Tuesday, October 13, 2015

மனம் கவர்ந்த வீடு




மாதம் ஐந்தாயிரம் சம்பளம் வாங்குபவரானாலும் சரி, ஐந்து லட்சம் சம்பளம் வாங்குபவரானாலும் சரி சொந்த வீடு ஆசை கட்டும் இல்லாதவர் இந்த உலகில் இல்லை. பெரிய மாடமாளிகையோ சிறிய ஓலைக்குடிசையோ .. வீடு கட்டும் பாக்கியமும் அதற்குரிய சூழ்நிலையும் நம்மில் எத்தனை பேருக்கு அமைகிறது?! பொதுவாக எல்லோருக்கும் தன்னுடைய நடு வயதில் தான் வீடு கட்டும் எண்ணமே முளை விடும். அதன் பிறகு அதனை செயல்படுத்த இன்னும் கொஞ்சம் காலம் எடுத்துக் கொள்வர். ஆனால் என்னுடைய முப்பத்திரண்டாவது வயதிலேயே எங்களுக்கு அந்த யோகம் கிட்டியது. எங்களுக்கு திருமணமாகி ஏழாவது ஆண்டிலேயே நாங்கள் வீடு கட்ட ஆரம்பித்தோம்.
      இளம் வயது என்றாலும் எனக்கும் என் மனைவிக்கும் அப்போதே அதன் மீது அதீத ஆர்வம். வீடு செங்கல் கட்டடமாக உயரும் போதே வீட்டை சுற்றி மரங்கள் நட்டேன். அவை வெகு சீக்கிரமே வளர்ந்து நிழல் கொடுக்க ஆரம்பித்து விட்டன. மேஸ்திரி சுத்தி மரம் இருப்பதால் வெயில் தெரியாம வேலை பாக்க முடியுது என்பார். போரிங் போட்டு தண்ணீர் உள்ள இடத்திலேயே நாங்கள் வீடு கட்டியதால் கட்டிட வேலை, மரங்கள் இரண்டிற்குமே தண்ணீர் போதுமானதாக இருந்தது. வீடு மெது மெதுவாக வளர்ந்தது. அதன் ஒவ்வொரு வளர்ச்சியையும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன். வானம் தோண்டியது,நிலை தூக்கியது, தட்டோடு போட்டது , பெயிண்ட் அடித்தது என்று அனைத்தையுமே புகைப்படம் எடுத்து வைத்துள்ளேன். இன்றும் அவ்வப்போது எடுத்துப் பார்த்து மகிழ்வேன். 




      வீடு கட்டி முடித்தாயிற்று.. அதற்கு என்ன பெயர் பெயர் வைக்கலாம் என்று நானும் என் மனைவியும் நீண்டதொரு ஆராய்ச்சி செய்தோம் . Dream castle என்று வாயில் நுழையாத பெயர்களை எல்லாம் அவள் கூறினாள். எனக்கு என்னவோ என் இல்லாளின் பெயர் தான் பிடித்தது. அதனால் முருகேஸ்வரி இல்லம் என்று முடிவு செய்தேன். வீட்டில் வேலை செய்த மேஸ்திரி , சித்தாள், ஆசாரி, பெயிண்டர் என்று அனைவருக்கும்  துணிமணி எடுத்துக் கொடுத்து ஒரு நாள் விருந்து வைத்தோம். 
      பால் காய்ச்சுவதையும் மிக விமரிசையாக செய்தோம்.உறவினர்கள் அனைவரையும் அழைத்தோம். அனைவரும் வந்து வாழ்த்தி விட்டு சென்றனர். இப்போது தான் உன் திருமணத்திற்கு வந்தோம் அதற்குள் மறுபடியும் எல்லோரையும் அழைத்து விட்டாயே என்று மகிழ்ந்து கூறினர். பால் காய்ச்சும் ஃபங்ஷன் இனிதே  முடிந்தாலும் வீட்டில் வைத்திருந்த டேப் ரிக்கார்டர் அப்போது தொலைந்து விட்டது. முதலில் மனம் சஞ்சலம் அடைந்தாலும் ஏதோ திருஷ்டி ...இப்போது இந்த சம்பவத்தினால் கழிந்து விட்டது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன்.
       இப்போது நாங்கள் வீடு கட்டி முடித்து சுமார் இருபது வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும் எங்கள் இல்லம் இன்றும் புத்தம் புதியது போல் காட்சி அளிக்கின்றது. ஹால் பெரியதாக அமைந்தபடியால் நான் என் குழந்தைகளின் பிறந்த நாள் பார்ட்டிகள், நண்பர்கள் கெட் டுகதர் அனைத்தையும் அங்கேயே வைத்துக் கொள்வேன்.
        இப்போதெல்லாம் வீடு கட்டி முடிந்தவுடன் landscaping artist இடம் சென்று விடுகிறார்கள். ஆனால் நான் அப்போதே என் தோட்டத்தை வடிவமைத்தேன். சிறு வயதிலேயே மரம்செடி வளர்ப்பதிலும் செல்லப்பிராணிகள் வளர்ப்பதிலும் எனக்கு ஆர்வம் அதிகம். அந்த ஆர்வம் நான் வீடு கட்ட ஆரம்பித்தவுடன் ஆல் போல் தழைத்தோங்கியது. வீட்டின் வலப்புறத்தில் புல்வெளியும் இடது புறத்தில் பூஞ்செடிகள் கொண்ட பூந்தொட்டிகளை வரிசையாக அடுக்கி வைத்தேன். மிகப் பெரிய சிமெண்ட் தொட்டிகள் வாங்கி அவற்றில் மீன்கள் வளர்க்கின்றேன். பூக்கள் போன்ற வடிவுடைய அந்த தொட்டிகள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும்.அதில் அல்லி மலர்கள் வளர்த்தேன். ஏனோ அவை நீண்ட நாள் நிலைக்கவில்லை. மீன்கள் இருப்பதால் அந்தத் தொட்டிகளை குழந்தைகள் விரும்பிப் பார்ப்பர்.
          மா, தென்னை, பலா, சாத்துக்குடி, எலுமிச்சை, மாதுளை, கொய்யா, ப ப்பாளி என்று அனைத்து வகை மரங்களையும் வீட்டைச் சுற்றி நட்டு வைத்துள்ளேன். என்னுடைய பேராசைக்கு என் வீட்டை சுற்றியுள்ள இடம் போதவில்லை. எங்காவது வெளியூர்களுக்குச் சென்றால் கட்டாயம் நர்சரிக்குச் செல்வேன் . இப்பொழுதெல்லாம் மரக்கன்றுகள் வாங்குவதில்லை. பூஞ்செடிகளோடு சரி. மரங்கள் அதிகம் இருப்பதால் வீட்டைச்சுற்றி அடர்த்தியாக நிழல் உள்ளது. வெயில் இல்லை. இதனால் துணிமணி காயப்போட மிகவும் கடினமாக உள்ளது என்று என் மனைவி புகார் வாசித்துக் கொண்டே இருந்தாள். பின்னர் மொட்டை மாடியில் காயப்போட தொடங்கி விட்டாள்.
            வீட்டிற்கு யார் வந்தாலும் எங்கள் தோட்டத்தின் அழகில் மயங்கி அதனை சுற்றிப் பார்த்த பின்னரே உள்ளே நுழைவார்கள். பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள் என்று இப்போது வலியுறுத்தப் படுகின்றது. வாட்ஸ் அப் பில் கூட குறுஞ்செய்திகள் வருகின்றன. ஆனால் நான் அப்போதிருந்தே என் தோட்டத்தில் மூன்று இடங்களில் பறவைகளுக்காக தண்ணீர் ஊற்றி வருகிறேன். 

