Wednesday, April 27, 2016

இல்லத்தை அலங்கரிக்கும் மாடிப்படிகள்.





           நீங்கள் பல திரைப்படங்களில் பார்த்திருக்கலாம் .. நாயகன் வில்லனிடம் சவால் விடும் காட்சி அல்லது நாயகன் நாயகியின் அழகில் மயங்கி காதலில் விழும் காட்சி..இது போன்ற காட்சிகள் மிகப் பிரம்மாண்டமான படிக்கட்டுகளில் அவர்கள் இறங்கி வரும் போது  நடைபெறும். வீட்டின் விஸ்தீரணத்தை இந்த மாடிப்படிகள் பறைசாற்றுவதைக் காணலாம். வீட்டின் அழகை அதிகமாக்குவதில் மாடிப்படிகள் மிகப் பெரும் பங்காற்றுகின்றன. இரு தளங்களை இணைக்கும் கட்டுமானமாகத் திகழும் மாடிப்படிகள் வீட்டின் தோற்றத்தை நிர்ணயிப்பது கண்கூடு. 
            மாடிப்படிகள் ஒன்று வீட்டின் வெளிப்புறம் அமைக்கப்படும் அல்லது வீட்டின் உள்புறம் அமைக்கப்படும். வெளிப்புற படிக்கட்டுகள் பெரும்பாலும் கான்கிரீட்டினால் அமைக்கப்படுகின்றன. உட்புறத்தில் அமைக்கப்படும் படிக்கட்டுகளில் கான்கிரீட், மரம், கண்ணாடி, கிரானைட் என்று பலவிதமாக நமது இரசனைக்கு ஏற்றவாறு அமைக்கப்படுகின்றன. இன்டீரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைக்கபட்டாலும், வீட்டில் உள்ளோரின் உடல்நிலை, பழக்கவழக்கம் ஆகியனவும் கருத்தில் கொள்ளப் படுகின்றது. வயது முதிர்ந்தோர், குழந்தைகள் வாழும் வீடு எனில் அவர்களது பாதுகாப்பு மற்றும் சௌகர்யத்தைக் கணக்கில் கொண்டு மாடிப்படிகள் அமைக்கப்படுகின்றன். பொதுவாக படிக்கட்டுகளின் சாய்வுதளம் 25 டிகிரி முதல் 40 டிகிரி வரையும், படிக்கட்டுகளின் அகலம் குறைந்த பட்சம் மூன்று அடிகளாவது அமைவது நலம் என்று பொறியாளர்கள் கருதுகின்றனர். 
                படிக்கட்டுகள் வடிவமைப்பில் வளைவுப் படிக்கட்டுகள், நேரான படிக்கட்டுகள், மிதக்கும் படிக்கட்டுகள், சுழல் படிக்கட்டுகள் எனப் பல வகைகள் உள்ளன. நேரான படிக்கட்டுகள் சில சமயலங்களில் L வடிவத்திலும், இரட்டை L வடிவத்திலும், U வடிவத்திலும் அமைக்கப்படும். சுருக்கமான இடம் எனில் U வடிவப்படிக்கட்டுகளே நல்லது. நேரான படிக்கட்டுகளில் திருப்பங்கள் அமைத்தால் அது L வடிவப்படிக்கட்டு ஆகும். திருப்பங்கள் இல்லாமல் ஒரே வீச்சாக படிக்கட்டுகள் இருந்தால் ஏறுவது சிரம ம் தரும். அரைவட்ட திருப்பம், கால் திருப்பம், திறந்தவெளி திருப்பம் ..இவற்றில் நம் வீட்டிற்கு எது பொருத்தமானதோ அதை கட்டிட வல்லுனரின் ஆலோசனையின் படி அமைக்கலாம். சுழல் படிக்கட்டுகள் மற்றும் வளைவுப் படிக்கட்டுகளில் வரவேற்பறையில் பிரதானமாக அமைத்தால் வரவேற்பறையின் அழகு கூடும். மிதக்கும் படிக்கட்டுகள் என்பது அந்தரத்தில் மிதப்பவை அல்ல. ஒருப்பக்கம் சுவற்றில் இணைக்கப்பட்டிருக்கும். படிகள் ஒன்றோடொன்று இணைக்கப்படாமல் தனித்தனியே நிற்கும்.
