Thursday, April 21, 2016

வீட்டுக்கடன்

எலி வளையானாலும் தனி வளையா இருக்கணும் ..என்பது பழைய மொழி. ஆனால் அது இன்றும் நம் அனைவரது மனங்களிலும் கன ன்று கொண்டிருக்கும் நீங்காத ஆசை. ஒரு கிரவுண்ட் கூட வேண்டாம., அரை கிரவுண்டிலோ அல்லது சிங்கிள் பெட்ரூம் பிளாட் கூட போதும்., ஒரு அழகான வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது நம் ஒவ்வொருவரின் கனவு.
    இந்தக் கனவு நிறைவேற முன்பை விட இப்போது அதிக சாத்தியக்கூறுகள் உருவாகி உள்ளன. வங்கிக்கடன், அதுவும் வீட்டுக்கடன் மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டுக்கடனுக்கு மிகவும் குறைந்த அளவு வட்டி விகிதம் விதிக்குமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. 10.8 முதல் 10.30 வரை வட்டி விகிதம் நிலவுகின்றது. இது வங்கிக்கு வங்கி மாறுபடலாம். மற்ற கடன்களைக்காட்டிலும் வீட்டுக் கடனுக்கு சில சலுகைகள் உண்டு. அவற்றில் முக்கியமான ஒன்று கடனைத்திருப்பி செலுத்துவதற்குத் தரப்படும் கால அவகாசம். கடனை நாம் ஐந்து ஆண்டுகளிலும் திருப்பி செலுத்தலாம். இருபத்தைந்து ஆண்டுகளிலும் திருப்பி செலுத்தலாம். அது நாம் தேர்ந்தெடுக்கும் கடன் தொகை மற்றும் திட்டத்தைப் பொறுத்தது ஆகும்.
          வங்கிகள் நாம் புதிதாக நிலம் வாங்கி அதில் வீடு கட்டவும், புது வீடு வாங்கவும், புது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், பழைய வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்பு வாங்கவும், இருக்கும் வீட்டை மேம்படுத்தவும் கடன் வழங்குகின்றன. கடன் பெற தகுதி என்பது பதினெட்டு வயது முதல் ஐம்பது வயது வரை ஆகும் . சில வங்கிகளில் மருத்துவர்கள், பொறியாளர்கள், கணக்காளர்கள் அல்லது சட்ட வல்லுநர்கள் எனில் அறுபது வயது வரை அளிக்கின்றனர். வீடு கட்ட கடன் தொகை மூன்று முதல் ஐந்து கோடி வரையும் வீட்டு மேம்பாட்டு கடன் இருபத்தைந்து லட்சம் வரை பெறலாம் என்று வங்கித்துறையினர் கூறுகின்றனர். கடன் பெறும் நபர் பணியில் இருந்தால் ஓய்வு பெறுவதற்குள் EMI முடிந்து விடுமா என்பதை வங்கிகள் சரிபார்க்கின்றன. ஒருவேளை ஓய்வு பெற்ற பின்னும் EMI செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு, அதற்கேற்ற வருமானம் நமக்கு இருக்கும் பட்சத்தில் வங்கிகள் கடன் அளிக்கும். சில சமயங்களில் கடன் பெறுபவர் அறுபது வயதைக் கடந்த பிறகு கடனை அடைப்பதற்கு அவகாசம் கோரினால் அவரது துணைவியோ, வாரிசுதார ரோ எழுத்துப்பூர்வமாக இணைத்துக் கொள்ளப்படுவார்கள். அவருக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் வாரிசுதார ர்(co-obligant) அதனை செலுத்த நேரிடும்.
             வங்கிகள் கடன் அளிக்கும் என்றாலும் முதல் இருபது முதல் இருபத்து ஐந்து சதவீத முதலீட்டை நாம் தான் செலவிட வேண்டும். மீதியைத்தான் கடனாகத் தருவார்கள். இதை கட்டுமானம் முடிய முடிய மூன்று நான்கு தடவையாகப் பிரித்து தருவார்கள். வீட்டின் விலை அல்லது தோராயமான மதிப்பீட்டின் எண்பது சதவீதம் கடனாக க் கிடைக்கும் என்றாலும் ஒருவரின் வருமானத்திற்கு ஏற்ப தான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். 25- 30 வயதில் வீடு வாங்க நினைத்தால் நம் சம்பளத்தைப் போல எழுபது மடங்கு கிடைக்கும். 45 வயதிற்கு கீழ் என்றால் நம் சம்பளத்தைப் போல ஐம்பது முதல் அறுபது மடங்கு வரை கிடைக்கும். 45 வயதிற்கும் அதிகம் மற்றும் சுயதொழில் செய்பவர் என்றால் நம் ஆண்டு வருமானத்தைப் போல நான்கு அல்லது ஐந்து மடங்கு கிடைக்கும். வங்கிக்கடனைத் திருப்பி செலுத்தும் தகுதி நம்மிடம் இருக்கிறதா என வங்கிகள் பரிசீலிக்கும். பிற EMI போக, வீட்டுக்கடன் போக நம்மிடம் சம்பளத் தொகையில் முப்பத்தைந்து சதவீதமேனும் இருந்தால் மட்டுமே இன்றைய காலகட்டத்தில் வீட்டு செலவுகளை சமாளிக்க முடியும். இதனை கருத்தில் கொண்டே வங்கி தன் கடன் தொகையை நிர்ணயிக்க முன்வரும்.
