Friday, June 17, 2016

மனதை மயக்கும் தரைகள்...

வீட்டிற்கு அழகு சேர்க்கும் விஷயங்களில் முக்கியமானது தரைகள். பளிச்சென்று மிளிரும் தரைகள் அறையின் அழகியலை அதிகரிக்கச் செய்கின்றன. சில வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த சிமெண்ட் தரை, ரெட் ஆக்ஸைடு தரை, பூக்கல், மொசைக் தரை போன்றவை யாவும் இப்போது காணாமல் போய்விட்டன. வீட்டிற்கு ஆடம்பரத் தோற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் இயற்கையான கற்களான மார்பிள் அல்லது கிரானைட் கொண்டு தளம் அமைக்கின்றனர். இவை விலை உயர்ந்தவை என்றாலும் அதற்கென உரிய இரசிகர்கள் அதனையே பயன்படுத்துகின்றனர். என்றாலும் சந்தையில் கண்கள் மற்றும் மனதை கொள்வதோ, செலவு, மற்றும் சிக்கன அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும், டைல்ஸ்கள் தான்.
              கட்டுமானத்துறையில் கிரானைட் நுழைந்ததென்னவோ வழுவழுப்பான தரை என்ற நியதியில் தான், அதன் பிறகு பெரிய, பெரிய கட்டிடங்களின் வெளிப்புறத்து அலங்காரத்துக்கு கம்பீரமாய் துணை நின்றன. சுத்தம் செய்ய எளிதாய் இருப்பதாலும், ஆளுமைத் தோற்றத்தை தருவதாலும் இன்றளவும் பன்னாட்டு விமான நிலையங்கள் கிரானைட் கற்களையே உபயோகிக்கின்றன. வீடுகளில் கிரானைட் பதிக்கும் போது அதன் 'பளிச்' தோற்றம் காண்போரை கவர்ந்திழுக்கும். வீடு முழுக்க என்றில்லா விட்டாலும் சமையலறை மேடையை பெரும்பாலும் கிரானைட் கொண்டே அமைக்கிறார்கள். குளியலறைகளிலும், ஷவர் சுவர்களிலும் பலர் இதனை உபயோகப்படுத்துகின்றனர், ஏனெனில் இவை தண்ணீரால் பாழாகாது மற்றும் பாக்டீரியா எதிர்க்கும் தன்மை கொண்டவை. 
               மார்பிள் என்பது பல நூற்றாண்டுகளாக வட மாநிலங்களில் பயன்படுத்தப் படுகின்றது என்றாலும் நம் வீடுகளில் சுமார் இருபது முப்பது வருடங்களாகத்தான் உபயோகிக்கின்றோம். இதன் எழில் தோற்றம் வீட்டின் ரம்மியத்தை அழகுற எடுத்துக் காட்டுகின்றது. தனித்தன்மையுடன் திகழும் மார்பிள் கற்களை பதித்த பின் அதற்கு பாலிஷ் போட்டு மெருகேற்றுவர். பெரிய அளவிலான கற்களை வாங்கி நம் விருப்பம் மற்றும் சௌகர்யத்திற்கேற்ற வகையில் வெட்டி பயன்படுத்துவர். டிசைன்களை உருவாக்குவதில் வானமே எல்லை. இரு வண்ண மார்பிள் கற்களை இணைத்து பதிக்கலாம், வேறுப்பட்ட வண்ண பார்டர் அமைக்கலாம். இதன் குளிர்ச்சியான தன்மை, மற்றும் வழுவழுப்புத்தன்மை பெரிதும் விரும்பப்படுகின்றது.
