Saturday, June 18, 2016

கண்ணன் கற்றுக் கொண்ட பாடம்.

      அன்று பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே கண்ணனுக்கு மிகவும் அயர்ச்சியாக இருந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு சீக்கிரமே சாப்பிட்டு விட்டு படுக்க சென்று விட்டான். படுக்கையில் படுத்து விட்டானே தவிர தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான். சென்ற வாரம் புத்தக்க்காட்சிக்கு சென்ற போது வாங்கிய புத்தகங்கள் நினைவுக்கு வந்தன. உடனே அதை எடுத்தான். 
        புத்தகத்தைத் திறந்தவுடன் மிகப் பிரகாசமாய் அறையெங்கும் ஒரு ஒளி பரவியது. புத்தகமே ஒரு பெரிய ஜன்னலைப் போல் விரிந்தது. உள்ளேயிருந்து இரு அழகிய கரங்கள் அவனை இழுத்தன.
        அந்தக் கைகளுக்கு உரியவன் அவன் வயதை ஒத்த ஒரு சிறுவன். அவன் சற்று விநோதமாய் இருந்தான். அவனுடைய கண்களும் காதுகளும் சற்றே பெரிதாய் இருந்தன. அவன் சற்று குள்ளமாய் இருந்தான். அவன் புனகைத்த போது போது நட்சத்திரம் போல் மின் வெட்டியது. வேற்றுலக வாசியோ என கண்ணன் சந்தேகப்பட்டான்.
        " என் பெயர் ஹேப்பி " என அறிமுகப்படுத்திக் கொண்டான். அரக்கப்பறக்க விழித்த கண்ணனைப் பார்த்து," பயப்படாதே.. நான் உன் தோழன். உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்," என்று கை குலுக்கினான். கண்ணனும் நம்பிக்கை பெற்றவனாய்," ஹலோ ஹேப்பி...நைஸ் டு மீட் யு." என்றான். ஹேப்பி புன்னகையுடன்," நாம் இருவரும் தோழர்கள் அல்லவா. சேர்ந்து ஊர் சுற்றலாம்." என்றபடி வா என்கிறாற்போல கையசைத்தான். உடனே ஒரு கம்பளம் பறந்து வந்தது.
          கண்ணனும் ஹேப்பியும் அதில் ஏறி அமரந்தவுடன் அது மீண்டும் பறக்கத் தொடங்கியது. எங்கே நம்மைக் கூட்டி செல்கிறான் என்று கண்ணன் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். கடற்கரையோரம் சென்றது. இருவரும் இறங்கிக் கொண்டனர்.
           அங்கே அவன் கண்ட காட்சி விந்தையாய் இருந்தது. மீன்கள் அனைத்தும் கடற்கரை மணலில் நடைபயின்று கொண்டிருந்தன. மீன்களுக்கு கால்கள் இருந்தன. கண்ணனால் அவன் கண்களை நம்ப முடியவில்லை. அருகில் சென்றான். மீன் ஒன்று," நீ மனிதன் அல்லவா? இங்கு எதற்காக வந்தாய்?" என்று கோபமாக க் கேட்டு விட்டு ஓடி விட்டது. கண்ணன் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் மற்றொரு மீன் வந்து கண்ணன் முன் வந்து நின்றது. கண்ணன்," மீன்கள் ஏன் தரையில் இருக்கிறீர்கள்?" என மெல்லக் கேட்டான். " மனிதர்களாகிய உங்களால் தான் நாங்கள் இப்படி மாறிவிட்டோம். நீங்கள் கடலை மிகவும் மாசு படுத்திவிட்டீர்கள். கடலில் இப்போது எங்களால் மூச்சு விட முடியவில்லை. அவ்வளவு குப்பை, அழுக்கு. ஆகவே சுத்தமான காற்றை சுவாசிப்பதற்காக அவ்வப்போது நாங்கள் வெளியே வந்து நடக்கின்றோம். பின் கடலுக்குள் சென்று விடுவோம். பரிணாம வளர்ச்சியாக எங்களுக்கு கால்கள் தோன்றியுள்ளன. என்றைக்கு நீங்கள் திருந்துகிறீர்களோ அன்றறைக்குத்தான் எங்களுக்கு விடிவு காலம்." என்றபடி தண்ணீருக்குள் சென்றது அம்மீன். பதில் பேசுவது அறியாது நின்றான் கண்ணன்.
