Wednesday, November 12, 2014

நேர விரயம்

மென் திறன்கள், ஆளுமைத்திறன்கள், பன்முகத்திறன்கள் என்று என்னன்னவோ பற்றி படிக்கிறோம். வாழ்க்கையில் முன்னேற டிப்ஸ், வெற்றிக்கு வழிக்காட்டி என்று பலப்பலக் கட்டுரைகள்  வருகின்றன. ஆனால் இக்கட்டுரை  அது  போன்றதல்ல .எனினும் அது போன்றது தான் .என்ன குழப்புகிறேன் என்கிறீர்களா ?விஷயத்திற்கு வருகிறேன்.
 நேரத்தின் மகிமையைப் பற்றிக்கொண்டு பல கட்டுரைகள் வாசித்திருப்போம் - நேரத்தை நிர்வகிப்பது எப்படி , குறைந்த நேரத்தை எப்படி நிறைந்த அளவில் பயன்படுத்துவது என்று பலவாறு கற்றுத்தரப்பட்டுளளோம்.நாமும் அவற்றை முடிந்த அளவு பின்பற்றி வாழ்க்கையில் முன்னேறுகிறோம்.ஆனால் நாம் அனைவரும் மறந்த ஒன்று-அடுத்தவர் நேரத்தை எப்படி வீணாக்காமல் இருப்பது  என்பதை. அடுத்தவர் நேரத்தை நாம் எப்படி கவருவது, நமக்கு நம்முடைய நேரம் மட்டும் தானே கிடைக்கிறது என்கிறீர்களா?ஆமாம், நம்முடைய நேரத்திற்கு நாம் தான் சொந்தக்காரர். ஆனால் பல சமயங்களில் கடமை, விருப்பம் அல்லது தொழில் காரணமாக நம்முடைய நேரம் பிறர் கைகளில் அகப்படுகிறது .
புரியவில்லையா..என்னுடைய மனதில் வெகு  நாட்களாக  நெருடிக்கொண்டிருக்கும் சில சம்பவங்களை கூறி விளக்குகிறேன்.நமக்கு மருத்துவமனை செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம், முன்பு போல் நமது குடும்ப மருத்துவரை  உடனே பார்த்து விட முடியாது.மருத்துவமனையில் முதலில் அப்பாய்ண்ட்மெண்ட்  டோக்கன் வாங்க வேண்டும்.அப்பாய்ண்ட்மெண்ட் தான் வாங்கியாகி விட்டதே என்று  நாம் அங்கு போனால் மருத்துவரை உடனே சந்திக்க முடியாது. அதற்கு அப்புறம் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தால்தான் அவரைச் சந்திக்க இயலும். உதாரணமாக நான் மருத்துவமனைக்கு அப்பாய்ண்ட்மெண்ட்  வாங்கி விட்டு மாலை நான்கு மணிக்குச் சென்று காத்திருந்தேன். அனால் மருத்துவரோ மாலை ஐந்தரை மணிக்கு தான் வந்தார். பின் எனக்கு முன்பு வந்தவர்களை சந்தித்தப் பின் என்னை சந்தித்த போது இரவு மணி ஏழரை .மூன்று மணி நேர காத்திருப்பு. நேரம் எவ்வளவு விரயம். மருத்துவருக்கு அவருடைய நேரம் எவ்வளவு முக்கியமோ அதே போல் காத்திருக்கும் நோயாளிகளின் நேரமும் அதே அளவு முக்கியமானது தானே? இதில் சோகம் என்னவென்றால் காத்திருப்போர் அனைவரும் நோயாளிகள். ஐந்தரை மணிக்கு தான் வருகிறார் என்றால் ஐந்தரை மணிக்கு அப்பாய்ண்ட்மெண்ட்  தர வேண்டியது தானே! இது அன்று மட்டும் அல்ல தினமும் நடப்பது. அந்த மருத்த்துவமனை மட்டும் அல்ல அனைத்து மருத்துவமனைகளிலும் நடப்பது. ஒரு உதாரணத்திற்காக மருத்துவமனையை குறிப்பிட்டேன். அரசு  அலுவலகங்கள, கல்வி நிலையங்கள்,  இன்னும் பலப்பல இடங்களில் இது சர்வ சாதாரணம். இது குறித்த கவலை எவருக்கும் இல்லை .அப்படிதான் லேட் ஆகும் என்று தங்களைத்தாங்களே சமாதானப் படுத்திக் கொள்கிறார்கள்.
அதே போல் மற்றொரு சம்பவம். JFW மேகசினின் அவார்ட் விழாவிற்கு சென்றேன்.விழா மாலை ஆறரை மணிக்குத்தொடங்கும் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது . அப்படியானால் விழா சுமார் ஒன்பது மணி அளவில் முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் சென்று விட்டேன். அனால் விஐபி களின் வரவிற்காகக் காத்திருந்துக்   காத்திருந்து விழா ஆரம்பிக்கும் பொது மணி எட்டரை .இரண்டு மணி நேர தாமதம்.சுமார் இருபது விஐபி களுக்காக சுமார் ஆயிரம் பேரின் இரண்டு மணி நேரம் வீண். ஆனால் அதற்கு  யாரும் கவலை படவில்லை. குறைந்தபட்சம் ஒரு மன்னிப்பு கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்.ம்ஹூம் ..நான் அதிகம் எதிர்பார்க்கிறேன் போல. இந்த இடத்தில கவியரசு கண்ணதாசன்  கூறியது நினைவுக்கு வருகிறது. "எனக்கு பிடிக்காத மதம் தாமதம்" என்று ஒரு முறை கூறினார்.
நாம் அனைவரும் மாற்றிக்  கொள்ள வேண்டிய பழக்க வழக்கங்கள் நிறைய உண்டு . குப்பையை குப்பைத்தொட்டியில் போடுதல் ,வரிசையில் நிற்றல் போன்றவற்றை போல நேர விரயத்தையும் தவிர்க்க வேண்டும்.அதிலும் குறிப்பாக அடுத்தவருடைய    நேரத்தை விரயம் செய்ய நமக்கு அதிகாரம் இல்லை.
மற்றொரு சுவையான சம்பவமும் என் நினைவுக்கு வருகிறது. சமீபத்தில் நாளிதழில் படித்தேன் ...RSS மீட்டிங் ஒன்றிற்கு மத்திய அமைச்சர் வி. கே. சிங் சிறப்புரை ஆற்ற அழைக்கப்படிருந்தார். அனால் அவர் விழாவிற்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வந்திருக்கிறார். பொதுவாக நிகழ்ச்சி அமைச்சருக்காக காத்திருப்பது வழக்கம். ஆனால் ஆர் எஸ் எஸ்  அமைப்பாளர்கள் அப்படி எல்லாம் காத்திருக்கவில்லை நிகழ்ச்சி நேரத்திற்கு தொடங்கியது.தாமதமாக வந்த அமைச்சர் மேடை ஏற்றப்படவில்லை. மாறாக பார்வையாளராக அமர வைக்கப்பட்டார். ஆர் எஸ் எஸ் கருத்துக்களில் அனைவருக்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர்களது இந்த நேர்மையான செயல் என்னை பிரமிக்க வைத்தது.
மென் திறன்களை வளர்த்துக்கொள்ளும் நாம் சில பொதுத்  திறன்களையும் வளர்த்து கொள்ள வேண்டும்