         பொதுவாக நாம் வங்கிகளில் விண்ணப்பிக்கும் போது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்து தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. வங்கிகளில் எதிர்ப்பார்க்கும் ஆவணங்கள்... 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம், 
விண்ணப்பதார ரின் புகைப்படம், 
புகைப்படத்துடன் கூடிய அடையாளச்சான்று, 
முகவரிச்சான்று, 
வயதுச்சான்று( பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பின் மதிப்பெண் பட்டியல்), 
மனைப்பத்திரம்( சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தது),
தாய்ப்த்திரம்,
வில்லங்கச் சான்றிதழ்,
விற்பனைச் பத்திரத்தின் நகல்,
சட்ட வல்லுநரின் கருத்து,
வீட்டிற்கு உண்டான வரைபடம், அங்கிகாரம் நகல்,
வீட்டின் மதிப்பீடு, கட்டுமான செலவு ஆகியவற்றின் பொறியாளர் அறிக்கை,
வருமானச் சான்றிதழ்,
கடந்த ஆறுமாத த்துக்கான வங்கி பாஸ் புக் நகல்,
வருமானவரி ரிட்டர்ன் தாக்கல் செய்த படிவத்தின் நகல்,
பான் அட்டையின் நகல்.
           கடன் கொடுப்பதுடன் வங்கியின் கடமை முடிந்து விடாது. வீடு கட்டி முடியும் வரை தனது பொறியாளர்கள் வைத்து திட்டத்திலிருந்து மாறாமல் வீடு கட்டப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கும். EMI ஒரு மாதமோ இரண்டு மாதமோ கட்டத் தவறினாலும் அதற்கு அபராதம் உண்டு. வீடு கட்டி முடித்த பின் அதன் இன்டீரியர் எனும் உள் அலங்காரம் செய்ய அல்லது வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வங்கியில் ' டாப் அப் லோன்' எனும் வசதி அளிக்கின்றனர். அதன்படி கடன் தொகையிலிருந்து பதினைந்து சதவிகீதம்  கிடைக்கும். ஆனால் மூன்று வருடங்களுக்கு பிறகு மட்டுமே கிடைக்கும். செயல் முறை கட்டணம் என்று அளிக்கப்படும் கடன் தொகையின் 1 சதவீத த்தை வங்கி எடுத்துக்கொள்ளும். பிற வங்கிகளிலிருந்து கடனை எடுத்துக் கொள்ளும் வசதியும் பல வங்கிகளில் உண்டு. அதாவது பாதி கடன் செலுத்திய நிலையில் நாம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேறு வங்கியில் மாறிக் கொள்ளலாம்.
               வீடு கட்ட, வீடு வாங்குவதற்கு, வீட்டை விரிவுபடுத்துவதற்கு, வீட்டை மேம்படுத்துவதற்கு என பலவிதமான கடன் வசதிகள் பல விதமான வட்டி விகிதங்கள். வீட்டுக் கடன் என்பது பெர்சனல் லோன் மற்றும் வாகனக் கடன் போன்றது அல்ல. அளவு மிகவும் பெரியது என்பதால் சிறிய அளவு வட்டி விகிதம் கூட பெரிய அளவு மாற்றம் தரும். என்றாலும் எல்லாக்கடனையும் விட வீட்டுக் கடனுக்கு வட்டிவிகிதம் குறைவாக இருக்கும்படி ரிசர்வ் வங்கி வலியுறுத்தி உள்ளது. நம்முடைய ஆவணங்கள் அனைத்தும் துல்லியமாக இருக்கும் பட்சத்தில் வங்கிக்கடன் பதினைந்து நாட்களுக்குள் கிடைத்து விடும் என்கிறார் வங்கி மேலாளர். வங்கிக்கடன் வாங்குவதற்கு முன் அதன் நடைமுறை வழக்கங்களைப் பற்றி இணையத்திலோ அல்லது வங்கி உயரதிகாரிகளிடமோ கேட்டு அறிந்து கொள்வது நல்லது. வங்கிகள் அளிக்கும் விட்டிவிகிதங்களில் சிறு மாற்றங்கள் இருக்கலாம், அவற்றை ஒரு முறை ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்கலாம். கடன் ஒப்பந்தம் முழுவதையும் கவனமாக படிக்க வேண்டும்.

1 comment:

  1. வீட்டுக்கடன் தேவையா??
    சொத்து ஆவணம் சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் வீட்டுக்கடன் சம்பந்தமான எல்லா பிரச்சினைகளுக்கும் ஆலோசனை தருகிறோம். மற்றும் வீட்டுக்கடன் அனைத்தும் பெற்றிட நாங்கள் உதவுகிறோம்.
    வீட்டுக்கடன் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் எங்கள் இணையதளத்தை பாருங்கள்.. நீங்கள் விடை பெறலாம்.மற்றும் வீட்டுக்கடன் வாங்க என்ன என்ன தகுதி மற்றும் என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதையும் முழுமையாக அளித்துள்ளோம்..நன்றி… www.mohanconsultant.com
    Mr.Mohan,8489445466

    ReplyDelete