         ஹேப்பி கண்ணனைப் பார்த்து புன்னகைத்தவாறு வா போகலாம் என்றான். இருவரும் மீண்டும் கம்பளத்தின் மீதேறி பறந்தார்கள்.
          இம்முறை சாலை ஒன்றில் இறங்கினர். இங்கும் அவன் விநோதமான காட்சிகளைக் கண்டான். யானை ஒன்று ஸ்ட்ரா போட்டு கரும்புச்சாறு உறிஞ்சிக் கொண்டிருந்தது. முயல் மொளகா பஜ்ஜியும் நரி பானிபூரியையும் மொக்கிக் கொண்டிருந்தன. சிங்க ராஜா தோரணையாய் அமர்ந்து சிக்கன் 65 சாப்பிட்டுக் கொண்டிருந்தார். கண்ணன் திறந்த வாயை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இம்முறை சிங்கமே ஆரம்பித்தது. " என்ன.. ஆச்சர்யமா இருக்கா? காட்டில் வாழ வேண்டிய நாங்கள் இப்படி ரோட்டில் நடமாடுகிறோமே என்று பார்க்கிறாயா? இப்போது காடு என்ற ஒன்று எங்கே இருக்கிறது? மனிதர்களாகிய நீங்கள் உங்கள் தேவைகளுக்கு அனைத்தையும் அழித்து விட்டீர்களே! ஆதலால் நாங்கள் உங்களுடைய ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்திற்கு மாறி விட்டோம்." கண்ணன் வாயடைத்து போய் நின்றான். சுற்றிலும் பார்த்தான். அனைத்து விலங்குகளும் மனிதர்களைப் போல சர்வ சாதாரணமாய் திரிந்து கொண்டிந்தன.
             கண்ணன் அப்போது தான் ஒன்றை கவனித்தான். சுற்றிலும் இருந்த மரங்கள் யாவும் சோபை இழந்து குள்ளமாய் சூம்பி காட்சி அளித்தன. அருகில் சென்றான். மரம் பேசவில்லை. ஆனால் கண்ணீர் விடுவது போல அவனுக்குத் தோன்றியது. உங்கள் வாகனங்களின் நச்சுப் புகை எங்களை எங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கி உள்ளது என்று குற்றம் சாட்டுவது போலிருந்தது அந்தப் பார்வை. அதனை கட்டித் தழுவி முத்தமிட்டான். அவன் கண்களில் கண்ணீர் பெருகியது. பதறிப்போன ஹேப்பி ," நண்பா.. என்ன இது?" என்றபடி அழைத்து வந்தான். மனமெங்கும் வருத்தத்துடன் இருந்த கண்ணனிடம்," இப்போதும் ஒன்றும் கைமீறவில்ல. இப்போதும் உன் நண்பர்கள்,உறவினர்கள் அனைவரிடமும் எடுத்துரை. தூய்மை பேணுதல், உலக வெப்பமயமாதல், காற்று மாசுபடுதல், காடுகளை அழித்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வு கொள்ளுங்கள். பூமியை காப்பாற்றுங்கள்." என்றான். கண்ணன் தலையசைத்தான். பேசிக் கொண்டிருந்த ஹேப்பி கம்பளத்திலிருந்து நழுவி கீழே விழுந்தான்." ஐயோ.. நண்பாஆஆ.." என்ற அலறியபடியே எழுந்தான் கண்ணன்.
                 அவன் அவனது கட்டிலில் இருந்து கீழே விழுந்திருந்தான். கண்டதெல்லாம் கனவு என்பது புரிந்தது. கண்டது கனவு என்றாலும் கற்ற பாடத்தை மறக்கவில்லை. நாளை முதல் அவனுடைய பணி என்ன என்று அவனுக்குப் புரிந்தது.
 





No comments:

Post a Comment