8 comments:

  1. TIME MANAGEMENT ,MONEY MANAGEMENT எவ்வளவு முக்கியம்னு அடிக்கடி நானும் என் சரவணனும் பேசுவோம்...அதில் நான் TIME MANAGEMENT ரொம்ப நல்லாவே தேறிடுவேன் ...ஆனா MONEY MANAGEMENT...ஹி ஹி....அவரு இப்போ தான் என் கூட சேர்ந்து சரியான நேரத்துக்கு போறது ..வரது ....!
    முரு, உன்னோட பதிவுகள் ஒரு நல்ல பத்திரிக்கையாளராக பரிணமிக்க வைக்குது...எல்லா வகையான விஷயங்களையும் ஆராயும் பக்குவத்தையும் நான் பாக்குறேன்....கலக்குங்க
    காத்திருத்தல் சில இடங்களில் இனிமையையும் பல இடங்களில் அவஸ்த்தையையும் தருகிறது!
    அதுவும் நீ சொன்ன மாதிரி அடுத்தவர்களின் நேரத்தை விரயமாக்குபவர்களை என்ன சொல்லுவது....
    இது அடிக்கடி பள்ளி விழாக்களில் விஐபி களுக்காக காத்திருக்கும் போது வெறுப்பா இருக்கும்....!குழந்தைகளின் தவிப்பு பாவமா இருக்கும்.!

    ReplyDelete
  2. Arumai... Everyone experiences this...

    ReplyDelete
  3. Nice...al ur posts are soo gud....feel like reading more n more...keep blogging :)

    ReplyDelete
  4. நல்லா சொன்னிங்க முருகேஸ்வரி மேடம்...

    ReplyDelete