள்ளியிலிருந்து சைக்கிள் ஓட்டிக்கொண்டு வராமல் தோழிகளுடன் பேசிக்கொண்டே உருட்டிக்கொண்டே வீடு வரை வந்தது என்று நினைவலைகள் நீண்டு  கொண்டே போகும். 


       இப்படியாக என் அம்மா வீடு தான் என் மனம் கவர்ந்த வீடு என்று சொல்வேன். பூலோகத்தில் உள்ள சொர்க்கம் தான் அது. மீண்டும் நான் சிறுமியாய் உணரப்படும் தருணங்களைத் தர வல்லது.
                      - கிருஷ்ண குமாரி மதன்.
                           தூத்துக்குடி.

       

No comments:

Post a Comment