        சிவகாசியில் மயில்கள் அதிகம் இருக்கின்றன. எங்கள் வீடு சோலை வனம் போல இருப்பதால் அவை அடிக்கடி விஜயம் செய்யும்.
" கிளி கொஞ்சிப் பேச..
கருங்குயில் இசை விருந்து நல்க..
வண்டுகள் நீண்ட ரீங்காரம் செய்து பாடச..
சோலையில் அடியெடுத்து ஊன்றி உடல் புளகித்து ஆடும் மயில்நடனத்தால்...
தென்றல் உலவும் சோலையே  சிலிர்க்கிறது."  என்று நான்
 எங்கேயோ படித்த வரிகளுக்குச் சான்றாக  இப்போது என் வீடு திகழ்கின்றது.
     மழை பெய்தால் இடம் மிகவும் ரம்யமாய் இருக்கும். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை ..பார்க்க இது ஒன்று மட்டும் இருந்தால் போதும் என்று பாடத்தோன்றும். முன்பெல்லாம் குழந்தைகளுடன் மழையில் குளித்து மகிழ்வேன். மறுநாள் குழந்தைகளுக்கு வரப்போகும் காய்ச்சலை எண்ணி என் மனைவி கவலைப்படுவாள். ஆனால் மழையில் நனையும் இன்பம் அவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில் உறுதியாய் நிற்பேன்.
      வீட்டின் அருகிலேயே கிணறு ஒன்றும் உள்ளது. அதில் வருடம் முழுவதும் தண்ணீர் இருக்கும். மோட்டார் போட்டும் குளிக்கலாம். நீந்தியும் மகிழலாம். அதற்காகவே உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வருவார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் கிணற்றில் தான் நீந்தக் கற்றுக்கொண்டோம். இப்போது மூன்றாவது தலைமுறை அந்தக்கிணற்றில் விடுமுறை நாட்களில் நீந்தக் கற்றுக் கொள்கிறது. சைக்கிள் ஓட்டப் பழகுவதற்கும் வீட்டின் அருகில் உள்ள இடம் ஏதுவாயிருக்கும். என் மகள்கள் இருவரும் அப்படித்தான் ஓட்டக் கற்றுக்கொண்டார்கள்.
     இப்படியாக என் உள்ளம் கவர்ந்த என் வீட்டைப் பற்றி நான் கூறிக்கொண்டே போகலாம். எங்கள் சிந்தனையில் உதித்த எங்கள் சித்தமாக உள்ள எங்கள் வீடு என் மனைவி முன்பே கூறியது போல் ட்ரீம் காஸில்( dream castle) தான். மனைவி சொன்னால் மறுக்க முடியுமா?


                 
               


       

2 comments:

  1. wow! பிறந்த நாள் வாழ்த்து இப்படியும் கூறலாமோ....அழகான எழுத்து நடை...மயிலினமும் குயிலினமும் கொண்டாடும் வீடு....தேவதைகள் உலா வரும் வீடு....வாழ்த்துகள் அண்ணா.

    ReplyDelete