                 ஆனாலும் சந்தையில் கோலோச்சுவதென்னவோ டைல்ஸ் வகைகள் தான். பல வண்ணங்களில், பல வடிவங்களில், பல பிராண்ட்களில், பல வகைகளில் கிடைப்பதால் அவை தனி ராஜாங்கம் நடத்துகின்றன. பராமரிக்க சுலபம், நீண்டநாள் உழைப்பு, அமைப்பதற்கு நேரம் குறைவு, சிக்கனமானது மற்றும் வசீகரமானது போன்ற காரணங்களால் அனைவராலும் விரும்ப ப்படுவதாகத் திகழ்கின்றது. டைல்ஸ் பல வகைகளில் கிடைக்கின்றன. வணிக வளாகங்களில் பயன்படுத்தப்படும் டைல்ஸ் வேறு ரகமாகவும், வீடுகளில் பயன்படுத்தப்படும் டைல்ஸ் வேறு ரகமாகவும் உள்ளன. வீட்டில் பயன்படுத்தப்படும் டைல்ஸ்களிலேயே வெளிப்புறத் தேவைகளுக்கு ஒருமாதிரியும், வீட்டினுள்ளே வாழும் அறை, குளியலறை, சமையலறை என ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு விதமான டைல்ஸ் பதிக்கப்படுகின்றன.. 
                 பொதுவாக டைல்ஸ் செராமிக், போர்சலின் என்று இரு வகைப்படும். செராமிக் டைல்ஸ் கிளேஸ்டு மற்றும் அன்கிளேஸ்டு என இரு வகைப்படும். கிளேஸ்டு டைல்ஸ் என்பது டைல்களுக்கு நூற்றுக்கணக்கான வண்ணங்களைத் தருவது ஆகும். செராமிக், போர்செலின் என இரண்டு வகை டைல்ஸ்களையும் நாம் வீட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயன்படுத்தலாம். மொசைக் டைல்ஸ் என்று மிகச்சிறிய டைல்ஸ் உள்ளது. அவற்றை குளியலறை அலங்காரத்திற்கும், சமையலறையில் அடுப்பினை ஒட்டிய சுவர் பகுதிக்கும் (backsplash ) பயன்படுத்தலாம். செவ்வகம், ஐங்கோணம், அறுங்கோணம் என்று பல விதங்களில் கிடைக்கின்றன. க்வாரி டைல்ஸ் என வழங்கப்படும் டைல்ஸ்களில் வழுவழுப்புத் தன்மை இல்லாதபடியால் தோட்டத்தின் நடைபாதைகள்,நீச்சல் குளத்தை ஒட்டிய நடைபாதைகள் , கார் பார்க்கிங், வாசல் படிக்கட்டுகள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம். இவற்றை சிலர் அலுவலங்களுக்கும், குளிர் தாக்குப்பிடிக்கும் என்பதால் குளிர் பிரதேசங்களில் உள்ள வீடுகளிலும் பயன்படுத்துகின்றனர். டைல்களின் அளவு என்பது 10 செ.மீ*10 செ.மீ என்ற அளவில் ஆரம்பித்து 30செ.மீ* 100செ.மீ என்ற அளவு வரை உள்ளது. சதுர அடிக்கு ரூபாய் 45 முதல் ரூபாய் 150 வரை டைல்ஸ் விற்பனையாகின்றது. ஒரு முறை பதித்து விட்டால் சுமார் இருபத்தைந்து வருடங்கள் நீடிக்கும் என விற்பனையாளர்கள் உறுதி அளிக்கின்றனர். 
                   வெறும் டைல்ஸ்களினால் என்ன செய்து விட முடியும் என்று எண்ணி விடாதீர்கள் , இன்றைக்கு சந்தையில் கிடைக்கும் டைல்ஸ் வகைகளைக் கொண்டு எளிய வீட்டிற்கும் மாடமாளிகை போன்ற தோற்றத்தை கொடுக்க இயலும். எனவே தான் தொழிற்சாலை, ஆட்டோமொபைல் ஷோரூம்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், பார்கள், மருத்துவமனைகள், நீச்சல்குளங்கள் என அனைத்து இடங்களிலும் விதவிதமான டைல்கள் வண்ணவண்ணமாய் வியாபித்து நிற்கின்றன. நாமும் வீட்டிற்கு டைல்ஸ் பயன்படுத்தும் போது நமது படைப்பற்றலுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கலாம். கற்பனைத் திறன் மட்டுமிருந்தால் போதும் எதையும் செய்யலாம், ஆனால் தவறாகி விடுமோ என்ற சந்தேகத்தை மட்டும் விட்டொழிக்க வேண்டும்.
                




No comments:

Post a Comment