              படிக்கட்டுகளை கிரானைட் எனும் பளிங்குக் கற்களால் அமைக்கலாம், மரத்தால் அமைக்கலாம். மரத்தால் அமைக்கும் போது தேர்வு செய்யும் பலகையின் உறுதித்தன்மையை கவனத்தில் கொள்ள வேண்டும். பளிங்கு கற்களால் அமைக்கும் படிக்கட்டுகள் ஒரு எடுப்பான தோற்றத்தைத் தரும். கண்ணாடிப்படிக்கட்டுகளை வீடுகளில் அமைப்பதில்லை. பெரும்பாலும் மிகப் பெரிய ஷோரூம்களிலும், மால் என்னும் பல்பொருள் அங்காடிகளிலும் அமையக் காணலாம். உலோகப்படிக்கட்டுகள் உறுதியுடன் திகழும், என்றாலும் துருப்பிடிக்கும் அபாயம் உள்ளதால் இவற்றிற்கு அடிக்கடி வண்ணம் பூசி புதுப்பிக்க வேண்டும். பெரும்பாலும் படிக்கட்டுகளின் ஒரு பக்கம் சுவரும் மற்றொரு பக்கம் கைப்பிடியுடன் கூடிய தடுப்புகள் இருக்கும். சமயங்களில் இரு பக்கமும் தடுப்புகளை அமைப்பதும் உண்டு. மரத்தாலான டிசைன்களில், இரும்புக்கம்பிகளாலான டிசைன்களில், மார்பிள் கற்களால் ஆன டிசைன்களில் என ஏராளமான வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. இவற்றில் எது நம் வீட்டிற்கு பொருத்தமானதோ அதை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 
             மாடிப்படிகளின் கீழிருக்கும் வெற்றிடத்தை சிறந்த சேமிப்புக்கான அறையாக மாற்றலாம். புத்தகங்களை அழகாக அடுக்கி வைக்கலாம். குழந்தைகளின் பொம்மைகள் ஆங்காங்கே இறைந்து கிடக்காமல், விளையாடிய நேரம் போக எஞ்சிய நேரம் மாடிப்படிகளின் கீழ் அடுக்கி வைக்கலாம். இடப்பற்றாக்குறையால் இன்னலுறும் போது கொஞ்சம் யோசித்து இவ்விடத்தை பயனுள்ளதாக மாற்றலாம். ஜிம் உபகரணங்கள், வாஷிங்டன் மெஷின், டிஷ் வாஷர் போன்றவற்றை இங்கு அமைத்து விட்டால் இடநெருக்கடி குறையும்.அடிக்கடி உபயோகப்படுத்தாத பொருட்களை கப்போர்ட் அமைத்து இங்கு சேமித்து வைக்கலாம்.
             வளைவான மாடிப்படிகளின் அழகு வேறு எதிலும் இல்லை. அதன் பக்கவாட்டில் ஆர்ச் போன்ற பெரிய ஜன்னல்களை அமைத்தால் மிக எடுப்பான தோற்றம் தரும். மாடிப்படிகளின் ஒரு புறமாக அமைந்த சுவர்களை அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கலாம். நம் வீட்டிற்கான ஆர்ட் கேலரியாக அதனை மாற்றலாம். அழகான ஓவியங்கள் அல்லது புகைப்படங்களை அங்கே மாட்டி வைத்தால் மிக அழகாக இருக்கும். படிகளின் முகப்பில் மிகப் பெரிய ஷோபீஸ் அல்லது பூஞ்ஜாடி கொண்டு அலங்கரிக்கலாம். முகப்பில் வேலைப்படாமைந்த கார்பெட்களை விரித்தால் இன்னும் சிறப்பு. 
            வரவேற்பறையில் அமையும் படிக்கட்டுகளை அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் நம் கற்பனைக்கு ஏற்றவாறு அலங்கரிக்கலாம். பொதுவாக முதல் அபிப்ராயமே சிறந்த அபிப்ராயம் என்பார்கள். அதை மனதில் கொண்டு வீட்டிற்கு வரும் விருந்தினரை ஈர்க்கும் வண்ணம் அலங்கரிக்க வேண்டும் என்பார்கள்.
ஆனால் என் எண்ணம், நாம் வீட்டை விட்டு விட்டு வெளியேறும் போது நம் கண்களை நிறைக்கும் அழகிய தோற்றம் எப்பொழுதுமே மனதிற்கு ஒரு நிறைவைத்தரும். அதை மனதில் கொண்டு வரவேற்பறையின் படிக்கட்டுகளை அலங்கரிக்கலாம்.



4 comments:

  1. அற்புதம்! ரசனையா எழுதியிருக்கேப்பா....படிக்கட்டுகளில் நிதானமா வலம் வர முடிஞ்சது...(y)

    ReplyDelete
    Replies
    1. உன் சின்சியாரிட்டி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..ஆளி இல்லாத blogக்குள் தைரியமாவர்ற😛😛😛😛

      Delete
  2. சூப்பர் அக்கா ... இன்னைக்கு தான் கப்பல் பயணம் பற்றிய உங்கள் பதிவை பார்த்துவிட்டு உங்கள் ப்ளாக் வந்து பார்கிறேன் ... வாழ்த்துக்கள் ..வாழ்க வளமுடன் ..

    ReplyDelete